Sunday, June 13, 2010

பார்த்ததில் ஈர்த்தது - 13-ஜூன்-2010

படித்ததில் பிடித்தது என்று வைத்து யாராவது காப்பிரைட் கேஸ் போட்டால் என்னாவது என்பதால் பார்த்ததில் ஈர்த்தது என்று நாடகத்தனமாக வைத்துவிட்டேன். படித்ததை எப்படி பார்த்தது என்று சொல்லலாம் என்னும் பொருள் சார்ந்த தமிழ்ச்சண்டைகள் வரவேற்கப்படுகின்றன.

முன்பிலிருந்தே வாசிப்பதில் நம்மைக் கவருவதைத் தரவேண்டும் என நினைத்துக்கொள்வேன். இனியாவது சாத்தியமாகுமா எனப் பார்க்கலாம். உடனே மிரளவேண்டாம், அதற்காக நானே ஒரு வலைப்பதிவை எழுதி பார்த்ததில் ஈர்த்தது என்றெல்லாம் எழுதமாட்டேன்!

13-ஜூன்-2010 தேதியிட்ட கல்கியில் இந்திரா பார்த்தசாரதி, இளமைப்பாலம் பகுதியில்...

“வள்ளுவர் ‘பிறருக்கு புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்” என்று சொல்லவில்லை. வள்ளுவ உள்ளத்தை நன்கறிந்த பரிமேலழகர் ‘பிறருக்கு’ என்ற சொல்லை வருவித்துக் கொள்கிறார். வள்ளுவத்தைப் பரிமேலழகரைக் காட்டிலும் நன்கறிந்தவர்களாகக் காட்டிக்கொள்ளும் இக்காலத்திய அரசியல்வாதிகள், ‘தமக்கும் தம் உறவினர்க்கும்’ என்ற சொற்களை வரவழைத்துக்கொண்டு இக்குறளுக்குப் பொருள் சொல்லக்கூடும். ‘தமக்கும் தம் உற்றார் உறவினர்க்கும் புரைதீர்ந்த அரசியல், பொருளாதாரப் பலன்களைத் தருமாயின், நாம் சொல்லுகின்ற பொய்கள் அனைத்தும் சத்தியவாக்கு என்பதில் சந்தேகமேயில்லை’ என்பது இக்காலத்துப் பொருள்.


16-ஜூன்-2010 தேதியிட்ட துக்ளக் கேள்வி பதிலில் சோ...

கே: ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் சீன விஜயம், இந்தியாவுக்கு நன்மை பயக்குமா?

ப: ஒரு ஜனாதிபதி சில தினங்கள் நாட்டில் இல்லை என்பது, நாட்டிற்குப் பெரிய நன்மை என்று சொல்லிவிட முடியுமா என்ன? நான் அப்படி நினைக்கவில்லை.


அம்ருதா மே 2010 இதழில் ஆனைமுத்துவின் நேர்காணலில் இருந்து...

1973 செப்டெம்பரில் அவருக்கும் (பெரியாருக்கும்) எனக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றி ஒரு நீண்ட வாக்குவாதக். ‘நாம இந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டும்’ என்பது அவருடைய கோரிக்கை. ‘நாம் வெளியேற முடியாது’ என்பது என் கருத்து. நான் கேட்டேன்: ‘அய்யா! வெளியேறணும்னு சொல்றீங்களே! வெளியேறிய பிறகு, உங்களுக்கு என்ன பெயர்?’ ‘பகுத்தறிவாளன்னு நான் வச்சுக்குவேன்’ என்றார் அவர். ‘ஆனா, பகுத்தறிவாளன்னு சொன்னாக்கூட இந்து இல்லைன்னு யார் சொன்னா உங்களை?’ என்றேன் நான். ‘அப்படி இல்லியா?’ என்றார் அவர். ‘இல்லியே! பகுத்தறிவாளன்னு சொன்னாலும் அப்புறமும் இந்துதான்’ என்றேன் நான். ‘அப்போ, நாத்திகன்னு சொல்லிட்டா?’ என்றார் பெரியார். ‘நீங்க நாத்திகன்னு சொல்லிட்டாலும், அப்பவும் நீங்கள் இந்துதான்.’ - இதுதான்.

உடனே பெரியார், ‘நான் நாத்திகன்னு சொல்லி, கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியாவுல நோட்டிஃபை பண்ணிட்டா?’ என்றார். ‘அய்யா நீங்க நெத்தியில நாத்திக்கன்னு பச்சை குத்திக்கிட்டாலும், அப்போதும் இந்துவாகப் பிறந்த நீங்கள் இந்து மதத்தைவிட்டு மாறாத வரையில் நீங்கள் இந்துதான். அதை நீங்கள் மாற்றவே முடியாது. பெயர் என்னவேண்டுமானாலும் இருக்கலாம். அதைப் பற்றிக் கவலை இல்லை என்று சொன்னேன். ‘சட்டத்துல அப்படி இருக்குதா?’ என்று கேட்டார். ‘ஆமா’ என்று நான் பதில் சொன்னேன்.

நீங்கள் சிலையை உடைத்தாலும் இந்துதான். பார்ப்பானை உதைச்சாலும், அடிச்சாலும், வாடா போடான்னு சொன்னாலும் இந்துதான். உதாரணமாக உங்கள் அப்பா இருக்கிறார். நீங்கள் உங்கள் அப்பாவை மதிக்கவில்லை. அடிக்கிறீர்கள், திட்டுகிறீர்கள், மீறி நடக்கிறீர்கள். அப்போது மகன் இல்லை என்று ஆகிவிடுமா? மகன், மகந்தானே. ‘என்னை திட்டுகிறான், அடிக்கிறான், உதைக்கிறான், குடிக்கிறான், அவனுக்கு சொத்து குடுக்க முடியாது’ என்று சொல்லமுடியுமா? கொடுத்துத்தான் ஆகவேண்டும். அவன் என்னவாக இருந்தாலும் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இதையெல்லாம் நான் அவரிடம் சொல்லவில்லை, உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்போது பெரியார் கேட்டார். ‘முஸ்லீமா மாறிட்டா?’ நான் உடனே சொன்னேன்: ‘நீங்க 1924லேர்ந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க, எத்தனை பேரு மாறினான்? ஏன் மாறலை? அது இயற்கை இல்லை, செயற்கை. பொறந்த மதத்தைவிட்டு எவனும் போகமாட்டான்யா!’ என்று சொன்னேன். உடனே அவர், ‘கிறித்துவனா மாறிட்டா?’ என்று கேட்டார். நான் சொன்னேன்: ‘நம்ம ஊர்லல்லாம் பாப்பார கிறித்துவன், வெள்ளால கிறித்தவன், படையச்சி கிறித்தவன்னு நிறைய பேரு இருக்காங்களே! எங்க ஊர்ல ஒரு தொகுதியில படையாச்சி கிறித்தவன் தேர்தல்ல சின்னாத்தான் ஜெயிக்க முடியும். அவ்வளவு கிறித்தவன் இருக்கான். அவங்களெல்லாம் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால கிறித்துவங்களா மாறினவங்க. அதனால, ‘இங்க எல்லாவித ஜாதிலயும் கிறித்தவங்க இருக்காங்கய்யா!’ என்று சொன்னேன். ‘ஆமாம்ப்பா, இப்பதாம்ப்பா புரியுது’ என்று சொல்லிவிட்டு, என்ன சொன்னாரென்றால், ‘இவ்வளவையும் நம ரெண்டு பேரும் சேர்ந்து ஊர் பூரா சொல்லிடணும்’ என்றார்.



ஜூன் 2010 அமுதசுரபி இதழில், கிரேஸி மோகன் ரமணாயணம் என்னும் தலைப்பில் வெண்பாவில் ரமணரின் கதையை எழுதப் போகிறார் எனா அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில் வெளியாகியிருந்த சில சாம்பிள் வெண்பாக்கள்.

திருவா திரையில் திருச்சுழி ஊரில்
கருவாய் அழகம்மை கர்ப்பம் - உருவாய்
பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
பிறந்து துறந்தார் பிறப்பு

சகாவான அப்துல் வகாபுடன் சேர்ந்து
சகோதரன் போலூரைச் சுற்றும் - மகானிவன்
அத்தனை ஜீவனும் ஆன்மன்தான் என்றுரைக்க
ஒத்திகை பார்ப்பான் உணர்ந்து

செப்புக் கரங்களால் சித்தி இடப்போகும்
அப்பளத்து மாவை அவன் தொட - உப்பலாய்
பொங்கிப் பொரிந்திடுமாம் வெங்கட ராமனை
தங்கைக் கை என்பர் துதித்து!


இன்னும் என்ன என்ன வருமோ. என் பதிவைச் சொன்னேன்!


2 comments:

kannan said...

நினைவில் நின்றது...ஓகே..இல்லை நீங்கள் எழுதியது போல ...பார்த்ததில் ...பிடித்தது ..என்று தானே இருக்க வேண்டும்...இன்னும் சுவராசியமனதை ...எழுதுங்கள்...இன்னும் ராமாயணம்..மகாபாரதம்...என அதிய சுற்றி..சுற்றி வரதிர்கள்...

ப்ளிஸ் said...

ஒன்றின்றி வேறில்லை என உணர்
அமுதம் மொழிந்தார்
கண்டறிந்த ரமணர்

மொழிந்த அமுதத்தை மூடிவிட்டு
மொழிந்தவரைக் கருவரையேற்றி
நீ வேறு நான் வேறு என
நித்யப்படி பூஜை