Saturday, August 2, 2008

கவிதைகள்




கனவு

நீண்ட நாளுக்குப் பின் தோட்டம்
மீண்டும் கனவில் வந்தது
தானகவே முளைத்திருந்த
பப்பாளி மரங்களின் கிளைகளில்
வெள்ளை வெள்ளையாகக் காய்ந்து கிடந்தது
காகத்தின் எச்சம்
சிறுவர்கள் எறிந்த பந்து
கண்டெடுக்கப்படாமல் அலைந்து
நிலைத்திருக்கவேண்டும், அதன்
உடலெங்கும் மண்ணாக
கரிய சுவரில்
நிழலில்லா கரும்பூனை
தோட்டத்தைப் பார்த்தபடி நடக்க
மண்வாசனையுடன் லேசான தூரலென
திசை மறக்கத் தொடங்கினேன்
கனவு கலையும் நேரம்
கை பிரிந்து செல்லும்
காற்றைப் பற்றிக் கவலையில்லை
எங்கேனும் சுற்றித் திரிந்து
மீண்டு ஏகும்
எனக்கான கனவைப் போல
எனக்கான காற்றும்.

-oOo-


மாயக் கண்ணாடி

லாயத்திலிருந்த சிவப்புக் குதிரை
என்னை வலப்பக்கம் செல்லச் சொன்னது
அங்கிருந்த ஆற்றில் கண்விழித்து நின்றபோது
குளித்துக்கொண்டிருந்த மீனொன்று
நீரில் மூழ்கச் சொன்னது
பாதாள உலகத்தில் படுத்துக்கிடந்த பாம்பு
மாயக் கதவொன்றைத் திறக்க
இரட்டைச் சாலைகள் விரிந்தன
சுமைதாங்கிக் கல்லில்
காத்துக்கொண்டிருந்த
அதி யௌவனப் பெண்ணொருத்தி
என் ரேகையைப் பார்த்து
தென்மேற்குத் திசை போகச் சொன்னாள்
அங்கே நான் தெய்வமென்றறியும்
சிலை ஒன்று காத்துக் கிடப்பதாக
வழியெங்கும் நமத்துக் கிடந்த கோரைப் புற்கள்
என் வழி தவறென்றன
மாயக் கண்ணாடியைக் கோபம் கொண்டு உடைத்தேன்
சிதறி விழுந்த கண்ணாடிகள்
ஆளுக்கொரு திசை சொல்லி நின்றன.

-oOo-


இரவுகளின் வரைபடம்

தினம் தினம் வரைந்துவைத்த
இரவுகளின் படங்களில்
வழியும் கருமையிருந்தது
தெருநாய்களின் ஊளையிருந்தது
கழட்டி வைக்கப்பட்ட கொலுசிருந்தது
எரியும் சிறு அகலும்
வியர்வையும் அலுப்பும்
தோல்வியும் வெற்றியும்
ஒன்று சேர்ந்து குழம்பிக் கிடந்த
காகிதம் இருந்தது
அழும் குழந்தையின் எரிச்சலைப் போல
விடிகிற வானமும் இருந்தது.

-oOo-

6 comments:

யு.எஸ்.தமிழன் said...

<< மாயக் கண்ணாடி >>

ராபர்ட் ஃபாரஸ்ட்டின் The Road not taken ஐ நினைவுறுத்துகிறது. இயலாமையில் மாயக்கண்ணாடியை நந்தவனத்து ஆண்டியைப்போல உடைப்பதைக்காட்டிலும் தெரிவை ஏற்று நடக்கக் கற்றுகொடுப்பதுதானே வாழ்க்கை!

Rajasubramanian S said...

நன்றாக இருக்கின்றன 3 கவிதளுமே. வாழ்த்துக்கள்.

Rajasubramanian S said...

நன்றாக இருக்கின்றன 3 கவிதளுமே. வாழ்த்துக்கள்.

anujanya said...

ஹரன்,

மூன்றுமே சிறப்பு. 'எங்கேனும் சுற்றித் திரிந்து மீண்டு ஏகும் எனக்கான கனவு' - ஆஹா!

'மாயக்கண்ணாடி' பலமுறை படிக்கத் தூண்டுகிறது. 'குளிக்கும் மீன், படுத்திருக்கும் பாம்பு, தெய்வமென்றறியும் சிலை' - வசீகரமான வரிகளுடன் என்னவோ செய்யும் கவிதை.

'இரவும்' அழகிய கவிதை. 'கழட்டி வைக்கப்பட்ட கொலுசு' 'அழும் குழந்தையின் எரிச்சலைப் போல் விடியும் வானம்' - புன்சிரிக்க வைக்கும் வரிகள்.

கென் எழுதிய latest கவிதை போல், வெகுநாட்கள் உங்கள் கவிதைக்குக் காத்திருந்தாலும், இப்போது உங்கள் இம்மூன்று கவிதைகள் சற்று கால இடைவெளியில் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. குறைந்தது ஒரு வாரமேனும் தேவை ஒவ்வொரு கவிதையையும் உள்வாங்கி அசைபோட.
வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

யு.எஸ் தமிழன் சொன்னது போல

Rober Frost ஐ ஞாபகப்படுத்தவே செய்கிறது

Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,

And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and

I took the one less traveled by,
And that has made all the difference

ஹரன்,

மூன்று கவிதைகளுமே சிடுக்கெடுக்க மறந்து எண்ணெய் துறந்த கூந்தலைப் போல கொஞ்சம் Rough ஆக இருப்பதாகப் படுகிறது

கானகம் said...

பிரசன்னா.,

மூன்று கவிதைகளுமே அழகு என்றாலும் "மாயக்கண்ணாடி" காட்டும் ஜாலம் அருமை.

கனவு இரண்டாம் இடத்தையும் இரவுகளின் வரைபடம் மூன்றாம் இடத்தையும் எனது கணிப்பில் பெறுகின்றன.

வாழ்த்துக்கள்.

ஜெயக்குமார்