Wednesday, October 4, 2006

யாரோ ஒருவனின் சவ ஊர்வலம் - கவிதை

யாரோ ஒருவனின் சவ ஊர்வலம்
நான்கைந்து பேர்களுடன்
மெல்ல நகர்கிறது
அந்த நிமிடத்தைப் போல.

அந்த யாரோவுக்குத் தூவப்படும் மலர்களுள் சில
என் மீது விழ எனது ஆசாரம் விழித்துக்கொள்கிறது,
எவ்வளவு ஒதுங்கிக்கொண்டும்
விலகவில்லை மலர்களின் வாசனை.

வெயிலின் உக்கிரம், வியர்வை;
இடுக்காட்டின் முன் பாட்டாசு.

கிட்டத்தட்ட அனாதை என்றார்கள்;
தெருவில் இரு ஓரத்திலும்
காத்திருந்தது பெருங்கூட்டம்.

ஊர்வலத்தின் பின் நீளும்
வண்டிகளின் சக்கரங்களில்
நசுங்கிக்கிடக்கும் மலர்களுள்
அவனுக்குப் பிடித்ததெதுவோ.

சீக்கிரம் சவ வண்டி கடந்துபோக
காத்திருக்கும் நீண்ட வரிசையில்,
அவனின் சாதனைகள் பற்றிய
யோசனையுடன்
அடுத்த நொடியில்
அவனை மறக்கப்போகும்
நான்.

1 comment:

கார்மேகராஜா said...

நன்றாக இருந்தது.