Tuesday, March 31, 2009

சிறுமை கண்டு சீறுவாய் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் (கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்)

அ.கி. வேங்கட சுப்ரமணியன் (ஐ.ஏ.எஸ். ஓய்வு) தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசினார். எவ்வித தடங்கலுமின்றி எளிமையான தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து பேசினார். இந்தியாவில் சட்டங்களுக்குக் குறைவே இல்லை என்றும், ஆனால் பெரும்பாலான சட்டங்கள் பயன்படுத்தப்படாமலும், செயல்படுத்தப்படாமலும் வெறுமனே கிடக்கின்றன என்றும், ஒரு சட்டத்தை உயிரோடு வைத்திருக்கும் பொறுப்பு மக்களுக்கே உள்ளது என்றும் தெரிவித்தார். அ.கி. வேங்கிட சுப்ரமணியனின் பேச்சு வெறும் ’பேச்சு வகை’ சார்ந்ததல்ல. களப்பணியில் இருக்கும், பாஸிட்டிவ் திங்கிங்க் உள்ள, நாட்டை நம்மால் திருத்தவும் நேராக்கவும் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட மனிதன் ஒருவனின் உள்ளப் பேச்சு.



”சமூக சம்ச்சீரின்மைக்கும், சமூகக் குறைபாடுகளுக்கும் பொறுப்பேற்கவேண்டிய அரசு, தனது செயல்களை வெளிப்படையாகச் செய்யவும், செய்த செயல்களுக்குப் பொறுப்பேற்கவும் இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. கேள்வி கேட்டால் நாளை நம்மை என்ன செய்வார்களோ என்கிற பயம் இருந்தால், நம்மால் ஒன்றுமே செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் இந்த பயம் அவசியமற்றது. நாம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்பதன் மூலம், பல்வேறு செயல்களை வெளிக்கொண்டுவர முடியும். கேள்விகள் கேட்பது செய்திகளை அறிந்துகொள்ள மட்டுமே என்ற அளவில் நின்றுவிடாமல், அடுத்த அந்த பதில்களை வைத்துக்கொண்டு என்ன செயலைச் செய்யப் போகிறோம் என்று முடிவெடுத்துக்கொள்வது நல்லது.

“நாம் நம் பகுதியில் உள்ள மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறோமா? நாம் செலுத்தும் வரியில் ஒரு பகுதி இப்பள்ளிகளுக்குச் செல்லுகிறது. அப்படியிருக்கும்போது நம் பகுதியில் உள்ள பள்ளிகள் எப்படிச் செயல்படுகின்றன என்று நாம் ஒருபோதும் சிந்திப்பதில்லை? திருநெல்வேலியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அறிந்த ஒரு செய்தி இது. கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் பணம், மக்கள் பணிக்காக ஒதுக்கப்பட்டது, செலவழிக்கப்படவே இல்லை. ஆனால் அந்த ஊரில் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் பல இருக்கின்றன. அதேபோல், திருநெல்வேலியில் வசூலிக்கப்படாத தொகை 12 கோடி ரூபாய். இதுவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட செய்தி. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து, அந்தப் பணத்தை எப்படி திறம்பட செயல்படுத்துவது என்று சில யோசனைகளைச் சொன்னோம்.

“திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஒரு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு 2002லிருந்து சம்பளமே வழங்கப்படவில்லை. இதுவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பெறப்பட்ட செய்திதான். அப்படியானால் எப்படி அவர்கள் தொடர்ந்து வேலை செய்கிறார்கள்? தூத்துக்குடி வேப்பலோடை பகுதியில் தொடர்ந்து லாரிகள் மணல் அள்ளிக்கொண்டிருந்தன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, லாரி அள்ளுவதற்கான முறைமைகள் பெறப்பட்டன. அந்த ஊர் மக்கள் அடுத்தமுறை லாரி வந்தபோது அதை தடுத்து நிறுத்தினார்கள். முறைமையின்படி அந்த லாரி மணல் அள்ள முடியாது என்று போராடினார்கள். இதனால் மணல் அள்ளுவது தடுக்கப்பட்டது. ஆனால், வேறு ஊரின் வழியாகச் சென்று மணல் அள்ளத் தொடங்கினார்கள். இப்போது அந்த ஊரையும் நாம் விழிக்கச் செய்யவேண்டியிருக்கிறது. ஒருவர் பெறும் தகவல் என்பது அவருக்கு மட்டுமானது என்று நின்றுவிடாமல், அதனை எல்லோருக்குமானதாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு வரவேண்டும்.



“தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது சர்வ ரோக நிவாரணி அல்ல. இது உங்களுக்குத் தகவலை மட்டுமே வழங்கும். பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறுகிறேன் என்பதைவிட, நம் வாழிடத்தில் இருக்கும் பள்ளிகள், நியாய விலைக்கடைகள், மருத்துவமனைகளில் என்ன நடக்கிறது என்பதற்கான தகவல்களைப் பெறத் தொடங்கினாலே போதும், ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பொது ஆர்வலர்கள், சமூகப் பணியாளர்கள் இன்னும் கையிலெடுத்துக்கொள்ளவில்லை. தனிமனிதர்களைவிட இவர்கள் கையில் இச்சட்டம் செல்வது அதிகப் பயனைத் தரும். இச்சட்டம் அரசியல்வாதிகளால் கொண்டுவரப்படவில்லை. மாறாக, சமூக நல ஆர்வலர்களால் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை தொடர்ந்து உயிரோடு வைத்திருப்பது நம் கையில் உள்ளது.”



பின்பு கேள்வி நேரம் துவங்கியது. முதல் கேள்வியைக் கேட்டவர், பயமின்மை என்பது யதார்த்ததில் சரியாக வராது என்று கூறினார். ஆனால் அதை அகிவே ஏற்கவில்லை. கேட்கப்படும் கேள்விகள் சிலவற்றிற்கு தகவல் இல்லை என்று அரசு பதில் சொல்லமுடியுமா என்று கேட்டேன். உண்மையில் தகவல் இல்லை என்றால் இல்லை என்று கூறலாம் என்று சொன்னார். அவர் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷனில் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். சேது சமுத்திரத் திட்டத்தால் எத்தனை கிலோமீட்டர் பயணம் குறையும், அதனால் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் அடையும் லாபம் எவ்வளவு போன்ற கேள்விகள் என நினைக்கிறேன். அவற்றிற்குத் தங்களிடம் பதில் இல்லை என்று பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷன் தெரிவித்துவிட்டதாகச் சொன்னார். இன்னும் நிறைய பேர் கேள்விகளைக் கேட்டார்கள்.

அகிவே குடிமக்கள் முரசு என்றொரு மாத இதழை நடத்திவருகிறார். அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறும் தகவல்களை அவற்றில் வெளியிடவும் செய்கிறார். குடிமக்கள் முரசு-வில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பை (வேறு பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளும் அடங்கிய தொகுப்பு) கிழக்கு பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அவர் எழுதிய மக்களாகிய நாம், கட்சி ஆட்சி மீட்சி புத்தகங்களை nhm.in/shopல் ஆன்லைனில் வாங்கலாம். நான் குடிமக்கள் முரசுவுக்கு சந்தாதாரராக நினைத்துள்ளேன். அதன் முகவரி: உந்துநர் அறக்கட்டளை, எண் 8, 4-வது தெரு, வெங்கடேஸ்வரா நகர், அடையாறு, சென்னை 600 020, தொலைபேசி: 2446-5601. விருப்பப்பட்டவர்கள் நேரடியாக சந்தா செலுத்திக்கொள்ளலாம்.

இந்தக் கூட்டம் சொன்னது என்ன? மக்கள் செயல்படவேண்டும் என்பதே. அரசியல்வாதிகளின் எல்லா ஊழலுக்கும் நாம் பழகிப்போய்விட்டோம். ஒரு செயலுக்கான முறைமைகளைக் கண்டறிந்து, அதன்படி செயல்பட நாம் நம்மை வழக்கப்படுத்திக்கொள்வதும், நம் அரசை செயல்பட வைக்க இயன்றவரை முயல்வதுமான விழிப்புணர்வே இன்றையத் தேவை. ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் செய்தியைப் பெற்றுப் போராடுவதைவிட, எப்பகுதியில் பிரச்சினை உள்ளதோ, அப்பகுதி மக்கள் தத்தம் கோரிக்கைகளுக்காகப் போராடுவது நல்ல பலனளிக்கிறது என்று அனுபவத்தில் கண்டதைப் பதிவு செய்கிறார் அகிவே. இதுவே இக்கூட்டம் சொல்லும் செய்தி.



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்கள் பயன்படுத்துவது என்கிற நோக்கிலேயே இதுவரை இச்சட்டமும் அதன் பயன்பாடுகளும் அணுகப்பட்டிருக்கின்றன. இச்சட்டத்தை வரைவு செய்யுமுன்பு, இதனைச் செயல்படுத்த போதுமான பணியாளர்கள் நம்மிடம் உள்ளார்களா என்பது பற்றிய ஆய்வு செய்யப்பட்டதா எனத் தெரியவில்லை. அரசு பணியாளர்கள் பெரும்பாலானவர்கள் லஞ்சம் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதால், அவர்களைக் கஷ்டத்துக்குள்ளாக்கும் எந்த ஒரு செயலும் நம்மை மகிழ்விக்கவே செய்கிறது. இச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவந்த பின்பு, அரசு அலுவலர்கள் அடையும் இன்னல்கள் பற்றியும் யோசிக்கவேண்டும். நிச்சயம் இச்சட்டம் பயனுள்ளது என்பது பற்றி சந்தேகம் இல்லை. ஆனால் இச்சட்டத்தின்படி எக்கேள்விகளையும் கேட்கலாம் என்பதும், 30 நாள்களுக்குள் பதில் சொல்லவேண்டும் என்பதும், எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம் என்பதும், அரசு அலுவலர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. இச்சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட நிறைய கேள்விகள் கிறுக்குத்தனமானவை என்று ஓர் அரசு ஊழியர் சொன்னார். தகவல் இல்லை என்று பதில் சொன்னால், இதற்கான ஆணையம் அந்த பதிலை ஏற்பதில்லை என்றும், அது தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாகவே செயல்பட்டு, அரசு ஊழியர்களுக்கு மேலும் மேலும் ஆணைகளை வழங்கிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் வருத்தப்பட்டார். கேள்விகளுக்கான வரைமுறைகளை உருவாக்கவேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். திருநெல்வேலியில் எத்தனை வீடுகள் இத்தனை சதுர அடிக்கு மேற்பட்டவை என்று ஒருவர் பொத்தாம் பொதுவாகக் கேள்வி கேட்டால், அதற்கு 30 நாள்களுக்குள் எப்படி பதில் சொல்லமுடியும்? கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களாகக் கணினி மயமாக்கப்பட்டிருக்கலாம். அதற்கு முன்பு உள்ள தகவல்களைத் தேடித்தான் தரமுடியும். அந்த வேலைகளை யார் செய்யப்போகிறார்கள்? இந்தச் சட்டத்தின் தேவை கருதி எத்தனை பேர் புதியதாக வேலைக்குச் சேர்க்கப்பட்டார்கள்? – இவையெல்லாம் அரசு ஊழியர்களின் கேள்விகள். நமக்கு அரசு ஊழியர்களைப் பிடிக்காது என்பதாலேயே அவர்களின் கேள்விகள் நியாயமற்றவை என்று சொல்லிவிடமுடியாது. அரசு ஊழியர் ஒருவரின் துணையோடு சில கேள்விகளை, இச்சட்டத்தின் அடிப்படையில், தகவல் ஆணையரிடம் கேட்டுள்ளேன். 30 நாள்களுக்குள் என்ன பதில் கிடைக்கிறது என்று பார்க்கலாம். இதேபோல் இன்னும் நிறையக் கேள்விகள் கேட்கப்படவேண்டியிருக்கின்றன. அவற்றைப் பொதுவில் வைப்பதே முதல் நோக்கம்.

பின்குறிப்பு: சீமான், விவேக், தா.பாண்டியன், கருணாநிதி உள்ளிட்ட பலரின் இயற்பெயர், தாய்மொழி என்ன, சோனியா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தாரா, அர்ஜூன் சம்பத் ஏன் பாஜகவில் இருந்து ஏன் விலகினார் என்றெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்போகிறேன் என்று சொல்லி, என்னை அசரச் செய்த நண்பரின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன!

Sunday, March 15, 2009

தாய்மொழியும் தாய்நாட்டின் மொழியும்

சம்ஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு எழுந்த நேரத்தில், கடந்த புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் ஸ்டாலில் 'பத்து நாளில் சம்ஸ்கிருதம் பேசும்' ஒரு கோர்ஸைப் பற்றிய பிட் நோட்டிஸ் பார்த்தேன். பத்து நாளில் சம்ஸ்கிருதம் எப்படி பேசமுடியும் என்கிற எண்ணம் வந்தாலும், சேர்ந்துவிட்டேன்.

தி.நகர் சாரதா வித்யாலயாவில் நடந்த வகுப்புக்கு முதல்நாள் சென்றபோது என்னுடன் வந்த நண்பனிடம் 'பத்து பேர் இருந்தா அதிகம்' என்று சொல்லிக்கொண்டு போனேன். அங்கு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு வகுப்புகள். ஒவ்வொரு வகுப்பிலும் நாற்பது மாணவர்களுக்கும் மேல். நடக்கமுடியாமல் தள்ளாடி நடந்துவந்த வயதான மனிதரிலிருந்து, தமிழே இன்னும் சரியாகப் பேசத் தெரியாத சிறுவர் வரை. 'படத சம்ஸ்கிருதம்' என்று பாடலோடு தொடங்கிய வகுப்பில், ஆசிரியர் எடுத்த எடுப்பில் 'பவத: நாம கிம்?' என்று தொடங்கினார். ஆசிரியர் என்றால், வயதாகி குடுமி போட்டுக்கொண்டு நாமத்தோடு வெற்றிலை குதப்பிக்கொண்டு வாயில் எச்சிலோடு பேசும் ஓர் உருவத்தை சட்டெனக் கலைத்தார் முரளி. கணினி மென்பொருள் வல்லுநரான முரளியின் வயது 24. குடுமி இல்லை. ஆனால் நீண்ட கூந்தலுடன், தமிழையோ ஆங்கிலத்தையோ உதவிக்கு அழைக்காமல், எடுத்த எடுப்பில் 'பவத: நாம கிம்?' என்றார்.

நாம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மொழியின் உதவியின்றி, இன்னொரு புதிய மொழியை கற்றுவிடமுடியும் என்று நான் நம்பியிருக்கவில்லை. ஆனால் ஸ்ம்ஸ்க்ருத பாரதியின் அடிப்படையே, சம்ஸ்கிருதத்தை அம்மொழியின் வாயிலாகவே கற்றுத்தருவதே அன்றி, வேறொரு மொழியின் வாயிலாக அதைக் கற்றுத் தருவது அன்று என்பதை அந்த முதல் நாளிலேயே புரிந்துகொண்டேன். நாம் நம் தாய்மொழியை வேறு எந்த ஒரு மொழியின் உதவியின்றித்தான் படித்திருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி ஒரு உள்ளார்ந்த மொழியாக சம்ஸ்கிருதத்தை நிறுவவே இப்படி ஒரு முயற்சி என்பது புரிந்தது. ஹிந்தி தெரியாமல் இருந்தால் நல்லது என்று ஏற்கெனவே முரளி சொல்லியிருந்தார். அதன் காரணமும் அங்கே விளங்கத் தொடங்கியது. பத்து நாள்களும் அங்கே பயன்படுத்தப்பட்ட ஆங்கில, தமிழ் வார்த்தைகள் பத்தைத் தாண்டியிருந்தால் அதிசயம். பத்தாவது நாளில் எல்லோரும் சம்ஸ்கிருதத்தில் பேச முயற்சித்தார்கள்.

சம்ஸ்கிருதத்தில் பேசுவது என்றால், சம்ஸ்கிருத விற்பன்னராகப் பேசுவது அல்ல. இதன் அடிப்படையையும் மிகத் தெளிவாக திட்டமிட்டிருந்தது சம்ஸ்கிருத பாரதி. ஒரே விகுதியோடு முடியும் வார்த்தைகள் (கஜ:, வ்ருக்ஷ:, புத்ர:, ராம: என்பது போல) என்று எடுத்துக்கொண்டு, அவற்றோடு வேற்றுமை உருபுகள் சேரும்போது அவை எப்படி மாறுகின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு (ராமன் + இன் = ராமனின்  ராம: + அஸ்ய = ராமஸ்ய என்பதைப் போல) எளிமையாக நடத்தினார்கள். Present tense, Past tense, Future tense மட்டுமே சொல்லித்தந்தார்கள். இதை வைத்துக்கொண்டு கதை சொன்னார்கள். இதை அடிப்படையாக வைத்து எளிமையான வாக்கியங்கள் சொல்லச் சொன்னார்கள். இதை வைத்துக்கொண்டு எளிமையான பேச்சை நிகழ்த்தினார்கள். இதன் வழியே, சம்ஸ்கிருதம் கற்பது கடினமானதல்ல என்கிற எண்ணத்தை மெல்ல வளர்த்தெடுத்தார்கள்.

சிறுவர்களின் வேகம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. பதினைந்து வயது சிறுவனின் நினைவாற்றலை எட்டிப்பிடிப்பது எனக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. காரணம், நான் எந்த ஒரு சம்ஸ்கிருத வார்த்தையையும் அதோடு தொடர்புடைய பொருளின் வழியாகவே அடைய முயன்றேன். ஆனால் சிறுவர்களோ சம்ஸ்கிருத வார்த்தையை அவ்வார்த்தை மட்டுமானதாகவே கண்டடைந்தார்கள்.

சம்ஸ்கிருதம் படிப்பதைத் தவிர்த்து இவ்வகுப்புகள் பல நல்ல நினைவுளைக் கொண்டுவந்து சேர்த்தன. கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாணவனாக வகுப்பில் அமர்வது என்பதே பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நியூ ஹொரைசன் மீடியாவின் ப்ராடிஜி பதிப்பகத்தின் சார்பாக, பள்ளிகளில் சூடாகும் பூமி (Global warming) பற்றிய வினாடி வினா எழுத்துத் தேர்வு நடத்தியபோது பல பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. வகுப்புகளில் மாணவர்கள் அமர்ந்திருப்பதையும், எவ்வித தன்முனைப்பும் இன்றி, ஆசிரியரே எல்லாமும் என்கிற எண்ணத்தோடு அவர்களோடு பேசியதையும் பெரும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் ஒரு பகுதி இந்த சம்ஸ்கிருத வகுப்பில் அடித்துச்செல்லப்பட்டதாக உணர்ந்தேன்.

இவை போக, சக 'மாணவ நண்பர்கள்' தந்த அனுபவங்கள். என் பக்கத்து நண்பருக்கு வயது 60தான் இருக்கும். 'வாக்கிங்க்குக்கு வாக்கிங்கும் ஆச்சு, சம்ஸ்கிருதமும் ஆச்சு பாருங்க' என்றார். இன்னொருவர், 'இப்படி தமிழும் சொல்லாம இங்லீஷும் சொல்லாம சொல்லித் தந்தா என்ன புரியறதுன்றீங்க? நான் சொல்லிட்டேன். நேரா சொல்லிட்டேன். கேப்பாங்களான்னு தெரியலை' என்றார்.

பத்தாம் நாள் நிறைவு நாளில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அவர்கள் பேசியதில் எனக்கு பல கருத்துகள் உடன்பாடில்லாதவை. ஆனால் இதுபோன்ற வகுப்புகளில் இவற்றைத் தவிர்க்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன். பல மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் நகைச்சுவை கதைகள் சொன்னார்கள். அனுபவக் கதைகள் சொன்னார்கள். சிறிய நாடகங்கள் நடத்தினார்கள். எல்லாமே சிறந்தவை என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு எல்கேஜி, யூகேஜி மாணவர்களாக அவர்களைக் கற்பனை செய்துகொண்டால், அவர்களின் நிகழ்ச்சிகள் அற்புதமானவை என்றே சொல்லவேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அஹம் ஏகம் ஹாஸ்ய கதாம் உக்தவான்! (நான் ஒரு நகைச்சுவைக் கதை சொன்னேன்!)

சம்ஸ்கிருதத்தின் பெருமைகளையும், அது எவ்வாறு இந்தியாவோடு தொடர்புகொண்டுள்ளது என்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நாளும் விளக்கிச் சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிக் கதை சம்ஸ்கிருதத்தில் சொன்னார்கள். இந்தக் கதைகளின் போது அங்கிருந்த அனைத்து மாணவர்களும் அடைந்த குதூகுலம் இப்போதும் நினைவிலிருக்கிறது. இதன் வழியே கொஞ்சம் யோசித்தால் எப்படி ரஜினி, ஜாக்கிசான் போன்றவர்கள் குழந்தைகளைப் போலவே பெரியவர்களையும் கவர்கிறார்கள் என்பதைக் கண்டடையலாம் என நினைத்துக்கொண்டேன்.

ஒரு பதினைந்து வயது மாணவன் இதுபோன்ற வகுப்பினால், இந்தியப் பற்றையும், புராணக் கதைகளின் பரீட்சியத்தையும் பெறமுடியும். பின்னாளில் இவற்றை அவன் கைவிட நேர்ந்தாலும், இதைத் தெரிந்துகொண்டு புறக்கணிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும். புராணக் கதைகள் சொல்லப்பட்டபோது, பல கதைகளை என்றோ கேட்ட நினைப்பிலேயே கேட்டுக்கொண்டிருந்தேன். இனி இக்கதைகள் எல்லாம் எப்படி நம் அடுத்த தலைமுறைக்குச் செல்லும் என்கிற சோகம் எழுந்தது. கதை சொல்லும் நேரத்தை நம் தொலைக்காட்சிகள் எந்த அளவு திருடிக்கொண்டுவிட்டன என்பதும் புரிந்தது. நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், என் கணிசமான நேரத்தை என் மகனோடு செலவழிக்கவே விரும்புவேன். அதில் கதை சொல்லலும் அடங்கும். கதை என்றால் நானாக உருவாக்கிய கதைகள். புலியும் ஆடும் மாடும் மயிலும் குரங்கும் டைனசோரும் உலவும் கதைகள். இந்த சம்ஸ்கிருத வகுப்புகள் விளைவாக, இனி என் மகனுக்கு புராணக் கதைகளையும், மரியாதை ராமன், தெனாலி ராமன் கதைகளையும் கண்ணன் கதைகளையும் சொல்லலாம் என்றிருக்கிறேன். இவ்வகுப்பில் சொல்லப்பட்ட இரண்டு கண்ணன் கதைகளை என் மகனுக்குச் சொன்னபோது, அவன் அடைந்த குதூகலம் வார்த்தையில் சொல்லமுடியாதது. முதல்வேலையாக எனி இந்தியனில் சில புத்தகங்களை ஆர்டர் செய்தேன்.

சம்ஸ்கிருதம் சொல்லித்தந்த ஆசிரியர் ஒருவர் இப்படிச் சொன்னார். "உங்கள் தாய் மொழி என்ன? சம்ஸ்கிருதமா? இல்லை. தமிழ். உங்கள் தாய்மொழி? மலையாளம். உங்களது? துளு. ஒரு சம்ஸ்கிருதம் சொல்லித்தரும் ஆசிரியர் எப்படி சம்ஸ்கிருதத்தை தாய்மொழியல்ல என்று சொல்லமுடியும் என்று யோசிக்கிறீர்களா? இப்போது சொல்கிறேன். சம்ஸ்கிருதமும் உங்கள் தாய்மொழிதான். உங்கள் தாய் உங்களுக்குச் சொல்லித் தரும் தாய்மொழி தமிழாகவோ, மலையாளமாகவோ இருக்கட்டும். உங்கள் இன்னொரு தாய் பாரதத் தாய். அவளின் மொழி சம்ஸ்கிருதம்." எந்த ஒரு மொழியையும் புறக்கணிக்காத இந்த அணுகுமுறையே நிச்சயத் தேவை. என் தாய்மொழி தமிழ். என் தாய்நாட்டின் மொழி சம்ஸ்கிருதம் என்று இருப்பதில்தான் என்ன தவறு இருந்துவிடமுடியும்?

ஸம்ஸ்க்ருத பாரதியின் தொலைபேசி எண்: 044-28272632. மின்னஞ்சல் முகவரி: samskritabharatichn@yahoo.com. இதைத் தொடர்புகொள்வதன் மூலம் அடுத்த சம்ஸ்கிருத வகுப்புகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளமுடியும்.

நன்றி: தமிழ் ஹிந்து வலைத்தளம் (தமிழ் ஹிந்துவில் வந்த இந்தக் கட்டுரையை விஜயபாரதம் தனது இதழில் பிரசுரித்திருந்தது.)

Thursday, March 12, 2009

இரண்டு கவிதைகள்

பதிவு வகை: கவிதை

தெரு

அதிகாலையின் நிசப்தத்தில்
நீண்டும் சிறுத்தும்
இருவழி திறந்தும் ஒருவழி மூடியும்
அலைந்து நெளியும் என் தெருவில்
பரவி நிலைத்துக் கிடக்கும்
இருளில்; ஒளிவெள்ளத்தில்
விரவியிருந்தன பல வீடுகளின் குரல்கள்
கடையைத் திறக்கும் கதவுச் சத்தத்தில்
கலைந்தோடும் நினைவுகளைச் சுமந்தபடி
புலரும் பொழுதின் நினைவுக் குமிழ்களில்
என்னைத் தேடிக்கொண்டு கடந்தபோது
அடுத்த தெரு வந்துவிட்டிருந்தது.


ஒரு தற்கொலையும் கொலையும்

ஒரு குரல் என்னை எழுப்பியது
அக்குரல் என்னை தூண்டியது
யோசனையைக் கைவிடச் சொல்லி
சில முடிவுகளைச் சொல்லிச் சென்றது
ஒவ்வொன்றையும் செய்துமுடிக்க முடிக்க
அடுத்தடுத்த குரல்கள் எழுந்துகொண்டே இருந்தன
யோசிக்கத் திராணியற்ற,
ஆனால் என்றேனும் ஒருநாள் எழந்தே தீரும்
என் குரல்
உங்களைத் தூண்டும்போது
குற்றசசாட்டுக் குறிப்புகளோடு வந்து நிற்பவர்களுக்கு
சமர்ப்பிக்கிறேன் என்னை எழுதிச் செல்லும் இக்குரலை.

Friday, March 6, 2009

குதலைக் குறிப்புகள் - 4

ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது வென்றிருக்கிறார். மிகப்பெரிய சாதனை. ஏ.ஆர். ரகுமான் தொடக்கத்தில் இசையமைக்கத் தொடங்கியபோது, இளையராஜாவின் தீவிர ரசிகனாக இருந்த நான், ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களையெல்லாம் ‘ஒன்றுக்கும் ஆகாது’ பட்டியலில் வைத்திருந்தேன். முன் அனுமானம். அவர் டூயட் படத்துக்கு இசையமைத்தபோது, ‘என்ன பாட்டு இதெல்லாம்’ என்று நண்பர்களுடன் பேசியது நினைவுக்கு வருகிறது. ஆனால் உள்ளூர, இளையராஜாவை வீழ்த்தி வளரும் ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்ட எழுச்சியைப் பற்றிய கலக்கம் இருந்தது. போகப் போக ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. ஏ.ஆர். ரகுமான் ரஜினியின் படத்துக்கு முதலில் இசையமைத்தபோது எழுந்த பல குற்றச்சாட்டுகளையும், அவர் தற்போது இசையமைத்த சிவாஜி படத்தின் பாட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ரஜினி ரசிகர்களை தன் இசைக்கு அவர் பழக்கபப்டுத்தியிருப்பது புரிகிறது. இப்படி உலகத்தையும் தன் இசைக்குப் பழக்கப்படுத்திவிட்டார். இளையராஜாவும் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஏ.ஆர்.ரகுமானை ஒரே மேடையில் பாராட்டியிருப்பதும் நல்ல விஷயம்.

சில தோழர்களும் முற்போக்காளர்களும், ஏ.ஆர்.ரகுமான் விருது பெறும்போது இலங்கைத் தமிழர்களுக்காகவோ, உலகின் பல்வேறு இடங்களில் தீவிரவாதத்தால் இன்னலுறும் இஸ்லாமியர்களுக்காகவோ ஏன் வருத்தம் தெரிவிக்கவில்லை என்ற ‘ஆழமான’ கோரிக்கை ஒன்றை எழுப்பியிருக்கிறார்கள். மணிவண்ணன் போன்ற நடிகர்கள் அடிக்கும் கூத்துக்களில் இதுவும் ஒன்று. மணிவண்ணன் தோழர்கள் போல சிந்திக்கத் தொடங்கிவிட்டாரா அல்லது தோழர்கள் மணிவண்ணன் போல சிந்திக்கத் தொடங்கிவிட்டார்களா எனப் புரியவில்லை. இலங்கைப் பிரச்சினைக்காக மணிவண்ணன் துறந்தவை எவை என்று அவர் முதலில் பட்டியலிடலாம். மேலும், இது இறந்துகொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் மீதான அனுதாபமா அல்லது புலிப்பாசமா என்பதையும் தெளிவுபடுத்தலாம்.

-oOo-

ரெசுல் பூக்குட்டி விருதுபெறும்போது, தான் ஓம் என்ற வார்த்தையை உலகுக்கு அளித்த நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். செக்யூலர்களுக்கு இந்த வரி பிடிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டு மத எதிர்ப்பாளர்களும், கடவுள் மறுப்பாளர்களும் ’எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்ற ஏ.ஆர்.ரகுமானின் சமர்ப்பணத்தை மட்டும் எதிர்க்கமாட்டார்கள் என்பது அறிந்ததுதான்.

இதில் ஜெய்கோ பாடலை காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த உரிமம் பெற்றுவிட்டதாக அறிந்தேன்.
இது ஒரு காமெடி என்றால், இன்னொரு காமெடி, இப்பாடலை நரேந்திர மோடி தன் மேடையில் பயன்படுத்தியிருப்பதற்காக அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் முயன்றிருப்பதுதான். நானும் இங்கே ஜெய்கோ என்று எழுதியிருக்கிறேன். ’குத்லை’க்குறிப்புகளின் மீது கேஸ் வருமா என்று ’நாக்கை’த் தொங்கப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். ஜெய்கோ பாடலை அரசியலுக்குப் பயன்படுத்துவது கேவலமான உத்தி என்று குல்சார் சொல்லியிருக்கிறார். கேவலாமனதைத்தானே அரசியல் செய்யும்?

-oOo-

கருணாநிதிக்கும் காந்திக்குமான ‘ஐயோ தம்பி இப்படி மோசம் பண்ணிட்டியேப்பா’ ரக கடிதப் போக்குவரத்துகள் நல்ல சுவாரஸ்யம். அரசு யாரிடமும் கோராமல், கலந்தாலோசிக்காமல் நாட்டுடைமையை அறிவித்துவிடுமாம். அதை ஏற்றுக்கொள்ள மனமில்லை என்றால், அரசு கட்டாயப்படுத்தாதாம். இதுபோன்ற ஒரு நடைமுறையை அரசு கையாள்வது அறிவற்ற செயல். இது தேவையற்ற குழப்பங்களுக்கே வழிவகுக்கும். இது ஒருபுறமிருக்க, கருணாநிதியின் கடிதம் இன்னும் மோசமானது. அதில் அவர் சொல்ல வரும் கருத்துக்கள் என்ன? ஒரு கோடி ரூபாய் அவர் நிதி அளித்தது தனி மனிதரை நம்பியா அல்லது பபாசி என்கிற அமைப்பை நம்பியா? விருது எழுத்தாளர்களுக்கு இல்லையா? அப்படியானால் விருது பெறும் எழுத்தாளர்கள் என்ன பொம்மைகளா? விருது பெறும் எழுத்தாளர்கள் பட்டியல் தன்க்குத் தெரியாது என்று இன்னொரு குற்றச்சாட்டு. உலகத்துக்கே தெரியும் விஷயம் கருணாநிதிக்குத் தெரியாமல் போயிருக்கிறது. பபாசியோ காந்தி கண்ணதாசனோ, தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களை கருணாநிதியிடம் சொல்லாமல் இருந்திருப்பார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. ஒருவேளை, தேர்ந்தெடுக்குமுன்பே சொல்லவேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்த்திருந்திருக்கலாம். இதை வெளிப்படையாகச் சொல்லமுடியுமா? சொல்லிவிட்டால், ‘எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் தலையிட்டதே இல்லை’ என்று எப்படி பின்னர் பெருமையடித்துக்கொள்ளமுடியும்? காந்தி கண்ணதாசனுக்கு இப்படி விழுந்து விழுந்து பதில் சொல்லியிருக்கும் கருணாநிதி, காலச்சுவடு கண்ணனுக்கு ஏன் பதில் சொல்லவில்லை. கருணாநிதி ஒரு பக்கம் பதில் சொன்னால், காலச்சுவடு கண்ணன் பத்து பக்கம் பதில் சொல்வார் என்பது கருணாநிதிக்குச் சொல்லபப்ட்டிருக்கும்.

காலச்சுவடு பதிப்பகத்தை ஒழித்துக்கட்டவே சுந்தர ராமசாமியின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டது என்று காலச்சுவடு கண்ணன் நினைப்பதற்குத் தேவையான காரணங்கள் உள்ளன. இதில் கனிமொழியின் பங்கு இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கண்ணன் நினைப்பது முற்றிலும் தவறு என்று சொல்லிவிடமுடியாது. நூலகங்களுக்கு காலச்சுவடு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கு இன்றுவரை என்ன காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன? கொடுத்தவனே எடுத்துக்கொண்டாண்டி என்பதே தமிழ்நாட்டின் தேசியப்பாட்டு.

தேர்தல் தேதிகளை அறிவித்துவிட்டார்கள். இனி இரண்டு மாதங்களுக்கு நல்ல ஜாலிதான். கருணாநிதியும் ஜெயலலிதாவும் அறிக்கைகளைத் தவிர்த்தால் ஆயிரம் மரங்களாவது மிஞ்சலாம். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத ஒரு அரசு தமிழ்நாட்டில் அமையுமானால் நல்லது. ஆனால் அது நடக்கும் வாய்ப்பில்லை. தீவிரவாதப் பரிவு, ஹிந்துமதத்துவேஷம், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, நிர்வாகத் திறமையின்மை மற்றும் கட்டுப்பாட்டின்மை எனப் பல்வேறு எரிச்சல்கள் இந்த ஆட்சியின் மீது எனக்கு இருக்கின்றன. ஆனால் இப்போதிருக்கும் அதே கூட்டணியை (திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள்) திமுக தக்க வைத்துக்கொள்ளுமானால், இக்கூட்டணியே நிறைய இடங்களை வெல்லும் எனத் தோன்றுகிறது. அப்படி வென்றால், ஆற்காடு வீராச்சாமிக்குக் கொண்டாட்டம்தான். இன்னும் வெட்டித் தள்ளலாம். (யாரும் பின்னூட்டமாக, கருணாநிதி ஜெயலலிதாவுக்கு மாற்றாக பிஜேபி வராதா என்றெல்லாம் எழுதாதீர்கள், ப்ளீஸ்.)

-oOo-

வழக்கறிஞர்கள் – காவல்துறையினர் பிரச்சினையில், காவல்துறையை மட்டுமே குற்றம் சாட்டி ஊடகங்கள் எழுதுகின்றன. யாருமே வழக்கறிஞர்களின் அநாகரிகத்தை முன்வைப்பதில்லை. காவல்துறையினரின் தாக்குதல் கண்டிக்கப்படவேண்டியது என்றால், வழக்கறிஞர்களின் அநாகரிகமான தாக்குதல் மிகவும் கண்டிக்கப்படவேண்டியது. பிரச்சினை சுப்ரமணிய சுவாமியின்மீது முட்டை எறிந்ததில் இருந்து தொடங்கியதால், இப்பிரச்சினையை ஜாதி பிரச்சினையாக மாற்றிவிட்டார்கள். ஈழத்தமிழர் ஆதரவு என்கிற விஷயத்தை மறந்துவிட்டார்கள். (இது குறித்த மாலனின் மிகச்சிறப்பான கட்டுரை, வழக்கறிஞர்களால் பதில் சொல்லமுடியாத கேள்விகளை முன்வைக்கிறது.) நான் கல்லூரியில் படிக்கும்போது, கல்லூரி கேண்டீனில் போடும் வடையில் ஓட்டையின் அளவு பெரியதாகிவிட்டது என்று ஒரு ஸ்டிரைக் செய்தோம். பிரச்சினை பெரியதானதும், காவிரி பிரச்சினைக்கு ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததற்கு ஆதரவாகத்தான் ஸ்டிரைக் செய்ததாக ஒரு பெரிய பல்டி அடித்தார் எங்கள் VP. அரண்டு போனது கல்லூரி நிர்வாகம். இது இப்போது நினைவுக்கு வருகிறது.

எல்லாப் பிரச்சினைக்கும் பாப்பானே காரணம் என்பது எளிமையான பதில். (இந்த வார குமுதத்தில் வந்த ஒரு கேள்வி பதில். “ரஹ்மானைப் பாராட்டும்போதுகூட சிலர் இளையராஜாவை ஜாடைமாடையாகக் குத்துகிறார்களே?” “அது வேறு வெறுப்பு. இன்றும் தொடரும் ஆதிகால வெறுப்பு. திருத்த முடியாது.” – அதாவது இளையராஜா தாழ்த்தப்பட்ட ஜாதி என்னும் அர்த்தத்தில் இந்த பதில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் முரண் என்னவென்றால், இளையராஜா பார்ப்பனிய வாழ்க்கை வாழ்கிறார் என்று முற்போக்காளர்கள் பலர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் என்பதுதான.) சுப்ரமணிய சாமி ஜாதி சொல்லித் திட்டினார் என்பது இன்னும் எளிமையான குற்றச்சாட்டு. நேற்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடந்த ஈழ உணர்வு தெருக் கிளர்ச்சியில், ‘சுப்ரமணிய சாமி பேசலை, ஜெயலலிதா பேசலை, ஏன் ஏன் பேசலை, பாப்பாந்தான் சாகலை, அதனால பேசலை’ என்று கோஷம் போட்டுக்கொண்டு சென்றார்கள். பாப்பான் சாவதாக வைத்துக்கொண்டால், திருமாவளவன், நெடுமாறன், வீரமணி, கருணாநிதி பேசியிருப்பார்களா என்ன?

-oOo-

கிழக்கு ப்திப்பகத்தின் எடிட்டோரியல் டீம், தமிழை எப்படி எளிமையாகவும் புரியும்படியும் எழுத வைப்பது என்பதற்காக மண்டையை போட்டு உடைத்துக்கொள்கிறது. அவர்களுக்கான ஒரு டிப்ஸ். கீழே கருணாநிதி எழுதியிருக்கும் அறிக்கையில் இருந்து ஒரு வரியைத் தந்துள்ளேன். இதுவே சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது. படித்துத் தெளிவடையுங்கள். (அனுப்பிய நண்பருக்கு நன்றி!)

"அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் விவாதங்கள், வாதங்கள், போராட்டங்கள் இவற்றுக்கு இடையில் கூட- பிற கட்சி தலைவர்களை இது போன்ற வார்த்தைகளால் தாக்க கூடாதென்றும், அப்படி தவறுதலாக ஒருவேளை யாராவது தாக்கி பேசினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் - அவர்களையே மன்னிப்பு கேட்க சொல்லியும் - அரசியலில் அன்று தொட்டு இன்றுவரை - அய்யா பெரியாரும், அறிஞர் அண்ணாவும் நடந்து காட்டிய வழியிலேயே இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கின்ற கழகத்தின் தலைமை - மற்ற கட்சித்தலைவர்கள் ஒவ்வொருவரையும் - மற்ற கட்சிகளின் தியாகிகள் அனைவரையும் எந்த அளவிற்கு மனதில் நிறுத்தி மக்களிடையே நினைவுச் சின்னங்களாக அமைத்து- இந்த இயக்கம் வளர்க்கப்பட்ட விதத்தையும், வளர்ந்து வருகின்ற விதத்தையும் விரிவான வரலாறாக ஆக்கியிருக்கிறது என்பதையும், இனியும் அந்த அரசியல் நாகரிகம் இந்த இயக்கத்தால் கடைப்பிடிக்கப்படும் என்பதையும் ஏனோ, தினமணி மறந்து விட்டு- தேவையற்ற திசை திருப்பங்களை செய்ய முயற்சிகளை மேற்கொள்கிறது".

எடிட்டோரியல் டீமுக்கு இனிமேல் சந்தேகமே வராது என்று நினைக்கிறேன்.