Friday, January 16, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 08)

பதிவுவகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

நேற்றுமுந்தினம் போலவே நேற்றும் கூட்டம் இருந்தது. விடுமுறைக்கான கடும் கூட்டம் இன்னும் வரவில்லை. சென்ற ஞாயிறன்று இருந்த கூட்டத்தைப்போல் இதுவரை கூட்டம் வரவில்லை. இன்னும் மீதமிருக்கும் மூன்று நாள்களில் ஏதேனும் ஒருநாளில் அந்த அதிகபட்ச கூட்டத்தை புத்தகக் கண்காட்சி காணும் என்று நினைக்கிறேன். அது பெரும்பாலும் வரும் ஞாயிறாக இருக்கலாம்.

நேற்று காலையில் மந்தமாகத் தொடங்கிய புத்தகக் கண்காட்சி நான்கு மணிக்குப் பின்பு பரபரப்பாகியது. மக்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். இந்த முறை சொதப்பியது, புத்தகக் கண்காட்சி அரங்கித்துக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும் உணவு அரங்குகள். அங்கு மக்கள் தேங்கிவிடுகிறார்கள். அவர்கள் மற்ற பதிப்பகத்திற்குள் செல்லுவதில்லை. அல்லது அங்கேயே கண்ணில் படும் அரங்குக்குள் மட்டுமே சென்றுவிட்டு மற்ற அரங்குகளைப் பார்க்காமல் போயிவிடுகிறார்கள். இந்த உணவு அரங்குகளை அடுத்தமுறை கண்காட்சி அரங்குக்குள் வைக்காமல் தனியே வெளியே வைக்கவேண்டும். குறைந்தபட்சம், அங்கு நடக்கமுடியாமல் அவதிப்படும் வாசகர்களுக்காவது நன்மையை உண்டாக்கும். என்னென்ன உணவு விடுதிகள் இருக்கின்றன? வடை, பஜ்ஜி, போண்டா விற்கும் உணவகம், ஐஸ்கிரீம் விற்கும் உணவகம், காஃபி, தேநீர்க் கடை, பழங்கள் விற்கும் உணவு அரங்கு, பழச்சாறு கடை, முந்திரிப்பருப்பு, கடலைப்பருப்பு விற்கும் கடை – இத்தனையையும் மீறி ஒரு வாசகன் ஒரு புத்தகத்தைக் கண்டடையவேண்டும். மனதில் உறுதி வேண்டும்.

புனித வியாழன். தோழர் வ்ந்திருந்தார். உடனே சென்று கைகுலுக்கிப் பேசலாம் என்றால், தீவிரமாக கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். அவர் கை வலித்து ஓய்ந்ததும், மெல்ல அருகில் சென்று ‘ஸ்டாலினியப் படுகொலைகள்’ புத்தகம் எங்கே கிடைக்கும் என்றேன். ‘தமிழினில போட்டிருக்காங்க. பின் தொடரும் நிழலின் குரல்ன்ற பேர்ல வந்திருக்கு’ என்றார்.
நிறையப் பேர் பாராவைத் தேடினார்கள். மாயவலியில் அவர் இருப்பதைச் சொன்னேன்.

இன்று தினமலரில் எப்போதும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும் அரங்கு என்று இரண்டு அரங்குகளைப் பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒன்று, உயிர்மை பதிப்பக அரங்கு. மற்றொன்று, மணிமேகலைப் பிரசுரம். மனுஷ்யபுத்திரன் இதற்கெல்லாம் மனமுடைந்துவிடுபவர் அல்ல என்பது என் திண்ணம்.

நேற்று சில பதிப்பகங்களைப் பார்வையிட்டேன். புலம் என்கிற பெயரில் பதிப்பகத்தை ஆரம்பித்திருப்பவர் நண்பர் லோகநாதன். காலச்சுவடில் இருந்தவர். நல்ல உழைப்பாளி. புத்தகம் பதிப்பிக்கும் துறையில் பல நுணுக்கங்கள் அறிந்தவர். அட்டையில் ஒரு சில இடங்கள் மட்டும் மேடாக இருப்பது, சில இடங்கள் மின்னும் நிறத்தில் இருப்பது என்பன போன்ற சில நுணுக்கங்களில் (இவை ஏற்கெனவே வந்தவைதான் என்றாலும்) புத்தகம் வந்தால் அவற்றின் நோக்குத்தரம் எவ்வளவு உயர்வாக இருக்கும் என்பதை உணர்ந்து அதை செயல்படுத்தியவர்.

நேற்று கண்ணில் பட்ட, கவனத்தை ஈர்த்த மேலும் சில புத்தகங்கள்.

அஞ்சுவண்ணம் தெரு, கூனன் தோப்பு – தோப்பில் முகமது மீரான் - அடையாளம்
மஹாகவியின் ஆறு காவியங்கள் – தொகுப்பு: எம்.ஏ. நுஃமான் - அடையாளம்
இலங்கையில் சமாதானம் பேசுதல் - அடையாளம்
புத்தம் அருள் அறம் – ஜி.அப்பாத்துரை – ஆழி

நண்பர் விஜய மகேந்திரன் வ்ந்திருந்தார். தோழமை பதிபக்கத்தின் வெளியீடாக வரவிருக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் எனது ஒரு சிறுகதையும் இடம்பெறுகிறது. அப்புத்தகத்தை வாங்க நாற்பது, ஐம்பது பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னேன். கடும் அதிர்ச்சியுடன் சிரித்தார். தமிழினி மணி, ’புத்தகச் சந்தைக்கு இத்தனை பெரிய இக்கட்டு வருமென்று நினைக்கவில்லை’ என்றார்!

பின்குறிப்பு: இதை இப்போது புத்தகக் கண்காட்சியில் இருந்து உள்ளிடுகிறேன். ஓர் அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘முக்கிய அறிவிப்பு. வாசகர் ஒருவர் தங்கள் புத்தகங்களோடு சேர்த்து பில்புக்கையும் சேர்த்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். தங்கள் புத்தகங்களை வாசகர்கள் சரி பார்த்து, பில் புக் இருந்தால் உடனடியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.’ தொடர்ந்து பில் போட்டுக்கொண்டே இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது என்பதுதான் இதன் நீதி என்க.

No comments: