Friday, February 24, 2006

நிழலின் மீதான யுத்தம் - கவிதை

நான் விட்டுச் செல்லும்
காலடிச் சத்தம்
ஒரு பூனையின் லாகவத்தோடு
பதுங்கியிருக்க
பொழுதுகளில்
காற்றில் கரையும்
என் மூச்சும் வேர்வையும்
எங்கோ ஓரிடத்தில்
நிலைகொள்ள
தரையில் விரிந்து
நீர்த்துப்போகும் நிழலும்
காத்திருக்கின்றன
மீண்டும் என் வருகைக்காய்

விரிந்து பரந்த உலகத்தில்
என் உலகம்
தினம் நான் செல்லும் சாலைகளும்
கோயில்களுமென
அங்கே காத்திருக்கும்
என் காலடிச் சத்தமும்
மூச்சும் வேர்வையும் நிழலுமென
மிகச் சிறியதாகிவிட்டது

எப்போதும் நடந்துகொண்டிருக்கும்
நிழலின் மீதான யுத்தம்
தன் சத்தத்தை
இரவுகளில் நிறுத்திக்கொள்ளும்போது
மெர்க்குரிப்பூவின்
வெளிச்சத்தில்
என் மீது சரிகிறது
மதில் சுவரின் நிழல்

1 comment:

Anonymous said...

ஹரன் ப்ரசண்னா..
//
எப்போதும் நடந்துகொண்டிருக்கும்
நிழலின் மீதான யுத்தம்
தன் சத்தத்தை
இரவுகளில் நிறுத்திக்கொள்ளும்போது
மெர்க்குரிப்பூவின்
வெளிச்சத்தில்
என் மீது சரிகிறது
மதில் சுவரின் நிழல்.
///

நல்ல கற்பனை.. மிக ப்ரம்மாண்டமாய் யோசிக்க முடிகிறது. வாழ்த்துக்களுடன்.. ஜெயக்குமார்