Tuesday, June 22, 2010

பார்த்ததில் ஈர்த்தது - 22 ஜூன் 2010

செம்மொழி மாநாட்டுச் சிறப்பிதழாக வந்து குவிந்திருக்கும் பெரும்பாலான பத்திரிகைகளில் கருணாநிதிக்கு வீசப்படும் சாமரமே முதலாவதாக உள்ளன. ஜனநாயக முறைப்படி, எனக்குப் பிடித்த செய்திகளை மட்டும் இங்கே தருகிறேன். சாமரம் வீச ஆயிரம் பேர் உள்ளபோது, முக்கி முனகித் தவிக்கும் குரலை வெளிப்படுத்துவதுதான் என் ஜனநாயகம். (இன்னும் வாசிக்காத இதழ்களில் வருபவற்றை நான் பார்க்க நேர்ந்து அவை என்னை ஈர்க்க நேர்ந்தால் அவற்றையும் பகிர்ந்துகொள்வேன்.) செம்மொழி மாநாட்டோடு தொடர்பில்லாத செய்திகள் கூட வரலாம். சும்மா இருப்பவர்கள் படித்து வைக்கவும்.

இப்படி பார்த்ததில் ஈர்த்தது வரிசையாக போரடித்தால் பின்னூட்டத்தில் சொல்லவும். நிறையப் பேர் அக்கப்போர் என்று சொன்னால், இன்னும் தீவிரமாகத் தொடர ஏதுவாக இருக்கும்.

வழக்கம்போல அங்கிருந்து இங்கிருந்து என சீரில்லாமல் எடுக்கப்பட்டது. தொடர்ச்சி இருக்காது.

துக்ளக் இதழில் வந்தது:

தமிழின் பெயரால் வீண் செலவு!
-என். முருகன் ஐ.ஏ.எஸ்.(ஓய்வு)

...சினிமாத் துறையினருக்கு நிலம் வழங்குவது சட்டப்படி தவறு என்று நான் கட்டிக் காட்டியிருந்தேன். அரசு நிலங்கள் பொது நன்மைக்காக ஒதுக்கப்படலாம். ஆனால் 'ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு, விலை உயர்ந்த நிலத்தை, மிகக் குறைந்த கட்டணத்திற்கு நீண்ட காலக் குத்தகைக்கு விடுவது, பொது நன்மை ஆகாது' என்பது சுட்டிக்காட்டப்பட்ட பின்னரும், நமது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் விலை உயர்ந்த நிலத்தை அரசு வழங்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது.

...செம்மொழி மாநாட்டிற்கான ஒரு பாடலை எழுதி, இசையமைக்கச் செய்து, அந்தப் பாடலை இரவெல்லாம் கண் விழித்து கேட்டுக் கொண்டிருந்ததாக முதல்வர் அப்பாடல் வெளியீட்டு விழாவில் அறிவிக்கின்றார். இதுபோன்ற விழாக்களில் எல்லா அமைச்சர்களும் ஆஜர். இப்படி இருந்தால், அரசு வேலைகள் எப்படி நடக்கும்? அரசின் கோப்புகளை பார்க்க முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நேரம் இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறதே!

...சோழ மன்னர்களின் காலத்தில் இருந்தது போன்ற தர்பார் அரங்கு, கேரளா ராஜஸ்தான் மற்றும் தஞ்சாவூரிலிருந்து வந்த வல்லுநர்களால் வெல்வெட்டுத் துணிகள் வைத்து உருவாக்கப்படுகின்றன. வெளிநாட்டு தமிழ் ஆராய்ச்சியாளர்களின் தரமான ஆய்வுக் கட்டுரைகளை புரிந்துக் கொள்ளும் தகுதி உடையவர்களை மட்டும் வைத்து, இந்த செம்மொழி மாநாட்டை நடத்த ஒரு கல்யாண மண்டபம் அளவிலான குளிர்சாதன வசதியுடைய மண்டபமே போதும்....

இந்தச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதால் தமிழ் வளரும் என்ற ஒரு பிரச்சாரமும், தமிழர்களுக்கு பெருமை என்ற கருத்தும் பல பொதுக்கூட்டங்களில் எடுத்துரைக்கப்படுகின்றன. ஆனால், எங்களில் நிறைய பேர் தமிழ் வளர்ச்சிக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் - இந்த மாநாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே நினைக்கிறோம்.

...தமிழை மற்றவர்களின் மீது திணிப்பது சரியல்ல. அதைவிடவும் தமிழார்வம் மிக்க தலைவர் ஒருவர் அரசியலில் சேர்ந்து வெற்றி பெற்று பதவிக்கு வந்தால், அதற்காக அவர் பட்ஜெட் பணத்தை தமிழின் பெயரால் வீணடிப்பது மிகவும் தவறு. எனக்கு டென்னிஸ் விளையாட்டு மிகவும் பிடிக்கும். காலத்தின் கோலத்தினால் நான் ஒரு மாநிலத்தின் முதல்வராகிவிட்டால், ராட்லேவர், போர்ஃப், ஃ¦ப்டரர், ரால்ஃப் நடால்... போன்ற டென்னிஸ் வீரர்களுக்கு எல்லாம் சிலை வைத்து, டென்னிஸ் பற்றிய கருத்தரங்கங்கள், மாநாடுகள், விழாக்கள் போன்றவற்றை பொதுப் பணத்தில் நடத்துவது எவ்வளவு தவறோ, அதுபோன்ற தவறுதான் தற்போது தமிழ் மொழியின் பெயரால் மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவதும் ஆகும்!

துக்ளக் இதழில் வந்த துர்வாசரின் கட்டுரை. துர்வாசர் என்ற பெயரில் முன்பு வண்ண நிலவன் எழுதி வந்தார். இப்போது யார் எழுதிகிறார்கள் எனத் தெரியவில்லை.

செம்மொழி மாநாட்டுக்கு ஏன் விடுமுறை?
-துர்வாசர்

வள்ளுவர் கோட்டம், கண்ணகி கோட்டம், மிக உயரமான வள்ளுவர் சிலை... இவற்றால் தமிழ் மொழிக்கு என்ன லாபம்? இந்தப் போலியான தமிழ் படாடோபங்களால், தமிழரின் பண்பாட்டை ஒரே நாளில் உலகம் அறிந்துவிட்டதா? தி.மு.க.வுக்கு வேண்டிய கான்ட்ராக்டர்கள் பயன் அடைந்ததைத் தவிர, இவற்றால் யாருக்கு என்ன பலன் கிடைத்தது...? வள்ளுவர் கோட்டம், கூட்டம் நடத்துகிற ஹாலாகப் பயன்படுகிறது, கண்ணகி கோட்டம் தூங்கி வழிகிறது. குமரிமுனை வள்ளுவர் சிலை உப்புக் காற்றில் செய்வதறியாது நிற்கிறது.

செம்மொழி மாநாட்டைக் கண்டு களித்தே தீருவோம் என்று பெற்றோர்களோ, மாணவர்களோ விடுமுறை கேட்டார்களா?...

...உலக தமிழ் மாநாட்டுக்கு மாணவர்களும், பொதுமக்களும் ரயிலேறி வரத் தயாராக இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு, தமிழகம் பூராவிலுமுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடுவானேன்? அதுவும் ஒரு நாளல்ல, மூன்று நாட்கள் விடுமுறை. இந்த நாட்களில் நடந்திருக்க வேண்டிய பாடங்களை கருணாநிதியா வந்து நடத்தப்போகிறார்?

கல்கி இதழில் கருணாநிதியின் கட்டுரை ஒன்றைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். கல்கியுமா என நினைத்துப் புரட்டினால், அதே இதழில் வெளிவந்துள்ள பிரபஞ்சனின் முக்கியமான கட்டுரை கண்ணில் பட்டது. இரண்டையுமே கல்கி வெளியிட்டிருப்பது ஆச்சரியம்தான். பிரபஞ்சனின் கருத்துகளோடும், அரசியலோடும் உடன்படாதவன் என்றாலும், இந்த அவரது நிலைப்பாடு என் அரசியலோடு ஒத்துப்போகிறது! கடைசி வரியில் கொஞ்சம் சிரிப்பு வந்தால் மட்டும் அடக்கிக்கொள்ளுங்கள். கல்கி இதழைக் காசு கொடுத்து வாங்கி, பிரபஞ்சனின் முழுக்கட்டுரையையும் நிச்சயம் வாசியுங்கள்.

இருக்கும் நூறு; இல்லாத ஆயிரம்.
-பிரபஞ்சன்

திராவிட இயக்கமும் அதன் அரசும் தமிழ்நாட்டில் தமிழ் உணர்ச்சியை ஏற்படுத்தின என்பது உண்மைதான். இந்த உணர்ச்சி வளர்ச்சியை நோக்கித் திருப்பிவிடப்பட்டதா என்றால் இல்லை. ஒரு மொழி, வெறும் உணர்ச்சியால் வளர்ந்து விடாது. அப்படி வளர்ந்ததாக வரலாறும் இல்லை...

...இந்த லட்சியத்தை நோக்கி, நடக்கவிருக்கும் உலகச் செம்மொழி மாநாடு செயல்பட வேண்டும் என்பதே என் உள்ளார்ந்த விருப்பம். வெறும் உணர்ச்சிக் குப்பைகள், கனக விசயரின் தலையில் கல் சுமக்க வைத்த பழங்கற்பனைகள். கூட்டம், கூட்டம் பார்க்க வந்த கூட்டம், ரங்கராட்டினம், சோடா, கலர், சுண்டல், கண்காட்சி, ஊர்வலம், அவிழ்த்துவிட்ட கண்ணகியின் கூந்தல் - இவை எதுவும் தமிழை வளர்த்துவிடாது. தமிழ் வளர்ச்சி என்பது வேறு....

...தமிழ் இனத்துக்கும் மொழிக்கும் ஒரு முழுமையான, முறையான, அறிவியல் சார்ந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறதா, இன்று வரை?...

...கல்வெட்டுகளைப் படி எடுத்து மக்கள் அறிஞர்கள் பார்வைக்கும் முயற்சிகள் ஏதேனும் நடந்திருக்கின்றனவா?ஏன் இல்லை? அதுபோலவே செப்போடுகளும்.

...குமரி, நெல்லை, மதுரை தொடங்கி முக்கிய ஊர்களின் வரலாறு எழுதப்பட வேண்டும்....

...கடந்த 20 ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்ற எந்த ஆசிரியரது படைப்பும் முழுமையாகத் தமிழில் வரவில்லை.

...1960-களில் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கிலம் - தமிழ், அகராதிகளுக்குப் பிறகு, இத்துறையில் தமிழின் இன்றைய வளர்ச்சியைக் கணக்கில் கொண்ட என்ற அகராதி முயற்சியும் அரசு தரப்பில் செய்யப்படவில்லை.

...தமிழில் முன்னரே உள்ள சிறப்புகள் அல்ல பிரச்னை. இல்லாத சிறப்புகளே நம் கவனத்தில் கொள்ள வேண்டியவை. தமிழில் உள்ளவை சில நூறுகள். இல்லாதவை பல ஆயிரங்கள். நாம் கவலைப்படுவது இந்த இல்லாமைக்காகத்தான். அறிவாளர்கள் இந்த இன்மைகள் பற்றி, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதிகாரத்தை நோக்கி உண்மை பேசுபவர்களே உண்மையான அறிவாளிகள்.

நான் வேண்டுமென்றே கருணாநிதிக்கு எதிரான கருத்துகளை மட்டும் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று சந்தேகப் படாதீர்கள். சந்தேகமே வேண்டாம், அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன், செய்யப் போகிறேன். ஒரு நண்பர் கிண்டலாக அடிக்கடிச் சொல்வார், கண்ணை மூடிக்கொண்டு கருணாநிதிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தாலே போதும், அது சரியாகத்தான் இருக்கும் என்று. அவரை இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

1996ல் ஜெயலலிதாவின் ஆடம்பரத்தின், தற்புகழ்ச்சியின் மீதிருந்த அதே வெறுப்பும், எரிச்சலும், குமட்டலும் இப்போது தமிழ்ச்செம்மொழி மாநாட்டினால் மீண்டும் வருகிறது - இலக்கு மாறியபடி.

1 comment:

Raj Chandra said...

பேசாம ஏதாவது ஒரு புது கவிதையைப் செம்மொழி மாநாட்டில் படிக்க வச்சுருங்க...வந்தவன் கதறிக்கிட்டு ஓடிடுவான்...மாநாடும் தோல்வியில் முடிஞ்சுடும் ;)