Friday, April 4, 2008

வசியம் - சிறுகதை

டும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் பூபதியாப்பிள்ளை. சிவந்த மேனியோடு லேசான தொந்தியுடன் 'ஹோவ்' என்ற சத்ததோடு ஏப்பம் விட்டபடியே சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நாற்பது வயதில் நிம்மதியான உறக்கமின்றி அலையும் மனதோடு அவர் பெரும் கொதிப்பிலிருந்தார். உடலெங்கும் சின்ன சின்ன வேர்வைத் துளிகள் பனித்திருந்தன. 'தானா வேர்த்தா நல்லதுடே' என்று என்றோ அவரது அம்மா சொன்ன நினைவு வந்தது. உடனே இப்போது தானாக வேர்க்கவில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. இரவு முழுதும் அரைத்தூக்கத்திலிருந்த கண்கள் சிவந்திருந்தன. எப்படியும் சோலை இரவு வருவாள் என்று நினைத்து ஏங்கிக் கிடந்து, காமம் தலைக்கேறி குதியாட்டம் போட்டு அடங்கி அவள் வராமல் மனதெங்கும் பெரும் கோபத்தோடு, உறங்கிப்போவதும் சிறு சத்தம் கேட்டு விழிப்பதுமாகக் கழிந்த இரவுகள் அவருக்கு இப்போதுகூட பெரும் எரிச்சலைத் தந்தது.

ஜாடைமாடையாகப் பேசி ஒருவழியாக தன் மனதில் இருப்பதை அவளுக்குச் சொல்லிவிட்டதாகவே நம்பியிருந்தார் பூபதியாப்பிள்ளை. ஐந்து வருட கொதிப்பை ஒருவழியாகச் சொல்லி முடித்ததில் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது. பட்டென உடைத்துச் சொல்லமுடியாவிட்டாலும் ஜாடைமாடையாகச் சொன்னதே பெரிய வெற்றி என நினைத்தார். ஒருவழியாக சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "ராத்திரி வேல கொஞ்சம் கெடக்கு, வந்துடு' என்று சொல்லிவிட்டு வந்திருந்தார். நாகம்மை ஆச்சி வீட்டுக்கு வர காலை ஆகும் என்று அவருக்குத் தெரியும். அவள் சுருக்கக் கிளம்பினாலே ஒருநாள் ஆகும். ஆனால் அன்று இரவு சோலை வரவில்லை.

காலையில் நாகம்மை எப்போதும் விடும் பெருமூச்சோடு வீடு வந்து சேர்ந்தாள். நாகம்மையின் உலகம் பெருமூச்சால் ஆனது. எதற்குப் பெருமூச்சு விடுவாள் என்றில்லை. தன் கணவன் பூபதியாப்பிள்ளையை நினைத்தால் ஒரு பெருமூச்சு. தன் அண்ணன் நெல்லையப்ப செட்டியாரை நினைத்தால் ஒரு பெருமூச்சு. சோலை வேலைக்கு வரவில்லை என்றால் ஒரு பெருமூச்சு. பெருமூச்சை விட்டவுடனேயே அந்த விஷயம் அவள் அளவில் முடிவுக்கு வந்துவிடும். பூபதியாப்பிள்ளைஅரசல் புரசலாக பிள்ளை சோலைக்காக கிடந்து அலைவது பற்றித் தெரிந்திருந்தது. அதை அறிந்த தினம் அதற்கும் ஒரு பெருமூச்சு விட்டாள். இன்னும் சில பெருமூச்சுகளுடன் சமையலைச் செய்து முடித்து பூபதியாப்பிள்ளையைச் சாப்பிட அழைத்தாள். தோளில் கிடந்த துண்டைக் கொண்டு வேர்வையைத் துடைத்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தார். அவர் மனம் வேறெங்கோ அலைந்துகொண்டிருந்தது. பருப்புத் துவையலும் கீரைக்கூட்டும் அவர் கவனத்தைக் கவரவே இல்லை. நாகம்மை எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் உண்டதும் தட்டை எடுத்துக்கொண்டு கழுவப் போனாள்.

வாசலில் குடுகுடுப்பைக்காரன் சத்தம் கேட்டது.

'நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது'

நாகம்மை ஆச்சி உள்ளிருந்து சத்தம் கொடுத்தாள். "புள்ள பொறந்த வீடு."

'இப்படி ஊர ஏமாத்தற வரைக்கும் எந்தப் புள்ள இங்க பொறக்கும்' என நினைத்துக்கொண்டார் பூபதியாப்பிள்ளை.

"ஜக்கம்மா சொல்றா நல்ல காலம் பொறக்குது. ஐயா மனசுல இருக்கிற வாட்டம் நீங்குது."

'என்னத்த' என்று சலித்துக்கொண்டார் பூபதியாப்பிள்ளை. நாகம்மை ஆச்சி கோபத்துடன் 'சொன்னா போறதில்ல' என்று வெளியே வந்தாள். குடுகுடுப்பைக்காரன் குடுகுடுப்பையை அடித்தபடி அடுத்த வீட்டுக்கு நகர்ந்தான்.

பூபதியாப்பிள்ளை குடுகுடுப்பைக்காரன் உடலெங்கும் போர்த்திக்கிடந்த சீலைகளைப் பார்த்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்துடன் அவனைச் சுற்றியிருந்தது. குடுகுடுப்பைக்காரனின் நெற்றியில் குங்குமமும் செந்தூரமும் நீண்டிருந்தது. முருகலான மீசை கூரிய நுனியுடன் வெளி நீட்டிக்கொண்டிருந்தது. பலமுறை தட்டப்பட்ட செப்புத் தகட்டுக் கோடுகள் போல அவன் முகமெங்கும் வரிகள் நிரம்பியிருந்தன. நாகம்மை முணுமுணுத்துக்கொண்டே 'பச்சப் புள்ளய கொன்னுப்புடுவானுக' என்றாள். எந்தக் குழந்தைக்காக நாகம்மை விசனப்படுகிறாள் என்பது பிள்ளைக்கு விளங்கவில்லை. காலார நடந்துவரலாம் என்றெண்ணி துண்டை தோளில் போட்டுக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். குடுகுடுப்பைக்காரனைக் கடந்து செல்லும்போது அவரது கவனம் முழுதும் அவன் மேலும் அவன் சொல்லும் வார்த்தைகள் மேலும் படிந்திருந்தது. அடுத்தவீட்டிலும் தவறாமல் சொன்னான், 'நல்ல காலம் பொறக்குது, ஜக்கம்மா சொல்றா, குழந்தையாட்டம் தோள்ல ஒக்காந்து சொல்றா கேட்டுக்க.'

கிராமத்தில் காலை ஆனதற்கான அறிகுறியாக வெயிலைத்தவிர எதுவும் தெரியவில்லை. காந்தி சிலைக்குப் பின்னுள்ள தோட்டத்தில் பொது டிவி ஓடிக்கொண்டிருந்தது. சில பையன்கள் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவர்களின் ஆனந்தம் அவருக்குள் பெரிய சோகத்தை எழுப்பியது. மேலும் அங்கிருக்க விரும்பாமல், தாமிரபரணி செல்லும் மருத மரங்கள் அடங்கிய சாலையில் நடக்க ஆரம்பித்தார். மருத மரங்கள் அவருக்காகவே அசைந்து காற்றைத் தந்தது என்கிற கற்பனை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு மரம் தனக்காக அசைகிறது, ஆனால் வீடெங்கும் கூலி வேலை செய்து பிழைக்கும் சோலை அசையவில்லை. சோலையின் பிடிவாதம் இவ்வளவு இருக்குமென அவர் எதிர்பார்க்கவில்லை. புடைவையைக் கால் தெரிய உடுத்தி, இடுப்பு தெரிய கொசுவத்தைச் சொருகியிருக்கும் சோலையின் தோற்றத்தை நினைத்தாலே அவருக்கு நிலைகொள்ளாது. வேலை செய்ய வீட்டுக்கு 'பொம்பள' வருகிறாள் என நினைத்தவருக்கு சோலையைப் பார்த்த மாத்திரத்தில் பொறி கலங்கியது போலிருந்தது.

பூபதியாப்பிள்ளையின் பெண் மோகத்தை நாகம்மை அறிந்தே வைத்திருந்தாள். 'நம்ம மாதிரி கெடயாது, இவிங்க சாதிய நம்பப்புடாதுல்லா. அதுக்குத்தான் தலதலயா அடிச்சுக்கிட்டேன். 'செட்டி'லயே பாப்போம்னு' என்றார் நாகம்மை ஆச்சியின் அண்ணன். ஒரே தெறிப்பாக பூபதியாப்பிள்ளை 'ஊருக்குள்ள இவன் எத்தன கூத்தியா வெச்சிருக்கான்னு எனக்குத்தாம்ப்ல தெரியும்' என்று சொல்லிவிட்டார். நாகம்மைக்கு இரண்டுமே முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் 'ஆம்பளைங்கன்னா இப்படித்தாம்ல' என்று பக்கத்துவீட்டு மாமி சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஒரு பெருமூச்சு விட்டாள். 'ஒழுக்கம் பொம்பளைக்குத்தாம்பில வேணும்' என்பார் பூபதியாப்பிள்ளை. அதைக் கேட்டு வாயொழுகச் சிரிப்பார்கள் சுற்றியிருப்பவர்கள்.

ஆற்றுக்குப் போகும் வழியில் பதநீர் விற்றுக்கொண்டிருந்தான் மருதன். அவருக்குத் தாகம் தலைக்கேறி இருந்தது. இதுவாவது தணியட்டும் என்கிற எண்ணத்தில் 'பதநி ஊத்துல' என்றார். மருதன் ஊர் விஷயங்களைப் பேசிக்கொண்டே பனை ஓலையை வாட்டமாக மடித்து அவரிடம் கொடுத்தான். "குறுக்கிப் பிடிச்சுக்கிடுங்க" என்றான். "ரொம்ப குறுக்கிட்டீங்கன்னா கிழிஞ்சிடும்" என்றான். பூபதியாப்பிள்ளைக்கு அவரைத் திட்டுவது போலிருந்தது. "தெரியும்ல, வியாக்யானம் வெக்காம ஊத்துடே" என்றார். நுங்கு வெட்டிப் போட்டான். தாகம் கொஞ்சம் அடங்கியது. குடித்து முடித்தவுடன் அதை வாங்கி தன் காலுக்கருகில் போட்டுக்கொண்டான். "நாய் நக்கக்கூடாது கேட்டேளா." பின்பு தன் குரலைக் கொஞ்சம் தாழ்த்தி, "தனிமரத்துக் கள்ளு இருக்கு வேணுமா அண்ணாச்சி" என்றான். பூபதியாப்பிள்ளை கொஞ்சம் யோசித்து, "இல்லடே வேணாம்" என்றார். யோசனையாக, "கொஞ்சம் வாயேண்டே நடப்போம்" என்றார். மருதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கருப்பந்துறைக்கு சமீபத்தில் போன முக்கியமானவர்களைக் கேட்டுவிட்டு, தன் போக்கில் செல்லும் பூபதியாப்பிள்ளை இன்று அவனை கூட நடக்க அழைப்பதை அவனால் நம்பவேமுடியவில்லை. அவன் தூரத்தில் இருந்த பையனை அழைத்து கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கூட நடந்தான்.

"ஒடம்பெல்லாம் எரியுதுடே. அதான் பதனி குடிச்சேன். பதனி குளிர்ச்சிதான?"

"நேரத்த பொருத்துங்க அண்ணாச்சி. வெடியக் காலேல குடிச்சேள்ன்னா குளிர்ச்சி. இப்பம் குடிச்சேள்னா சூடு."

"ஓ. இம்பிட்டு கத கெடக்கா. சரில. உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன். ஒங்கப்பனுக்கு வசிய மருந்து செய்யத் தெரியும்ணு ஊருக்குள்ள பேச்சு கெடக்கே. அது நெசந்தானா?"

"எல்லாம் கதை அண்ணாச்சி. எங்க அம்மாளயே கடசி வரைக்கும் கூட வெச்சிக்கத் தெரியாம சீப்பட்டான். நீங்க வேற."

"ஏ, பொம்பள சமாசாரத்துக்காக கேக்கலடே. பொதுவாவே வசியம் பத்திக் கேட்டேன்னு வெய்யி."

"அட நீங்க வேற. வசியம்ன்றதே எதுக்குங்கீய? மேற்படிக்குத்தான்றது ஒரு கணக்கு."

"அப்படீங்க?"

"பின்ன? என்ன விஷயம்னு சொல்லணும். அப்பத்தான் மேக்கொண்டு பேசமுடியும்."

மெல்ல பெரிய மனிதனின் தோரணையை மருதன் உடுத்திக்கொண்டான். அதை பூபதியாப்பிள்ளை கவனித்தாலும் கவனிக்காதவாறு பதில் சொன்னார்.

"இம்புட்டுத்தானா? காசக் கொடுத்து வாட்டீன்னா வாரா. அதுக்கெதுக்கு வசியமருந்து எளவெல்லாம்?"

"அம்புட்டு சுளுவில்லடே. கிராதகி. ஆமா அவளுக்கு எம்பிட்டு வயசுல இருக்கும்? இருபத்தஞ்சு இருபத்தாறு இருக்குமா? நாஞ்சொல்றது புரியாமயா கெடக்கு? எளவு மானத்த விட்டுப்புட்டு வாயிலேயே சொல்லிட்டேங்கேன், ராத்திரி வாட்டீன்னு. என்னயே போயிட்டு வாவேங்களே, அத கொஞ்சம் யோசிச்சு பாருங்கேன்."

"அப்படி சொல்லுதேளா. அதுவுஞ் சரிதான். கூலி வேலி செய்ற கழுத சிலிப்பிக்குதோ."

"திட்டாதடே."

பூபதியாப்பிள்ளை கொஞ்சம் வருத்தத்தோடு சொன்னதாகப்பட்டது மருதனுக்கு. லேசான நாணம் கூட இருந்ததோ? அவரைத் திட்டியிருந்தால்கூட தாங்கிக்கொண்டிருப்பார் என்று நினைத்தான் மருதன். இந்த மனிதரிடம் எப்படியும் பணம் தேறும் என்கிற நினைப்பு அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. கூடவே, சோலையிடம் சொல்லி அவளை எச்சரித்து வைக்கவும் முடிவு செய்தான்.

"அப்ப வசியமருந்துதான் காரியங்கேளா?"

"நா சொல்லலடே, உங்கிட்ட கேக்கேன். வசியமருந்துங்காங்களே, அது சரிப்படுமாங்கேன்."

"எனக்கு அதப்பத்தி ரொம்ப தெரியாது கேட்டேளா. ஆனா ஒண்ணு, செய்யிறவன் செஞ்சான்னா அதுக்கு இணை இல்லன்னு கேட்டிருக்கேன். கூனியூர்ல ராமையா இருந்தாம்லா? ஞாபகம் இருக்கா? பைத்தியம் புடிச்சு அலைஞ்சு கெடந்து செத்தானே... அவங்கிட்டேர்ந்து வசிய மருந்த வெச்சித்தான் சொத்தப் பிடுங்கினதாப் பேச்சு."

கொஞ்சம் பயந்த மாதிரி பிள்ளை "அப்படியா" என்றார்.

"என்ன இப்படி கேக்கிய. செஞ்ச பார்ட்டி பெரிய பார்ட்டி. சேர்மாதேவி மசானத்துக்குள்ள அலைவானே குடுகுடுப்பக்காரன். அவந்தான் மருந்து செஞ்சது. வெசயம் தெரிஞ்சவன்னு பேச்சு."

"அப்படீங்க?"

"பின்ன? ராமையா பய எதிர்மருந்து வெக்கேன்னு யாரோ ஒருத்தன்கிட்ட வாங்கி வைக்க, என்னாச்சுங்கீய? பயித்தியம் பிடிச்சுட்டு. அதுக்குத்தான் சொல்றது வெசயம் தெரிஞ்சவனா இருக்கணும்னு."

'நம்ம ஊர்ல ஒரு குடுகுடுப்பைக்காரன் அலைதானே, அவனுக்கு தெரிஞ்சிருக்குமோ' என்று கேட்க வந்ததை சட்டென அடக்கிக்கொண்டு, "சரி விடுல. நமக்கெதுக்கு இந்த வினையெல்லாம். வந்தா வாரா, வராட்டி போறா, நமக்கா நஷ்டம். காசு கொடுத்தா கோடி பொம்பளைங்க. என்னாங்க?" என்று சொல்லிவிட்டு, "நீ சோலியப் பாரு. நா அப்படியே வூட்டுக்குப் போறேன்" என்று சொல்லிக் கிளம்பினார். இப்படி திடீரென்று பிள்ளை வெட்டிக்கொண்டது மருதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை வைத்து கொஞ்சம் பணம் கறக்கலாம் என்று நினைத்திருந்தது ஏமாற்றமாகிவிட்டது.

பூபதியாப்பிள்ளை வேகவேகமாக தெருவுக்குச் சென்று அங்கு குடுகுடுப்பைக்காரன் இருக்கிறானா என்று பார்த்தார். அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. வசிய மருந்தை குடுகுடுப்பைக்காரன் செய்வான் என்று ஏன் தனக்கு முதலிலேயே தெரியாமல் போய்விட்டது என்பது குறித்து வருந்தினார். வேகவேகமாக நடந்து வந்ததில் அவரது வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கியது. நாற்பது வயதில் இந்த அலைச்சல் தேவையா என்று தோன்றியது. தேவைதான் என்று உடனே முடிவுக்கு வந்தார்.

ரவில் அடிக்கடி எழுந்து தண்ணீர் குடிப்பதும் மூத்திரம் கழிக்கப்போவதுமாக இருந்த அவரைப் பார்த்து நாகம்மைக்கு பற்றிக்கொண்டு வந்தது. இருந்தாலும் "ஆம்பிளைங்க" என்று முணுமுணுத்துக்கொண்டே படுத்துக்கிடந்தாள். பெருமூச்சு விட்டாள். எட்டு முழப்புடைவையை உடலெங்கும் சுற்றி, வியர்வையோடு படுத்துக் கிடக்கும் நாகம்மையைப் பார்த்து எரிச்சலாக இருந்தது பூபதியாப்பிள்ளைக்கு. அவள் புடைவையை ஒரு அவசரத்திற்கு அவிழ்க்கக்கூட முடியாது என்பதை நினைக்கும்போது அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவளது வியர்வையும் பெருமூச்சும் நினைவுக்கு வரும்போதே கோபம் வரும் பிள்ளைக்கு. 'என்னத்துக்கு இம்புட்டு பெருமூச்சு விடுதா ஒரு பொம்பளை?' நாகம்மை உறங்கும்வரை காத்திருந்துவிட்டு, நடுச்சாமம் தாண்டிய பின்பு சத்தமில்லாமல் வெளியில் வந்தார்.

நள்ளிரவுக்குப் பின் தெருவைப் பார்த்ததே இல்லை என்று உரைத்தது அவருக்கு. தூரத்தில் படுத்துக்கிடந்த இரண்டு நாய்கள் அவரைத் தலைதூக்கிப் பார்த்தன. பின்பு படுத்துக்கொண்டு விட்டன. "நாய்க்குக்கூட சட்ட இல்லியோ" என்று நினைத்துக்கொண்டு, சத்தமில்லாமல் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போனார். மருதமரங்கள் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தன. 'ரெண்டு பக்கமும் முனிசிபாலிட்டி காரனுவோ லைட்டு போட்டு விட்டானுவோ' என்று நினைத்துக்கொண்டார். கருப்பந்துறைக்குள் நுழையுமிடத்தில் வெட்டியான் உட்கார்ந்திருந்தான். அவரைப் பார்த்து "எவம்லே இங்க வாரது? அதுவும் உசுரோட" என்றான். பூபதியாப்பிள்ளைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "குடிகாரத் தாயோளி, செருப்பால அடிப்பேன். கொஞ்சம் தண்ணி உள்ள போய்ட்டா மருவாதி வாயில வராதோ" என்றார். வெட்டியான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, "சொல்லுங்க சாமி" என்றான். எப்போது வேண்டுமானாலும் வாந்தி எடுத்துவிடுவான் போல இருந்தது. "ஏல, இங்க எங்கல குடுகுடுப்பைக்காரன் இருக்கான்?" என்றார். வெட்டியான் "என்னது" என்றான். மீண்டும் கேட்டார் பிள்ளை. அவன் மீண்டும் என்னது என்றான். பிள்ளைக்கு ஆத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. 'சரி போ, நா போய் தேடிக்கிறேன்" என்றார். அவன் குடிபோதையில் "இங்க எதுக்கு குடுகுடுப்பக்காரன் வாரான்? சொன்னா செருப்பால அடிப்பேம்பான். ஏல எரிக்கிற இடத்துல குடுகுடுப்பக்காரன் வருவானால" என்று சொல்லி தொப்பென்று கீழே விழுந்தான். அவனை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு, மசானத்தைத் தாண்டி நடந்தார். தூரத்தில் ஒரு குடிசை கண்ணுக்குப் பட்டது. குடுகுடுப்பைக்காரன் அங்குதான் இருக்கவேண்டும் என நினைத்து நடையை எட்டிப்போட்டார்.

தூரத்தில் ஏதோ ஒரு உருவம் தன் குடிசையை நோக்கி வருவதைப் பார்த்த குடுகுடுப்பைக்காரன் என்னென்னவோ திட்டினான். வாயில் வராத வார்த்தைகளையெல்லாம் சொல்லி "தூ தூ" என்று துப்பினான். சைத்தான் சைத்தான் என்றான். கொஞ்சமும் பயப்படாமல் உருவம் பக்கத்தில் வரவும் அவனுக்குக் கொஞ்சம் பயம் வந்தது. பிள்ளை குடிசைக்கருகில் வரவும், குடிசையிலிருந்து கொலுசுச் சத்தத்தோடு ஒரு உருவம் முக்காடு போட்டுக்கொண்டு ஓடியது. அதைப் பார்த்ததும் பிள்ளைக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

"எலே ஊரு விட்டு பொழக்க வந்த பய யார நாயிங்க."

கண்கள் இரண்டையும் உருட்டி, என்ன சொல்வதென்று தெரியாமல் வந்தவர் யாரென்று புரியாமல் தன் புருவங்களைச் சுருக்கி ஞாபக அடுக்குகளில் தேடினான் குடுகுடுப்பைக்காரன். தான் குடித்திருப்பதால்தான் அவர் யாரெனத் தெரியவில்லை என நினைத்தான்.

'என்ன முழிக்க. நாந்தாம்ல முதத்தெரு பண்ணையாரு."

"இந்தக்காலத்துல பண்ணையாரா?"

"குடிச்சுக்கெடந்தாலும் நக்கல் போலயோ. சரில. கொஞ்சம் பேசணும்னு வந்தேன்."

நடுஇரவில் போதையேற்றிக்கொண்டு பெண் மீது பாயக்கிடந்தவன் சாத்தான் என நினைத்து அலறியதில் கொஞ்சம் போதை இறங்கியிருந்தது. பண்ணையார், பேசணும் என்கிற வார்த்தைகள் குளறல் போல அவன் நெஞ்சுள் இறங்க, இன்னும் கொஞ்சம் போதை இறங்கி, "இதான் நேரமா சாமி" என்றான்.

"ஊர் சுத்துற ஒன்ன எங்கல பிடிக்க? ஒம் வீடு இங்கதாம்ல கெடக்கு? அப்ப இங்கத்தான் வருவான்."

அவன் பெண் ஓடிய திசையில் ஏக்கமாகப் பார்த்துவிட்டு, "சொல்லுங்க" என்றான்.

"ஒம் பேரு என்னல?"

"கம்மாளனுங்க."

"வசிய மருத்து செய்யத் தெரியுமால ஒனக்கு?"

பக்கத்தில் கிடந்த கயிற்றுக் கட்டிலை இரண்டு தடவை தட்டிவிட்டு அதில் உட்கார்ந்துகொண்டார் பிள்ளை. ஒருவன் தொடர்ந்து படுப்பதனால் ஏற்பட்ட கயிற்றுக்குழியில் சட்டென அவரது உருவம் அமிழ்ந்தது. இதில் எப்படி இன்னொரு பெண்ணோடு படுப்பான் என யோசித்தார்.

"என்னத்தல பதில காணோம்?"

"வயசுக்காலத்துல செஞ்சிருக்கேன். இப்பல்லாம் எவன் கேக்கான் அதை? ஊரு ஊரா பிச்ச எடுத்து பொழப்ப ஓட்டிக்கிட்டு கெடக்கோம்."

"ஒஞ்சோகத்த இப்ப அளக்காத. நா ஒனக்கு வேண்டிய காசு தாரேன். வசிய மருந்து செய்வியால?"

காசு என்றதும் அவன் கொஞ்சம் யோசித்தான். நடு ராத்திரியில் வசிய மருந்த்துக்கு அலையும் இந்தக் கிறுக்கனிடம் இருந்து நிறைய கறக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, "அதுக்கு ரொம்ப செலவாகும் சாமி."

"செலவப்பத்தி கவலப்படாத. நான் பாத்துக்கிடுதேன். ஆனா ஒண்ணு. வசிய மருந்து வேல செய்யணும்."

"அது பெரிய காரியமில்ல சாமி. வசிய மருந்து நா செஞ்சா சக்கம்மாவே ஒனக்குத் தொணயா வந்து நிப்பா."

"ஏல, காரியமாத்தான் சொல்லுதியால? இல்ல காசக் கறந்துப்பிட்டு பல்லக்காட்டுவியா?"

"என்ன சாமி இப்படி சொல்லிட்டிய? என் வாக்கு பலிக்காம போயிருக்கா? வசிய மருந்தோட வசிய மந்திரமும் இருக்கு. ரெண்டயும் ஒனக்கு தாரேன். எப்பேற்பட்ட பொம்பளையும் பின்னாடி நடப்பாங்கேன்."

பூபதியாப்பிள்ளை நெற்றியைச் சுருக்கிக்கொண்டு, "பொம்பளைக்கில்லல. ஒருத்தன் நம்மகிட்ட வாலாட்டுதான். அவன நம்ம காலச் சுத்தி நாய் மாதிரி வரவைக்கணும். அதுக்குத்தான்" என்றார்.

வெற்றிலை போட்டுப் போட்டுச் சிவந்த நாக்கையும் காரை படிந்த பல்லையும் காட்டிக்கொண்டு, "நம்பிட்டேன் சாமி" என்றான். முன்பணமாக ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தார். "சாமி துட்டு எப்படியும் அஞ்சு ஆறு ஆயிடும்."

"அவ்ளோ ஆகுமால?"

"பின்ன என்ன நினைக்கிய? என்ன சொல்லியிருக்கான் தெரியுமா?" யாருக்கும் புரியாத வகையில் ராகத்தோடு இழுத்து கம்மாளன் சொல்ல ஆரம்பித்தான். "சுட்டி வேர் நின்று சிணுங்கி நிலம் பறண்டி நாவடிக்கி கொன்றை வேர் கொல்லங்க கோவைக் கிழங்கு வென்றி தரும் ஆனை வணங்கி அழிஞ்சில் முறை மசக்கி பூனை வணங்கி புழுக்கை வேர் ஏனையுள்ள சீதேவியார் செங்கழுநீர் திகைப்பூடு மாதிகராமான வழக்குவெல்லி பாதிரிவேர் ஆடையொட்டியோடே சுவரொட்டி ஆன தண்டைப் பூடு சுற்றி மேற்படர்ந்த புல்லுருவி மூடு கட்டும்....."

"எல என்ன சொல்லுத நீ? ஒண்ணும் வெளங்கலியே..."

எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கம்மாளன் கண்ணை மூடிக்கொண்டு தீவிரமாக அவன் வாய் நாலாத்திசையும் அசைய கர்ண கொடூரமான குரலில் தொடர்ந்தான்.

"வெட்டி வேர் பூலாங்கிழக்கு லாமிச்சம்வேர் தட்டிலாக் கொண்டோ சனைக் கிழங்கு கிட்டும் கடை மருந்து குங்குமப்பூ கஸ்தூரி மஞ்சள் சடை மாஞ்சி நாகன மஞ்சட்டி அடைவுபெறு செங்கழுநீர்க் கொட்டமொடு தேவதாரம் அரத்தை தங்கு பச்சைக் கற்பூரம் சாதிக்காய் பொங்கும் அவின் புழுகு சட்டமிவை அத்தனையும் கூட்டிக் கவின் பெற தூளாக்கிக் கலந்து குவிந்ததொரு..."

"ஏல நிறுத்துங்கேம்லா" என்று அவன் சத்தத்தை மீறி அலறினார் பிள்ளை. பெரும் தவம் கலைக்கப்பட்ட முனிவனைப் போல கம்மாளன் கண்ணைத் திறந்து பார்த்தான்.

"இம்புட்டு விஷயம் இருக்கு. இதென்னா சுளுவா சேக்க?"

"எல்லாத்தயும் கைல வெச்சிருக்க மாட்டியா? சரி, செஞ்சுக் குடு. இத என்னல செய்யணும்? சாப்பாட்டுல சேத்து சாப்பிட்டா போதுமால?"

கம்மாளன் மசானம் அதிரச் சிரித்தான். மீண்டும் கண்ணை மூடி, கன்னக்கதுப்பு வரிகள் விரிந்து சுருங்க, அவனுக்கே உரிய குரலில் ராகத்தோடு தொடர்ந்தான்.

"புற்றுப் பெருங்கரையான் புன்னை நிணம் பாம்பு விஷம் வற்றிக் கிடந்த மரவட்டை முற்றிய செவ்வரணையின் கொழுப்பு சேரவே அம்மியிலிட்டு" என்று சொல்லி நிறுத்தி, "திம்பேளா?" என்றான். அவருக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. "ஏல ஒனக்கு வசிய மருந்து நெசமா தெரியுமால? இல்ல வாந்தி மருந்து செய்தியா? ஒண்ண நம்பலாமால? காச வாங்கிட்டு ஏமாத்திப்புடமாட்டியே?" கம்மாளன் "பின்ன, வேல எளப்பம்னு நெனச்சேளா?" என்றான். "சரி நாளக்கித் தருவியா" என்றார். காத்திருந்தது போல கண்ணை மூடி பல்லைக் கடித்து கண்களை உருட்டி மீண்டும் பாடத் தொடங்கினான்.

"ஒவ்வொரு நாளைக்கு ஒரு சாமம் எவ்வமற கூட்டி ஒரு மாதம் அரைத்து குணம் பார்த்து வாட்டமில்லா செண்பகப்பூ மல்லிகைப்பூ சூட்டுகின்ற முல்லைப்பூ ஓலைப்பூ முற்றுமிதி பாகல் பூ வில்லைப் பூ வாசமிகவூட்டி வல்லதொரு காடேறி ஒன்பதுநாள் காளி சிவம் பத்துநாள் ஈடாம் அகோரம் இருபதுநாள் நாடுகின்ற மோகினி நாற்பது நாள் முற்றும் உருவேற்றி..."

இடையிடையில் 'ஏல நிறுத்துங்கேம்லா' என்றார் பிள்ளை. கம்மாளன் நிறுத்தவில்லை. பெரும் காற்றடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது அவன் பாடியதை நிறுத்தியபோது. "வெசயம் தெரிஞ்சவந்தாம் போல இருக்கு. என்னமோ நெனச்சிப்பிட்டோ ம்" என்று நினைத்துக்கொண்டு, "அப்ப மூணு நாலு மாசம் ஆகுங்க?" கம்மாளன் தலையாட்டினான்.

"சரில, பாட்டெல்லாம் சொல்லி காசப் பிடுங்கலாம்னு பாக்காத. வெசயம் நடக்கணும். அம்புட்டுதான்."

"சாமி, என் தோள்ல பாரு சாமி. ஒங்கண்ணுக்குத் தெரியாது. என்னாங்க? சக்கமா சாமி, கொளந்தயா ஒக்காந்து கெடக்கா. குறி சொல்றவன் வாயி சாமி. ச்ரவன பிசாசினி மந்திரம்னு கேட்டிருக்கியா? சக்கம்மா கொளந்தயாட்டம் ஒக்காந்து குறி சொல்வா. பேச்ச மாத்தினோம் பிசாசினியாயிடுவா."

"எனக்கெங்க ஒன் சக்கம்மாவும் தெரியுது பிசாசும் தெரியுது. என்னத்தயோ செய்யி." போகும்போது, கம்மாளன் தனக்கு நிஜமாக வசிய மருந்து தயாரிக்கத் தெரியும் என்ற நம்பிக்கை கொள்ளுமளவுக்கு "ஏல, வெசயம் தெரிஞ்சவம்தாம்லே நீயி" என்று சொல்லிவிட்டுப் போனார். கம்மாளன் மௌனமாக அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பூபதியாப்பிள்ளையின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறியிருந்தன. நாகம்மைக்கு ரொம்ப யோசனையாக இருந்தது. பின்னர் 'ஆம்பிளைங்க' என்று நினைத்துக்கொண்டு அவரைப் பற்றி யோசிப்பதையே முற்றிலுமாக நிறுத்தினாள். பிள்ளை அர்த்த ராத்திரியில் குளித்தார். தனியறையில் உட்கார்ந்து விடாது ஏதோ மந்திரம் ஜபித்தார். அந்த அறைக்குள் யாரையும் வரக்கூடாது என்று சொல்லி, அவரே பெருக்கி அவரே மொழுகினார். அவரது கையில் வசிய மந்திரம் எழுதிய காகிதமும் வசிய மந்திர யந்திரமும் எப்போதும் பத்திரமாக இருந்தன. "இந்த மந்திரத்த 1008 தடவ சொல்லி, யந்திரத்த யார்கிட்ட கொடுக்கீயளோ அவங்க ஒங்களுக்கு வசியம்தான், சக்கம்மா வாக்கு இது. தப்பாதுங்கேன்." அந்த நாளுக்காகக் காத்திருப்பதில் பெரும் ஆனந்தமும் சந்தோஷமும் அடைந்தார் பிள்ளை. ஐந்து வருடங்களைத் தள்ளி அவருக்கு நான்கு மாதத்தைத் தள்ளுவது பெரும் பாடாக இருந்தது. அன்று இரவு கம்மாளன் கொடுப்பதாகச் சொல்லியிருக்கும் வசிய மருந்தை வைத்து சோலையை அடைந்துவிடலாம் என்கிற நினைப்பே அவருக்கு சந்தோஷமாக இருந்தது. வசிய மருந்தோ மந்திரமோ ஏதாகிலும் ஒன்று சரிப்பட்டு வரும் என்று நம்பினார். விடாமல் மந்திரத்தை ஜெபித்தார்.

"ஓம் நமோ பகவதே மங்களேஸ்வரீ சர்வமுகராஜனீ சர்வகரம் மாதங்கீ குபாரிகே லகுலகு வசம் குரு குரு ஸ்வாஹா"

ருதன் சோலையைச் சென்று பார்த்தான். அதுவரை அவளது உடல்வாகு பற்றி அவன் தனியாக யோசித்ததில்லை. ஒரு நிமிடம் ஊன்றிக் கவனித்தபோது ஏன் பூபதியாப்பிள்ளை கிடந்து அலைகிறார் என்பது புரிந்தது. அவளிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தான்.

"நா கேக்கணும்னு நினைச்சேன். பண்ணையார்னு சொல்லிட்டு திரியுதானே பூபதியாப்பிள்ள, அவன் எப்படி ஆளுன்னு நீ நெனைக்கட்டி?"

"வாட்டி போட்டின்ன பல்லு பேந்திடும்."

பூபதியாப்பிள்ளை சொல்வதுபோல் இவளிடம் சீக்கிரத்தில் காரியம் நடக்காது என்பது புரிந்தது. மெல்ல சுதாரித்துக்கொண்டு,

"அட தங்கச்சிய கூப்பிட்ட மாதிரின்னு வெச்சுக்கோ."

"இப்ப எதுக்கு ஒனக்கு அவசியமில்லாத கேள்வி?"

"இல்ல, கொஞ்ச காலமா பிள்ளைவாள் வசிய மருந்து அது இதுன்னு சொல்லிக்கிட்டு திரியறதா கேள்வி. நடுசாமத்துல கருப்பந்துறைக்கு வாரதும் குடுகுடுப்பைக்காரனோட கும்மாளம் அடிக்கிறதும்... கேள்விப்பட்டியா?"

"ஊர்ல எவன் எங்க போறான்னு பாக்க சோலி எனக்கெதுக்குங்கீரு?"

"அதில்ல, வசிய மருந்தே உனக்காகத்தான்னு பேச்சு."

சோலைக்குக் கொஞ்சம் புரியத் தொடங்கியது. பூபதியாப்பிள்ளையின் உருளும் கண்களும் ஒருநாள் இரவு சம்பந்தமே இல்லாமல் வீட்டுவேலையாக வரச் சொன்னதும் நினைவுக்கு வந்தன.

"எவ சொன்னா? நாக்க அறுத்துப் போடுவேன்னு சொல்லு" என்று சொல்லி விருட்டென்று நடக்கத் தொடங்கினாள். அன்று எப்போதும்போல் நாகம்மை ஆச்சி விட்டில் வேலைக்குப் போனாள். நாகம்மை எதையும் சொல்லாமல் ஏனங்களையெல்லாம் போட்டுவிட்டு, கொல்லைப்புறத்தில் சென்று அமர்ந்துவிட்டு முந்தானையால் விசிறிக்கொண்டாள். வீடெங்கும் நோட்டம் விட்டாள் சோலை. பிள்ளைவாளைக் காணவில்லை. துடைப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அறையைச் சுத்தம் செய்யும் சாக்கில் அவரது அறைக்குள் நுழைந்தாள். அறையின் சுவரில் ஒரு யந்திரத்தின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அவளுக்கு அந்த அறையில் அதற்கு முன்னர் அதைப் பார்த்த நினைவில்லை. கொஞ்ச நாளாகவே நாகம்மை ஆச்சி அவளை அந்த அறையைப் பெருக்க விடுவதில்லை என்பதை வைத்தும் பூபதியாப்பிள்ளையின் மேயும் கண்களை வைத்தும் சில விஷயங்களை யூகித்து வைத்திருந்தாள். ஆனால் கொஞ்சம் கூடப் பிடி கொடுக்காமல் இருக்க நினைத்திருந்தாள். 'ஒரு பொம்பளைக்காக ஒரு ஆம்பிளை இம்புட்டு செய்வானா?' யோசனையாக இருந்தது சோலைக்கு. பூபதியாப்பிள்ளையை நினைக்கவே பாவமாக இருந்தது. அங்கிருக்கும் கண்ணாடியில் முகம் பார்த்து தலை திருத்திக்கொண்டாள்.

ம்மாளன் நெருப்பு வெளிச்சத்தில், தன் கையிலிருக்கும் வசிய மருத்தைக் காண்பித்துச் சத்தமாகச் சொன்னான். "சாதாரணப்பட்ட மருந்தில்ல சாமி. முன்னோருங்க சொன்னதையெல்லாம் ஒண்ணுவிடாம போட்டு பெசலா செஞ்சது. வத்திக் கெடக்குற மரவட்டைக்கு எம்பிட்டு அலைஞ்சேன்னீங்க? சும்மா சொல்லப்பிடாது, அதிர்ஷ்டம் வேணும் சாமி. ஒமக்கு இருக்கு அது. இப்போ இதுக்கு மயங்காதவ எவ இருக்காங்கேன்? இத கொஞ்சம் மறச்சி வெச்சிக்கிட்டு அவகிட்ட போய் நில்லு. அப்புறம் பாரு சாமி சேதிய."

"பொம்பளைக்கில்லன்னேம்லல?"

பற்கள் தெரிய "நம்பிட்டேன்" என்றான். கைகள் நடுங்க, மிகுந்த நம்பிக்கையுடன் எல்லாத் தெய்வங்களையும் வேண்டியபடி, உதடுகள் வசிய மந்திரத்தை ஜெபிக்க, அவன் கொடுத்த வசிய மருந்தை வாங்கினார்.

"ஓம் நமோ பகவதே மங்களேஸ்வரீ சர்வமுகராஜனீ சர்வகரம் மாதங்கீ குபாரிகே லகுலகு வசம் குரு குரு ஸ்வாஹா"

-முற்றும்.

நன்றி: யுகமாயினி, ஏப்ரல் 2008

8 comments:

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

ஆங்கிலம் எழுத்து கூட்டி மட்டுமே படிக்க மட்டுமே தெரிந்த ஒரு தலைவர், ஒரு விழாவில் ஆங்கிலத்தில் பேச ரொம்ப ஆசைப்பட்டார். அவரது உதவியாளர் தலைவருக்கு ஒரு உரையை தயார் செய்து கொடுத்து கொஞ்சம் பயிற்சியும் கொடுத்தார். ஆனால் ஒரு பிசகு செய்து விட்டார். அந்த உரையின் நகலை தனியே எடுத்து வைக்காமல் ஒரிஜினலோடு சேர்த்து பின் செய்து விட்டார். தலைவர் “ஓஹோ- இரண்டு பக்கம் பேசனும் போலிருக்கு” என்று குஷியானார். விழாவில் முதல் பக்கம் முடிந்தவுடன் இரண்டாவது பக்கம் முதலதன் நகல் என்று தெரியாமல் அதையும் படிக்க ஆரம்பித்தார்.

இனிமேல் உரை முடியும் இடத்தில் ஒரு ”முற்றும்” போட வேண்டும் என்று உதவியாளர் நினத்துக் கொண்டார்

ஜயராமன் said...

கவிஞர் ஒருவர் எழுதிய கதை என்பதால் கதை எப்படி இருக்குமோ என்று முதலில் நினைத்தேன். ஆனால், ஒரு அற்புதமான வார்த்தை வீச்சு. எழுத்துக்களில் விரயம் ஏதும் இல்லாமல் ஆளைக் கட்டிப்போடும் ஒரு பாணி. கதையும் கொஞ்சம் சஸ்பெண்ஸாகத்தான் இருக்கிறது! ஆனால், பச்சென்று பாதியில் நின்று விடுகிறது. ஒருவேளை, இதுதான் நவீன கதை வடிவமோ, நமக்குத்தெரியாத்! யாரோ சொன்னதுபோல ஒரு "முற்றும்" போடுங்க, இல்லாவிட்டால் இன்னும் எங்கே என்று தேடிக்கொண்டிருப்பேன்! அழகான கதை. இது "வார்த்தை"யில் வருமா?

நன்றி

ஜயராமன்

ஹரன்பிரசன்னா said...

ஜயராமன், சில கதைகளை முற்றும்-க்குப் பின்னரும் படிக்கவேண்டும்!

உங்கள் கருத்துக்கு நன்றி.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

முற்றும் அறிந்தோமென முற்றும் போடாமல்

முற்றும் முடிந்ததாயும் முற்றும் முடிக்காமல்

சற்றே தடுமாறும் சங்கதி கதையெனில்

மற்றாங்கே சொல்லேதும் இல்.

கதை எழுதியவர் கவிஞர் என அறிந்ததால் அதே வடிவில்
பின்னூட்டம் செய்திருக்கிறேன்.

ஏற்புடைத்தாயின் ஏற்று ஏற்றம் தருக
மாற்றுக் கருத்துளதெனில் காட்டி அறிவுறுத்துக. மாற்றிக் கொள்ள வேணுமெனில் மாற்றி மகிழ்கிறேன்.

ஹரன்பிரசன்னா said...

//முற்றும் அறிந்தோமென முற்றும் போடாமல்

முற்றும் முடிந்ததாயும் முற்றும் முடிக்காமல்

சற்றே தடுமாறும் சங்கதி கதையெனில்

மற்றாங்கே சொல்லேதும் இல்.
//

இது என்ன கவிதை வகை? வெண்பா என்றால்...

அறிதோமென - கனிச்சீர்

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

வெண்பா என நான் சொல்லவில்லை
ஏனெனில் வெண்பா இலக்கணம் எனக்கு தெரியும்.

முறையாக இலக்கணம் கற்றிருக்கிறேன் ஸ்வாமி

அது வெண்பா இல்லாமல் இருப்பதற்கு ஒரு கனிச்சீர் மட்டும் காரணம் இல்லை. இன்னும் சில காரணங்கள் உள. அதைக் சரி செய்தால் இதற்கு வெண்பா அந்தஸ்த்தை தரலாம்

ஹரன் பிரசன்னா !!. உங்கள் அன்பு என்னை பரவசப்படுத்துகிறது

வாழ்க நீவிர்

R.Ganesan said...

மிக அருமையான கதை மற்றும் சீரான நடை. திரு.ப்ரசன்னா, என் பெயர் இரா.கணேசன். ஏற்கனவே மரத்தடியில் பல தொகுப்புகளை படித்திருக்கிறேன். ஆனால் இக்கதையைப்படித்தவுடனேயே பாராட்டத்தோன்றியது.

நன்றி.

அன்புடன்,
இரா.கணேசன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

very interesting.!