Monday, October 13, 2008

தமிழ் சினிமா கேள்விகள் - தொடராட்டம்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?

நினைவில்லை. சில சமயம் இப்படி யோசித்திருக்கிறேன். யார் நமக்கு முதலில் ஏதேனும் ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொடுத்திருப்பார்கள் என்று. விடை தெரியாத கேள்வியே இது. நாமாக நினைத்துக்கொள்ளவேண்டியதுதான். பொன்வண்டு என்கிற வார்த்தையை யார் சொல்லிக்கொடுத்தது? நினைவில்லை. அதேபோல் எந்தப் படம் முதலில் பார்த்தேன் என்பதும் நினைவில்லை. ஆனால் என் நினைவில் தெரியும் காட்சி ஒன்று உண்டு என்று நானாக ஒன்றை நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஔவையார் படத்தில் வைக்கோலை யானை கட்டி போரடிக்கும் காட்சி. அந்தக் காட்சியைப் பார்த்தது நான் ஒன்றாம் வகுப்பு பார்த்தபோது இருக்கலாம்.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

சரோஜா - படம் பரவாயில்லை.

3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

விருமாண்டி. நேற்று முன் தினம் கிரண் டிவியில் பார்த்தேன். இளையராஜாவும் கமலும் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கினார்கள். அந்தக் கமல் காணாமல் போனது குறித்து வருத்தம் இருக்கிறது. பின்னணி இசைக்காக இளையராஜாவிற்கு விருது கிடைக்காதது அநியாயம் என்ற நினைப்பு மீண்டுமொருமுறை எழுந்தது. முதல்முறை படம் பார்க்கும்போது ஏற்பட்ட அதே உணர்வுகள் மீண்டும் தலைதூக்கின. ஹே ராம் பாதிப்பில் வரும் ஒன்றிரண்டு காட்சிகள், சமய சந்தர்ப்பம் இல்லாமல் கிரேஸி மோகன் டைப்பில் கமல் அடிக்கும் ஒன்றிரண்டு ஜோக், கடைசியில் படம் கமர்ஷியலாகத் தடம்புரள்வது என... இருந்தாலும் விருமாண்டி நல்ல படம். மிகச்சிறந்த படமாக வந்திருக்கவேண்டியபடம்.


4.மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

ஹேராம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

பாட்ஷா திரைப்பட மேடையில் ரஜினி ஜெயலலிதாவைக் கண்டித்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஏ.ஆர். ரகுமானின் வரவு.

6.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

மிகவும் ஆர்வத்துடன் வாசிப்பேன். விட்டல்ராவின் தமிழ்சினிமாவின் பரிமாணங்கள் ஒரு சிறந்த புத்தகம். செழியனின் பேசும் படம், மகேந்திரனின் நடிப்பு என்னும் கலை, தியடோர் பாஸ்கரனின் எம் தமிழர் செய்த படம், ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், மின்னல் என்ற புனைப்பெயரில் ஒருவர் எழுதிய புத்தகம், சுஜாதாவின் பார்வை 360, இன்னும் பல.

7.தமிழ் சினிமா இசை?

பார்த்திபன் ‘உள்ளே வெளியே' திரைப்படத்தில் இசை @ இளையராஜா என்று டைட்டில் கார்டில் போட்டார். நானும் அக்கட்சிதான். தமிழ் சினிமா இசை @ இளையராஜா.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

கடந்த இரண்டுமூன்று வருடங்களாக நிறையப் பார்க்கிறேன். நல்ல மலையாளப் படங்கள் மிகவும் பிடிக்கும். நிறைய உலகப் படங்களயும் பார்க்கிறேன். தாக்கிய படங்கள் பல. Life is beautiful, பதேர் பாஞ்சாலி, சூரஜ் கா சாத்வன் கோடா, Amistad எனப் பல.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மோசமில்லை.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். என்னதான் பல படங்களைப் பார்த்தாலும், மொக்கையாக இருந்தாலும் தமிழ்ப்படம் பார்க்காமல் இருக்கமுடியுமா என்ன. அதிலும் ரஜினி படத்தை, முதல் நாள் முதல் ஷோவில் பார்க்காமல் என்ன வாழ்க்கை வேண்டியிருக்கிறது. :)) கருணாநிதிக்கும் நேரம் நிறையக் கிடைக்கும் என்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். :)

பதிவு போட அழைத்த சுரேஷ்கண்ணன், ஜெ. ராம்கி ஆகியோருக்கு நன்றி. மோகந்தாஸ் என்னை அழைக்கவில்லை, மிரட்டினார். அதனால் அவருக்கு நன்றி கிடையாது. :P

அழைக்க விரும்புகிறவர்கள் என்கிற column கொஞ்சம் பயமாக இருக்கிறது. தப்பித் தவறி சாருநிவேதிதா என்று எழுதினால், நீ ரஜினிகாந்தைக் கூப்பிட்டியா என்பார் என்பது குறித்த பயம் இருக்கிறது. தமிழ்ப்படங்களைப் பற்றி சாருவிடம் கேட்க கேள்விகள் அதிகம் இல்லை என்பதால் அவரை அழைக்காமல் இருப்பதும் நல்லதுதான். :)

நான் அழைக்க விரும்புகிறவர்கள்:

சந்திரசேகர் கிருஷ்ணன் (இவரது எழுத்து நடை எனக்குப் பிடித்தது என்பதால்.)

சுகா (இவர் திரைப்படத் துறையில் நேரடியாகப் பங்கு பெற்றிருப்பதால்.)

இட்லிவடை (இவர் சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுவதைக் கேட்க விரும்புவதால்.)

ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் (எப்படியும் எழுதப்போவதில்லை என்பதால்.)

சேதுபதி அருணாசலம் (திரைப்படங்கள் பற்றிய ரசனை கொண்டவர் என்பதால்.)

பின்குறிப்பு: இனிமேல் இதுபோன்ற ஆட்டைல சேர்க்காதீங்க சாமி. :)

No comments: