Tuesday, December 9, 2003

நதி நீராலானது மட்டுமல்ல - கவிதை

நதி இறந்துவிட்டது என்கிறார்கள்

நீரில்லை என்கிறார்கள்
காய்ந்த மீன்கூடு சொருகிக்கொண்டிருக்கும்
மணல் காட்டுகிறார்கள்

மீன்கொத்தி பார்த்து
வருஷமாகிறது என்கிறார்கள்

நதியின் கரைகளில்
வெறுமையைக் காட்டுகிறார்கள்

பசுமையில்லாத ஊரைக் காட்டுகிறார்கள்

ஊர்ச்சாத்திரை கூட்டாமல்
பூட்டப்பட்டிருக்கும் கோயில் காட்டுகிறார்கள்

கடைசியில்
ஒட்டுமொத்தக் காரணமாய்
நதி இறந்துவிட்டதைக் காட்டுகிறார்கள்

தட்டிக்கொள்கிறேன்
என்றோ
ஆடிப்பெருக்கு நிலாச்சாப்பாட்டிற்குப் பின்
கட்டிப் புரண்டபோது
ஒட்டிக்கொண்ட மண்துகள் முதுகில்

இறக்காது இந்த நதி
என் தலைமுறைக்கேனும்.


1 comment:

வல்லிசிம்ஹன் said...

நதியில் நீராட்டம்,மறந்து போன நிகழ்ச்சி.
மணலும் கோலாட்ட ஜவந்திரையும் ,பழமைகால நினைவலைகளில்.
நன்றி திரு ப்ரசன்னா.