Thursday, January 19, 2006

விரிசல் - கவிதை

சட்டென புலப்பட்டது
சுவரில் விரிசல்
நேற்றுவரை இல்லாமலிருந்ததோ
என்கிற கேள்விக்கு விடையில்லை
கொஞ்சம் உற்றுப் பார்க்கும்போது
அழகாகப் பட்டது
சுவரில் மின்னல் போல
மெல்ல தடவிப் பார்க்கும்போது
கிளரும் விரல்கள்
உள்ளே ஒரு விதை வைத்தால்
பெருமரம் முளைக்குமோ?
வீட்டுக்குள்ளே ஓர் ஆலமரம்!
விரிசலில் ஊதினேன்
மண் வாரி கண்ணுக்குள் விழ
லேசாய் உறுத்தியது
இன்னொரு சமயம்
பலமாய்க் கதவடைத்து மூடியபோது
சிற்சில எறும்புகள் உதிரின
என் உடலை
விரிசலுக்குள் புகுத்தி
வெளி வந்தபோது
மேலெங்கும் கவிதை வரிகள் ஒட்டியிருந்தன
எறும்புகள் கவிதைகளைத் தின்கின்றனவா?
பின்னொரு சமயம் யோசிக்கவேண்டும்
விரிசலை மறைக்கும் விதமாய்
ஒரு கண்ணாடியை மாட்ட
முகத்தில் அறைந்தது என் முகம்
இப்போது
என் முகத்தின் பின்னே
மறைந்திருக்கிறது விரிசல்
இன்னொரு சமயம் நீங்கள் வரும்போது
அக்கண்ணாடியை அவசியம் காணவும்.

No comments: