Thursday, October 26, 2006

அந்திமழை.காம் - கவிதைத் திருவிழா

அந்திமழையில் கவிதைத் திருவிழாவில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. வாசிக்க இங்கே சுட்டவும்.


நத்தை மனிதன்

கால வெளிகளில் திரிந்தலைந்தபின் வீடு திரும்ப
என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வீடு
தன் அறைகளோடும் வாசத்தோடும்

என் அலைதல் ஒவ்வொன்றும்
வீட்டை மையப்படுத்தியே இருந்திருக்கிறது
ஒரு நாளைக்கு 56 தடவைகள் வீட்டைப் பற்றி நினைக்கிறேன்
பதினோரு முறை வெளியிலிருந்து வீட்டிற்குள் பிரவேசிக்கிறேன்
சதாசர்வ காலமும்
மூடிக்கிடக்கும் கதவைத் திறக்கும்போது கேட்கும் ஒலிகள்
என் காதில் ஒலித்துகொண்டே இருக்கின்றன
வீட்டுக்குள் தொங்கும் சட்டைகளோடு என் நினைவுகளும் தொங்க
வெளியே வெற்றுடலாய் அலைகிறேன்

வீட்டின் கூரைகளும் சுவர்களும் நெகிழ்ந்திருக்கின்றன
தன் எஜமானனுக்கான வரவை நோக்கி

இன்று கதவு திறக்கும் பொழுதில்
என் சப்தங்கள் உள்நுழைய
ஒடுங்குகிறது வழிதவறிய நத்தை
சுவர் மூலையில்.
நான் உரக்கச் சொன்னேன்,
அது தன் வழி கண்டடைந்த நத்தை.


பீடம் பற்றிய கவிதை

சிறிய மலையொன்றின் உச்சியில்
எனக்கான பீடமிட்டிருந்தேன்
செல்லும் வழியெங்குள்ள மணமற்ற பூக்களை
காலால் மிதித்தும் தாண்டியும் ஓடினேன்
மேலே ஏற ஏற
கீழே மனிதர்கள் எறும்புகளாய் ஊர்ந்தார்கள்
என் சத்தமிட்ட சிரிப்பில்
வண்டுகள் கலைந்தோட
எதிரொலியில் என் வயிறே அதிர்ந்தது
பீடக்கால்களின் நுனியை என் கைகள் தொட்டபோது
சுற்றியிருந்த நறுமண மலர்களின் வாசத்தை
நுகர மறுத்தது என் மூக்கு
பீடமேறி அமர்ந்தபோது
மலையுச்சியிலிருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது என் ஆன்மா
ஒன்றும் இழப்பில்லை
பீடங்களில் உலகில்
இலவசமாகவே கிடைக்கும்
புதிய ஆன்மாக்கள்

சுவர்கள்

தடுப்புகளற்ற எதிரெதிர் இருக்கைகளில்
மூன்று பேர்கள்
முதலாமவனின் எண்ணம் இரண்டாக இருந்தது
இடைச்சுவரை உடைப்பது நல்லது மற்றும்
இந்தச் சுவருக்குப் பின்னிருப்பதே பாதுகாப்பானது.
இரண்டாமவள் இடைச்சுவரை உடைத்தல் பற்றி யோசித்தாள்
மற்றும் இடைச்சுவருக்குப் பின்னிருத்தல் பாதுகாப்பானது என்பது பற்றியும்;
ஏனெனில் இது ஆண்களின் உலகம்.
மூன்றாமவனின் நினைவுக்குள்
சுவரை மீறுவதாகவும்
பின்னிருப்பதே பாதுகாப்பானதாகவும்.
மூன்று சுவர்களுக்குள்ளிருந்து வெளியேறி
மூன்று பேரும் கைகுலுக்கிக்கொண்டார்கள்.
அப்போது அங்கே
மூன்று இருக்கைகள், மூன்று பேர்கள்
மற்றும் மூன்று சுவர்கள்.


சுயசரிதை எழுதுதல்

நான் நினைத்ததுபோல்
எளிதாக எழுத இயலாமல்போன
அடித்து அடித்து
எழுதப்பட்ட
சுயசரிதைக்குள்
நான் அடைந்துகொண்டேன்
கடைசியில் ஒரு குறிப்புடன்,
இது வளைந்து நெளிந்து செல்லும்
நேரான பாதை.


அணிலைப் பற்றிய குறிப்புகள்

உலகின் அற்புதங்களில் ஒன்றாக
நான் கருதும் அணில்களைப் பற்றி
நிறைய நாள்கள் மறந்துவிட்டிருந்தேன்
நான்காம் நாள் கனவில் ஒரு பூ கொண்டு வந்தது அணில்
உண்மையில் அன்றுவரை பூ கொண்டு வரும் அணில் என்பதாக
எக்குறிப்பையும் நான் எழுதிவைக்கவில்லை,
சிறிய பழக்கொட்டையை
இரண்டு கைகளில் ஏந்தி நிற்கும் அணிலே
என் விருப்பத்தேர்வாக இருந்திருந்தது,
மிருதுவான அதன் உடற்பரப்பும்
துடிக்கும் வெதுவெதுப்பான சாம்பல் நிற வயிறும்-
நீளும் என் குறிப்புகளில்
பூவோடு வந்த அணிலால்
மறுநாள் பொழுது சந்தோஷமாகக் கழிந்தது
அதன் மூன்று கோடுகளைப் பற்றி
புதிதாக எழுத யோசித்துக்கொண்டிருந்தபோது
பூனை ஒன்று குதித்தோடியது, வாயில் அணிலின் வாலோடு.
தொலைந்துபோன அதன் சதைப்பிண்டங்களைப் பற்றியும்
குறிப்பெழுதி வைத்தேன்,
பூனையைப் பற்றிக் குறிப்புகள் எதுவுமில்லை.

3 comments:

Anonymous said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் நன்று ஹரன்.. அந்திமழை.காம் இப்போதும் இயங்குகிறதா என்ன??

ஹரன்பிரசன்னா said...

முன்பு அந்திமழையில் இளங்கோவன் என்று ஒருவர் இருந்தார். இப்போது அவர் அங்கு இல்லை. அதனால் எந்த அளவில் அந்திமழை இயங்குகிறது என்பது பற்றித் தெரியவில்லை. மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அந்திமழையில் கிடைக்கும். வாசிக்கவும்.

Anonymous said...

Hi Haran,

Kavithai very nice. Can i use this to my website (few of them)

Regards
Suresh.m
aimwin2001@yahoo.com
9790850298