Wednesday, August 16, 2006

சொக்கலிங்கத்தின் மரணம் - சிறுகதை

[1]


சொக்கலிங்கத்தின் நினைவுகள் தாறுமாறாக அறுத்துக்கொண்டு ஓடின. அவருக்குள் ஏதேதோ எண்ணங்கள் தொடர்ந்து எழுவதும் அதைத் தொடர்ந்து கலக்கமும் எழுந்தன. அவர் செத்துப்போவார் என அவரது சொந்தங்கள் அவர் வீட்டுத் திண்ணையிலும் எதிர் வீட்டுத் திண்ணையிலுமாகக் காத்துக்கிடந்தன. போயிட்டியே என்று கதற ஆயத்தப்படுத்திக்கொண்டு சொக்கலிங்கத்தின் தலைமாட்டில் உட்கார்ந்திருந்தாள் ஒருத்தி. பெரு மழையில் கரைந்து போய் வெளுத்துவிட்ட, கரியில் வரையப்பட்டிருந்த ஸ்டம்ப் கோடுகளைப் பார்த்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட முடியாத சோகத்தில் அந்த வளைவின் சிறுவர்கள் கன்னத்தைக் கையால் தாங்கிக்கொண்டு சினிமா கதை பேசிக்கொண்டிருந்தார்கள். மழையின் தீவிரம் கூடிக்கொண்டே இருந்தது. சொக்கலிங்கம் சீக்கிரம் செத்துப்போனால் பெரு மழைக்கு முன் எரித்துவிடலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள் சொந்தக்காரர்கள். சொக்கலிங்கம் சாவதாய் இல்லை. பையன் பாலூத்தினா செத்துடுவான் என்றார் வெள்ளைத் துண்டு போட்ட ஒருவர். 'யாரு சம்முவமா? நல்லா ஊத்துவாம்ல பாலு!' என்றார் இன்னொருவர். அவர் கிருதாவைப் பெரிதாக வைத்திருந்தார். 'என்னதாம் கொலைப்பகையா இருக்கட்டும்வே. அப்பனுக்குப் பையன் பாலூத்தவேணாமா' என்றார் வெள்ளைத் துண்டு. 'ஒம் பையன் ஒனக்கு பாலூத்துவானா யோசிவே' என்று மனதுக்குள் வைதது கிருதா.

போயிட்டியே என்று பெருங்குரல் ஒன்று கேட்டது.

அதுவரை சலம்பிக்கொண்டிருந்த ஊரு சனங்களின் பேச்சு சட்டென இரண்டொரு நொடிகள் அடங்கி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. திண்ணையில் உட்கார்ந்திருந்த சொன்ந்தக்காரர்கள் சொக்கலிங்கத்தின் வீட்டுக்குள் போனார்கள். தனது குரலின் எட்டுக் கட்டையை நினைத்துச் சந்தோஷப்பட்டுக்கொண்டே அழுதுகொண்டிருந்தாள் அந்தப் பெண். மாடி வீட்டிலிருந்து எட்டிப் பார்த்தான் சண்முகம். 'அதாம் உசுரு போயிட்டில்லவே, கீழ இறங்கி வாரும்' என்றது வெள்ளைத் துண்டு. 'செத்த இருங்க வாறேன் அண்ணாச்சி' என்று சொல்லி, வீட்டுக்குள் சென்று, குத்தாலத் துண்டு ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு, கைலியை மடித்துக்கொண்டே கீழே இறங்கினான் சண்முகம். 'அப்பஞ் சாவுக்கு இவ்வளவு சாவாசமா வாற மனுசாளும் ஊர்ல இருக்கானுவடே' என்று முணுமுணுத்தது கிருதா. மழை நின்றாலும் வளைவில் கிரிக்கெட் விளையாடமுடியாது என அலுத்துக்கொண்டன சிறுவர் கூட்டம். 'அந்தாளு உசுரோட இருக்கிறப்பயே விளையாட விடமாட்டான். செத்தும் களுத்தறுக்கான் பாரு, மூதி' என்றான் ஒருவன். பந்து தனது எல்லைக்குள் வந்தால், உடனே ஓடிச் சென்று எடுத்து வைத்துக்கொள்வார் சொக்கலிங்கம். அப்படி எடுக்குமுன் பந்தை எடுத்துவிட ஓடி வருவார்கள் சிறுவர்கள். பந்து சொக்கலிங்கத்தின் கையில் சிக்கிவிட்டால் அது திரும்ப வராது. யாராவது சிறுவர்கள் அவரிடம் பந்தைக் கேட்கப் போனால் தாறுமாறாக வைவார். குடும்பத்தை மட்டுமில்லாமல் சிறுவனின் பரம்பரையையே வைவார். ரோட்ல போய் ஆடுங்கல, கிரவுண்டுல போயி ஆடுங்கல, உங்க வீட்டு அடுப்பாங்கறையில ஆடுங்கல என பல 'யோசனைகளை'ச் சொல்வாரே ஒழிய பந்தைத் தரமாட்டார். சுவத்துல கரியால கோடு போட்டுக் கோடு போட்டு நாசப்படுத்துறீங்களேல, படிச்சவனுளா என்பார். மறுநாள் பந்து இரண்டாக வாயைப் பிளந்துகொண்டு வெளியில் கிடக்கும். 'ரெண்டு மூணு நாளு விளையாடாட்டியும் பரவாயில்ல, ஆளு ஒளிஞ்சான் பாரு, அதுக்கே திருச்செந்தூருக்கு மொட்டை போடணும்ல' என்றான் இன்னொருவன்.

சண்முகம் செத்துக்கிடந்த தன் அப்பாவைத் தூரத்திலிருந்து பார்த்தான். உடனே வெளியில் வந்தான். 'ஆகவேண்டியதைப் பாக்கணும்' என்றார் வெள்ளை துண்டுக்காரர். 'ம்ம்' என்றான் சண்முகம். மேலிருந்து சண்முகத்தின் மகன் இறங்கி வந்தான். சண்முகம் பார்வையாலேயே அவனை மேலேயே இருக்கச் சொன்னான். 'தாத்தாவ பாக்கணும்னு வாரான், அவனை வெரட்டாதவே, நீ போல' என்றார் வெள்ளைத் துண்டுக்காரார். மிகுந்த ஆர்வத்தோடும் கலக்கத்தோடும் காலை உள்ளே வைத்தான் மணி.

[2]


தாத்தாவின் மேல் அமர்ந்திருந்த ஈயைப் பார்த்துக்கொண்டிருந்தான் மணி. அந்த ஈ ஆடாமல் அசையாமல் வெகுநேரம் அவர் மேலே அமர்ந்திருந்தது. யாரோ ஒருவர் இறந்தவருக்கு மாலை போட்டு விட்டுப் போனார். ஈ தன் இடத்தை விட்டுக் கொஞ்சம் அணங்கியது. நேராகப் பறந்து மேலேயிருந்த பரணில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பந்திப் பாயில் அமர்ந்தது. அங்கிருந்து சிறிது நேரத்திற்கெல்லாம் பக்கத்தில் இருந்த பெட்டியில் தாவி அமர்ந்தது. சட்டென்று பறந்து, அந்த அறையை இரண்டு மூன்று முறை சுற்றிவிட்டு ஜன்னல் வழியே வெளியேறியது. மணி வீட்டின் பின்புறம் வழியே சந்துக்குள் நுழைந்து ஜன்னலின் வெளிப்புறம் வழியாகப் பார்த்தான். ஜன்னலின் வழியாகப் பார்த்தபோது தாத்தாவின் முகம் விகாரமாகத் தோன்றியது. ஈயைத் தேடினான். அந்த இடத்தில் இருந்த ஒரே ஒரு ஈ அந்த ஈயாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். தனக்கு ஏதோ சொல்ல அந்த ஈயிடம் ஏதோ இருப்பதாகப்பட்டது அவனுக்கு.

உள்ளுக்குள் பலமாகப் பேசுக்குரல்கள் எழுந்தன. சட்டுன்னு தூக்கணும் என்றது வெள்ளைத்துண்டு. சண்முகம் கத்தினான். அவர யாருன்னு நினைச்சிட்டீங்க அண்ணாச்சி, சாவுற வரைக்கும் கெத்தோட இருந்த மனுஷன் என்றான். கிருதா முகத்தை வேறு பக்கம் திருப்பிச் சிரித்தது. எல்லாருக்கும் சொல்லி, எல்லாரும் வந்து பார்த்து வாக்கரிசி போட்ட பின்னாடிதான் எடுக்கணும்னு என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான் சண்முகம்.

மணி ஈயைப் பார்த்துக்கொண்டே நின்றான். அந்தச் சந்தில் நின்று ஈயைப் பார்த்துக்கொண்டிருப்பது அவனுக்கு விநோதமாகப்பட்டது. ஏதோ ஒரு நாளில் தாத்தாவும் இதே சந்தில் நின்று எதையோ விநோதமாகப் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். ஒரு மனிதனின் சாவுக்குப் பின் அவனது நினைவுகள் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்று தீவிரமாக நம்பினான் மணி. இதை நினைத்துப் பல தினங்கள் அவன் யோசித்திருக்கிறான். அதன் ஒரு தொடர்பே அந்த ஈ. அவனுக்குள் சந்தேகமே இல்லை. ஈயைத் தேடினான். அங்கு அந்த ஈ இல்லை. மீண்டும் பின்கட்டு வழியாக வீட்டுக்குள் வந்தான். தாத்தாவின் மீது ஈக்கள் உட்கார்ந்திருந்தன. தாத்தாவுக்குத் தன்னிடம் சொல்ல பல விஷயங்கள் உள்ளன என்றும் அவர் நிச்சயம் சொல்லுவார் என்றும் உறுதியாக நம்பினான் மணி.

[3]


விடாமல் மழை கொட்டிக்கொண்டிருந்தது. இப்படி ஒரு மழையைத் தன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று உறுதியாகச் சொன்னார் ஒருவர். இழவு வீட்டுக்கு வந்தவர்களில் வயதில் மூத்தவர் அவர். இவன் செத்தா இவனுக்கு யாரு பாலூத்துவா என்று யோசித்துக்கொண்டிருந்தது கிருதா. தான் சொல்லும்போதே பிணத்தைத் தூக்கியிருந்தால் எல்லாருக்கும் சௌகரியமாகப் போயிருக்கும் என்று சொல்லிச் சொல்லிப் புலம்பியது வெள்ளைத் துண்டு. அவர் சண்முகத்தைக் குறை சொல்லச் சொல்லச் சண்முகத்துக்கு அவன் அப்பாவின் மீது பாசம் கூடிக்கொண்டே போனது. "அண்ணாச்சி, அவர் என் அப்பா அண்ணாச்சி" - மீண்டும் மீண்டும் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களில் சொன்னான். சண்முகத்தின் பொண்டாட்டி, ஆட்டும்னு எடுக்கப் பாருங்க, சோலி நிறையக் கெடக்கு என்றாள். சண்முகம், "அவர் என் அப்பாட்டீ" என்றான். ஊர்ல மத்தவன்லாம் அப்பா இல்லாம பொறந்துட்டானுவளே என்று ரொம்ப வருத்தப்பட்டுக்கொண்டது கிருதா.

மழையின் தீவிரம் சண்முகத்துக்கும் கொஞ்சம் கலவரத்தைக் கொடுத்தது. இருந்தாலும் அவன் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. "நாறிப் போகணும்னு எழுதியிருந்தா நாறட்டும். என்னா பாடு படுத்தினான் பாவி" என்று நினைத்துக்கொண்டான். தாமிரபரணியில் வெள்ள அபாயம் இருப்பதாக ரேடியோவில் சொன்னதாகச் சொல்லிவிட்டுப் போனான் சொக்கன். அவனைத்தான் வீடு வீடாகச் சென்று தகவல் சொல்ல ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் சென்று "பிச்சம்மா காம்பவுண்டு, சம்பந்தர் தெரு பெரியவுக சொக்கலிங்கம் பிள்ளை இன்னைக்குக் காலேல தவறிட்டாக. நாளைக்குக் காலேல எடுப்பாக. வந்துருங்க. சங்கத்துலேர்ந்து சொன்ன தகவலுங்கோய்" என்று கத்திவிட்டுப் போனான். துண்டை தலையில் கட்டிக்கொண்டு, லொடுக்கு விழுந்த கன்னத்தோடு அவன் கத்துவதைப் பார்த்து வீட்டுச் சிறுவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். சில பெரிசுகள், யாருடே போனது, சரியாச் சொல்லு என்று கேட்டுச் சேதியைத் தெரிந்துகொள்வார்கள்.

வெள்ளம் வரப்போவுது என்று சாவு வீடே பேசிக்கொண்டிருந்தது.

மணி வீட்டுக்குப் பின்னால் இருக்கும் ஸ்டோர் ரூமுக்குள் நுழைந்தான். தாத்தா வெகு நேரம் அங்கிருந்த பெட்டியை நோண்டிக்கொண்டிருப்பதையும் அங்கேயே அமைதியாய் உட்கார்ந்திருப்பதையும் அவன் நிறையத் தடவைகள் பார்த்திருக்கிறான். தாத்தாவின் மீதிருந்த ஒரு ஈ அந்த அறைக்குள் பறந்துசென்றது. தாத்தாவே கூட்டிச் செல்வதாக நினைத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்திருந்தான். தாத்தாவின் மீது அவனுக்கு அவ்வளவு பாசம் இருந்ததா என்பது பற்றியும் அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு சாவு அவனைக் கொஞ்சம் அசைக்கிறதோ என்றும் தோன்றியது. உணர்வுகளுக்குக் கட்டுப்படுவது அவனுக்குப் பிடித்திருந்தது. அந்த வயதில் உணர்வுகளுக்குக் கட்டுப்படுவதே அந்த வயதுக்கு செய்யும் மரியாதை என்பதைப் பல இரவுகளில் அவன் கண்டடைந்திருக்கிறான். சாவும் கூட ஒரு உணர்வு ரீதியால் உந்தப்பட்ட விஷயமாக இருப்பதில் அவனுக்குக் கொஞ்சம் உடன்பாடு வந்துவிட்டிருந்தது. மழை நீர் வடியும் வரை தாத்தாவைத் தூக்கமாட்டார்கள் என்பது அவனுக்கு நிம்மதியாய் இருந்தது. அதுவரை அவன் என்ன செய்கிறான் என்று யார் பார்க்கப்போகிறார்கள்? ஒரு ஈ அவன் காதருகில் வந்து சத்தமெழுப்பிச் சென்றது. மணி சிரித்துக்கொண்டான்.

வெள்ள நீர் தண்டவாளம் வரையில் வந்துவிட்டதாகப் பேசிக்கொண்டார்கள். தண்ணி வடியர வரைக்கும் தூக்கமுடியாதுடே என்றார் வெள்ளைத்துண்டு. என்ன செய்ய அண்ணாச்சி என்றான் சண்முகம். இப்ப கேளு என்றார் கிருதா. சண்முகம் கிருதாவை முறைத்தான். கருப்பந்துறைக்குத் தண்டவாளத்தைத் தாண்டி கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தூரம் போகவேண்டும். தண்டவாளத்திலேயே தண்ணி என்றால் கருப்பந்துறை முங்கியிருக்கும். சண்முகத்துக்கு ஒரு நடை போய் பார்த்துவிட்டு வரலாமா என்று தோன்றியது. "பொணத்தைப் போட்டு நாறடிக்கணும்னே வேணும்னே சொன்னாலும் சொல்லுவானுவோ" என்று நினைத்துக்கொண்டு வெளியில் போக நடையைக் கட்டினான்.

வளைவிலிருந்து வெளிப்பட்ட அவனைப் பார்த்துப் பதறினாள் பிரமு கிழவி. அப்பன் செத்துக் கெடக்கான், வெளிய போகக்கூடாதுடே என்று சொல்லி அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள். சண்முகத்துக்கு எரிச்சலாக இருந்தது. அப்பாவின் வைப்பாட்டிகள் என்கிற சண்முகத்தின் பட்டியலில் பிரமு கிழவியும் இருந்தாள்.

இப்படியே இரவு ஆகிவிட்டிருந்தது.

மணி அந்த அறைக்குள் மூழ்கிவிட்டிருந்தான். தாத்தாவின் பல பரிமாணங்கள் அவனுக்கு இன்பத்தையும், ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும், காமத்தையும் ஒருசேரத் தூண்டியிருந்தன. தாத்தாவின் வாழ்க்கையே அந்த அறைக்குள் புதைந்து கிடப்பதாகப்பட்டது அவனுக்கு. அங்கிருந்த பெட்டிகள் முழுவதிலும் தாத்தா எழுதிப் போட்டிருந்த கத்தைக் கத்தையான காகிதங்கள் அவனுக்குப் பல விஷயங்களைச் சொன்னது. எதுவும் ஓர் ஒழுங்கான காலவரிசையில் இல்லை. அவன் கையில் கிடைத்த தாளையெல்லாம் பிடித்திழுத்துப் படித்தான்.

[4]


மழையின் உக்கிரம் சற்றும் குறையவில்லை. தொடர்ந்து முப்பத்தாறு மணிநேரமாக மழை பெய்துகொண்டிருந்தது. ஊரெங்கும் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. பிணத்தைச் சுற்றி நான்கைந்து பேர் மட்டுமே இருந்தார்கள். கிருதா அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருந்தது. எரிந்துகொண்டிருந்த விளக்கில் சண்முகத்தில் எரிச்சலும் அவன் பொண்டாட்டியும் எரிச்சலும் அப்பட்டமாகத் தெரிந்தது. 'செத்தும் கொல்லுதானப்பா' என்று நினைத்துக்கொண்டான் சண்முகம். தன் கணவனின் வறட்டு ஜம்பத்தால் இப்படி நாறும்படி ஆகிவிட்டதே என்று வயிறு எறிந்துகொண்டிருந்தாள் சண்முகத்தின் பொண்டாட்டி. மணி கையில் கிடைத்த சில முக்கியமான பக்கங்களை எடுத்துக்கொண்டு அவன் வீட்டிற்குள் ஓடினான். மெழுகுவர்த்தியை வைத்து ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டிருந்தான். வெள்ளம் வாகையடி முக்குத் தாண்டி டவுணுக்குள் புகுந்து சம்பந்தர் தெருவைத் தொட்டுக்கொண்டிருந்தது. வெள்ளைத்துண்டு வந்து, "பொணத்தை இங்க வெச்சிக்கிட்டு இருந்தா வேலைக்காகாது. ஐஸ் வாங்கி அதுல படுக்க வெக்கணும். இங்கனயே வெச்சிருக்கமுடியாது. இப்பமே நாத்தம் அடிக்க ஆரம்பிச்சிட்டு. வெள்ளத்தண்ணி இங்கயும் வந்துட்டுன்னா நிலைமை ரொம்ப மோசமாயிடும். பேசாம மாடில உன் வீட்டுக்குக் கொண்டு போயிடலாம். எப்படியும் இன்னைக்கு ராத்திரியில தண்ணி வடிய ஆரம்பிச்சிடும். நாளைக்குக் காலங்காத்தால தூக்கிடலாம்" என்றார். எழு வருசம் மாடிக்கு வராத தன் அப்பனை இப்போது மாடிக்குக் கொண்டுபோகவேண்டுமா என்று யோசித்தான் சண்முகம்.

[5]


தாத்தாவின் எழுத்துகள் மணியை என்னவோ செய்தது.

சொக்கலிங்கம்-1

..........ளின் சேலை காத்துலாடி எம்மேல பட்டது. அதுக்கு மேல சும்மா இருக்க முடியலை. காலேல குடிச்சிருந்த தென்னங்கள்ளு உடம்பை முறுக்கேறி வெச்சிருந்தது. காலேல ஆத்துல குளிச்சப்பையும் அவ ஒடம்பைத்தான் நினைச்சிக்கிட்டுக் கெடந்தேன். எண்ணெய் தேச்ச மாதிரி வேர்வை வழிஞ்சு கெடக்கற கருப்பு இடுப்புலத்தான் எம்பார்வை கெடந்தது. அவளுக்குந் தெரியும் எம்மனசு. ஒடனே ஒத்துக்கப்பிடாதுன்னு நினைச்சாளா கருப்பி? இருக்கும். எங் காந்திமதியில்லா. ஒலகத்துல ஒண்ணும் வேணாமின்னு நினைச்சேன். ஜன்னலுக்கு வெளிய நின்னுக்கிட்டு படுக்கையறைல துணி மாத்திக்கிட்டு இருந்த அவளைப் பாத்தேன். உள்ளவான்னு சொன்னா. நான் உள்ள போனேன். கூளு குடிச்ச ஒடம்போட ருசி, தெனவு எல்லாங் காமிச்சா அன்னைக்கு. (சில வரிகள் அடிக்கப்பட்டிருந்தன. மணி அதை ஊன்றிப் படித்துப் பார்த்தான். ஒன்றும் பிடிபடவில்லை.) ....தைப் படிப்பாங்கன்னு தோணுது. படிக்கட்டும். எல்லா மனுசனுக்குள்ளும் இருக்கிறதைத்தான் எழுதிருக்கேன். நான் அன்னைக்கு அப்.....

எந்த வருடம் என்பதைச் சொக்கலிங்கம் எழுதி வைக்கவில்லை.

சொக்கலிங்கம்-2

காந்திமதி போயிட்டா
பொலிவழிஞ்சு போச்சு திருநெல்வேலி
ஆத்துல தண்ணி நின்னுருக்கும்
நெல்லையப்பனுக்குத்தான் காலம் வாய்க்கலை
.
.
.
.
.
.
.
நெல்லையப்பனுக்குக் காலம் வாய்க்கல்லே...!

(1997)

சொக்கலிங்கம்-3

....ன்னு சொன்னேன். மவனா இவன்? நாய் விளுந்த மாதிரி விளுந்தான். நீரு எனக்கு என்ன மயித்த செஞ்சீருங்கான். அப்பன் புள்ளைக்குப் பண்ணதை நியாபகம் வெச்சுச் சொல்லமுடியுமா கோட்டிப்பலேன்னேன். நீரு கோட்டிவே, ஒமக்குக் கோட்டிவேன்னான். அந்தக் கருப்பச்சி கூட நீரு ஆடின ஆடமெல்லாந் தெரியாதான்னான். நா மறச்சி வெச்சி ஆடலியேன்னேன். காறித்துப்பிட்டுப் போனான். எனக்கு ரத்தம் ஓடிக்கிட்டுக் கெடந்த காலத்துல முன்னாடி நிக்கப் பேலுவான் இந்தச் சண்முவம். இன்னைக்குக் காறித்துப்புதான். அவஞ் சந்தேகப்பட்ட மாதிரியே அந்தக் கருப்பிக்கு மாடியை எழுதி வெச்சி உயிலு மாத்தினேன். அன்னைக்கு வரைக்கு நா நெனைக்கல்லே அப்பிடி. அவஞ் சொன்ன அன்னைக்குத்தான் செஞ்சேன். அவளுக்கு ஒரு கடப்பாடு பாக்கி கெடக்கு. வேணுங்கிறப்பெல்லாம் படுத்தா தாயி. (மணி பக்கத்தைத் திருப்பினான். பின் பக்கத்தில் தொடர்ச்சி இருந்தது.)

எப்படி தெரிஞ்சதோ சம்முவத்துக்கு. அதுவரைக்கும் வேம்படித்தெருவுல பொண்டாட்டி புள்ளையோட தனி வீட்டுல கெடந்தவன், எவ வாரான்னு பாக்கேன் மாடிக்கு, எழுதி வெச்சிட்டா கொடுத்துப்பிடுவோமா, பாக்கலாம், அவ மாதிரி கண்டவனுக்குப் பெக்கலை என் அம்மான்னு சொல்லி மாடிக்கு ஜாகையை மாத்திக்கிட்டான். அவனை வெரட்ட எனக்கு முடியலை. ரத்தம் சுண்டிப்போச்சு. ஆடி ஓஞ்சிட்டேன். முன்ன மாதிரி இருந்தா அவன் மொகரக்கட்டையை ஒடச்சி வெளிய அனுப்பியிருப்பேன். திடீர்னு ஒரு நாள்.....

(தொடர்ச்சியான பக்கத்தைக் காணவில்லை. இந்தத் தாளின் கிடைமட்டத்தில் 1991 என்று எழுதப்பட்டிருந்தது.)

சொக்கலிங்கம்-4

ஹே காற்றே
என்னைச் சுழன்றடிக்கும் காற்றே
வேகமாய் வீசும் காற்றே
புழுதி வாரி இறைக்கும் காற்றே
என்னைச் சுற்றாதே
நானென்ன நெல்லையப்பனா?
வேம்படியில் கருப்புக் காந்திமதி இருக்கிறாள்
வேண்டுமானால் அவளைச் சுற்று
ஹே காற்றே
காந்திமதியின் சாகசங்கள் உனக்குத் தெரியுமா?
அவள் கருப்புக் கடவுள், அறி!
அவளே காந்திமதி, அறி!
அவள் வீட்டுக்குள்ளே வர
வீடெங்கும் பரவுகிறான்
உன் உறவுக்காரத் தென்றல் பையன்.
எங்கோ மொய்த்துக்கொண்டிருக்கும் ஈக்கள்
அவளையும் என்னையும் மாறி மாறி மொய்க்கின்றன
ஹே காற்றே...

(கவிதை முயற்சி என்று தலைப்பிட்டு, 1979-இல் சொக்கலிங்கம் எழுதியது. மணிக்கு ஆச்சரியமாக இருந்தது.)


சொக்கலிங்கம்-5

....னோ அவனுக்கு என்கிட்ட ராஜவல்லிபுரத்துல நெலம் கெடக்குன்னு. வூட்டுக்கு வந்து என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளுங்கான் சம்பந்தம் சம்பந்தமில்லாம. சம்முவத்தோட பொண்டாட்டி அந்த மூளிக்களுதை கூட நிக்கா. வீட்டுக்குள்ள காலை வைக்கும்போது கால எடுட்டீன்னு கத்தலாமின்னு நினைச்சேன். கத்தலை. நா அவளை ஒரு மாதிரி பாக்கேன்னு சம்முவத்துக்கிட்ட சொல்லி வெச்ச நாயி வீட்டுக்குள்ள கால வைக்கலாமா? சம்முவத்தைப் பாத்துக் கத்தினேன். ரோசங் கெட்ட நாயே, மாடியக் காலி பண்ணிட்டுப் போல, அது காந்திமதிக்குள்ள வூடுன்னேன். அவனுங் கத்தினான். எவ காந்திமதி, கண்ட அவுசாரிக்கு காந்திமதி பேரச் சொல்லுதியே. காந்திமதியம்மாவே ஒன்னக் கேப்பா, நா மாடியக் காலி பண்ணுவேன்னு நினைக்காதீரும்வேன்னான். இளுத்துக்கிட்டு கிடக்கும்போது வருவீருவேன்னான். எலேய், நாஞ் செத்தாலும் ஒங்கிட்ட வரமாட்டேம்ல, ரோசக்காரம்ல. தொங்கினாலும் தொங்குவேம்ல. புளுத்துச் செத்தாலும் சாவேம்ல நீ இருக்கற வரைக்கும் மாடிய மிதிக்கமாட்டேம்லனு திட்டி அனுப்பினேன். அன்னைக்கு பூரா பொலம்பிக்கிட்டே இருக்க வெச்சிட்டான் இந்தப் பய. கண்ணதாசன் பாடினானே, சரியாத்தான் பாடினான். புள்ள......

(வருடம் 1996)

[6]


மழை எல்லார் வீட்டுக்குள்ளும் புகுந்தது. கீழ் வீட்டுக்காரர்கள் மாடிக்கு ஓடினார்கள். ஊரே அல்லோலப்பட்டது. குழந்தைகள் வீட்டின் கீழே சூழ்ந்திருக்கும் முழங்கால் அளவுத் தண்ணீரில் குதித்தாடினார்கள். இப்படி ஒரு மழையும் வெள்ளமும் 88 வருடங்களுக்கு முன்பொருமுறை வந்ததாக தினசரிகள் அறிவித்தன. பெரியவர் ஒருவர் அப்போது தான் பட்ட கஷ்டங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஜங்ஷனில் கவிதா ஷாப்பிங் சென்டர் முங்கிவிட்டதாகவும் பரணி ஹோட்டலில் இரண்டாவது தளத்தில் தண்ணீர் புகுந்துவிட்டதாகவும் சுலோச்சனா முதலியார் பாலம் எங்கே இருக்கிறதென்ற சுவடே இல்லையென்றும் பேசிக்கொண்டார்கள். சம்பந்தர் தெருவில் சொக்கலிங்கம் செத்துக்கிடந்த வளைவில் கீழ் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் இருந்தது. அருகிலிருந்த ஒரு மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்திருந்த ஒரு தூக்குப் படுக்கையில் சொக்கலிங்கத்தைக் கிடத்தி ஆறேழு பேர் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். சண்முகத்தின் மனைவி தலையில் அடித்துக்கொண்டாள். சண்முகம் மேலே கொண்டு போயிடலாம் என்றான். அனைவரும் வேற வழியே இல்லை என்றார்கள். வளைவில் இருக்கும் எல்லாரும் அதிசயமாகப் பார்த்தார்கள். சொக்கலிங்கத்தின் வாயிலிருந்து தண்ணீர் வெகுவாகக் கசிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. கடுமையாக ஈக்கள் மொய்த்தன. முகம் மோசமாக விகாரமடைந்திருந்தது.

கஷ்டப்பட்டு வீட்டுக்குள் இருந்து வெளியில் கொண்டு வந்தார்கள்.

மாடிக்குச் செல்லும் படிகள் மிகவும் குறுகலாக இருந்தன.

"நேரா அப்படியே கொண்டு போக முடியாதப்பே"

"கொஞ்சம் சரிச்சிக்க வேண்டியதான்"

"படுக்கையோட கட்டிக்கலாமா?"

"என்னத்தையோ சட்டுன்னு செஞ்சித் தொலைங்க. செத்தும் உயிர வாங்குதான்யா மனுஷன்!"

"தண்ணீல நின்னு நின்னு காலக் கடுக்குதுடே. சட்டுன்னு மேல கொண்டு போவணும்"

"கயறு கட்டித் தூக்கிடலாமா?"

"தண்ணி அடிச்சிட்டுப் பேசுற நாய் மண்டைல போடுங்கேன்"

"சரிடே, ஆளாளுக்குப் பேசாதீங்க. எல்லாரும் படிக்கு நேரா வெச்சிக்கிட்டு நில்லுங்க. கட்டல்லாம் வேணாம். நா சொல்லச் சொல்ல சரிங்க. அப்படியே ஒருக்களிச்சுக் கொண்டு போயிடலாம்"

எல்லாரும் சொக்கலிங்கத்தை அந்தப் படுக்கையில் வைத்து சுமந்துகொண்டு படிக்கு நேரே நின்றார்கள். மெல்ல இரண்டு படி ஏற்றினார்கள். மாடிப்படியின் பக்கச் சுவர்களில் படுக்கை இடித்தது.

"எவனாவது ஈயை விரட்டுங்கப்பா. மொவத்துல வந்து அப்புது"

"லேசா சரிங்கப்பா... லேசா... இன்னும் கொஞ்சம்.... சண்முகம் நீதான் மேல நிக்க. கவனமா இரு. மெல்ல மெல்ல சரி.. இன்னும் கொஞ்சம்..."

கீழே இருந்தவன் கொஞ்சம் வேகமாகச் சரித்துவிட்டான். சண்முகத்தின் கை சுவற்றில் இடித்தது. ஐயோ என்று கையை உதறினான். அவன் பக்கம் சட்டெனக் கீழே சரிந்தது. கீழிருந்தவன், "தாயோளி கெடுத்தான்யா காரியத்தை" என்றான். உருட்டி விட்ட மாதிரி பிணம் மாடிப்படியில் விழுந்தது. சொக்கலிங்கத்தின் வாய் படியில் பலமாக இடித்தது. கொளுக்கென ஒரு குடம் திரவம் கொட்டி படிகளில் வழிந்தது. பிணமும் கீழே சரிந்தது. கீழிருந்தவர்கள் அய்யரவுடன் ஐயோ என்று சொல்லிக்கொண்டு காலைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். சொக்கலிங்கத்தின் உடல் கடைசி இரண்டு படிகளில் சரிந்து கீழே பரவியிருந்த நீரில் அமிழ்ந்தது. தாமிரபரணியின் நீர் அவன் மேலே ஓடியது. அவனது முகம் விகாரமாக வானத்தை விறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது. நீர் மூழ்கடிக்காத இடங்களில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன.

[முற்றும்]

தேன்கூடு போட்டிக்கான ஆக்கம்.

12 comments:

Anonymous said...

அருமையான கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Anonymous said...

அருமையான கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Anonymous said...

அருமையான கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

PKS said...

பிரசன்னா,

நாஞ்சில் நாடனின் கதை ஒன்று. இதேபோல ஒரு முதியவர் செத்துப் போவார். பெண்டாட்டி எப்போது சாவார் என்று எதிர்பார்த்து அவர் செத்ததும், வெளியே எடுத்து வைக்க வேண்டிய சாவு சமான்களை எடுத்து வைத்தபின் அழுவார். ஊர் அவரைப் பற்றி மோசமாகப் பேசும். பிள்ளைகள் கடனுக்காக கடமை செய்வார்கள். பிணம் சுடுகாட்டுக்குப் போய் எரியும். உற்றார் உறவினர் வீடு திரும்புவார்கள். எரியும்போது வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணொருத்தி, குழந்தைகளுடன் ஓடிவந்து, சிதையின் முன் நின்று மௌனமாக அழுவார். அதை ஊர் நாவிதர் இரக்கமாகப் பார்ப்பதாகக் கதை முடியும். கதையின் தலைப்பு மறந்துவிட்டது. அந்தக் கதையை உங்கள் கதை நினைவுபடுத்தியது.

அந்த "ஈ"யைப் பற்றிய விவரணைகளைக் குறைத்திருக்கலாம். எடுத்திருக்கவேகூட செய்யலாம். சொக்கலிங்கம் கவிதையில் ஈ வந்ததால், கதையுள்ளும் ஈயோ. மாடர்னாக எழுதவேண்டும் என்று இழுத்துப் போட்டுக் கொண்ட பாத்திரமோ ஈ என்று தோன்றுகிறது.

அன்புடன், பி.கே. சிவகுமார்

கதிர் said...

இருமுறை வாசிக்க வைத்தது உங்களின் படைப்பு.

தெளிவான நடையில் வட்டார,வழக்கின் மொழியில் படிக்கும்போது கதை மிகவும்
அருமையாக இருந்தது.


வாழ்த்துக்கள்

ராசுக்குட்டி said...

வட்டாரவழக்கில் வடிவமைப்பு மிக நன்றாக இருக்கிறது...நேர்த்தியான கதை!

ஈ சொல்லும் சேதி மட்டும் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை... புரிந்து கொண்டிருந்தால் இன்னும் ரசித்திருப்பேன்! எனினும் இது மிகச் சிறந்த கதை என்பதில் துளியும் சந்தேகமில்லை!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

கானகம் said...

Really a wonderful story by Haran Prasanna. It is next best to his Amma Mandapam. Chokkalingam did not go to Machchu even after his death. The elabaoration about the situation and the language which they use and the fluency in the story everything is wonderful. I wish Good luck to you Hari. I am sure Haran Prasanna will come out of poems henceforth and write more stories like this. Vaazhththukkal Prasanna.. Jeyakumar

Anonymous said...

An interesting story in local dialect.
M.Gurumurthy, Rtd.Headmaster, 101.Cauvery Nagar west, Thanjavur-613005
cauverynagarwest@rediffmail.com

Anonymous said...

ஹரன்

உங்களுக்கு இந்தக் கதைக்கு பரிசு கிடைத்ததா?? கிடைக்கவில்லையெனில் அவர்களுக்கு நல்ல கதை என்றால் எது எனத்தெரியவில்லை என அர்த்தம். கிடைத்திருந்தால் ஒரு நல்ல இடத்திற்கு உங்கள் கதையை அனுப்பி இருக்கிறிர்கள் என அர்த்தம். மிக மிக அருமை. சொக்க்லிங்கம் என் மணதில் வெகு காலம் இருப்பார்.

ஹரன்பிரசன்னா said...

சுப்பிரமணிய சாமி, பரிசு கிடைக்கவில்லை. ஏனென்றால் அது மக்கள் வாக்களித்து நடந்த போட்டி. அதனால் வருத்தமில்லை. (நடுவர்கள் தீர்மானித்த போட்டிகளிலும் என் கதை வெற்றிபெற்றதில்லை என்பது வேறு விஷயம். :))

கல்யாண் இந்தியா வந்திருந்தபோது என் கதைகளைப் பற்றிச் சொல்லி, சந்தோஷமாக இருக்கிறதென்றும் தொடர்ந்து தேன்கூடு நடத்தும் எல்லா விஷயங்களிலும் பங்கு பெற வேண்டுமென்றும் அடுத்த திட்டங்கள் பற்றிச் சொல்லியும் உற்சாகமாகப் பேசினார். :( மிகுந்த வருத்தமாக இருக்கிறது.

சிறில் அலெக்ஸ் said...

முன்னமே படித்திருந்தேன். இப்ப நியாபகம் வருது.

நல்லாயிருதது.

வட்டார நடை சூப்பர்
பழைய வெள்ளம் குறித்த குறிப்புக்கள்
பசங்களோட கிரிக்கெட் பேச்சுக்கள்
கிர்தாக் காரரின் சில quick wits என இரசித்தேன்

ஈ ரெம்ப அயற்சியைத் தந்தது..
டைரி எழுதுகிற அந்தக் கால கிராமத்தார் கொஞ்சம் அரிய பாத்திரம். கொஞ்சம் யதார்த்தம் இடிக்குது.

சொல்லப் போனால் வப்பாட்டி இல்லாத கிராமத்து பெரியவர்களே இலக்கிய வட்டங்களில் சொல்லப்படலையோ என்னவோ.. (நான் அவ்வளவாக படித்ததில்லை)

'இறந்தும் மாடிக்கு போகல...' இது பின்னூட்டத்தை படித்தபின்தான் புரிந்துகொள்ள முடியுது.. மாடி மீதான அவரது வெறுப்பு அழுத்தமா சொல்லப்படல..

எதையுமே சொல்ல வரலண்ணுதான் நினைச்சேன். ஏன்! எப்பவும் ஏதாச்சும் சொல்லணும்னு இருக்கா என்ன?
:)

காமம் சேர்த்தால்தான் இலக்கியம் என இப்போது ஏதாச்சும் நம்பிக்கை இருக்குதா என்ன? உங்க கதைகளில் ஏதேனும் ஒரு வரியாவது வந்துவிடுகிறது.

ஆனா இந்தக் கததக்கெல்லாம் இணையத்துல பரிசு எதிர்பார்ர்ப்பது தவறு. இணையத்தில், அதுவும் வலைப்பதிவுகளில் 'லைட்' ரீடிங் முக்கியம். பதிவுகளின் வடிவமைப்பே (Design) குறுகிய போஸ்ட்களுக்குத்தான் என இருக்குது. ஆக இதே கதையை தனியாக எழுதிவிட்டு இணையத்துக்கு நீளம் குறைத்து எழுதியிருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாயிருக்கும் என நினைக்கிறேன்.

ஹரன்பிரசன்னா said...

காமம் என் கதைகளில் வருவதற்கு நான் காரணமாக இருக்கலாம். இப்போது எழுத நினைக்கும் அடுத்த கதைக்கும் அதுவே களம். :)

கொஞ்சம் எழுதப்படிக்க தெரிந்த நிறைய கிராமத்து பெரிசுகள் விடாமல் டைரி எழுதிக்கொண்டிருந்தார்கள். என் தாத்தா கடைசி காலம் வரை எழுதினார்.

இணையத்தில் பரிசு கிடைக்காததில் வருத்தமெல்லாம் இல்லவே இல்லை. ஒவ்வொரு முறை கதை எழுதும்போதும், அது எனக்கு திருப்திதருவதாகவே இருக்கவேண்டும் எனத்தான் நினைப்பேன். பரிசு கிடைக்காததில் வருத்தமில்லை.

உங்கள் கருத்துக்கு நன்றி.