சொல்வனம்.காம் வலைத்தளத்தில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. சொல்வனத்துக்கு எனது நன்றி. கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
    ஆங்கென் நட்பு
    சட்டெனத் தோன்றி மறைந்தது
    திடீரென்று ஒரு குரல்
    ரொம்ப பழகிய
    ஒருவனுடையது என்பது நிச்சயம்
    அவனாயிருக்குமோ இவனாயிருக்குமோ என
    நினைத்துப் பார்த்ததில்
    மறந்து போன எல்லா நண்பர்களும்
    ஞாபகம் வந்து போனார்கள்
    யாரென்று
    யோசித்துக்கொண்டிருக்கிறேன்
    இன்னும்.
    பசும் புல்வெளியில் சுற்றும் சக்கரம்
    எங்கேயிருந்தும்
    ஒளி கசிய முடியாத
    இருள் அறை முழுதும்
    சுற்றிப் படந்திருக்கின்றன
    என் நினைவுகள்
    வழியில் திரும்பும்
    பஸ்ஸொன்றிலிருந்து
    கண நேரம் பார்த்த முகம் முதல்
    ஆழ்ந்து அமிழ்ந்துபோன
    நிர்வாணத்தின் தலைவரை
    இறக்கை கட்டிப் பறந்துகொண்டிருக்கின்றன
    சுவரில் மோதிய வண்ணம்
    கசிவைத் தேடியவண்ணம்
    மெல்ல பசியத் தொடங்குகிறது அறை
    புல்வெளியின் மணத்தோடும்
    பசும் குழந்தையொன்றின் பால் மணத்தோடும்
    தெருவோரம் நடப்பவன்
    வீட்டுக்குள்ளே இருந்து
    தெருவில் நடப்பவனைப் பற்றிய
    சித்திரங்களை உருவாக்கி வைத்திருந்தேன்.
    கந்தல் துணியை நிரடியபடி நடந்தபோது
    அவனுக்காக நான் பரிதாபப்பட்டிருந்தேன்
    அக்குள் சொறிந்து முகர்ந்தபோது
    அருவருப்படைந்திருந்தேன்
    ஒன்றுமில்லாத வெளியைப் பார்த்துச் சிரித்தபோது
    ஆச்சரியப்பட்டிருந்தேன்
    இன்று இதோ அவன் வருகிறான்
    இன்றைய சித்திரம்
    அவன் என்னை எப்போதும்போல் பார்த்து
    கடப்பதாக இருக்கிறது.
 
 
1 comment:
// கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
//
படிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?
Post a Comment