Saturday, February 5, 2005

பயணம் - கவிதை

--எப்போதும் வறண்டு கிடக்கும் ஏரியில்
நிறைந்திருந்த நீரில்
காத்திருந்தன
இரண்டு வெள்ளை நிற நீர்ப்பறவைகளும்
ஒரு சாம்பல் நிற நீர்ப்பறவையும்.

--வழியெங்கும்
குட்டைப் புதர்ச்செடியில் பூத்திருந்தன
வண்டுகள் சுற்றாத
மணமற்ற
சிறிய
மஞ்சள் நிறப்பூக்கள்.

--பெருங்காற்றில்
கிழிந்திருக்கும் வாழை இலைகளில்
காய்ந்திருக்கிறது பறவையின் எச்சம்.

--பிளந்திருந்த மரமொன்றில்
உயிர்த்திருக்கிறது காளான்

இப்படியாக
குறித்து வைத்த படிமங்கள் போக
ஒரு பயணக்கவிதை எப்போது பேசப்போகிறது
இடப்புறச் சன்னலினூடாக
கண்ணுக்கு வராமல்
தொலையும் கவிதைகளை.

No comments: