Monday, June 21, 2010

பார்த்ததில் ஈர்த்தது (ஸ்கூப் புத்தகத்திலிருந்து)

குல்தீப் நய்யாரின் ‘ஸ்கூப்’ (மதுரை பிரஸ் வெளியீடு - காலச்சுவடு விற்பனை உரிமை) படித்துக்கொண்டிருக்கிறேன். அதிலிருந்து சில வரிகள், நான் ரசித்தவை அல்லது என்னை யோசிக்க வைத்தவை அல்லது நான் புதியதாகப் படித்தவை - இங்கே. (இதைப் படித்துவிட்டு அனைவரும் மதுரை பிரஸ் வெளியிட்டிருக்கும் ‘ஸ்கூப்’ புத்தகத்தை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். :>) தொடர்ச்சி இருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறேன்.

தமிழ்ப் பதிப்பிற்கான முன்னுரையிலிருந்து சில வரிகள்:

நெருக்கடி நிலை காலகட்டத்தில் நான் சிறையிலிருந்து விடுதலையானதும் காமராஜரைச் சந்தித்தேன். தான் இந்திரா காந்தியைத் தவறாகக் கணித்துவிட்டதாக மிகவும் வருந்தினார் காமராஜர். சென்னையில் அவரது வீட்டிற்கு வெளியில் விரிக்கப்பட்டிருந்த பாயில் அமர்ந்திருந்தார் காமராஜர். நெருக்கடி நிலை காலக்கட்டத்தில் நடந்த அக்கிரமங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். அதனால் அதைப் பற்றித் தொடர்ந்து பேச அவர் விரும்பவில்லை. இந்திரா காந்தியை பிரதமராக்கிய குற்ற உணர்வில் இருந்தார் காமராஜர்.

ஒருவகையில் பார்த்தால் நீங்களும்தான் இந்த நெருக்கடி நிலைக்குப் பொறுப்பாளி என்று அவரிடம் சொன்னபோது எதுவும் பேசாமல் மூன்று, நான்கு முறை தலையில் அடித்துக் கொண்டார். அவரது மனப்போராட்டமும் நிராசையும் அதில் வெளிப்பட்டன.

மௌண்ட்பேட்டனுடனான சந்திப்பு குறித்த கட்டுரையிலிருந்து சில வரிகள்.

பிரிவினையால் ஏற்பட்ட விளைவுகளை அவர் (மௌண்ட்பேட்டன்) மறுக்கவில்லை. என்னால் நாட்டை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் பிரிவினையைத் துரிதப்படுத்தியாக வேண்டியிருந்தது என்றார் அவர். நான் இறந்துபோய் கடவுளிடம் செல்லும்போது இப்படிச் சொல்வேன்:

''இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூரிலிருந்து கடற்படைக்கு தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது உணவுக் கப்பல்களை வங்காளத்திற்கு அனுப்பி இரண்டரை மில்லியன் பேரைக் காப்பாற்றியிருக்கிறேன். இத்தனைக்கும் அப்படிச் செய்ய வேண்டாம் என்று சர்ச்சில் சொன்னார். அதனால், என் கணக்கில் இன்னம் ஒன்றரை மில்லியன் பாக்கியிருக்கிறது என்று அவரிடம் வாதாடுவேன்'' என்று சொன்னார் மெளன்ட்பேட்டன்.

உங்களது பாகிஸ்தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் துண்டுதுண்டாகிவிடும் என்று ஜின்னாவிடம் சொன்னேன் என்று நினைவு கூர்ந்தார் மெளன்ட்பேட்டன். ''என்னுடைய கணிப்பு சரியாகிவிட்டதென்று ராஜாஜி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.'' எனக்கு என் வார்த்தைகள் ஞாபகம் இருக்கிறதென்று அவருக்கு நான் பதிலெழுதினேன் என்று திரும்பவும் அழுத்திச் சொன்னார் மெளன்ட்பேட்டன்.

எல்லாம் நடந்த பிறகுதான் இவருக்கு இது தோன்றியது என யாரும் குற்றம் சொல்லிவிடக் கூடாது என்ற கவனம் அந்த வார்த்தைகளில் இருந்தது.

பிரிவினைத் திட்டத்தில் பங்குவகித்த பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் எச்.வி. ஹட்சனிடமும் கேம்பெல் ஜான்சனிடமும் மேற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்துவிடும் என்று மெளன்ட்பேட்டன் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா என்று கேட்டேன். இப்படி ஒரு விஷயத்தையே தாங்கள் இப்போதுதான் கேள்விப்படுவதாக சொன்னார்கள் அவர்கள்.

ரெட்க்ளிஃப் குறித்த கட்டுரையிலிருந்து சில வரிகள். இந்தியப் பிரிவினையின்போது இந்திய, பாகிஸ்தான் எல்லையை வகுத்து, எந்த நாடுகள் எதனுடன் சேரவேண்டும் என்னும் பொறுப்பை நிறைவேற்றியவர் ரெட்க்ளிப்.

''நீங்கள் இந்தியாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக பாகிஸ்தானிலிருக்கும் முஸ்லிம்கள் நினைக்கிறார்கள்'' என்று ரெட்க்ளிப்பிடம் சொன்னேன். அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார் ரெட்க்ளிஃப். ''இந்தியாவுக்குச் செல்லவேண்டிய லாகூரை நான் பாகிஸ்தானுக்கு அளித்தேன். அப்படியில்லாவிட்டாலும்கூட, இந்துக்களை விட முஸ்லிம்களுக்குத்தான் நான் சாதகமாக நடந்துகொண்டிருக்கிறேன்'' என்றார் ரெட்க்ளிஃப்.

''காஷ்மீரைப் பற்றி எனக்குத் தெரியவே தெரியாது. நான் லண்டனுக்கு திரும்பி வெகுநாட்களுக்குப் பிறகுதான் அதைப் பற்றியே கேள்விப்பட்டேன்'' என்று சொன்னார் ரெட்க்ளிஃப்.

''உங்களுடைய உளுத்துப்போன பாகிஸ்தான் இருபத்தைந்தாண்டுகளுக்கு மேல் இருக்காது என்று ஜின்னாவைத் தான் எச்சரித்ததாக மெளன்ட்பேட்டன் சொன்னார். அது உண்மைதானா'' என்று ரெட்க்ளிஃபிடம் கேட்டேன். ''நான் இதற்கு முன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை, நீங்கள்தான் முதன்முறையாக இதைப் பற்றிச் சொல்கிறீர்கள்'' என்றார் ரெட்க்ளிஃப்.

ரெட்கிளிஃப் காஷ்மீரையே கேள்விப்பட்டதில்லையாம். நல்ல நபர் நாட்டைப் பிரிக்க. லாகூரை பாகிஸ்தானுக்குக் கொடுத்தேன் என்கிறார். தேங்காயை பக்கத்து வீட்டு மாமிக்குக் கொடுத்தேன் என்ற ரேஞ்சுக்குப் பேசுகிறார். ஒரு நாட்டைப் பிரிப்பதில் என்ன அவசரம் பாருங்கள். நேரு பக்கவாதம் வந்து படுத்துக் கிடந்தார், குளியறையில் கால் வழுக்கிக் கீழே விழுந்து இறந்தார் என்பது போன்ற செய்திகளெல்லாம் ஒவ்வொரு வரியில் வந்து போனாலும், அப்படியே மனதில் தங்கி, பெரும் எண்ண அலையையே ஏற்படுத்திவிடுகின்றன.

2 comments:

Anonymous said...

இந்தப் புத்தகம் படிக்கும்போது நானும் இதுமாதிரி பல ‘ஒருவரி’ச் செய்திகளால் ரொம்ப disturb ஆனேன். அவற்றின் அதிர்ச்சி மதிப்பைப் பொருட்படுத்தாமல் போகிறபோக்கில் சொல்லிச்செல்வதை நய்யார் ஓர் உத்தியாகவே செய்கிறார்போல.

பை தி வே, இதை வெளியிட்டிருப்பது மதுரை ப்ரஸ், விற்பனை உரிமைதான் காலச்சுவடு பதிப்பகத்திடம் உள்ளது - திருத்திவிடவும் :)

- என். சொக்கன்,
பெங்களூரு.

ஹரன்பிரசன்னா said...

காலச்சுவடில் விளம்பரம் பார்த்துப் பார்த்து அதுவே மனதில் தங்கிவிட்டது. மாற்றிவிட்டேன், நன்றி.