Sunday, September 26, 2010

Shubho Mahurat - பெங்காலித் திரைப்படம்

முன்பு எழுதி, இப்போதெல்லாம் எதுவுமே எழுதுவதில்லை என்னும் பட்டியலில் என்னைச் சேர்த்த, பஸ்ஸைச் சேர்ந்த அனைத்துலகத் தமிழ் கூறும் நெஞ்சங்களுக்கும் நன்றி.

நேற்று லோக் சபா டிவியில் Shubho Mahurat என்னும் பெங்காலி படம் பார்த்தேன். ஒரு துப்பறியும் படத்தை இப்படியும் எடுக்கமுடியுமா என்று அசந்துவிட்டேன். நாம் இதுவரை பார்த்திருப்பதெல்லாம் திடும் திடும் இசையுடன் கூடிய துப்பறியும் படங்கள் அல்லது சிபிஐ டைரிக்குறிப்பு போல வளவள என செயற்கைத்தனமாகப் பேசியே உயிரை எடுக்கும் (உயிரை எடுத்தவரைக் கண்டுபிடிக்கும்! - அந்தநாள் திரைப்படம் ஓர் ஆசுவாசம்) படங்கள். மாற்றாக இந்தப் படம் மனித உணர்வுகளை முன்வைத்துப் பேசுகிறது. திரைத் தொழிலில் இருப்பவர்களின் உணர்வுகளைச் சொல்வதற்கிடையில் இரண்டு கொலைகளுக்கான காரணத்தையும் கண்டுபிடிக்கிறது. இப்படி ஒரு படம் எடுக்க முடியும் என்று நினைத்ததே முதல் சாதனை. அதனை மிக நேர்த்தியாகத் திரையில் கொண்டு வந்தது இன்னொரு சாதனை. திரைத் தொழில் என்றாலே பிறன்மனை நோக்குதல் என்பதற்கு இப்படமும் விதிவிலக்கல்ல. எல்லாருக்கும் அதிகப்படியான யாரோ ஒருவருடன் வெளியில் சொல்ல இயலாத உறவு இருக்கிறது. இதற்கிடையில் இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதன் காரணத்தைச் சொல்வதுதான் திரைக்கதையின் நோக்கம். யார் கொலை செய்திருப்பார்கள் என்னும் மெல்லிய பதட்டம் நம்மைப் பிடித்துக் கொண்டாலும், அதைக் கண்டுபிப்பது படத்தின் நோக்கம் அல்ல. இதுதான் இந்தப் படத்தை மாறுபட்ட படமாகக் காட்டுவது. நடிகர்களின் மிக இயல்பான நடிப்பு இது போன்ற படங்களுக்கு மிக முக்கியம். இந்தப் படத்தில் அதுவும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. இதற்குமேல் இப்படத்தைப் பற்றிச் சொன்னால் படத்தைப் பார்க்கும்போது ஆர்வம் குன்றி விடலாம். எனவே மீதிப் படத்தை குட்டித் திரையில் காணுங்கள்.

26-செப்டெம்பர்-2010 மதியம் லோக் சபா சானலில் ஒளிபரப்பாகிறது.

படத்தைப் பற்றிய தகவல்களுக்கு - http://en.wikipedia.org/wiki/Shubho_Mahurat

No comments: