Sunday, December 21, 2003

ஒன்று நீங்கலாக... - கவிதை

என்றோ தூக்கியெறிந்த
வேண்டாத பப்பாளி விதைகள்
மரங்களாக நிற்குமழகைக்
காணும்போதெல்லாம்
மண் பெருமை உணர்ந்தாலும்
வீட்டுக்குள் ஒருபிடி மண்ணில்லை
என்பதுவும்-

ஒரு காலத்தில்
நெல்லிக்கொம்பு மிதந்த கிணறு
தூர்வாரச்சொல்லி
பழம்பெருமையோடு மட்டும்
காத்திருத்தல்
காணும்போதும்-

இடதும் வலதுமாய்
தலையைத் திருப்பி
சொறிதலைக்
கடித்துச் சுகம் காணக் கடினப்படும்
வீட்டு நாயின்
தினக்குளியலும்-

பத்தாவது பக்கத்தில் பிரிந்து
காற்றில் பக்கங்கள் சடசடக்க
குப்புறக் கிடக்கும் புத்தக
நினைவும்-

செதுக்கிவைத்த தோல்வியெனினும்
தொடர்ந்துகொண்டே இருக்கின்றன
சில எத்தனங்கள், கூடவே
விதிவிலக்காய் இருந்து
குமைக்கின்றன
எல்லா இரவுகளும்

No comments: