Showing posts with label நோன்பு. Show all posts
Showing posts with label நோன்பு. Show all posts

Sunday, July 30, 2006

கருட பஞ்சமி

இன்று கருட பஞ்சமி.

இதன் ஐதீகக் கதை:

முன்னொரு காலத்தில் ஏழு அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டிப் பிழைக்கிறவர்கள். அப்படி ஒருநாள் அந்தத் தங்கை தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒரு நாகத்தைக் கௌவிக்கொண்டு சென்றது. அந்த நாகம் தங்கை கொண்டு செல்லும் கஞ்சியில் விஷம் கக்கிவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அதே கஞ்சியை வழங்கினாள். அதை உண்ட அண்ணன்கள் அனைவரும் இறந்துவிட்டனர். தினமும் செய்வதுபோலத்தானே செய்தோம், இன்று என்ன இப்படி ஆகிவிட்டது என்று வருத்தப்பட்ட அந்தத் தங்கை தெய்வத்தை நினைத்து அழுது தொழுதாள். அந்த வழியாக வந்த பார்வதியும் பரமேஸ்வரனும் அவளைப் பார்த்து, நடுக்காடில் இருந்துகொண்டு ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள். அவள் நடந்ததைக் கூறினாள். 'இன்று கருடபஞ்சமி. அதை மறந்துவிட்டு பூஜை செய்யாமல் நீ வந்துவிட்டாய். அதுதான் இதற்குக் காரணம். இங்கேயே இப்போது நாகருக்குப் பூஜை செய். கங்கணக் கயிறில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண் எடுத்து, அட்சதை சேர்த்து இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்தவும். அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்" என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். அவளும் அதே போல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

இப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள். கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.

Saturday, July 29, 2006

நாக சதுர்த்தி



இன்று நாக சதுர்த்தி.




தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள்.. இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்கவேண்டுமென்பது ஐதீகம். எங்கள் வீட்டில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களுள் ஒன்று.

இதற்கான ஐதீகக் கதை:

முன்பொரு காலத்தில் ஒருவனுக்கு இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவன் முதல் பெண்ணை நல்ல ஒருவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். இரண்டாவது பெண்ணை, கைகால்கள் செயலிழந்து கிட்டத்தட்ட நடைபிணம் போலிருக்கும் ஒருவனுக்குத் திருமணம் செய்துவைத்தான். அவனது சூழ்நிலை அப்படி இருந்தது. அப்படி நடைபிணம் போலிருந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்ட பெண் தனக்கும் நல்ல வாழ்வு வேண்டும் என்றும் குழந்தைச் செல்வங்கள் வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொண்டாள். பார்வதியும் பரமேஸ்வரனும் நேரில் தோன்றி, நாகரை வழிபடுமாறு அவளுக்கு அருளிச் சென்றார்கள். பார்வதியும் பரமேஸ்வரனும் சொன்னது போலவே, அவளும் விரளி மஞ்சளைத் தேய்த்து, அதில் கஜபத்ர இழை (திரி) தோய்த்து, நாகரை வைத்து வழிபட்டாள். அப்படி வழிபடும்போது இருக்கவேண்டிய நோன்பு முறைகளும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. (அப்புத்தகம் என்னிடமில்லை. இக்கதை கூட வாய்வழியாகக் கேட்டு எழுதுவதே. தவறுகள் இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தவும். நன்றி.) பார்வதியும் பரமேஸ்வரனும் சொன்னபடியே நாகபூஜையால் அப்பெண்ணின் கணவன் நலம்பெற்று அவ்விரு தம்பதியரும் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள்.

எனவே நாகசதுர்த்தி அன்று செய்யப்படும் நாகபூஜை குழந்தைகளின் நல்வாழ்விற்கானது.

நாளை கருட பஞ்சமி.