Sunday, July 29, 2007

இரு கவிதைகள்

புகைப்படம் எடுத்தல்

மிகுந்த களேரபத்திற்குப் பின்னரே
குடும்பத்தின் புகைப்படம் எடுத்தோம்
ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கும் பாட்டியை
ஐந்து நிமிடம் பேசாமல் இருக்க வைக்க பெரும்பாடு ஆகிவிட்டது
அண்ணியை முதலில் அழைக்கவில்லை என்று அண்ணனுக்கு கோபம்
நம்மை அழைக்கிறார்களா பார்க்கலாம் என்று சிலர்
அப்பா ஃபோட்டோவுக்கு மட்டும் எப்போதும் தயார்
அக்கா அத்தானை சீக்கிரம் வரச்சொல்லி ஃபோன் பேசிக்கொண்டிருந்தாள்
நான் என் மனைவியுடன் எப்போது தனியறைக்கு அனுப்புவார்கள் என காத்துக்கொண்டிருந்தேன்
ஃபோட்டோகிராஃபர் அழகான பெண்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்
ஒருவழியாக ஃபோட்டோவும் எடுத்தார்
படத்தில் அனைவரும் அழகாக, மிக அழகாக, குறிப்பாக இயல்பாக, சிரித்துக்கொண்டிருந்தோம்,
படத்தில் தோற்றம் மறைவு விடுத்து வாழும் நாளின் குறிப்பேற்ற முடியாதது போல.



பேரமைதி

ஒரு கண் விழிப்பில்
தங்கள் வாசல்களை இழந்தன
வீடுகள் அனைத்தும்
தெருக்கள் அனைத்தும் கலையிழந்துவிட்டிருக்க
எந்தக் கோலத்தை எங்கு பொருத்த என்றறியாமல்
சுற்றிக்கொண்டிருந்தன பூனைகள்
திறந்து கிடக்கும் வீடுகள் வெளியிட்ட சத்தங்களில்
பறவைகள் பதறிப் பறக்க
மனித சத்தத்தை அறிந்து
பயந்தன நாய்கள்
நடுங்கிப் போன கடவுள்
கடும் தலைவலியோடு
கதவுகளுக்கு ஆணையிட்டான்
வாசலைப் பொருத்திக் கொள்ள
அந்நொடியில் பேரமையிதில் ஆழ்ந்தது இவ்வுலகம்.

7 comments:

Anonymous said...

ஹரன் ப்ரசன்னா..

புகைப்படம் எடுத்தல்.. நல்ல விதமாய் சூழ்நிலையை விளக்கி இருக்கிறீர்கள்.

//படத்தில் தோற்றம் மறைவு விடுத்து வாழும் நாளின் குறிப்பேற்ற முடியாதது போல.// இதன் அர்த்தம் என்ன???


//நடுங்கிப் போன கடவுள்
கடும் தலைவலியோடு
கதவுகளுக்கு ஆணையிட்டான்
வாசலைப் பொருத்திக் கொள்ள
அந்நொடியில் பேரமையிதில் ஆழ்ந்தது இவ்வுலகம். // மிக அருமையான வரிகள். ஜெயக்குமார்.

ஹரன்பிரசன்னா said...

ஜெயகுமார், கருத்துக்கு நன்றி. விளக்கம் கொடுப்பதைவிட, அர்த்தம் தெரியாத வரிகளைக் கொண்ட கவிதைகளைப் புறக்கணித்துவிடுமாறு சொல்லுவதுதான் எளிது. :)

பிரகாஷ் said...

Ariyaatha onrai ariyum muyatchiye indha manitha vaazhkai matrum nam kalai padaipukal ellam..
Elithaana oru vari bathilai vida (jeyakumar'uku)puriyaatha vaarthaikul irukum ulagathai konjam vilaki irukalaam...

ஹரன்பிரசன்னா said...

பிரகாஷ், அது குமார்க்கும் எனக்கும் நடக்கும் பனிப்போரில் (!) சொன்ன பதில். :)

அதில் புரியாமலிருக்க என்ன இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை என்பதும் ஒரு காரணம்.

உண்மையில் ஒரு புகைப்படத்தில் எளிதாக "தோற்றம்: 1947; மறைவு: 2007" என்று போட்டுவிடுகிறோம். அவரது வாழ்க்கையையும் அத்தோடு மறந்துவிடுகிறோம் என்கிற ஆதங்கத்தின் பேரில் எழுதப்பட்டது. ஒரு கவிதையை விளக்கும்தோறும் அது அலுப்பாகிக்கொண்டே போகிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். நன்றி.

பிரகாஷ் said...

Haran Prasanna,
Unmai.Kavithai enbathu,unarthal-Unarthap paduvathu alla.
Jeyakumar,
Manushyaputhiranin kavithaiyai patriya katturaiyai konjam padi.
Kavithai patriya unathu ulagam innum visaalapadum.

Chandravathanaa said...

இயல்பான அழகான கவிதைகள்.

ஹரன்பிரசன்னா said...

நன்றி சந்திரவதனா.