Thursday, January 15, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 07)

பதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

பொங்கலன்று கூட்டம் குவியும் என்கிற நம்பிக்கையும் மெல்ல கரைந்தது. கூட்டம் சுமாராகவே இருந்தது. பெரும்பாலான பதிப்பாளர்கள் கடந்தமுறை நடந்த விற்பனையில் பாதியாவது தாண்டுமா என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஒரு பதிப்பக நண்பர் புத்தகக் கண்காட்சி வைத்த இடம் சரியில்லை என்று சொன்னார். என்று இங்கு வைக்கத் தொடங்கினார்களோ அப்போதிருந்தே விற்பனை இல்லை என்றும் இந்தமுறை கடுமையான விற்பனைச் சரிவு என்றும் அவர் சொன்னார். இன்னொரு பதிப்பகத் தோழர் பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலியே இது என்றார். எப்படி இருந்தாலும், கூட்டம் குறைவாக இருந்தது என்பதுதான் விஷயம். மாலை நான்கு மணிக்கு மேல் கொஞ்சம் கூட்டம் வரத் தொடங்கியது.

நேற்று நான் சில தமிழ் பதிப்பக அரங்குகளைச் சுற்றிப் பார்த்தேன். சில புத்தகங்களைப் பார்த்தேன். சில புத்தகங்களைக் குறித்து வைத்துக்கொண்டேன். சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றின் பட்டியல்.

வாங்கியவை:

பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும் – நா.வானமாமலை - அலைகள்
காந்தியின் உடலரசியல் – ராமாநுஜம் – கருப்புப் பிரதிகள்
ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா – உயிர்மை
ஊமைச் செந்நாய் – ஜெயமோகன் – உயிர்மை
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா – உயிர்மை
உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன் – வம்சி
எனது இந்தியா – ஜிம் கார்பெட் – காலச்சுவடு
பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன் – காலச்சுவடு
வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் – திருச்செந்தாழை – காலச்சுவடு

குறித்து வைத்துக்கொண்டவை:

உறவுகள் – எஸ். பொ. – மித்ர வெளியீடு
உலகை உலுக்கிய திரைப்படங்கள். – போதி வெளியீடு
மும்பை 26/11 – வினவு – பதிப்பகம் நினைவில்லை
மூன்றாம் பாலின் முகம் – பிரியா பாபு – சந்தியா
ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் – சந்தியா
உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ.முத்துலிங்கம் – உயிர்மை
அங்கிள் சாமுக்கு மண்டோ கடிதங்கள் – பயணி வெளியீடு
சாதத் ஹஸன் மண்டோ படைப்புகள் – புலம் வெளியீடு
சிறுவர் சினிமா பாகம் 2 – விஸ்வாமித்ரா – வம்சி வெளியீடு
தவளைகள் குதிக்கும் வயிறு – வா.மு. கோமு – உயிரெழுத்து

இன்று நேரமிருந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு மேலும் சில புத்தகங்களை உள்ளிடுகிறேன்.

புத்தகக் கண்காட்சி நிறைவடையும் தருவாயில் திடீரென்று ஒலிபெருக்கியில் ‘ஃபயர் சர்வீஸ் உடனே வரவும்’ என்று நான்கைந்து முறை பதட்டத்துடன் அறிவித்தார்கள். அரங்கத்தில் இருந்த மக்கள் அனைவரும் பதட்டமடைந்து வெளிவாயிலுக்கு ஓட, சிறிய பதட்டம் தொற்றிக்கொண்டது. பின்பு காந்தி கண்ணதாசன் ஒலிபெருக்கியில் ‘சிறு சார்ட் சர்க்யூட் மட்டுமே என்றும் அதனால் பதட்டப்பட ஒன்றுமில்லை’ என்று அறிவித்தபின்பே கூட்டம் அமைதியானது. தேவையான பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் சிறிய சார்ட் சர்க்யூட்டுக்கு முதலில் இப்படி மைக்கில் அலறாமல் இருந்தால் இந்த சிறிய பதட்டத்தையும் தவிர்த்திருக்கமுடியும். இதை காந்தி கண்ணதாசனும் ஒலிபெருக்கியில் சொன்னார்.


இன்றைய புத்தகக் கண்காட்சியில் இப்போது இருக்கிறேன். அங்கிருந்தபடியே இப்பதிவை உள்ளிடுகிறேன். கூட்டம் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் பதிப்பாளர்களை இன்று எப்படி காப்பாற்றுகிறது என்று பார்க்கலாம்.

2 comments:

Krishnan said...

Following you posts on ongoing book fair religiously. Yes it is a pity that book fair is not attracting crowds in large numbers. BAPASI has its work cut out next time if this scenario is not to recur again. Wide publicity in visual and print media is very much needed. It has to lobby the government to make good transport arrangements to the venue. All said and done, movies and television takes primacy over all in our "enlightened state".

குவாட்டர் கோயிந்தன் said...

அங்கே எங்களுக்கெல்லாம் ஒரு ஸ்தாலும் இல்லையே......?