Wednesday, November 26, 2003

மரணம்
-- ஹரன்பிரசன்னா

சூன்யத்தின் பார்வை சூன்யம் நிறைந்ததாக, கொடூரமானதாக இருக்கிறது. அதன் கண்கள் தாங்கமுடியாத வெம்மையை உமிழ்கின்றன. மனதை சுழற்றியடிக்கிறது ஊளையிடும் பெருங்காற்று.

காந்தி ஓ வென்று பெருங்குரலெடுத்து அழுகிறாள். பெத்த வயிறு என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் நெருப்பின் ஜ்வாலை காற்றில் நீந்துகிறது.

நெருப்பின் மீதான என் பார்வை விலகவே இல்லை. என் கண் எரிகிறது. சூடாகிறது. நெருப்புக்குச் சுடுமா? சுட்டாலும் அது நெருப்புக்கு இஷ்டமானதாய் இருக்கவேண்டும். எதையிட்டாலும் உள்வாங்கி எரியும் நெருப்புக்குப் பேதமில்லை. அதன் சிவந்த நாக்கின் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு கணத்தில் இறந்து போன பாலா மாதிரியும் கூட. எனக்கு ஜில்லிடுகிறது. என்னையறியாது கண்கள் பனிக்கின்றன.

நேர்ந்தபின் மரணம் மரணித்தவர்க்குச் சுகமானது.

என் நினைவுக்குத் தெரிந்து நேர்ந்த முதல் மரணம் பாட்டியினுடையது.

தரையில் விழாமல் பம்பரத்தைக் கையிலெடுத்து எல்லோருக்கும் என் பராக்கிரமத்தைக் காட்டிக்கொண்டிருந்தேன். தெருவில் நிறைய சுள்ளான்கள் என்னைச் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு நாளாய் வீட்டில் ஏகப்பட்ட ள்கள். பாட்டிக்கு இழுத்துக்கொண்டிருக்கிறது. இப்போ அப்போ என்று எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பாட்டி எமகாதகி. சாவதாயில்லை. எலும்பும் தோலுமாய் இருக்கும் பாட்டியைக் கண்டாலே பிடிக்காது எனக்கு. காய்ந்து போன மார்புகளை ரவிக்கையால் அடிக்கடி மூடிக்கொள்வாள். அவென் ஏம் பேராண்டி என்று என்னை இறுக்கக் கட்டிக்கொண்ட நாள்களும் உண்டு. இப்போது இழுத்துக்கொண்டு கிடக்கிறாள். எல்லோரின் கவனமும் பாட்டியின் சாவு மேலேயே இருந்ததால் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. இரண்டு நாளாய் யாரும் என்னைப் படிக்கச் சொல்லவில்லை. நான் பம்பரமும் கையுமாக அலைவதை என் அம்மா பார்த்துக்கொண்டிருந்தாலும் சும்மாயிருந்தாள். வந்தவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்து, பாட்டியின் இல்லாத மேன்மைகளைத் தேடிப்பிடித்து சொல்வதற்குத்தான் அம்மாவிற்கு நேரமிருந்தது. பாட்டி இன்னும் இரண்டு நாள் இழுத்துக்கொண்டிருந்துவிட்டு பின் செத்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

என் நினைப்பில் இடியைப் போட்டுவிட்டு அன்று இரவே பாட்டி செத்தாள். ஒப்பாரிக்கு ள் சொல்லி அனுப்பினார்கள். நான்கைந்து பொம்பளைகள் வந்து ஒரு வட்டமாகக் கூடி அமர்ந்து மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள். ஒருத்தி பாட்டியை இந்திராணி என்றாள். இன்னொருத்தி ஒரு படி மேலே போய் உலகத்துக்கே படியளந்த த்தா என்றும் சொன்னதாக நினைவிருக்கிறது. எவளோ என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். அவளும் ஒப்பாரி இடவந்த மற்ற பொம்பளைகள் போலவே ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. னால் அவளின் மார்புகள் பாட்டியினுடையதைப் போல் உலர்ந்தில்லாமல் செழுமையானதாக இருந்தன. அவளிடமிருந்து வேர்வையும் மண்ணெண்ணையும் கலந்த ஒரு வீச்சம் எழுந்தது. போயும் போயும் மண்ணெண்ணெயைக் குடிப்பார்களா என்ன? எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.


பாட்டியின் மரணத்தில் அன்று மனதுக்குள் அமர்ந்து கொண்ட ஏதோவொரு வாடை இப்போது இங்கே என் வீட்டில் இருக்கிறது. பத்தி எரிகிறது. அந்த வாடையா? இல்லை. மண்ணெண்ணெய் நெடியும் இல்லை. பின் எந்த வாடை? எல்லா சாவு வீட்டிலும் இதே வாடை இருக்குமோ என்னவோ. பதினைந்து வயதில் முகர்ந்த வாடை இன்னும் உள்ளிருப்பதே இன்னொரு சாவில்தான் தெரிகிறது.

னால் அன்றைய எழவிற்கும் இன்றைய சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள். அன்றைய மரணம் எதிர்பார்த்தது. நான் அதிகம் நேசிக்காத உறவினுடையது.

நான் நேர்கொண்ட அடுத்த மரணம் அப்பாவினுடையது.

அப்பா எனனுள் மிக ழமாய் பதிந்தவரல்ல. எனக்குள் அவ்வப்போது தலைதூக்கும் வக்கிரம் அப்பாவிடமிருந்து வந்ததாய்த்தான் இருக்கவேண்டும்.

போர்வையை மூடிக்கொண்டு, அன்று படித்த மஞ்சள் பத்திரிகையின் வரிகளை நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்துக்கொண்டிருக்கும்போது அம்மாவின் எதிர்ப்பும் அப்பாவின் கெஞ்சலும் கேட்டு அயற்சியாய் உணர்ந்ததுண்டு. அம்மா பலமாய் எதிர்க்கிறாளா ஊடுகிறாளா என்று தெரியுமுன்னரே அப்பா இறந்து புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார்.

மீண்டும் ஒப்பாரிப் பெண்கள். அம்மாவின் அழுகை. மண்ணெண்ணெய் நெடி. சாவு வீடு எனக்கு மட்டும் இரசிக்க முடிந்ததாய்ப் போனது கண்டு எனக்கே என்னைக் குறித்த ச்சரியம்.

நான் இரசித்துக்கொண்டிருக்க தொடர்ந்து அப்பாவும் பாட்டிகளும் மட்டும் இறப்பதில்லை. மரணங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அவை சொல்லியும் சொல்லாமலும் செல்லும் விஷயங்கள் கனத்தவை. இன்று நேர்ந்து விட்ட பாலாவினது மாதிரி. பாலா. கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நேர்ந்துவிட்ட ஜனனம். கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நேர்ந்து விட்ட மரணம்.

காந்தியின் அன்றைய எதிர்ப்பார்ப்புகள் நியாயமானவை. நானும் பங்கெடுத்துக்கொண்டவை. முதலிரவில் சங்கமித்த நிமிடங்கள் முதல் பாலா பிறந்தது வரை அவள் அவளாய்த்தான் இருந்தாள். கருவுற்றதை என்னிடம் சொல்லி வெட்கித்த நிமிடங்கள் காவியம் என்பேன். பாலா பிறந்த பின் எல்லாம் மாறிப்போயின.

எதற்காய் அத்தனை பெரிய தண்டனை என்று நான் யோசிக்காத நாளேயில்லை. காந்தி அழாது உறங்கிய இரவே இல்லை.

பாலா பிறந்த போதே முதுகில் பெரிய கட்டி. பிறந்த தினமே பரேஷன் என்றார்கள். ரொம்ப ரிஸ்க் என்றார்கள். கடவுளை நம்புங்க என்றார்கள். கவலைப்படாதீங்க என்றார்கள்.

....என்றார்கள். ....என்றார்கள். ... என்றார்கள். இத்யாதி.

காந்தி அப்போதுதான் முதன்முதலாய்ப் பெருங்குரலெடுத்து அழுததும். நான் வெளிக்காட்டாது எனக்குள்ளே ஓலமிட்டேன். ஒரே ஒரு குறையுடன் பாலா உயிர்பிழைத்தான். இரண்டு கால்களிலும் உணர்ச்சியில்லை. தவழ்தல் கூட சாத்தியமில்லை. கொஞ்சம் பெரியவனானதும் இன்னொரு பரேஷன் மூலம் நடக்க வைக்க முடிந்தாலும் முடியலாம் என்றார்கள்.

முதல் குழந்தை நடக்க முடியாது ஒரே இடத்திலேயே இருந்து அழுவது கண்டு கண்டு காந்தி அரண்டு போனாள். அவளுக்குள்ளேயே அழுது ஒடுங்கினாள். நான் உட்பட்ட எல்லாமே அவளுக்கு வெறுப்பாகிப் போனது. எப்போதும் பாலாவைத் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பது மட்டும் அவளுக்குப் பிடித்தமானதாயிருந்தது. சிரிப்பு பேச்சு ஒன்றும் இல்லாத காந்தியைக் காணவே கவலையாயிருக்கும் எனக்கு.

பல மாதங்கள் கழித்த ஒரு இரவில் அவளைத் தொட்டபோது ஏதோ தெருவில் போகிறவன் தொட்டபடி கண்கள் காட்டினாள். நான் பயந்து பின்வாங்கினேன். தீர்மானமாய்ச் சொன்னாள் இனி நமக்கு வேண்டாமென்று. ஏன் என்று கேட்கும் தைரியம் எனக்கில்லை. ஏதோ பேச்சுக்குச் சொல்கிறாள் என்ற என் எண்ணம் தவறாய்ப் போனது. காந்தி நெருப்பானாள். நான் என்னை அடக்கக் கற்றுக்கொண்டேன்.

இனி நமக்கு வேண்டாம் என்ற காந்தி தன்னை மறந்த ஒரு இரவில் கட்டை உடைத்துக்கொண்டு விட்டாள். அல்லது நான் உடைத்தேன். அன்றைக்கு காந்தியின் வேகமும் க்ரோஷமும் என்னைக் கொஞ்சம் பயமுறுத்திவிட்டன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இருபத்தைந்து வயதுப் பெண்ணின் சாந்தம் இல்லை. இரண்டு வருடங்களின் தனித்த இரவுகளை ஒரே இரவில் தீர்க்க நினைக்கிறாளோ என்றும் தோன்றியது. மூச்சு வாங்கி மேலே சரிந்தபோது "இப்போ மட்டும் பாலா ஞாபகம் இல்லையா?"என்று கேட்கலாமா என்று நினைத்தேன். நான் கேட்காமல் விட்டதற்கு பாலா எனக்கும் மகன் என்பதும் இனியும் இரவுகள் வரும் என்பதும் காரணங்களாய் அமைந்துவிட்டன.


நேற்று எங்களுக்குள் நடந்த சம்பாஷணைகள் என் தலைக்குள் தெறிக்கின்றன. அவளால் என்னை மட்டுமே குற்றம் சாட்ட முடியவில்லை என்ற ஒரே காரணத்தினால்தான் நான் தப்பித்தேன்.

என் சந்தோஷத்தை அவளோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அவள் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதாயும் அதற்குத் தானும் காரணமாகிவிட்டதாயும் புலம்பித் தீர்த்தாள். பாலா உண்டானதைச் சொன்னபோது நடந்த நிகழ்வுகள் என் மனக்கண்ணில் வந்து மறைந்தன. மெல்ல நெருங்கி உச்சி முகர்ந்து கையால் வயிற்றைத் தடவி உதட்டைக் கௌவி இறுக்கிக் கட்டிப்பிடித்த நிமிடங்கள் நேற்றும் நிகழ்ந்திருக்க வேண்டியவை. னால் நேற்று ஒரு கை ஓசை. பாலாவைக் கருக்கொண்ட அன்று இருவருக்குள்ளிருந்த சந்தோஷம் நேற்று என்னிடம் மட்டும்தான் இருந்தது. நேற்று அவள் மனதுள் நான் குற்றவாளியாக்கப் பட்டிருந்தேன்.

காந்தியின் புலம்பலை மீறி என்னுள் ஒரு சந்தோஷம் பரவியது. இன்னொரு மகனோ மகளோ பிறந்து அது தவழ்வதை, நடப்பதை எல்லாம் ரசிக்க முடியும். காந்தியின் குற்ற உணர்ச்சியும் என் மீதான சாடல்களும் அதைக்காணும்போது மறையும். அப்போது காந்தியிடம் சொல்ல வேண்டும், பாலா இருக்கும்போதே இரண்டாவதாய்க் கருவுற்றது பெரிய பாவமொன்றும் இல்லை என்று.

ஜ்வாலை எண்ணெயில்லாமல் சிறுகத் தொடங்குகிறது. சொந்தக்கார கிழவியருத்தி எண்ணெயிடுகிறாள். கிட்டத் தட்ட எல்லோரும் வந்தாகிவிட்டது. நான் யாருடனும் பேசவில்லை. அமைதியாயிருக்கிறேன். எல்லோரும் காந்தியைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். கொண்டு போகலாம் என்று யாரோ சொல்கிறார்கள். நான் சரி என்கிறேன், எப்படிச் செத்தான் என்ற யோசனையில். முனகல் சத்தம் கேட்டதாய்க்கூட நினைவில்லை.

காந்தியின் வீறிடல் என்னைக் குலுக்குகிறது. என்னிடம் அவளுக்கான தேறுதல் வார்த்தைகளில்லை. என்னை நானே கூட தேற்றிக்கொள்ள முடியாது. என்னைத் தேற்றவும் யாருமில்லை.

பாலாவின் நேற்றைய சிரித்த முகம் மனதை விட்டு இன்னும் கண்ணை விட்டு மறையவில்லை. காந்தி பலமுறை சொல்லி அழுத வரிகளை மீண்டும் சொல்லி அழுகிறாள். "யாருமே என்னைப் புரிஞ்சிக்கலையா..? பாலா.. நான் உன்ன மறந்துருவேன்னு நினைச்சிட்டியா.. பெரிய தண்டனையா கொடுத்திட்டியே..”

எனக்குக் குறுகுறுக்கிறது.

நேர்ந்தபின் மரணம் மரணித்தவர்க்குச் சுகமானது. பாலா மாதிரி.

1 comment:

CS. Mohan Kumar said...

Very nice story. Did not see the label "Shorty story" and felt it like it happened to you !! Excellent writing. Surprised how nobody had put a comment.