Sunday, January 18, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 10)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

இன்று நல்ல கூட்டம் இருந்தது. தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்த கூட்டம், மதியம் இரண்டு மணிக்கு மேல் சூடு பிடித்தது. இன்றும் கூட்டம் இல்லாமல் போய், புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம் இருந்தது என்கிற வரியை எழுத முடியாமலேயே போய்விடுமோ என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி இல்லாமல் சரியான கூட்டம். அதிலும் சுற்றிப் பார்க்கும் ஆவலுள்ள கூட்டம் இல்லாமல், புத்தகம் வாங்கும் மக்களின் கூட்டம் அதிகம் இருந்தது மகிழ்ச்சி அளித்தது.

முதல் இரண்டு வரிசைகளுக்குள் நுழையவே முடியவில்லை. அந்தக் காட்சியைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. வெளியில் மக்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் காத்திருந்தார்கள். இத்த பத்து நாள்களில் இப்படி நிகழ்வது இதுவே முதல்முறை. இதைவிட பதினோராம் நாள் (புத்தகக் கண்காட்சியின் கடைசி ஞாயிறு) இன்னும் கூட்டம் அதிகம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மனுஷ்யபுத்திரனிடம் பத்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான கருத்தே அவரிடமும் இருந்தது. சென்ற முறையைவிட இந்தமுறை கூட்டம் குறைவு என்பதுதான் அவரும் சொன்னது. அதற்கான காரணங்கள் பற்றி சில கருத்துகளைச் சொன்னார். அவை எல்லாமே நான் ஏற்கெனவே சொன்னவையே. சில பதிப்பாளர்கள் மனம் உடைந்து போகும் அளவு பேசுகிறார்கள் என்றார். அதுவும் உண்மையானதே.

சுரேஷ் கண்ணன் வந்திருந்தார். ‘பகடி எழுதும்போது வேணும்னே எழுதுற மாதிரி இருக்கே’ என்று டீசண்ட்டாக கேட்டார். ‘உங்க பகடி சகிக்கலை, செயற்கையா இருக்கு’ என்று அதற்கு அர்த்தம். ‘தினமும் எதாவது எழுதணும், ஜஸ்ட் பத்து நிமிஷத்துல எழுதுறேன், அப்படித்தான் இருக்கும்’ என்றேன்.

ரஜினி ராம்கி தன் குடும்பத்துடன் வந்திருந்தார். கிருபா தன் மனைவியுடன் வந்திருந்தார்.

நிறைய பேர் என்னிடம் ‘தினமும் தோழர் தோழர்னு எழுதுறீங்களே, யாருங்க அந்த தோழர்’ என்றார்கள். எல்லோரிடமும் மருதன் பற்றிச் சொன்னேன்.

யுவன் சந்திரசேகரனிடம் இரண்டு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். அவரது நாவல் அல்லது குறுங்கதைகள் (நீங்களுமா?!) தொகுப்பு வந்திருப்பதாகச் சொன்னார். உயிர்மை அரங்கில் அதைப் பார்க்கத் தவறிவிட்டேன்.

லக்கிலுக்கும் அதிஷாவும் வந்து, கடை போட்டிருக்கும் பதிப்பாளர்களைவிட அதிகமுறை வந்தவர்கள் என்ற சாதனையைப் படைத்தார்கள். அதிஷா சந்தனப் பொட்டு வைத்திருந்தார். லக்கிலுக் பெரியார் படம் போட்ட டீ ஷர்ட் போட்டிருந்தார்.

நான் விஜய பாரதம் ஸ்டாலில் ‘மகாபாரதம்’ சொற்பொழிவு சிடி வாங்கினேன். 30 மணி நேரம் ஓடுமாம்! ஜி ஜி என்றழைத்தார்கள். ஸ்ம்ஸ்க்ருத பாரதி நடத்தும் சமிஸ்கிருத வகுப்புகள் பற்றிய தகவலைத் தந்தார்கள்.

பின்குறிப்பு: ஒருவர் அரக்கபரக்க வந்து என்னிடம் ‘ஆர்.எஸ்.எஸ். ஸ்டால் எங்க இருக்கு’ என்றார். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை பேரையும் விட்டுவிட்டு சரியாக என்னிடம் ஏன் கேட்டார் என்று தெரியவில்லை. ‘ஜி’க்கு விஜயபாரதம் அரங்குக்குக்கு செல்லும் வழியைக் காட்டி வைத்தேன்.

சுகுமாரன் விஷயத்தைப் பற்றி சுகா எழுதியிருக்கும் ஒரு சிறு பதிவு இங்கே.

1 comment:

பிச்சைப்பாத்திரம் said...

//‘பகடி எழுதும்போது வேணும்னே எழுதுற மாதிரி இருக்கே’ என்று டீசண்ட்டாக கேட்டார். //

பிரசன்னா,

புத்தகக்காட்சி தொடர்பான பதிவுகள் அவசரத்தில் எழுதப்பட்டாலும் சில வரிகள் உண்மையான நகைச்சுவைத்தன்மையோடு அமைந்திருந்தது. மாறாக சில வரிகள் வலிந்து எழுதப்பட்டவை போல் எனக்குத் தோன்றின. அதைத்தான் குறிப்பிட விரும்பினேன். உங்கள் புத்தகக்காட்சி பதிவுகளை மொத்தமாக நிராகரிக்கவில்லை. மாறாக எனக்கு அவை பயனுள்ளதாக இருந்தன. கூட்டம் இல்லை என்று நீங்கள் தினமும் எழுதுவதை நம்பி அன்று வந்தேன். என் துரதிர்ஷ்டம், உங்கள் அதிர்ஷ்டம். :-)

புத்தகக் காட்சியில் பல மனிதர்களையும் அவர்களின் செய்கைகளையும் சந்தித்திருப்பீர்கள். பெயர்களை குறிப்பிடாமல் அதைப் பற்றி நடைச்சித்திரம் போல் ஒரு பதிவை முயன்று பார்க்க வேண்டுகிறேன்.