Monday, January 21, 2008

வலைக்கும்மி

வலைப்பதிவுலகம் - வலைக்கும்மி

2002 வாக்கில் கணினியில் திக்கித் திணறி தமிழில் தட்டியபோது பெரும் அதிசயமாக உணர்ந்தது இப்போதும் நினைவிருக்கிறது. அன்று முழுவதும் கனவில் தமிழ் எழுத்துகளாக வந்தன! இணையக் குழுமங்களில் இணைந்து எழுதத் தொடங்கி, வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கி, இன்றைக்குப் பார்த்தால் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தினமும் தோராயமாக 200 பதிவுகள் எழுதப்படுகின்றன. இன்றைக்குத் தமிழ் ஊடகங்கள் இந்த வலைப்பதிவுகளையும் இணையத் தளங்களையும் புறக்கணிக்கவே முடியாது. அப்படி ஒரு பூதாகரமான வளர்ச்சியை அடைந்துள்ளது தமிழ் இணைய எழுத்துலகம். ஆனால் அந்த வளரச்சி தரும் இலக்கிய அனுகூலங்களோ கேள்விக்குரியனவாகத்தான் இருக்கின்றன.

2000 வாக்கில் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த சில எழுத்தாளர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இணையத்திலிருந்தே வருவார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, கழிந்துவிட்ட இந்த ஏழு வருடங்களில், இணையத்திலிருந்து வந்து அச்சுலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் எவருமே இல்லை. இனி வரும் என்று நம்பலாம் என்று சொல்லத்தக்க அளவிலும் இணையத் தமிழ் உலகில் செறிவான எழுத்துகளும் காணக் கிடைப்பதில்லை. அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் ஒப்பீட்டு அளவில் அது மிகவும் குறைவாகவே உள்ளது.

இன்றைக்கு வலைப்பதிவுகள் என்பது நினைத்த நேரத்தில், நினைத்த விஷயத்தை எழுதி விடக்கூடிய இடமொன்றை மட்டுமே பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். பரந்து கிடக்கும் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தீவிரமான இலக்கிய நோக்குடையவை என இருபது வலைப்பதிவுகள் தேறினாலே பெரும் விஷயம். இணையத்தில் எழுதப்படும் எழுத்துகளில் பெரும்பாலும் காணக் கிடைப்பவை ஜாதி பற்றிய சொல்லாடல்கள், தமிழக, ஈழ அரசியல் பற்றிய சீற்றங்கள் மற்றும் நிறைய தனிப்பட்ட குறிப்புகள் இவை மட்டுமே. இவற்றில் தீவிரமாக எழுதுபவர்கள் மிகமிகக் குறைவே. அப்படி தீவிரமாக எழுதுபவர்களும் காலம் காலமாக சொல்லிக்கொண்டிருந்தனவற்றையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொ¡ண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தாக்குதல் மீறிய விவாதம் நிகழ்ந்துவிட்டால் அதை அதிசயங்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம்.

கட்டற்ற சுதந்திரம் என்னும் மந்திரச் சொல்லே இந்த வலைப்பதிவுக்களின் அடிநாதமாக விளங்குகிறது. உண்மையில் ஒரு தனிமனிதனுக்குத் தரப்படும் கட்டற்ற சுதந்திரம் என்பது, அவன் சமூகத்தோடு சேரும்போது கடுமையாக மட்டுப்படுத்தப்படுகிறது என்பதை உணராமல், கட்டற்ற சுதந்திரம் என்னும் வார்த்தைக் கோவைகள் தரும் நேரடி அர்த்தத்தை மனதில் கொண்டே, பல வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. அதனால் இயல்பாகவே அவை தாக்குதலில் ஈடுபடுகின்றன. செறிவான விவாதம் என்பதே வலைவிரிக்கும் பூடகமான தாக்குதல் நிறைத்தே எழுதப்படுகிறது. அதேபோல் இந்த வலைப்பதிவுகள் நிராகரிப்படாத எழுத்துகளின் தொகையாக விளங்குகின்றன. இதனால் ஒரு வலைப்பதிவு எழுத்தாளன், நியாயமாக ஒரு எழுத்தாளன் அனுபவித்திருக்கவேண்டிய மட்டுறுத்தல் மற்றும் தகுதியில்லாத எழுத்துகள் என்பன போன்ற வடிகட்டுதலை சந்திப்பதே இல்லை. இதனால் வலைப்பதிவு எழுத்தாளன் மனதில் அவனைப் பற்றிய ஒரு மிதமிஞ்சிய அனுமானமும் சித்திரமும் ஏற்பட்டுப்போகிறது. இரண்டு கட்டுரைகள் எழுதிப் போட்ட உடனேயே தான் ஒரு எழுத்தாளன் என்கிற பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அச்சு உலகில் ஒரு எழுத்தாளன் கடந்து வரவேண்டிய சவால்கள் எவற்றையும் காணாமலேயே ஒரு இணைய எழுத்தாளன் அந்த இடத்தை அடைந்துகொள்கிறான். இதனால் ஏற்படும் சௌகரியம் நம்பிக்கை என்றாலும் அதன் இன்னொரு கோடியான அதீத நம்பிக்கையில் எழும் அபத்தங்களைக் கூட சிறந்த எழுத்து என்றும் நம்பும் எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கும் ஒருவன் அடையவேண்டிய இலக்குகளை அடையமுடியாமல், தொடர்ந்து வலைப்பதிவுகளில், எப்படி எழுதத் தொடங்கினானோ அப்படியே எழுதிக்கொண்டிருக்கிற அல்லது மடிந்துபோகிற ஒருவனாகிவிடுகிறான்.

கணினியில் தமிழ் எழுதத்தெரிந்தாலே எழுத்தாளனாகி விடலாம் என்கிற எளிமையான சூத்திரத்தில் ஆட்பட்டு எழுதத் தொடங்கும் எவரும், இதுவரை தமிழ் எழுத்துலகம் கண்டிருக்கிற உயரங்களை, வீழ்ச்சிகளை, சவால்களைப் பற்றிய எந்தவித அறிவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இன்றைய அச்சு எழுத்தாளர்கள் மீதே 'தமிழின் மரபை அறியாதவர்கள்' என்கிற விமர்சனம் வைக்கப்படும் நிலையில், இன்றைய வலைப்பதிவு எழுத்தாளர்கள் தமிழின் தற்போதைய எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பைக் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனந்த விகடன், குமுதம் வழியாக இலக்கியத்தை அடைய இவர்கள் எடுக்கும் முயற்சி இவர்களை ஒரு ரெண்டுங்கெட்டான் நிலையில் கொண்டு சேர்க்கிறது. இதனால் வெகுஜன இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வளர்ந்த வெகுஜன திரைப்படங்களும் அது சார்ந்த ஆழமற்ற எழுத்துகளும் மேலும் 'சிறப்பாக' இங்கு வளர்கின்றன. குறைந்தபட்சம் எழுதத் தொடங்கிய பின்பாவது, இதற்குமுன் தமிழில் இருக்கும் இலக்கியங்களைப் படிப்பது பற்றிக் கூட யோசிப்பதில்லை என்பது யதார்த்த சோகம். இணையத்தில் எழுதத் தொடங்கி, சிறப்பாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் எழுத்துகளை இனம்கண்டு ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூறலாம் என்ற போதிலும், அவற்றையே பொதுக்கருத்தாக முன்வைக்க முடியாது என்பதே நிதர்சனம்.

வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வலைப்பதிவுக்களைத் திரட்ட, திரட்டிகள் தோன்றியபோது அவை ஒரு வசதியை முன்னிறுத்தியே செயல்பட்டன. ஆனால் அதிலிருந்து வரும் ஹிட்டுகளின் எண்ணிக்கை வலைப்பதிவுக்களின் தரத்தை நிர்ணயிக்கும் சக்தி என்கிற எண்ணம் நிலைபெற்றபோது, வலைப்பதிவுகளில் எழுதப்படும் எழுத்தின் தரம் மேலும் சரியத் தொடங்கியது. வாசகனை திடுக்கிடச் செய்து உள்ளே அழைத்துவரச் செய்யும் கிறுக்குத்தனமான தலைப்புகளுடன் கும்மிப் பதிவுகள் வரத் தொடங்கின. [இந்த இடத்தில் இன்னொன்றைச் சொல்லவேண்டும். நிறைய வலைபதிவர்கள் எழுதுவதால் புழக்கத்திற்கு வரும் புதிய சொற்களை வலைப்பதிவு உலகம் தானறியாமலேயே தமிழுக்குத் தந்துகொண்டிருக்கிறது.] தொடர்ந்து திரட்டிகள் பின்னூட்டங்களையும் (Comments) திரட்ட ஆரம்பித்தன. அதிக பின்னூட்டங்கள் வேண்டி செய்யப்பட்ட அரசியலைப் பற்றி எழுதவேண்டுமானால் பெரிய புத்தகமே போடவேண்டியிருக்கும். இதில் வலைப்பதிவுவுலகம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்றே சொல்வேன். ஒருவகையில் இந்தத் திரட்டிகள் தொடக்கத்தில் வலைப்பதிவுக்களுக்கு புத்துணர்ச்சியைத் தந்தாலும், அதன் எதிர்வினையாக ஒரு பெரிய சரிவையும் தந்துவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்றைக்கு இந்தத் திரட்டிகளின் தேவையை நிராகரிக்கவே முடியாது என்பதையும் சொல்கிறேன். இந்தத் திரட்டிகள் இல்லாவிட்டால் எங்கிருந்தோ யாராலோ எழுதப்படும் எழுத்தை ஒரு வாசகன் நினைத்த நேரத்தில் சென்றடையமுடியாது. ஆனால் எத்தனை தூரம் இந்தத் திரட்டிகளின் தேவை மிக மிக முக்கியமானதொன்றாக இருக்கிறதோ, அத்தனை தூரம் அது வலைப்பதிவுகில் ஆரோக்கியமற்ற போட்டியையும் உருவாக்கி விட்டது. இது வலைப்பதிவர்களின் தனிப்பட்ட மனோபாவத்தால்தான் நிகழ்கிறது என்றாலும் பொதுக்காரணியாக இந்தத் திரட்டிகளே விளங்குகின்றன.

தொழில்நுட்பம் தரும் வசதிகளை அனுபவிக்கும்போது தொடர்ந்து அது தரும் இன்னல்களிலிருந்து மீளமுடியாத அதே நிலையை இந்தத் திரட்டிகளுக்கு ஒப்பிடலாம். பின்னூட்டங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் முதன்மை பெற்றவை விவாதங்கள். பெரும் விவாதங்களெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு விவாதத்தின் மூலம் பொதுக்கருத்தை எட்டிவிடவே முடியாது. அதற்கான வரலாறே நம்மிடம் கிடையாது. உண்மையில் இதுவே சாத்தியமானதும் கூட. இதை உணர்ந்தவர்கள் குறைவாகவும், நம் கருத்தே பொதுக்கருத்து என்னும் ஆரம்பநிலை எழுத்துகளை பிரதிநிலைப்படுத்துபவர்கள் அதிகமாகவும் சேர, விவாதங்கள் அதைமீறிய தாக்குதல் நிலையையும், அதைத் தொடர்ந்து விவாதித்தவர்கள் மீதான முன்முடிவையும் ஏற்படுத்தின. ஒரு அச்சு ஊடகத்தில் நிகழும் உள்ளரசியலுக்கு இணையான, அதை மிஞ்சும் பெரும் அரசியல் இன்றைய நிலையில் வலைப்பதிவுலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருவரின் ஜாதி மற்றும் மதத்தைச் சார்ந்த விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் ஒருவரால் இணையத்தில் எழுதவே முடியாது. பெண்கள் என்றால் இருக்கவே இருக்கிறது கற்பு பற்றிய சொல்லாடல்கள். இதையும் மீறி விவாதம் செய்யும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அல்லது எளிதாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

வலைப்பதிவுவுலகின் இன்னொரு முக்கிய பின்னடைவு Anonimity. யார் என்கிற விவரம் இல்லாமல், எங்கிருந்து எழுதுகிறீர்கள் என்கிற விவரம் தெரியாமல் நீங்கள் ஒரு வலைப்பதிவை நடத்தலாம், எல்லா வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் செய்யலாம். அச்சு ஊடகங்களில் இவை சாத்தியமல்ல. பிற ஊடகங்களில், நீதிமன்றங்கள், வழக்கு உள்ளிட்ட விஷயங்கள் உங்களைக் கேள்விக்குட்படுத்தும். ஆனால் இணைய உலகில் இந்தக் கட்டுகள் இல்லாத சுதந்திரம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் நம்மால் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பது நாம் அறிந்ததே. அதுவே நிகழ்ந்தது. தனக்குத் தானே வேறுவேறு பெயர்களில் போட்டுக்கொள்ளும் பின்னூட்டங்கள், பொதுவில் வைக்கமுடியாத வாசகங்களைத் தாங்கிய பின்னூட்டங்கள், வசவுகள், கேள்வி கேட்பது யாரென்பது தெரியாததால் தரும் சௌகரியங்கள் நிறைந்த கேள்விகள் என பின்னூட்டங்கள் குவிந்தன. குவிகின்றன. சிலர் எக்கேள்வி என்றாலும் அதன் பொருளைப் பார்ப்பது என்ற நிலையையும், சிலர் கேள்வியின் முகாந்திரத்தை அறியாமல் வெற்று வெளியுடன் மோதிக்கொண்டிருக்கமுடியாது என்கிற நிலையையும் எடுத்தார்கள். உண்மையில் அவரவர் வசதிக்கேற்பவே இந்நிலையை எடுத்தார்கள் என்றே நான் வரையறுக்கிறேன். யார் எழுதுகிறார்கள் என்று தெரியாமல் வலைவிரிக்கப்படும் ஒரு விஷயமாகத்தான் இப்படிப்பட்ட அனானிகளை வகைப்படுத்தமுடிகிறது. இயல்பாகவே ஒரு மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் அறியாத ஒன்றைத் தேடும் எண்ணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, யார் எழுதுகிறார் என்று தெரியாமலேயே நிறைய வருடங்கள் இயங்கும் வலைப்பதிவுகளும் உண்டு. யார் என்று தெரியாது என்பதே ஒரு identityயாக மாறிவிடும் வலைப்பதிவுகளும் உண்டு. இவர் யார் என்கிற விவரம் தரும் வலைப்பதிவு கும்மிகள் இதில் அதிகம் சுவாரஸ்யம் பெற்றதாகவும் ஹிட்டுகள் பெற்றதாகவும் ஆகிவிடுவது அடிக்கடி நடக்கும். வலைப்பதிவுகளை ஒருவகையில் இன்றைய கணினி சார்ந்த மக்களின் மனவியல் பதிவாகவும் கொள்ளமுடியும். அனானிமிட்டி தரும் சுதந்திரம் முகம் சுளிக்க வைத்தாலும் அதில் நிலவும் உளவியலைப் படிக்கக் கற்றுக்கொண்டால், அது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலத்தின் ஆகச் சிறந்த பதிவாக அமையும் என்பதையும் சொல்லவேண்டும்.

வலைப்பதிவு எழுத்தாளர்களின் எழுத்துகளை ஆராய்ந்தால் அவர்களில் சுஜாதா ஏற்படுத்திய பாதிப்பு விளங்கும். சுஜாதாவின் எழுத்துகளை முன்மாதிரியாக வைத்தே இன்று எழுதும் பல வலைப்பதிவு எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். சுஜாதாவின் முறையைத் தாங்கள் பயன்படுத்தும்போது அது ஒரு செயற்கைத் தன்மை வாய்ந்ததாகிவிடுகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்கள் நகரும் புள்ளி, அதற்கு மிகவும் எதிர்த்தன்மை கொண்ட, விளங்கிக்கொள்ள முடியாத எழுத்துகளாகி விடுகிறது. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கும் தனித்தன்மையைக் கண்டெடுத்து அதை வளர்க்கும் திறன் நிறைந்தவர்கள் மிகக்குறைந்த நிலையில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

அதுபோல துறை சார்ந்த எழுத்துகள் என்கிற பிரிவை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு மிகப்பெரிய தேக்க நிலையையே இன்றைய வலைப்பதிவுகள் கொண்டிருக்கின்றன. அச்சு ஊடமும் இதே நிலையை சமாளிக்க பெரும் போராட்டங்களை மேற்கொள்ளும்போது, வலைப்பதிவுக்களை அதிகம் குறை சொல்வதற்கில்லை. ஒன்றிரண்டு முயற்சிகள் நடந்தாலும், தொடர்ந்து வலைப்பதிவுகளின் உலகம் விரிவடையும்போது இவை தீவிரமடையலாம். துறை சார்ந்த எழுத்துகளில் ஏற்படும் மறுமலர்ச்சிக்கு வலைப்பதிவுகள் ஒரு முக்கிய காரணமாக விளங்கமுடியும். ஆனால் அது எப்போது நிறைவேறும் என்பதை கணிப்பது சவாலானது. பெரும் வெள்ளம் போல விழுந்தடித்துக்கொண்டு ஓடிவரும் நீரில் கலந்திருக்கும் கசடுகள் போலவே இன்றைய பெரும்பாலான வலைப்பதிவுகள் தோன்றுகின்றன. நிஜமாகவே புதிய திறப்பில் ஏற்படும் வெள்ளவேகம் எதிர்பார்க்கக்கூடியதே. அதுவே இன்றைய வலைப்பதிவு உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எதிர்வரும் மிகப்பெரிய காலத்தை மனதில் கொண்டு, இச்சிறிய காலகட்டத்தைக் கணக்கிட்டால், வலைப்பதிவுகள் சிறப்பான ஒரு மாற்று ஊடமாக செயல்படமுடியும் என்கிற நம்பிக்கையை வைக்கலாம். அதற்கு அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகை இயக்கங்கள் செய்த வேலையை வலைப்பதிவுகளில் சிறுபத்திரிகையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் செய்ய முன்வரவேண்டும். இணைய உலகம், அச்சு உலகம் என்கிற பிரிவுகளுக்கிடையேயான இடைவெளி சுருங்கி, எல்லா எழுத்தாளர்களும் எங்கும் எழுதும் நிலை வந்தால் வலைப்பதிவுகளில் நிலவி வரும் விபத்துகள் நாளாவட்டத்தில் சீரடையலாம்.

வலைப்பதிவுக்களின் சாதனையாகச் சொல்லவேண்டுமானால், உலகம் அடைந்த குறுக்கத்தை அதிவிரைவுபடுத்தியவை இந்த வலைப்பதிவுகள். எங்கோ நிகழும் ஒரு விஷயத்தில் பல்வேறு கோணங்களை, முக்கியமான முக்கியமற்ற, தரமான தரமற்ற, இலக்கிய ரீதியிலான வெகுஜன ரீதியிலான என பல்வேறு முகங்களை நாம் நிமிடங்களில் அடையமுடியும். இரண்டாவது, எதைக் குறித்த தகவலும் தேடி அடையலாம். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் நீங்கள் தேடும் விஷயத்தைப் பற்றி நிச்சயம் ஒரு வரியாவது எழுதியிருப்பார். அது எவ்வளவு உங்களுக்குப் பயன்படும் என்பது வேறு விஷயம். மூன்றாவது, எல்லையற்ற எண்ணங்களை எழுதிச் செல்வது. பக்கங்களின் கட்டுப்பாடு இல்லையென்பதால் நீங்கள் எழுத நினைப்பவற்றை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் எழுதிச் செல்லலாம். இது ஒருவகையில் மனவெழுச்சி சார்ந்த எழுத்துகளை வளர்த்தெடுத்திருக்கவேண்டும். ஆனால் அது நிகழவில்லை. மீண்டும் மீண்டும் குறிப்புகள் போன்ற விஷயங்களே காணக் கிடைக்கின்றன. இந்த தேக்க நிலை மறைந்து, தமிழ் அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகைகள் நிகழ்த்திய பெரும் மாற்றத்தை, பாய்ச்சலை உண்டாக்கக்கூடிய எல்லா வசதிகளும் இணைய உலகம் பெற்றிருக்கிறது. அது முழுமையாக, செறிவாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே விஷயம். சுஜாதா ஒருமுறை வலைப்பதிவுக்களை '15 நிமிடப் புகழுக்கு எழுதப்படும் டைரிக் குறிப்புகள்' என்று சொன்னார். இது பெரும் கொந்தளிப்பை வலைப்பதிவர்களிடையே ஏற்படுத்தினாலும், அதிலிருக்கும் உண்மையை அவர்கள் உணரத் தலைப்பட்டால், பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு யானையின் அவலம் நமக்குப் புரியலாம். அப்போது 'செய்தி ஊடகம்' என்று மட்டுமே இப்போது வரையறுக்கமுடியக்கூடிய வலைப்பதிவுலகம் மாற்று ஊடகம் என்கிற நிலையை அடையலாம். அடையவேண்டும் என்று ஒரு வலைபதிவுலக எழுத்தாளனாக பெரிதும் விரும்புகிறேன்.


சில திரட்டிகள் (அலெக்ஸா ரேட்டிங் அடிப்படையில். இதைச் சொல்லவில்லை என்றால் பெரிய வெட்டுக்குத்து நடக்கும் வாய்ப்புண்டு.)

http://www.thamizmanam.com/
http://www.thenkoodu.com
http://tamilblogs.com/a/index.php
http://www.tamilveli.com/
http://www.thamizhbharathi.com/



பரவலான இணைய உலக பயன்பாடுகள்

கும்மிப் பதிவுகள்
மொக்கை பதிவுகள்
ஆணி பிடுங்குதல்
பொட்டி தட்டுதல்
பின்னூட்டாங்கள்
அனானி
எலிக்குட்டி சோதனை
உள்குத்து
முதுகு சொறிதல்
சுய சொறிதல்
சுட்டி
உரல்
ஓடை
டிஸ்கி


இணைய உலகில் பயன்படும் நகைப்புக்குறிகள்

அரட்டை (Chat) அடிக்கும்போது பயன்படுத்தப்படும் நகைப்புக்குறிகள் (Smileys) வலைப்பதிவுலகிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. நீங்கள் வலைப்பதிவுலகில் அடிக்கடி :) :)) :P :> :( :(( X-( :D போன்ற குறியீடுகளைச் சாதாரணமாகப் பார்க்க நேரிடலாம். இது தமிழ் எழுத்துலகம் பெற்றிருக்கும் இன்னொரு விஷயம்! இனி வரும் காலத்தில் எந்த எழுத்திலும் இந்த நகைப்புக்குறிகள் இடம்பெறும் அளவிற்கு அசுர வளர்ச்சி அரும் அடைந்துவரும் இவற்றின் பயன்பாடுகளை அறிய இணையத்தில் மேயவும்.

நன்றி: தமிழினி மாத இதழ், ஜனவரி 2008.

8 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள பல விஷயங்களுடன் எனக்கு உடன்பாடுண்டு. குறிப்பாக, யாருடைய மட்டுறுத்தலோ / நிராகரித்தலோ இல்லாததால் எழுதுபவை எல்லாமே சிறந்ததாகத் தோன்றும் ஒரு மாயை.

ஆனால் விவாதங்களைப் பற்றி நீங்கள் சொல்வது (தனிமனிதத் தாக்குதல் etc) சிறு பத்திரிகைகளுக்கும் பொருந்தும் தானே.

எல்லா வித ஊடகங்களிலும் சீரியஸான விஷயங்கள், வெகு ஜனங்களுக்கானவை என்பது இருக்கவே செய்யும் (சினிமா, அச்சு ஊடகம்...). அதேதான் வலைப் பதிவுகளிலும் இருக்கிறது.

இன்னொன்று, மனவெழுச்சியான எழுத்து என்று எதைச் சொல்கிறீர்கள். எவ்விதமான எழுத்தும் மனவெழுச்சி இன்றி சாத்தியமா என்ன. நீங்கள் நீளமாக எழுதிப் பழக்கப் பட்டவர்களை மனவெழுச்சி சார்ந்த எழுத்தாளர்களாய்ப் பார்க்கிறீர்களோ என்று தோன்றுகிறது.

சிறு பத்திரிகைகளில் எழுதாமலே ஒரு தளத்திற்கு மேலேயே வலைப் பதிவுகளில் எழுதுபவர்கள் உண்டு (எனக்குத் தெரிந்து அய்யனார், ரோசா வசந்த்). ஆனால் எல்லாவற்றையும் எழுத்தாக்கிப் பார்க்கும் அபாயம் இவர்களிடமும் உண்டு.

வலைப் பதிவுகளின் ஒரு முக்கியமான விஷயமாக எனக்குத் தோன்றுவது feed back. இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சாத்தியமில்லாததாகவே இருந்தது அச்சு ஊடகப் பத்திரிகைகளில். இன்னொன்று, ஒருவருடைய எல்லா எழுத்துகளையும் ஒரே இடத்தில் வாசிக்க முடிவது.

சிறு பத்திரிகைகளில் இயங்கிக் கொண்டிருந்த / கொண்டிருக்கும் சிலர் (வளர்மதி, ஜமாலன், சுகுணா திவாகர் போன்றவர்கள்) இப்போது வலைப் பதிவுகளிலும் தொடர்ந்து இயங்குகிறார்கள். இன்னமும் அது வளர வேண்டும் என்பதே என் அவா.

ஹரன்பிரசன்னா said...

ஜ்யோவ்ராம், நீங்கள் சொல்வது உண்மை. சிறுபத்திரிகைகளிலும் தனிமனிதத் தாக்குதல் உண்டு. குறைந்தபட்சம் அச்சுப் பத்திரிகைகளில் யார் தாக்குகிறார்கள் என்பது தெரியும். அதுமட்டுமின்றி, மட்டுறுத்தல் இருப்பதால் நாகரீகமற்ற கொச்சை மொழிகள் அச்சில் அரங்கேறுவதில்லை.

உடனடி மறுமொழியே வலைப்பதிவுகளை உயிருடன் வைத்திருக்கிறது. இதிலும் நீங்கள் சொல்வது உண்மையே.

நன்றி, பிரசன்னா

பிரகாஷ் said...

இணையத்தில் தமிழை எழுதத் தெரிந்திருந்தால் போதும் என்கிற
குறைந்தபட்சத் தகுதியைக் கொண்ட வலைப்பதிவர்களின் எண்ணிக்கை
கூடிக் கொண்டேயிருக்கிறது.
பாரதியைக்கூட முழுமையாகப் படித்திராத ஒரு தலைமுறை
அதைப்பற்றிய எந்த மன உறுத்தல்களும் இல்லாமல்,தங்களது படைப்புகளை வலையுலகில்
பொழிந்து கொண்டிருக்கிறது.
திரட்டிகள் பொத்தாம் பொதுவில் எல்லாப் படைப்புகளையும்
குப்பையைக் கொட்டுவது போல் கொட்டாமல்
தரம் பிரித்து வெளியிட்டால் வாசிப்பவர்கள் பயன்பெறுவர்.
நல்ல எழுத்துக்களை காலம் பொக்கிஷப் படுத்தும்.
எண்ணிக்கையில் கூடிக்கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள்
வளர்ச்சியல்ல. வீக்கமே.
மற்றபடி நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தி, உலகின் எந்த மூலையிலிருந்தாலும்
நல்ல எழுத்துக்களை வாசிக்கவும், படைக்கவும் வலையுலகம் அளிக்கும் வசதி அளவில் சொல்லமுடியாததே.

Mohandoss said...

//சுஜாதாவின் முறையைத் தாங்கள் பயன்படுத்தும்போது அது ஒரு செயற்கைத் தன்மை வாய்ந்ததாகிவிடுகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்கள் நகரும் புள்ளி, அதற்கு மிகவும் எதிர்த்தன்மை கொண்ட, விளங்கிக்கொள்ள முடியாத எழுத்துகளாகி விடுகிறது.//

ஹெஹெ.....

Anonymous said...

சிறு பத்திரிகை வாசகர் வட்டத்திற்கான அரிமுகம் என்கிர வகையில் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனாலும் அச்சு ஊடகம், இலக்கியத் தரத்தினோடான ஒப்பீடு அடிப்படையில் உங்கள் எதிர்பார்ப்புகளாகவே தோன்றுகிறது. அதை எதிர்பார்ப்பாக நீங்கள் முன் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாறாக விமர்சனமாக்கிவிட்டீர்கள்.

யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்கிறபோது அது சாமான்யனுக்குமான தளமாகிறது.

எழுதுவதெல்லாம் இலக்கியமாயும், அச்சு வடிவத்திலும், மட்டுறுத்தலுக்குப் பின்னும் வெளிவரவேண்டும் என நினைப்பது ஒரூ புதிய களத்தை முற்றிலும் புரிந்து கொள்ளாத பார்வையாகவே படுகிறது.

மட்டுறுத்தல் என்பது எதற்கு? ஒரு ஆசிரியர் தன் வாசக வட்டத்திற்கேற்ப படைப்பை ஏற்கிறார், நிராகரிக்கிறார் திருத்துகிறார். இதை பதிவர்கள் தாங்களே செய்கிறார்கள்.

ஒரு பத்திரிகை ஒருவரின் படைப்பை நிராகரிக்க அந்த படைப்பின் தரம் மட்டும் காரணமல்ல (ஏற்றுக்கொள்ளவும் அப்படியே).

விகடன் ஆசிரியர் மட்டுறுத்தாத எழுத்தாளரெல்லாம் எழுத்தாளரா, என கேட்க ஆரம்பித்தால் எவரும் எழுதவே முடியாது.

இணைய எழுத்து அதன் எளிமைக்காகவே விரும்பப்படுகிறது. ஒரு ப்உத்தகத்தை எடுத்துக் கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து படிப்பது போல இதை படிக்க முடியாது. ஆழமான கருத்துக்களை இங்கே படித்துணர்வது கடினம். ஒரே ஒரு விண்டோவை திறந்து வைத்துக்கொண்டு படிப்பவர்கள் ரெம்ப குறைவு. டிஸ்ட்ராக்ஷனுக்கு மத்தியில், அலுவலுக்கு மத்தியில், சட்டென படித்து உனர்ந்து 'மன எழுச்சி' பெற பதிவுகல் உதவுகின்றன.

மன எழுச்சி எஸ் எம் எஸ் ஜோக்கிலிருந்தும் பெற இயலும் என்பது என் நம்பிக்கை. 1000 வார்த்தை கதைகளில் கிடைக்கும் இன்பம் ஒற்றை வரி ஜோக்கில் கிடைத்தால் தவறென முடியுமா?

பதிவுகளில் யார் வேணும்னா என்ன வேணும்னாலும் எழுதலாம் எனும் விதி மட்டுமே.. எழுதக் கூடத் தேவையில்லை.. பேசலாம், பாடலாம், படம் போடலாம்..

you tube படமெல்லாம் சிவாஜி மாதிரி இல்லையே என கவலைப் பட மாட்டீர்கள் என நம்புகிறேன்.

சிறு பத்திரிகை ஆசிரியரோ, வாசகரோ, இலக்கியவாதியோ, கம்யூட்டர் தெரிந்த பெட்டிக்கடை காரரோ அனைவரையும் எழுத ஊக்கப்படுத்தவேண்டும்.

இவர் சொல்றதுதான் கருத்து இதுதான் எழுத்து என்கிற எல்லைகள் விரிவடைய வேண்டும். இப்படிப் பட்ட பக்கப் பார்வைகள் குறுகியவை.

எனக்குப் பிடித்ததுதான் சிறந்தது எனும் எண்ணம் நமக்கெல்லாருக்குமே உள்ளது. அது தவறானது என உணரூம்போது பார்வை இன்னும் பெரிதாகிறது.

உங்கள் விருப்பம் போல எழுதுங்கள். ஹரன் இப்படித்தான் எழுதுவார் என்கிற எல்லைகளை கடந்து பாருங்கள். You may rediscover yourself. Or just feel better about how you are now. :)

ஜமாலன் said...

வலைப்பதிவுலம் எதேச்சையாக எட்டு மாதங்களுக்கு முன்புதான் விபத்தாக எனத கணிப்பொறித் திரையில் வந்தது. ஆச்சர்யத்தடன் படித்தவுடன்... மறுநாளே சோதணையாக ஒரு பதிவை போட்டுப் பார்த்தேன். அது தொற்றிக் கொண்டுவிட்டது. போகட்டும் இந்த குறுகிய காலத்தில் அதன் ஆழ அகலங்களை முழுதாக வாசித்ததில்லை, இருப்பினும் உங்களது கருத்து எனது பதிவுலக அனுபவத்தில் உருவான உணர்வுகளை பிரதிபலிக்கிறது. ஆழமாக பதிவுலகை உள்வாங்கி மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் எழுதியுள்ளீர்கள்.

பதிவுலகம் ஒரு மாற்று ஊடகமாக வருமா? என்பது இன்னும் எனக்குள் சந்தேகத்திற்குரிய ஒரு பிரச்சனையாகவே உள்ளது. காரணம் பதிவுலக எழுத்தை அச்சிற்கு கொண்டு செல்லும்போது வாசகர் பற்றிய புரிதலுடன் அதனை சீரமைக்க வேண்டிய சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனது பதிவுகளையும் உள்ளடக்கிய எனது கட்டுரைத் தொகுப்பை உருவாக்கும் பணியில் இந்த சிரமத்தை உணர்கிறேன். பதிவலகம் என்பது உடனடி மனவெழுச்சி சார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. அச்சு என்பதற்கு இருக்கும் காலமும் வெளியும் சற்று பரந்தது. நிதானமானது. அறிவால் அசைப்போடப்படுவது. பதிவுலகம் உடனடித் தன்மை கொண்டதாக உள்ளது. உடனடியாக நாம் பெறும் பின்னோட்ட வசதியும் நமது கருத்தை உரசிப் பார்ப்பதற்கான வசதியும் இதில் உள்ள ஒரு வரப்பிரசாதம்தான். இதிலும் உள்ள சிக்கல் சிலவேளைகளில் பதிவெழுதும் எண்ணததையே சிதைத்து விடும் அபாயமும் உருவாகுகிறது. ஹிட் லி்ஸ்ட் என்கிற மனோபாவம் வளரவளர... எழுத்தும் நீர்த்து போகும் அபாயம் உருவாகுகிறது. அதனை நீங்கள் நன்றாகவே சுட்டியுள்ளீர்கள்.

அதேசமயம் பதிவுலகம் தரும் அலாதியான சுதந்திரம் என்பது சிந்தனை குறித்த உருவகத்தையே அடிப்படை புரிதலையே மாற்றி விடக்கூடியது.

அனானி முன்வைத்துள்ள பல கருத்துகளும் உங்களது பதிவின் தொடர்ச்சியாக இணைத்து வாசிக்கப்படவேண்டியவைதான். மற்றபடி குழு அரசியல், புகழ்போதை, அதிர்ச்சி மதிப்பு, என்பதெல்லாம் எல்லா இடங்களிலும் உள்ள குணாதிசியம்தான். தமிழில் அது அதிகம். எழுத்தையும் மொழியையும் அதிகார பீடங்களிலிருந்து அடித்து இறக்கிய ஒரு கலக அமைப்பாவே இதனை பார்க்கலாம் என்றாலும், இதில் சிக்கல்களும் இருக்கத்தான் செய்கிறது?

அன்புடன்
ஜமாலன்.

ஹரன்பிரசன்னா said...

ஜமாலன், உங்கள் கருத்துக்கு நன்றி. கொஞ்சம் முயன்று எழுத நினைக்கும் யார்க்கும் வலைப்பதிவுலகம் சார்ந்த ஏமாற்றங்கள் நிச்சயம் இருக்கும் என்பதே என் கணிப்பு. அதை மீறி அதிலிருக்கும் நல்ல விஷயங்களை, நாளைய நம்பிக்கைகளை அவர்கள் முன்வைக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.

நன்றி.

Anonymous said...

அதிகம் அறியப்படாத தீவிர வாசகர்கள் வலைப்பதிவுகளில்
எழுதுகிறார்கள் உ-ம் டி.சே.தமிழன்,
வளர்மதி.வேறு சிலர் திரைப்படங்களை, நூல்களை விரிவாக அலசி எழுதுகிறார்கள்
உ-ம் மதி கந்தசாமி.சன்னாசி போன்றவர்கள் அபூர்வமாக எழுதினாலும் அதில் புதிய பார்வை,
தனித்துவம் தென்படும். இதை எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன்
போன்றவர்களிடம் பார்க்க முடியாது.
இன்னும் சிலர் நிகழ்கால போக்குகளை அலசுவதை
சிறப்பாக செய்கிறார்கள் உ-ம் பத்ரி,
வெங்கட். இப்படி வலைப்பதிவர்களில்
பல்வேறு ரசனைகள், சிந்தனைப் போக்குகள் வெளிப்படுகின்றன.
சுஜாதாவைத் தாண்டி இவர்கள்
எங்கோ சென்றுவிட்டார்கள்.
ஹரன் பிரசன்ன சுஜாதாவில்
நின்று கொண்டிருந்தால் யார்
என்ன செய்ய முடியும். சுஜாதாவால்
ஜமாலன் ஹே ராமிற்கு எழுதிய
விமர்சனம் போல் ஒன்றை என்றுமே
எழுத முடிந்ததில்லை. இது ஏன் என்று யோசித்து பார்த்துண்டா.
ஈழத்தமிழர்களின் வலைப்பதிவுகள்
காட்டும் உலகங்களை, அனுபவங்களை
தமிழ்நாட்டு சிற்றிதழ்,பெரிதழ்களில்
காண முடியாது. உள்ளடக்கத்தில்
வலைப்பதிவுகள் போக வேண்டிய
தூரம் அதிகம். இது 70 ஆண்டுகால
பாரம்பரியம் உள்ள சிறுபத்திரிகைகளுக்கும் பொருந்தும்.
வலைப்பதிவுகள் தமிழில் இன்றைக்கு எதையெல்லாம் எழுத முடியும் என்பதை காட்டுகின்றன. 4/5 ஆண்டுகளில் இது சாத்தியமாயிருக்கிறது,
எந்த ஒரு சிறு பத்திரிகை/ஜாம்பவான்
ஆதரவில்லாமல்.சுஜாதா வலைப்பதிவுகளை எதிர்கொள்ள முடியாமல் வெறுப்பினை எழுதியவர்தான்.
ஆனாலும் இன்னும் சிலர் தமிழில்
எழுத்தாளர்கள் என்றால் கனி மொழியில் ஆரம்பித்து, இறையன்பில்
முடிக்கிறார்கள். இவர்களால் சக
வலைப்பதிவாளர்களில் உள்ள படிப்பாளிகளை/எழுத்தாளர்களை
அடையாளம் காண முடியாமல்
தடுப்பது எது?