Saturday, June 19, 2010

ராவணன் - சில குறிப்புகள்

ராவணன் திரைப்படம் குறித்த என கருத்துங்கள் இங்கே.

நன்றி: இட்லிவடை.

* ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பார்கள். திடீரென்று இன்றே படம் பார்க்க நினைக்க வைத்த ஊழ்வினை, டிக்கெட் கிடைக்க வைத்து, படம் பார்க்க வைத்து ஊட்டிவிட்டது.

* எதையும் வெளிப்படையாக வெளியில் சொல்லாமல், படம் எடுத்து அனைவரையும் ஏமாற்ற நினைக்கும் மணி ரத்னத்தின் ஏமாற்று வேலை இதிலும் தொடர்கிறது. படத்தின் ஆரம்பித்திலேயே சொல்கிறார்கள் - இதில் வரும் சம்பவம் யாரையும் குறிப்பிடுவன அல்லவாம். தைரியமிருந்தால் வெளிப்படையாகச் சொல்லிப் படம் எடுக்கவேண்டும். வெளியில் சொன்னால் அராஜகம் செய்வார்கள் என்று மணி ரத்னம் சொல்ல வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒரு தடவை கூட அவர் பொதுவில் உண்மையைச் சொல்லிப் படம் எடுத்ததில்லை. இருவர் படத்துக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னவர் மணி ரத்னம். தளபதி கதைக்கு மகாபாரதத்துக்கு நன்றி கார்டு போடாதவர். இதில் ராமாயணத்துக்கும் நன்றி கார்டு போடாமல் விட்டுவிட்டார்.


* கார்த்திக்கை அனுமாருக்கு இணையாகக் காட்ட, முதல் காட்சியிலேயே கார்த்திக்கை குரங்கு போல தவ்வ வைத்தது ‘அட்டகாசமான யுத்தி.’ கார்த்திக்கும் கடைசி வரை தனது குரங்குச் சேட்டையை நடிப்புதான் என்று நம்பி செய்துகொண்டே இருக்கிறார். அதிலும் சீதை ஒரு மரத்தடியில் இருக்கும்போதே மேலே இருந்து அனுமார் பேசும் காட்சி நகைச்சுவையின் உச்சக்கட்டம். அந்த அனுமார்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்.

* சீதை உலக அழகி என்பதற்காக கிழவி ஆன பிறகும் நடித்துக்கொண்டே இருந்தால் எப்படி? சீதையானாலும் கிழவி அல்லவா! ஒரு சில காட்சிகளில் சரோஜாதேவி போலத் தெரிந்து பல பெரிசுகளின் உயிரை எடுக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

* தமிழ் பேசினால் நடிக்க வராது என்பதை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

* நடிகர்களின் முகத்துக்கு அருகில் க்ளோஸ் அப் காட்சி வைத்து போரடித்துப் போன மணி ரத்னம், மூக்கு காது கண் என ஒவ்வொன்றுக்கும் க்ளோஸ் அப் காட்சிகள் வைத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்.

* வசனம் பாதி புரியவில்லை, மீதி கேட்கவில்லை.

* சுஹாசினி ஜெயா டிவியில் பேசுவது போலவே நினைத்துக்கொண்டு தனது இண்டலக்சுவல் பேத்தலை வசனமாகக் கொட்டியிருக்கிறார். இது மணி ரத்னத்துக்கும் பிடித்துப் போன விஷயம் என்பதால் பல இடங்களில் வசனங்கள் பல்லை இழித்துக்கொண்டு நிற்கின்றன.

* திடீர் திடீரென மேட்டுக் குடி என்றெல்லாம் வசனம் வருகிறது. ராமாயணம் வழியே தொழிற்சங்க வசனம் எழுதிப் பார்த்திருக்கிறாரோ என்னவோ. கார்டு போடும்போது நன்றி ரிலையன்ஸ் என்றும் அம்பானி என்றும் போடுகிறார்கள். ஓங்குக முதலாளிகளாகப் பார்த்து நடத்தும் தொழிற்புரட்சி.

* படம் முழுக்க அருவியின் இரைச்சல். கூடவே ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை இரைச்சல். யாரோ ஒரு பெண்மணி கடைசி வரை படம் முழுக்க ஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ எனக் கத்திக்கொண்டே இருக்கிறார். பணம் செட்டில் செய்யவில்லையோ என்னவோ. இசைப்புயலாக நுழைந்த போது சின்ன வயசு என்றார்கள். எத்தனை அனுபவம் வந்தாலும் பின்னணி இசையில் இன்னும் சின்ன வயசாகவே அவர் இருப்பது கொஞ்சம் ஓவர்.

* ஒரே ஒரு உருப்படியான பாடலை தேவையற்ற இடத்தில் வைத்து சொதப்பியிருக்கிறார் மணி ரத்னம். வசனமா பாடலா என்று அனைவரும் ஸ்தம்பித்து நிற்கும்படியாக மற்ற வசனப் பாடல்கள் வந்து மறைகின்றன. இது போன்ற படத்துக்கு எதற்குப் பாடல் என்னும் தைரியம் இன்னும் மணி ரத்னத்துக்கு வரவில்லை. படம் கொஞ்சமாவது சம்பாதிக்க வேண்டாமா என்ற எண்ணமாக இருக்கலாம்.

* ராவணன் என்றால் நெகடிவ் கேரக்டர், அதனால் கொஞ்சம் அலட்ட வேண்டும் என்று நினைத்து விக்ரம் அடிக்கும் அலட்டல் தாங்க முடியவில்லை. பக் பக் பக் என்று அவர் என்னவோ செய்யும் காட்சி மனதைப் பிசைகிறது, எப்படி ஒரு நல்ல நடிகரை ஒரே அடியாய் அடித்துப் போட்டுவிட்டாரே மணி ரத்னம் என. அதிலும் ஐஸ்வர்யா ராய் கடைசிக் காட்சியில் அதே போலச் செய்யும்போது, மணி ரத்னத்தின் முகம் கிராஃபிக்ஸில் மறைந்து கே.எஸ்.ரவிகுமார் பக் பக் பக்கெனச் சிரிப்பது படத்தின் ஹைலைட்.

* பிரபுவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. இதில் கண்மை வேறு. என்ன கொடுமை சரவணன் இது என்று அவர் சீரியஸாகப் பேசிய தமிழ் மக்கள் இப்போதும் அவர் சீரியஸாக நடிக்கும்போதெல்லாம் சிரிக்கிறார்கள். இப்படி ஒரு வரம் கேட்டாலும் கிடைக்காதது.

* ரஞ்சிதாவுக்கு ’ஒரு சீன்’ கூட இல்லை. ஏன் வந்தார் என்பதே தெரியவில்லை. ஆனாலும் தமிழக மக்கள் விடாமல் கைத்தட்டுகிறார்கள்.

* அழகான கதாநாயகி வருகிறார்? என்ன ஆகும் அடுத்து? ஆமாம், காதல்தான். அண்ணன் முரட்டு அண்ணன், என்ன ஆகும் அடுத்து? அதேதான், விக்ரம் கொஞ்சம் முறைப்புடன் கொஞ்சம் சிரிப்புடன் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறார். கல்யாணம் நடக்கிறது, என்ன ஆகும்? நாம் நினைப்பது போலவே ப்ரியாமணியைக் கெடுத்து விடுகிறார்கள். அப்புறம் என்ன ஆகும்? அண்ணன் வீறு கொண்டு எழுந்து, தனிப்பட்ட வன்மம் தீர்க்கக் கிளம்புகிறான். பொதுவுடைமை வசனம் பேச மட்டும் மறப்பதில்லை! இன்னும் எத்தனை நாள்தான் இப்படி பார்ப்பது? அதுவும் மணி ரத்னத்தின் படத்தில்! ஜீரணிக்கவே முடியவில்லை.

* இத்தனை நேரம் ஓடிய படத்தில் ஒன்று கூடவா உருப்படி இல்லை? அந்த சந்தோஷத்தை நமக்குத் தருவது சிவன் மட்டுமே.

* ஐஸ்வர்யா ராயும், விக்ரமும் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படலாம். அதெல்லாம் எதோடும் ஒட்டாமல் நிற்பது பெரிய குறை.

* பிரிதிவிராஜ் ஐஸ்வர்யா ராயை நினைத்து உருகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராய் உருகுவதையெல்லாம் காண்பிக்கவில்லை. எங்கே பின்னர் ஐஸ்வர்யா ராய் விக்ரமை நினைத்து உருகுவது போல் காண்பித்தால் மக்கள் நெளிவார்கள் என்று இயக்குநர் நினைத்துவிட்டாரோ என்னவோ. ஆனால் திடீரென்று என் கணவர் கடவுளுக்கும் மேல் என்றெல்லாம் பேசுகிறார் ஐஸ்வர்யா ராய். அங்கே ஏன் கடவுள் வந்தார், ஏன் கடவுள் சிலை வந்தது என்பதற்கெல்லாம் ஒரு லாஜிக்கும் இல்லை. ஒரே ஒரு காரணம், சுஹாசினி தனது இண்டெலக்சுவலைக் காட்டவேண்டும் என்பது மட்டுமே!

* மணி ரத்னம் இப்படி பழங்காலக் கதையை மார்டனாக எடுக்கிறேன் என நினைத்துக்கொண்டு, பாதி கேட்காத வசனத்தைப் பேசிகொண்டு, சுஹாசினியை வசனம் எழுத வைத்துக்கொண்டு, ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்துக்கொண்டிருந்தால், இனியும் காணச் சகிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தைரியமாக வெளியில் உண்மையைச் சொல்லிப் படம் எடுக்க முன்வரவேண்டும். இல்லை என்றால் காதல் கதையை எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். ஒரு நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுப்பதால், சில காட்சிகளில் வரும் நடிகர்கள் தமிழ் முகமாக இல்லாமல் இருப்பது பெரும் அந்நியத் தன்மையை ஏற்படுத்துகிறது.

* ராவணன் என்று படம் வருகிறது. எப்படியும் சீதை ராவணனுடன் சேர்ந்து விடுவாள் என்று நினைத்து, கலை சுதந்திரத்தை ஆதரிக்கவேண்டும் என்றெல்லாம் முன்முடிவுகளுடன் சென்றேன். படத்தைப் பார்த்தால், சீதை மீண்டும் ராமனுடனே ஓடினால் கூட சந்தோஷப்பட முடியாத அளவு உள்ளது.

No comments: