Tuesday, August 9, 2011

சமச்சீர்க் கல்வி - இன்று தீர்ப்பு

சமச்சீர் கல்வி தீர்ப்பு இன்று வருகிறது. ஆகஸ்ட் 2, பின்பு 10ம் தேதிக்குள் புத்தகங்கள் தரப்படவேண்டும் என்று சொல்லி இதுவரை தரப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கும் ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. பாடப் புத்தகங்களைத் தரவேண்டும் என்று சொல்லிவிட்டதால் சமச்சீர்க் கல்வி இந்த ஆண்டே வரவேண்டும் என்றுதான் தீர்ப்பு வரும், எதிராக வர வாய்ப்பில்லை.

ஒருவேளை எதிராக வந்து, அடுத்த ஆண்டுமுதல் சம்ச்சீர்க் கல்வி, வேறு புதிய பாடங்களுடன் என்று தீர்ப்பு வந்தால், மகிழ்ச்சி! இல்லை என்றால், பசங்களுக்கு படிக்க எதாவது இப்பவாவது கிடைச்சதே என்னும் வகையிலும் கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியே… 2 மாதங்கள் படிக்காமல் போய்விட்டதால் பசங்க படிப்பே வீணாகப் போச்சு என்று சொல்வதில் கொஞ்சம் உடன்பாடு உண்டுதான் என்றாலும் முழுக்க உடன்பாடில்லை. நான் 8ம் வகுப்பு படித்தபோது 2 மாதங்கள் ஆசிரியர் ஸ்டிரைக் நடந்தது. +2 படித்த போது 2 மாதங்களுக்கும் மேலாக ஸ்டிரைக் நடந்தது. எப்படியோ எதையோ படித்துக்கொண்டிருந்தோம்! பெரிய அளவில் நஷ்டம் நேர்ந்ததாகத் தெரியவில்லை. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் இப்படி 2 மாதங்கள் பள்ளிகள் செயல்படவில்லை என்கிறார்கள். நிச்சயம் இது சரியான வழி அல்ல. குடிமூழ்கிப் போகக்கூடியதும் அல்ல. இந்த இரண்டு மாதங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் இலக்கணத்தை உருப்படியாகக் கற்றுக் கொடுத்திருக்கலாம். பாடங்களைப் படிப்பது எப்படி என்றும், அதனை சுவாரயஸ்மாக அணுகுவது எப்படி என்றும் சொல்லித் தந்திருக்கலாம். இதற்கெல்லாம் பொதுவாக ஆசிரியர்களுக்கு நேரமே இருக்காது. கிடைத்த நேரத்தில் இதனைச் செய்திருக்கலாம். முதலில் இதுவெல்லாம் ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்பதே நம் ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சினை.

இந்த ஆண்டு இதே சமச்சீர்ப் பாடங்கள் என்று தீர்ப்பு வந்தாலும், அடுத்த ஆண்டே இந்தப் பாடங்களை ஜெ. அரசு மாற்றவேண்டும். சமச்சீர்க் கல்வியை வைத்துக்கொண்டு சரியான பாடங்களோடு அதனைக் கொண்டு செல்லவேண்டும். பாடத் திட்டங்களை சரியாக்குகிறோம் என்று இன்னும் மோசமாக ஆக்காமல் இருப்பார்களாக என்று நம்புவோம்!

என்ன தீர்ப்பு வந்தாலும் அதனை ஏற்போம் என்று ஜெ சொல்லியிருப்பது நல்லது. வேறு வழியில்லை என்னும்போது இப்படித்தான் பேசவேண்டும். :-) இதனை ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லத் துவங்கி இருக்கவேண்டும். இதனைச் சொல்லிக்கொண்டே, சமச்சீர்க் கல்வியின்படித் தயாரிக்கப்பட்ட பாடங்களுக்கு எதிரான கருத்துகளை நீதிமன்றத்தில் சொல்லிக்கொண்டிருந்திருக்கவேண்டும். அரசியலை இன்னும் திறமையாகச் செய்யப் பழகவேண்டும் ஜெ. இரண்டாவது முறை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபோதே இந்த ஆண்டே சமச்சீர்க் கல்வியை அரசு செயல்படுத்தும் என்று அரசு முடிவெடுத்திருந்தால், மக்களிடையே எழுந்துள்ள அதிருப்தியைக் கொஞ்சம் தவிர்த்திருந்திருக்கலாம். தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்காடியது நிச்சயம் தவறல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது சரிதான். ஆனால் மக்களின் நிலையையும் கொஞ்சம் கவனத்தில் கொள்வது நல்லது. இனி இது தேவையில்லை. இன்றுதான் தீர்ப்பு வரப்போகிறதே. இந்த தொடர் வழக்கால் மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி ஜெயலலிதாவுக்கு எதிராக மாறும் என்று நான் நம்பவில்லை. பார்க்கலாம்.

தொடர்ந்து வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, அடிக்கடி எதையாவது சொல்லாமல், தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல், மௌனமாக, அதே சமயம் தெளிவாக நீதிமன்றத்தில் மட்டும் அரசு பேசியது நல்ல விஷயம். இதனையே எல்லா விஷயத்திலும் ஜெ கடைப்பிடிக்கவேண்டும். செயல்பாடே முக்கியம் என்னும் விஷயத்தை மக்கள் மனத்தில் பதிய வைக்க யோசிக்கவேண்டும். இல்லையென்றால் ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவார்கள்.

சமச்சீர்க் கல்வி வழக்கு தீர்ப்பு வருவதையொட்டி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துச் சொல்வதா வருத்தங்கள் சொல்வதா என்று தெரியவில்லை என்பதால் என்னவோ ஒண்ணு என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்.

No comments: