Monday, November 10, 2008

நான்கு கவிதைகள்

உயிரோசை.காமில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. நன்றி உயிரோசை.காம்.


யோகம்

என் அகமெங்கும் நெருப்பெரிய
தீராத வனத்தில்
அடைமழையில்
காத்துக்கொண்டிருக்கிறாள் குடைப்பெண்

எட்டும் தூரத்திலிருக்கும் அவள் கை
நெருங்க நெருங்க
தூரச் செல்கிறது

உச்சி ஏறியபின்புதான் கேட்கிறது
மரத்தின் கீழே காத்திருக்கும்
செந்நாய்களின் மூச்சிரைப்பு

உச்சிக்குப் பின்னும் மரம் நீட்டும்
யோகமொன்றில் அமர்கிறேன்
கொதி நெருப்படங்க

மெல்ல புன்னகைக்கிறாள் குடைப்பெண்.



அந்தரங்கம்

கண்ணாடியின் அந்தப்புறமிருந்து
செய்கையில் நிறைய சொன்னான்
நான் இப்புறமிருந்து
தலையாட்டிக்கொண்டிருந்தேன்
கண்ணாடியில் பிரதிபலிக்கின்றன
ஏகப்பட்ட கண்கள்



அவனது கண்கள் வழியாக

நிறைய பேசினான்
கேட்டுக்கொண்டே இருந்தேன்
நானும் என்னென்னவோ சொன்னேன்
திடீரென்று தாமரை மலரைப் பற்றிச் சொன்னான்
சட்டென நினைவுக்கு வந்தது
சில நாள்களுக்கு
கனவெங்கும் விரிந்து கிடந்த
தாமரை மலர்கள்
சொன்னேன், கேட்டுக்கொண்டான்.
பின்பும் ஏதேதோ பேசினோம்
வெறுமையடைந்த சொற்களின் ஒரு தருணத்தில்
எலுமிச்சை பற்றி ஏதோ சொன்னான்.
ஒரு நொடி வியப்புக்குப் பின்
என் கண்முன் விரிந்தது
இரண்டு நாள் முன்பு கண்ட கனவில்
சிதறி ஓடிய எலுமிச்சைகள்.
கேட்டுக்கொண்டான்.
தொலைபேசியை வைத்ததும்
மென்மையாகப் புன்னகைத்திருப்பானோ?.



ப்ளாட்ஃபார்ம்


காத்திருந்த இரண்டு ரயில்கள்
எதிரெதிர் நகரத் தொடங்க
இடைப்பட்ட காலத்தின் அதிர்வில்
நிலைகொண்டிருந்தேன்
கண்ணெங்கும் கம்பிகள் கடக்க

No comments: