Tuesday, August 10, 2004

சின்னச் சின்னக் கவிதைகள் - 2

[6]

உன் பேச்சில்
நிதானமிழந்துவிட்ட ஒரு வார்த்தைக்காக
குமுறிக்கொண்டிருக்கிறேன்,
எச்சிற் தெறிப்பைக்
கவனிக்காதது போலிருந்து
இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும்போது
ஒடுங்குகிறது என் சுயம்

[7]

கூடையிலிருந்து சிதறி ஓடும்
ஆரஞ்சுப்பழத்தை விரட்டிப் பிடிக்காதீர்கள்,
திக்குகளறுத்து
எல்லையறுத்து
மானுடம் வெல்லும் அது.

[8]

நான் வீசிய சோழிகளெல்லாம்
குப்புற விழுந்தன
நீ வீசிய சோழிகளெல்லாம்
வானம் பார்த்து
இந்தத் தலைகீழ் விகிதங்களுக்கு இடையில்தான்
எப்போதும் அலைகிறது வாழ்க்கை

[9]

அந்நியப்பட்டு வீட்டுள் நுழைந்துவிட்ட
றெக்கைகள் படபடக்கும் தட்டான்
தனிமையை விரட்டி
மீட்டெடுக்கிறது
மழையின் குதூகலத்தை
மண்வாசத்தை
வீடெங்கும் பச்சைத் துளிர்ப்பை.

[10]

என் டயரியின் பக்கங்களில்
சில குறிப்புகள் எழுதியிருக்கிறேன்
இரு புறாக்கள் புணர்ந்ததைக் கண்டது முதல்
என் ஆழ்மனதில்
கேட்கும் சங்கொலிக் குறிப்பைத் தவிர.


No comments: