Sunday, December 2, 2007

இரு கவிதைகள்

பிரதி

முடிக்கும்போது
இருப்பதில்லை
தொடக்கம்

எழுத்து மாறாமல்
பிரதி எடுக்கும்போதுகூட
இரண்டு அ-க்கள்
ஒன்றுபோல் இருக்கவில்லை

வானெங்கும் விரவிக்கிடக்கும்
வெண்பனி அலைந்து
கீழிறங்கும்
பறவையைப் பற்றிய
குறிப்புகளில்
இப்போது
பறவையில்லை,
வெண்பனியில்லை
வானில் அதன் தடங்கள் இல்லை.


விலகி இருத்தல்

அவனைப் பற்றி நினைக்கும்போது
தனிமையில்
எதிரியை
மிக மூர்க்கமாய்
வெய்த மோசமான வார்த்தையும்
அவளைப் பற்றி நினைக்கும்போது
மூக்கைச் சிந்தி
ஏதோ யோசனையில்
சேலையில் துடைத்துக்கொண்ட காட்சியும்
கவனத்தை சிதைக்கிறது நண்ப.
கொஞ்சம் விலகியே இருப்போம்.

1 comment:

பிரகாஷ் said...

பிரதி... அருமை.
நிகழ்வின் கணங்களைக் கைக்குள்
நிறுத்திக் காண்பிக்க முடியா இயலாமை.
ஆனால் முடிவில் கிடைப்பது
மற்றுமொரு புதிய கணம், புதிய நிகழ்வு.புதிய பரிமாணம்.