Saturday, December 27, 2008

செங்குதிரையும் இருட்பாம்பும் (நாள் 5)



செங்கிஸ்கான் நூலை இகாரஸ் பிரகாஷ் வெளியிட முத்துராமன் பெற்றுக்கொண்டார். இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை ப்ரவாஹன் வெளியிட கணேசன் பெற்றுக்கொண்டார்.

முகில் எழுதிய செங்கிஸ்கான் நூலை இகாரஸ் பிரகாஷ் வெளியிட்டுப் பேசினார். வரலாற்றில் தனக்கு அதிக அறிவு இல்லை என்பதால் இந்த நூலை வெளியிட்டு எப்படி பேசுவது என்று யோசித்ததாகவும் அதற்கான சில ஆயத்த முயற்சிகளைச் செய்ததாகவும் பிரகாஷ் கூறினார். இணையத்தில் செங்கிஸ்கான் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகவும், செங்கிஸ்கான் குறித்த ஆவணப் படம் ஒன்றைப் பார்த்ததாகவும், அதன் பின்னரே இந்த நூலில் அவரால் எளிதில் அவரைப் பொருத்திக்கொள்ளமுடிந்தது என்றும் பிரகாஷ் சொன்னார். செங்கிஸ்கானின் போர்த்தந்திரங்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய பிரகாஷ், செங்கிஸ்கானின் வெற்றிக்கான முறைகளாக பத்துக் கட்டளைகளைக் குறிப்பிட்டுச் சொன்னார். பொதுவாக கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்களின் நடை, பா.ராகவனின் பாதிப்பில் இருக்கும் என்றும், ஆனால் இப்புத்தகத்தின் நடை அதிலிருந்து விலகி இருப்பதை தன்னால் கவனிக்கமுடிந்தது என்றும் குறிப்பிட்டார். முகிலின் உழைப்பைப் பற்றிப் பாராட்டிய பிரகாஷ், இந்நூல் மிக எளிமையான முறையில், மிக அழகாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது என்றும், இதற்காக உழைத்த முகிலைப் பாராட்டியும் பேசினார்.

குணசேகரன் எழுதிய இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை வெளியிட்டு ப்ரவாஹன் பேசினார். ப்ரவாஹன் (ஆய்வாளர், Sishri.org) சிறந்த பேச்சாளர் என்பதை நான் அறிவேன். அதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்யும் வண்ணம் மிகச் சிறப்பாகப் பேசினார். ஒரு இண்டலெக்சுவல் தன்மையோடு, நூலை மிக ஆழமாக விமர்சனம் செய்தார். இருளர்கள் போன்ற ஒரு சமூகத்தைப் பற்றிய ஒரு நூல் நிச்சயம் தேவை என்கிற நிலையில் கிழக்கு பதிப்பகத்தின் முயற்சியையும் அந்நூலின் ஆசிரியர் குணசேக்ரனின் முயற்சியையும் பாராட்டிய அவர், இந்நூலில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினார். இது போன்ற ஒரு மானுடவியல் சார்ந்த புத்தகத்தை வெளியிடும்போது, பதிப்புக்குழு இன்னும் அதிகம் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும், புத்தகத்தின் துறைசார்ந்த ஒருவரிடம் கொடுத்து புத்தகம் பற்றிய கருத்துகளைப் பெறவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இன்றைய நிலையில் ஒரு கருத்து ஒரு புத்தகத்தில் வந்துவிட்டாலே அது உண்மை என்று நம்பப்படுகிறது; அதனால் இதுபோன்ற புத்தகங்களில் அதிகம் கவனத்தோடு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆரியப் படையெப்டுப்புப் பற்றிப் பேசிய ப்ரவாஹன், அது இப்புத்தகத்தில் தவறாகக் கையாளப்பட்டுள்ளது என்று சொன்னார். தஸ்யுக்கள் எனப்படுபவர்கள் இருளர்களாக இருக்கமுடியாது என்று குறிப்பிட்டார். பல்வேறு நிலங்களில் அலைந்து திரிந்தவர்கள் என்று சொல்லப்படும் இருளர்கள் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்ததாக நூலாசிரியர் எழுதியிருப்பதும் சரியல்ல என்றார். அதேபோல் இருளர்கள் கடல்கன்னிகளை வழிபடும் மரபு ஒன்று உள்ளது என்றும், அதுபற்றி இப்புத்தகத்தில் குறிப்புகள் இல்லை என்றும் அது விடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.


பின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. இருளர்கள் பற்றிய கேள்விகள் தொடங்கின. தரவுகள் இல்லை என்று சொல்லி மறுத்துப் பேசிய ப்ரவாஹன் அதற்கான தரவுகளைத் தராமல் யூகத்தில் மட்டுமே பேசியதாகவும், ஆனால் அந்த யூகம் ஓர் ஆசிரியருக்கு மறுக்கப்படுவது ஏன் என்றும் லக்கிலுக் கேட்டார். பதிலளித்த ப்ரவாஹன், ஒரு நூல் எழுதப்படும்போது ஒரு கருத்தைச் சொல்ல முற்படும்போது அதற்கான தரவுகளோடு எழுதவேண்டும் என்று தான் சொன்னதாகவும், தான் பேசும்போது கூட ஒரே ஒரு கருத்தை மட்டுமே (கடல் கன்னிகள் சார்ந்தது) யூகத்தின் அடிப்படையில் சொன்னதாகவும், அதையும் தான் வெளிப்படையாகக் குறிப்பிட்டதாகவும் சொன்னார். மேலும், தரவுகளோடு ஒப்பிடவேண்டிய, தரவுகளைக் கேட்கவேண்டிய விஷயங்களைக் கூட, ஆசிரியரின் குறைகளாகச் சொல்லாமல், அதை பதிப்புக்குழுவின் குறைகளாகவே முன்வைத்ததாகக் குறிப்பிட்டார். ஆரியப் படையெடுப்பு என்பது நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா அல்லது ஆரியப் படையெடுப்பு நடந்ததற்கான காரணங்களை மறுப்பதன்மூலமே அது நடக்கவில்லை என்கிறீர்களா, தஸ்யுக்கள் என்பவர் யாராக இருக்கமுடியும் என்ற கேள்விகளைக் கேட்டேன். ஆரியப்படையெப்பு பற்றி மிக நீண்ட விளக்கங்களைத் தரமுடியும் என்றும், அதற்கான தரவுகளைத் தான் தயாராக இருப்பதாகச் சொன்ன ப்ரவாஹன், தஸ்யுக்கள் என்பவர்கள் நிஷகாதர்களாகவே இருக்கமுடியும் என்று குறிப்பிட்டார். மூவேந்தர்கள் திராவிடர்களா என்பன போன்ற கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார். மானுடவியல் ஆய்வுமூலம் வெளியாகும் கருத்துகளைக் கொண்டு இனம் பற்றிய முடிவுக்கு வரலாமா என்பது பற்றிய கேள்விக்கு, மானுடவியலில் நடந்த பல்வேறு ஆயுவுகளை வெளியிடாமல் இந்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் அது வெளிக்கொண்டுவரும் முடிவுகள் அதுவரை இருந்த கருத்தியல்களை உடைக்கும் என்பதால் இப்படி ஒரு நிலை என்பதாகவும் கனடா வெங்கட் குறிப்பிட்டார். (நான் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறேனா என்பது தெரியவில்லை. இது பற்றிய நீண்ட விவாதம் நிகழ்ந்தது. கல்வெட்டாய்வாளர் இராமசந்திரன் தனது கருத்துகளைச் சொன்னார். தொல்லியல் ஆய்வு, பாப்ரி மசூதி, இந்திரா காந்தி என நீண்ட இந்த விவாதத்தை ஒலிப்பதிவாகக் கேட்டுக்கொள்ளவும். வெங்கட்ரமணன் மிகச் சிறப்பாகப் பேசினார். ) இருளர்கள் புத்தகத்தை இருளர்கள் பார்த்தார்களா, எப்படி உணர்ந்தார்கள் என்று கேட்டபோது, இருளர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்புத்தகத்தின் மூலமாகவே சாதிச் சான்றிதழ் பெற முடிந்தது என்றும், இருளர் இனத்தைச் சேர்ந்த இன்னொருவர் இப்புத்தகத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டியதாகவும் (இன்னும் ஒரு கருத்தைச் சொன்னார் குணசேகரன். மறந்துவிட்டது.) சொன்னார்.

செங்கிஸ்கானின் கேள்விகள் தொடங்கின. செங்கிஸ்கான், பின்பு நெப்போலியன், பின்பு ஹிட்லர் என வரிசைப்படுத்திக்கொண்டால், செங்கிஸ்கானின் முக்கியத்துவம் என்ன, அவர் ஏன் போற்றப்படவேண்டும், அவரது போர்முறைகள் என்ன என்ற பத்ரியின் கேள்விக்கு முகில் விரிவாகப் பதிலளித்தார். போர்முறைகளே செங்கிஸ்கானின் மிக முக்கியமான பங்கு என்றும், சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றாக்கியது, வென்ற இனக்குழுக்களில் இருந்தே ஒரு குழந்தையைத் தத்து எடுத்து செங்கிஸ்கானின் தாய் வளர்த்தது போன்ற முறைகளைக் குறிப்பிட்ட முகில், இந்த தந்திரமுறைகளே செங்கிஸ்கானை முக்கியமானவராக்குகிறது என்றார். செங்கிஸ்கான் என்கிற பெயர் ஏன் வந்தது என்ற கேள்விக்கு செங்கிஸ்கான் என்பது நீல ஓநாய்களின் தலைவன் என்ற பொருள் என்று சொன்னார் முகில். அப்போது குறுக்கிட்ட அதிஷா (ஆதிஷா அல்ல!), செங்கிஸ்கான் என்றால் இடியோடு தொடர்புடைய பெயர் என்றும், இடியால் வென்றதால் அப்பெயர் வந்ததாக ஒரு கருத்து உண்டு என்றும், மங்கோலியப் படையெடுப்புக்குப் பின்னர் சவுதி வெற்றிக்குப் பின்னர் இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் செங்கிஸ்கானுக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பில்லை என்றார் முகில். கான் என்பது அரசன் என்ற பொருளில் வழங்கப்படுவதாகச் சொன்னார். செங்கிஸ்கான் என்ற பெயரே, ஜிங்கிஸ்கான் என்பதுபோன்ற பல்வேறு உச்சரிப்பில் அழைக்கப்படுவதாக விவரித்தார்.

நேற்றைய கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு தோழர் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பி இந்தக் கேள்வியைக் கேட்க சொன்னார். ‘ஆஞ்சநேயர் இருளரா?’

நான் எதாவது இப்படி கேட்கப்போக, அதற்கான தரவுகள் இருக்கின்றன என்று ப்ரவாஹன் ஆரம்பித்துவிட்டால் என்னாகும் என எனக்கு வந்த பயத்தில் இந்தக் கேள்வியைக் கேட்காமல் விட்டேன்.

(இந்தக் கூட்டத்தில் பேசியவை, கேள்விகளின் மீதான கலந்துரையாடல் போன்றவற்றை நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன். அதனால் தவறுகள் இருக்கலாம். எனவே பத்ரி பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் ஒலித்துண்டைக் கேட்பது மட்டுமே மிகச் சரியானதாக இருக்கும்.)

அனைத்து தோழர்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் ஹனுமந்த ஜெயந்தி வாழ்ந்த்துகள்!!!

2 comments:

Anonymous said...

ப்ரவாஹனின் உரையையும், இருளர்கள் தொடர்பான விவாதத்தையும் www.sishri.org தளத்திலும் கேட்கலாம்.

படங்கள்: http://www.sishri.org/irular.html

Anonymous said...

நல்ல நகைசுவை ததும்புகிற எழுத்து. வாழ்த்துக்கள். பதிவர் சந்திப்புக்கெல்லாம் நீங்க போவதில்லையா?
திருநாவுக்கரசு