Sunday, July 30, 2006

கருட பஞ்சமி

இன்று கருட பஞ்சமி.

இதன் ஐதீகக் கதை:

முன்னொரு காலத்தில் ஏழு அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். அவர்கள் விறகு வெட்டிப் பிழைக்கிறவர்கள். அப்படி ஒருநாள் அந்தத் தங்கை தன் அண்ணன்களுக்குக் கஞ்சி கொண்டு சென்றாள். அப்போது வானில் கருடன் ஒரு நாகத்தைக் கௌவிக்கொண்டு சென்றது. அந்த நாகம் தங்கை கொண்டு செல்லும் கஞ்சியில் விஷம் கக்கிவிட்டது. அதை அறியாத அவள் அண்ணன்கள் அனைவருக்கும் அதே கஞ்சியை வழங்கினாள். அதை உண்ட அண்ணன்கள் அனைவரும் இறந்துவிட்டனர். தினமும் செய்வதுபோலத்தானே செய்தோம், இன்று என்ன இப்படி ஆகிவிட்டது என்று வருத்தப்பட்ட அந்தத் தங்கை தெய்வத்தை நினைத்து அழுது தொழுதாள். அந்த வழியாக வந்த பார்வதியும் பரமேஸ்வரனும் அவளைப் பார்த்து, நடுக்காடில் இருந்துகொண்டு ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள். அவள் நடந்ததைக் கூறினாள். 'இன்று கருடபஞ்சமி. அதை மறந்துவிட்டு பூஜை செய்யாமல் நீ வந்துவிட்டாய். அதுதான் இதற்குக் காரணம். இங்கேயே இப்போது நாகருக்குப் பூஜை செய். கங்கணக் கயிறில் ஏழு முடிச்சிட்டு, நாகர் இருக்கும் புற்று மண் எடுத்து, அட்சதை சேர்த்து இறந்து கிடக்கும் உன் அண்ணன்கள் முதுகில் குத்தவும். அவர்கள் உயிரோடு எழுந்திருப்பார்கள்" என்று சொல்லி கருட பஞ்சமியின் முக்கியத்துவத்தை உணர்த்தினர். அவளும் அதே போல் செய்தாள். இறந்து கிடந்த அண்ணன்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.

இப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள். கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.

5 comments:

Anonymous said...

arumai theriyadhadhai therindhu konden edward

Prabu Raja said...

நினைவு படுத்தியதற்க்கு நன்றி.

ஜயராமன் said...

எனக்கு தெரியாத புதுமையாக விஷயத்தை சொன்னீர்கள்.

அதற்கு நன்றி

இது எந்த ஊரில் நடந்தது. ஏதாவது விசேஷமாக இதற்கு இடங்கள் இருக்கிறதா.

சகோதரிகள் தங்கள் சகோதர்ர்களின் 'முதுகில் குத்தும்' இந்த பண்டிகை வினோதமாக இருக்கிறது. எனக்கு என் சகோதரி இப்படி முதுகில் குத்தினதில்லை. போய் கேட்கிறேன்.

மேலும் எழுதுங்கள்....

நன்றி

ENNAR said...

கருட பஞ்சமியா? நான் இதுவரை கேள்விப்படவில்லை தெரியாததை தெரிவித்ததுக்கு நன்றி

ஷைலஜா said...

பஞ்சமி ஹப்பா..அண்ணா பரல்லில்லா யாக்கோ..... என்று கன்னடத்தில் அருமையான பாடல் ஒன்று தங்கை தன் அண்ணனின் வரவிற்காக காத்திருந்து பாடும் பாடல் ஒன்று உண்டு.பெங்களூரில் கருடபஞ்சமியை கன்னடமக்கள் கொண்டாடுவதால் எனக்கு ஓரளவு தெரியும் ஆனால் ப்ரசன்னா நீங்கள் புதுமையாய்விளக்கியது இப்போதுதான் தெரியவருகிறது.
ஷைலஜா