Wednesday, November 19, 2003


நதி
--ஹரன் பிரசன்னா

நதிக்கரையில் பரவிக்கிடக்கிறது
என் ஆச்சி கட்டி விளையாடிய
மண்கோபுரத்தில் இருந்த
மணற்துகள்கள்

சிதிலமடைந்துவிட்ட
மண்டபங்களின் உட்சுவர்களிலும்
கல்தூண்களிலும் தென்படும்
மாயாதக் கிறுக்கல்களில்
ஏதேனும் ஒன்று
இளவட்டத் தாத்தாவினது

முயங்கிய பின்னான வேர்வை
இந்நதியின் வழியோடித்தான்
கடலில் கலந்திருக்கும்.

வயசுல உங்க தாத்தா
கோவணத்தக் கட்டிக்கிட்டு
மண்டபத்து மேலேயிருந்து
அந்தர் பல்டி அடிப்பாரு பாரு
என
காற்றை நெட்டி முறிக்கும்
தொஞ்சும் காதில்
பாம்படை அணிந்த என் ஆச்சி
இந்த நதிக்கரையில்தான்
அலைந்துகொண்டிருப்பாள்
கோவணம் கட்டியத் தாத்தாவுடன்.


நினைவுகளைச் சுமந்தபடி
என்
நதி.

No comments: