Sunday, November 30, 2003

பென்சில் படங்கள்- ஞானக்கூத்தனின் சமீபத்திய கவிதைகள் தொகுப்பு. ஞானக்கூத்தனுடனான மாலனின் நேர்முகத்தைப் பற்றி பத்ரி அவரது வலைக்குறிப்பில் எழுதியிருந்தார். திண்ணையும் கமல்ஹாசன் படித்துக் கண்ணீர் விட்ட கவிதை என்கிற குறிப்போடு அந்தக் கவிதைத்தொகுப்பைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தந்திருந்தது.

சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா டுடேயில் அபி எழுதிய பென்சில் படங்கள் மீதான கட்டுரை.

சித்திரமும் கேலிச்சித்திரமும்
-- அபி

கவிதை எப்படி இருக்க வேண்டும்? இது என்ன கேள்வி, அது கவிதையாக இருக்கவேண்டும். பெயர், புகழ், உள்-வெளி வட்டங்கள் ஆகிருதிகள் தாண்டி கவிஞனை மதிப்பிட இந்தப் பொது அளவுகோல் போதுமானது.

ஞானக்கூத்தனின் முழுத் தொகுப்புக்குப் பின்னர் வந்திருக்கிறது 87 கவிதைகள் அடங்கிய "பென்சில் படங்கள்". "அமெரிக்க அசலும் நம்மூர் நகலும்"என்று ஞானக்கூத்தன் மீது பிளேஜியாரிச குற்றச் சாட்டைத் தொடுத்த (சம்பந்தப்பட்ட கவிதை: பறவையின் பிணம்) ஒருவித குரோதத்துக்கும் "படிப்பவருக்குப் பரவசமூட்டும்", "புதிய அனுபவத்தை உண்டாக்கும்"என்ற புல்லரிப்புப் புகழ்ச்சிக்கும் நடுவே நின்று ஞானக்கூத்தனை மதிப்பிட நீண்ட நடுவெளி நிச்சயமாக இருக்கிறது.

ஒரே மூச்சில் படித்து முடியக்கூடியவை கவிதைகளாகவும் இருக்க முடியும் என்றால் அதற்கு உதாரணம் ஞானக்கூத்தன் கவிதைகள். சுளுவும் நளினமும் ஐரனியும் அந்தக் கவிதைகளுக்கு எந்த வழியாக வந்து சேர்கின்றன என்று யோசிக்க நேர்வதுண்டு. பெரிய ஆழங்களை யாரும் அவரிடம் எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் அங்கங்கே எளிய சொற்களில் திடுக்கென ஏதோ ஒரு ஆழம் ஒரு அலட்சிய பாவத்தைப் போர்த்துக்கொண்டு தோன்றுவதுண்டு. அவர் தேடிப் போகாமல் அது தேடி வந்தது என்று சொல்ல முடியும். யேசுவின் சிலுவையை நிர்பந்தமாகப் பறித்து/சுமந்து பார்த்தேன்/யேசுவின் சிலுவையில் பாரமே இல்லை/அவர்தான் முன்பே சுமந்துவிட்டாரே என்ற வரிகளில் இது தெரியும். அந்தக் கவிதைக்கு இருந்திருக்க முடியாத ஒரு கனம் இந்தத் "தான் தோன்றி"வரிகளில் வந்துவிடுகிறது. சரி, ஞானக்கூத்தனுக்கு இணையாக, அவருடன் வந்து, அவரைத் தாண்டு கண்சிமிட்டிப் போகும் கவித்துவ அடையாளங்கள் இந்தத் தொகுதியில் முழுக்க முழுக்கக் குறைந்துவிட்டன என்பதுதான் வாசகனின் முகத்தில் அறையும் உண்மை.

இவை எல்லாம் கவிதைதானா என்று கேட்கச்செய்யும் கவிதைகள் இந்தத் தொகுதியில் நிறைந்திருக்கின்றன. மேம்பாலங்கள், பலமரணஸ்தர், என்ஜின் கொட்டகை, படியும் பிராமணரே படியும், பூகம்பம் (என்ன ஒரு வளவளப்பு..!) .. பட்டியல் நீண்டு போகிறது. ஆரம்பம், நடு, முடிவு என்ற ஆரம்பப் பள்ளிக் கட்டுரைகளின் அமைப்பில் "கவிதை"படிக்க நேர்வது கொடுமை. (ஞானக்கூத்தனுக்கு "மனைவியைக் கனவில் காணும் வாழ்க்கை"யே கொடுமை). பென்சில் படங்கள், வெள்ளத்தனைய மலர்நீட்டம், சிம்மாசனம் போன்ற கட்டுரைகளுக்குத் துணையாக நிறைய கதைகள் ஆடிப்பாடிப் பேசிக்கொண்டு திரிகின்றன. ஆடிகாற்று, வெளிச்சம் வந்தது, சூன்ய சம்பாதனை, பங்க்கா புல்லர், துரத்தும் எண்கள்... நிகழ்வுகள், அவற்றைப் பற்றிய வர்ணனைகள் - என்னமாய்ப் பொங்கிப் பெருகிகிறது எழுத்து! ஆரம்பித்தபின் ஞானக்கூத்தனின் பொறுப்பிலிருந்து அறுத்துக்கொண்டு போகிறது அசிரியச்சந்தம். அங்கங்கே தட்டுப்படும் சுவாரஸ்யங்கள் கவிதையின் முடிவிடத்தைத் தாண்டு தள்ளிக்கொண்டு போகின்றன. சொல்லில், சந்தத்தில் பிடிபடாத கனம் சூழலில் பிடிபட்டது அன்று. இன்றோ சூழல் தானும் வாய் ஓயாமல் பேசுகிறது. அன்றைய "பறவையின் பிண"த்துடன் இன்றைய "ஓர் இரண்டு சக்கரவண்டியின் கதை"யை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும்.

"நீலமசியை இந்தப் பூக்களின் இதழ்களில் துடைத்துக்கொண்டது யார்?" , "சும்மா நிற்கவும் காலுக்குக் கீழே தண்டவாளங்கள் வைத்திருக்கும் என்ஜினைப் போலொரு ஜீவன் உண்டோ?", "மிதிபடும் ஒன்று வெல்கம் சொல்லுமா?" (மிதியடி) - இவை ஞானக்கூத்தனின் வரிகள் என்று நம்புவது கடினமாக இருக்கிறது. பல கவிதைகள் முந்தைய நல்ல கவிதைகளின் கேலிச்சித்திர நகல்களாகக் காட்சி தருகின்றன.

"மரபைச் சோதித்துத் தமிழ்க்கவிதையை போஷிப்பது"ஞானக்கூத்தனின் லட்சியமாம். "ஆய்தொடி நங்கோய்", "அடேய் ஆய் அண்டிரா", "யாம் உம் கிழத்தி", "அழுங்கல் மூதூர்" - இந்தப் பழந்தமிழ்த் தொடர்களை இரசிக்கமுடியாத நையாண்டிக்குப் பயன்படுத்தி மரபை நன்றாகவே சோதித்திருக்கிறார். இதில் கம்பராமாயண மேற்கோளில் அர்த்தச் சறுக்கல் வேறு! "வன்மருங்கல் வாள் அரக்கர்" - இது அரக்கியர் என்று இருக்கவேண்டும்.

ஞானக்கூத்தனின் சுவாரஸ்ய மோகத்தைத் தாண்டிக்கொண்டு பிறந்திருக்கிற மிகச்சில நல்ல கவிதைகள் இந்தத் தொகுதியில் உண்டு. அப்பா குறுக்கிட்ட அந்தக் கதை, கண்டான் இல்லாத சொப்பனம் (நீளத்தைப் பொருட்படுத்தத் தோன்றாத ஒரே கவிதை), சுவர்க்கடிகாரம், கரடித்தெரு, பத்திரப் பகிர்வுகள், லூசிக்ரே போன்றவை அவை.

உள்ளடக்கம் இன்னது, இவை என்று வரையறுக்க முடியாமலிருப்பது படைப்பாளிக்கு குறைபாடு அன்று. ஞானக்கூத்தனின் இந்த யதேச்சைத்தன்மை இந்தத் தொகுதியிலும் தெரிகிறது. ஆனால் யதேச்சையின் பழைய அம்சங்களே திரும்பவும் வருகின்றன. இந்தமுறை நீர்த்த வடிவத்தில்! ஞானாட்சரியும் பாரிசும்தான் புதியவை போலும். ஞானாட்சரி ஏதாவது சொல்ல - செய்யவேண்டும். ஞானட்சரி சொன்னால் ஞானக்கூத்தன் கேட்பார்.

நான் எழுதுகிறேன் என்றா பிரக்ஞை பூத நிழலாய் ஞானக்கூத்தன் மீது கவிந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரே மூச்சில் படித்து முடியக்கூடியவை பெரும்பாலும் கவிதைகளாக இருப்பதில்லை என்ற பொதுவிதிக்கு உதாரணம் சொல்லவும் நாம் ஞானக்கூத்தனையே (இந்தத் தொகுதியைப் பொறுத்த வரை) சுட்டிக்காட்ட நேர்கிறது.

நன்றி: இந்தியா டுடே

Saturday, November 29, 2003

நேற்றைய இரவு
---ஹரன்பிரசன்னா

வழுக்கும் வரப்பில்
கால்குத்தி நிறுத்திய
கண்ணாடி வளையலின் ஒரு துண்டு
- கால்கள் பின்னியிருந்ததை
- வெம்மை பரிமாறப்பட்டதை
- வெற்றுடல்களின் போர்வையாய் இருள் இருந்ததை
நேற்றிரவுக்குள் தள்ளுமுன்
நினைத்தேன்-
கண்ணுள்ள பானைத்தலை
கந்தல் வெள்ளையாடை
வெக்கங்கெட்ட சோளக்காட்டு பொம்மை
கண்மூடியிருக்காது என.
தீப்பெட்டிக்குள்...
--ஹரன்பிரசன்னா

மரக்குச்சிகள் சுமந்து
மரத்துப் போயிருந்த தீப்பெட்டி
உயிர்த்திருக்கிறது

சிணுங்கிவிட்டுக் காணாமல் போன தூறலில்
நிமிர்ந்த பசுந்தளிர்களின் வழியே
நடந்து, நனைந்து
சுகித்திருக்கவேண்டிய பொன்வண்டு
சிறையிடப்பட்டிருக்கிறது

படுத்துக்கொள்ளப் புல்மெத்தை
எப்போதும் போர்த்தியிருக்கும் மேலட்டை
அவ்வப்போது வானம்
இது போதாதா?

திறக்கவும்
முன்னிரு கொம்புகள் அலையவும்
பிஞ்சு முகம் சிரிக்கவும்
இலக்கியமென்க

விடுதலை வேண்டும் வண்டு
இணைகூடாமல்
மூச்சுமுட்டி இறக்குமானால்
சொர்க்கம் சேரும்
நிச்சயம்.

Friday, November 28, 2003

ஒரு காதல் கதை
---ஹரன் பிரசன்னா

னக்குப் பாண்டிமாரோடு இருந்த கோபங்கள் எல்லாம் இப்படிச் சடாரென நீர்த்துப் போகும் என்று கிருஷ்ணன் பிள்ளை எதிர்பார்க்கவேயில்லை. இத்தனை நாள் தனக்கிருந்த இனவெறியால் சிந்திக்க முடியாமல் போனதை நினத்து வருந்தும் வேளையில் நிஜத்தைத் தெரியவைத்தச் சொர்ணலதாவுக்கு நன்றி சொல்லிக்கொண்டான். நன்றி சொல்லத் தேவையில்லை என்றது அவனது உள்மனம். மூன்றாம் நபர்களுக்குள் இருக்கவேண்டிய
ஒரு சொல் அவர்களுக்கிடையில் வருவதை அவன் அறவே விரும்பவில்லை.

கிருஷ்ணன் பிள்ளை, தனது காதலை சொர்ணலதாவிடம் சொல்லி மூன்று நாள்தான் ஆயிருக்கும். அவளும் நாணிக் கோணி வெட்கி அதை ஏற்றுக்கொண்ட நிமிடம் சடாரென வானத்தில் நீந்தி, மேகத்தைக் கிண்டல் செய்து விட்டு, சூரியனை முறைத்துவிட்டு, நிலவிடம் சேதி சொல்லிவிட்டுத் தரைக்கு வருவதற்குள் சொர்ணா கம்ப்யூட்டர் சென்டரை விட்டு, வெட்கத்தையும் சேர்த்தெடுத்துக்கொண்டு, ஓடிப்பொயிருந்தாள். சொர்ணலாதவை கடந்த மூன்று நாளாய் சொர்ணா என்றுதான் கூப்பிட்டான் கிருஷ்ணன் பிள்ளை. அதை இரசித்தாள் சொர்ணா என்பதை அவன் அறிந்தபோது இனித் தொடர்ந்து அப்படியே கூப்பிட முடிவு செய்தான். அவன் என்ன சொன்னாலும் அவள் சிரித்தாள். அவர்களுக்குள் மூன்று வருடங்கள்.. இல்லை இல்லை... முப்பது வருடங்கள் காதல் இருந்ததாய்த் தோன்றியது அவனுக்கு.

கலமசேரியில் மலையாளக் குட்டிகளை சைட் அடித்துக்கொண்டு தனது இளவயதைக் கழித்துக்கொண்டிருந்த கிருஷ்ணன்பிள்ளைக்குக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் திருநெல்வேலியில் வேலை கிடைத்தது. போயும் போயும் பாண்டிமாரோடு வேலை பார்க்கப்போறியா என்ற கூட்டுக்காரர்களின் கிண்டலையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தமிழ் மண்ணை மிதித்தான். அன்று அவனிருந்த மனநிலையில் அவனிடம் யாராவது நீ ஒரு தமிழ்ப்பெண்ணைத்தான் மணக்கப்போகிறாய் என்று சொல்லியிருந்தால், சொல்லியது யாரானலும், காறி உமிழ்ந்திருப்பான். அதற்குக் காரணம் இருந்தது. அவன் அதுவரை சொர்ணாவைச் சந்தித்திருக்கவில்லை.

மலையாளி கொலையாளி; மலைப்பாம்பை நம்பினாலும் மலையாளத்தானை நம்பாதே என்று எல்லோரும் அவன் காது படப் பேசுவதெல்லாம் பழகிப் போய், எல்லாம் தன் தலையெழுத்து என்று மனம் நொந்த ஒரு நிமிடத்தில்தான் சொர்ணலாதவைச் சந்தித்தான்.
அவள் கண்கள் பேசுவதைக் கண்டு கொஞ்சம் வசமிழந்த மனசை அதட்டு உருட்டி - ஆ குரங்கி தமிழானு - அடக்கி வைத்தான். அவள் ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து அளந்து கொணட்டி கொணட்டிப் பேசினாள். ஏஸியும் ஏர் ·ப்ரெஷ்ணரின் மணமும் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர்கள் நிறைந்த அறையும் அவளை படபடப்பாக்கியிருக்கலாம். தினம் தினம் எத்தனை பெண்களும் பையன்களும் இப்படி வந்து போகிறார்கள்..

"சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +.."

அவளின் ஆங்கிலம் கண்டு கிருஷ்ணன்பிள்ளை சிரித்துக்கொண்டான். ஆனால் வெளியில் யாரிடமும் சொல்ல முடியாது. உடனே தமிழன்மார்கள் எல்லாம் லோரி என்றும் ஸோரி என்றும் கோப்ம்பெனி என்றும் ஆரம்பித்துவிடுவார்கள் என அவனுக்குத் தெரியும். ஒருவழியாய் தனக்குத் தெரிந்த தமிழில் சொல்லி அவளுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டு அவளைச் சேர்த்துக்கொண்டான். கிருஷ்ணன் பிள்ளை நினைத்திருந்தால் சொர்ணலதாவுக்கு கொஞ்சம் கூடுதல் டிஸ்கவுண்ட் கொடுத்திருக்கலாம்தான். தமிழச்சிக்குப் போய் கொடுப்பானேன் என விட்டுவிட்டான்.

இபோது கிருஷ்ணன் பிள்ளைக்கு, அன்று டிஸ்கவுண்ட் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. அவளைக் கண்ட முதல் நாள் முதல் நேற்று முதல்நாள் சொன்ன ஐ லவ் யூ வரைக்கும் ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்துக்கொண்டான்.

"சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +.."
"சார்.. நான்.. இங்க.. ஐ வாண்ட் ·பார் சி சி +.."எனத் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துச் சிரித்துக்கொண்டான். இன்று உறங்குவோம் என்று கிருஷ்ணன் பிள்ளைக்குத் தோன்றவில்லை.

கிருஷ்ணன்பிள்ளை காதல் அவனை இந்தப் பாடு படுத்தும் என எதிர்பார்க்கவில்லை. மிகுந்த பிரயாசைக்குப் பின் தூங்க ஆரம்பிக்கும்போது கனவில் சொர்ணா வந்து, "என்ன தூக்கம் வரலியா?"என்பாள். இவன் உடனே, "நீ பறையுன்ன தமிழ் எத்தற சுகமானு அறியோ?"என்பான். இப்படி மாறி மாறி ஆளுக்கொரு பாஷயில் கதைத்து முடிக்கும் போது காலை விடிந்திருக்கும். இல்லையென்றால் கனவில் அவள் வந்து "அஞ்சனம் வெச்சக் கண்ணல்லோ மஞ்சக் குளிச்ச நெஞ்சல்லோ"என்பாள். இவன் பதிலுக்கு "இனிக்குந் தமிழ் சுந்தரியே மலையாளத்தில் கொஞ்சுறியே"என்பான். இப்படியே பாடிப் பாடி காலை விடிந்திருக்கும்.

இன்றைக்கு காலையில் நேர்ந்த அந்தச் சம்பவத்துக்குப் பின் , இனித் தூங்கக்கூட முடியாது என்று தோன்றியது கிருஷ்ணன் பிள்ளைக்கு. அவன் இன்னும் தன் புறங்கையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான். இதுவரை இல்லாத ஒரு மிருதுத்தன்மை அவனது புறங்கைக்கு எப்படி வந்தது என்ற ஆச்சரியம் இன்னும் அடங்கவில்லை. காலையில் கிருஷ்ணங்கோவிலுக்குப் போயிவிட்டு வரும்போது தெரியாத்தனாமாக சொர்ணாவின் புறங்கையில் அவன் புறங்கை பட்டுவிட்டது. அதிர்ந்து போனான் கிருஷ்ணன் பிள்ளை. சொர்ணாவும் ஒரு நொடி அதிர்ந்தாள். பின் வெட்கப்பட்டுச் சிரித்தாள். கிருஷ்ணன் பிள்ளை தான் ஒரு கவிஞனாய் இல்லாமல் போய்விட்டோமோ என்று முதன்முறையாக வருந்தினான். இருந்திருந்தால் அப்படியே காதல் ரசம் சொட்டச் சொட்ட அந்த நிமிடத்தையும் சொர்ணாவின் வெட்கத்தையும் வார்த்தைகளில் கொட்டியிருப்பான்.

கையின் புறங்கையை முகர்ந்து பார்த்தான். எங்கிருந்தோ காற்றில் "சந்தனத்தில் கடஞ்செடுத்தொரு சுந்தரி சில்பம்"என்ற வரிகள் மிதந்து வந்தது. சொர்ணா வெள்ளைப் பட்டுடுத்தி சந்தனக் கீறலிட்டுச் சிரித்தாள். கிருஷ்ணன் பிள்ளை வெள்ளைப் பட்டில் முண்டுடுத்தி மோகமாய் அவளை நெருங்கினான். அவள் "வேண்டாம்.. வேண்டாம் "எனச் சிணுங்கினாள். அவளின் சிணுங்கல் அவனை மேலும் தூண்ட... அந்த நேரத்தில் போன் ஒலிக்காமல் இருந்திருந்தால் அவளை முத்தமிட்டிருப்பான். ஏக எரிச்சலில் போனை எடுத்தான். கிருஷ்ணன்பிள்ளையின் அம்மா அழுதுகொண்டே அவனது பாட்டி இழுத்துக்கொண்டிருப்பதாய்ச் சொன்னாள். கிருஷ்ணன் பிள்ளைக்கு ரொம்ப வருத்தம் மேலிட்டது. அவனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த பாட்டி இழுத்துக்கொண்டிருக்கிறாள் என்ற கேட்டவுடனேயே கலமசேரிக்குப் போய் அவளைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது அவனுக்கு.

கிருஷ்ணன் பிள்ளைக்கு தலையைச் சுற்றியது. அப்பாவிடமிருந்த கம்யூனிச இரத்தம் அவனுக்குள் இல்லையென்பது அவனுக்குத் தெரியும். அந்த இரத்தம் அப்படியே கிருஷ்ணன் பிள்ளைக்கும் வந்திருந்தால் இப்படி அவசியமில்லாத விஷயங்களைப் போட்டுக் குழப்பிக்கொள்ள நேர்ந்திருக்காது. அவனது கொச்சச்சன் சுகுந்தன்நாயரை நினைத்தாலே கிருஷ்ணன் பிள்ளைக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவன் வீட்டில் சொர்ணா விஷயம் தெரிந்த ஒரே நபர் சுகுந்தன் நாயர் மட்டுமே.

சின்ன வயதிலேயிருந்து கொச்சச்சன் மேலே கிருஷ்ணன்பிள்ளைக்கு பாசம் அதிகம் இருந்தது. சுகுந்தன்நாயருக்கும் கிருஷ்ணன்பிள்ளை மேலே வாஞ்சை ஜாஸ்தி. தனது முதல் பையனாகத்தான் அவனைப் பார்த்தார் சுகுந்தன் நாயர். அவனை "மோனே"என்று விளிக்கும்போதே அவரின் நிஜமான வாத்சல்யம் அதில் தெரியும். அந்தச் சுதந்திரம் தந்த தைரியத்தில்தான் கிருஷ்ணன்பிள்ளை தன் பிரேம விஷயத்தை நாயரிடம் சொன்னதும்.

அதைக் கேட்ட மாத்திரத்தில் நாயர், "இது சரியா வராது மகனே "என்றார். கிருஷ்ணன்பிள்ளைக்குத் தூக்கிவாரிப் போட்டது. சுகுந்தன் நாயர் இப்படி நிறைய விஷயங்களில் குறி சொல்வதுமாதிரி ஏதாவது உளறி வைப்பார். அதைக் கேட்கும்போது கிருஷ்ணன் பிள்ளைக்கு எரிச்சல் முட்டிக்கொண்டு வரும். மரியாதை காரணமாயும் அவர் மேல் வைத்த உண்மையான பாசம் காரணமாயும் அதை அப்படியே விட்டுவிடுவான். நாயர் தன் காரியத்திலேயே இப்படி ஏதாவது சொல்லி வைப்பார் என்று கிருஷ்ணன் பிள்ளை எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் கலவரமடைந்து போனான்.

"அது என்ன கொச்சச்சா? அப்படிச் சொல்லிட்டீங்க"என்றான் கிருஷ்ணன் பிள்ளை. நாயர் பெரிதாய் விளக்கம் ஒன்றும் கொடுக்கவில்லை. "நம்ம குடும்பத்துக்கு நல்லதில்லை. இது சரியாகாது மோனே"என்று மீண்டும் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டார்.

கிருஷ்ணன்பிள்ளை இதைக் கேட்ட சில தினங்களுக்குக் கொஞ்சம் வருத்தமாய் இருந்தான். பின் ஒரு தடவை சொர்ணாவைப் போனில் கூப்பிட்டுப் பேசிய பின் கொச்சச்சனையும், அவர் சொன்ன விஷயங்களையும் மறந்துபோய்விட்டான். ஆனால் நேற்று நடந்த சம்பவம் அவனை மீண்டும் கொஞ்சம் கலவரப்படுத்தியிருந்தது.

திருவனந்தபுரம் ரோட்டில் சொர்ணாவும் கிருஷ்ணன்பிள்ளையும் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை பிடித்துக்கொண்டது. பக்கத்திலிருக்கும் ஒரு பள்ளி வளாகத்தில் ஒதுங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமையான காரணத்தால் பள்ளியில் யாருமில்லை. சுற்றிலும் மரங்கள் பசுமையாய் சிலிர்த்துப் போயிருந்தது. மழையின் மண்வாசனையும் தூறலும் சொர்ணாவின் அருகாமையும் கிருஷ்ணன்பிள்ளைக்கு ஒரு கிளர்ச்சியை தந்துவிட்டது. சொர்ணாவும் அதே நிலையில்தான் இருந்தாள். சொர்ணாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்பிள்ளை. தனிமையும் மழையும் பலப்பல எண்ணங்களைக் கிளற மெல்ல முன்னேறி அவள் கைகளைப் பற்றினான். கையை உதறுவாள் என்று எதிர்பார்த்திருந்த கிருஷ்ணன்பிள்ளைக்கு அவள் அப்படிச் செய்யாதது தைரியத்தைக் கொடுத்தது. இன்னும் கொஞ்சம் முன்னேறினான். மெல்ல அவளின் முகத்தை நிமிர்த்தினான். அவள் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. ஒரு நீர்த்துளி உதட்டில் இருந்துகொண்டு கிருஷ்ணன்பிள்ளையின் உயிரை வாங்கியது. அவள் கைகள் ஒருவித நடுக்கத்தில் இருப்பதை உணர்ந்த கிருஷ்ணன்பிள்ளை பிடியை இறுக்கினான்.

எங்கிருந்தோ வந்த ஆடு ஒன்று மே என்று கத்தியபடி அவர்களைக் கடந்து கொண்டு ஓடியது. மழைக்குப் பயந்து அதுவும் ஒதுங்கியிருக்கவேண்டும். ஆட்டின் குரல் சொர்ணாவை தன்நிலைக்குக் கொண்டுவந்தது. மென்மையாக கிருஷ்ணன்பிள்ளையின் பிடியைத் தளர்த்திவிட்டு கொஞ்சம் ஒதுங்கி நின்றாள். கிருஷ்ணன்பிள்ளை ஆட்டைத் துரத்திக்கொண்டு ஓடினான். சொர்ணலதா அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

மழை வெறித்த பின்பு தன் அறைக்குத் திரும்பி வந்த கிருஷ்ணன்பிள்ளை எப்போதும் போல் வீட்டிற்குப் போன் செய்தான். சுகுந்தன் நாயருக்கு நெஞ்சுவலி வந்ததாயும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாயும் அவன் அம்மா வருத்தம் கலந்த குரலில் சொன்னாள். கிருஷ்ணன்பிள்ளைக்குத் தூக்கி வாரிப் போட்டது. "இது சரியா வராது"என்று சுகுந்தன் நாயர் சொல்வது போலத் தோன்றியது அவனுக்கு.

இப்போது ஒன்றன் பின் ஒன்றாய் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்ததில் சுகுந்தன் நாயர் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று தோன்றத் தொடங்கியது கிருஷ்ணன்பிள்ளைக்கு. அவளது புறங்கை மேலே பட்ட அன்றுதான் அவனது முத்தச்சிக்கு மேல் சரியில்லாமல் போனது. பகவதி புண்ணியத்தில் அவள் பிழைத்துக்கொண்டாள். நேற்று சொர்ணாவை மீண்டும் தொட்டபோது கொச்சச்சனுக்கு நெஞ்சு வலி வந்தது.

இப்படியெல்லாம் கண்மூடித்தனமாய் யோசிக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டாலும் இந்த எண்ணங்களை, கிருஷ்ணன்பிள்ளையால் களைய முடியவில்லை. நெடு நேரத் தீவிர யோசனைக்குப் பின் அயர்ச்சியில் அப்படியே உறங்கிப் போனான்.

அதிகாலையிலேயே சொர்ணா கூப்பிடுவாள் என்று எதிர்பார்க்காத அவனுக்கு, அவள் குரலைக் கேட்டதும் சந்தோஷமாய் இருந்தது. அவளுடன் பேச ஆரம்பித்தக் கொஞ்ச நேரத்திற்கெல்லாம், நேற்று இரவு தானாய் ஏற்படுத்திக்கொண்ட கற்பனைகள் எத்தனை மோசமானவை என்று அவனுக்குப் புரிந்தது. இனி அப்படி நினைக்கக்கூடாது என்பதை ஒரு சபதமாகவே எடுத்துக்கொண்டான்.

ரொம்பத் தயங்கித் தயங்கி சொர்ணா கேட்டாள்.

"இன்னைக்கு ·ப்ரீயா இருந்தா படத்துக்குப் போகலாம். எங்க வீட்டுல எல்லாரும் மதுரைக்குப் போயிருக்கிறாங்க. எனக்கு படிக்க வேண்டியிருக்குதுன்னு நான் வரலைனு சொல்லிருக்கேன். இன்னைக்கு உங்களுக்கு டைம் இருக்குமா?"

கிருஷ்ணன் பிள்ளைக்கு நம்பவே முடியவில்லை. எத்தனை நாளாய்க் கெஞ்சியிருப்பான். ஒருநாள் கூட மசியாத சொர்ணா, தானே அழைத்து சினிமாவுக்குப் போகலாமா என்கிறாள். அந்தச் சந்தோஷத்தைச் சொல்ல வார்த்தைகளில்லை அவனிடம்.

"செரி.."என்றான். அவன் குரலில் இருந்த சந்தோஷம் அவனுக்கே தெரிந்தது.

திரையில் காட்சிகள் வேகவேகமாய் மாறிக்கொண்டிருந்தன. கொஞ்சம் புரிந்தும் நிறைய புரியாமலும் படத்தை இரசித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்பிள்ளை. சொர்ணாவின் அருகாமை அவனுக்குச் சொல்லமுடியாத சந்தோஷத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இருவரின் கைகளும் அருகருகில் இருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் சொர்ணாவின் கையைப் பிடிக்கலாம். அவள் ஒன்றும் உதறி விட மாட்டாள் என்று தெரியும் அவனுக்கு. உதறவேண்டுமானால் மழைக்கு ஒதுங்கிய நாளிலேயே உதறியிருக்கலாம். கையை இன்னும் இரண்டடி நகர்த்தினால் சொர்ணாவின் மிருதுவான கைகளைப் பற்றி விட முடியும்.

இப்படி நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் லேசான வெப்பத்தோடு சொர்ணாவின் கைகள் தன் கைகள் மீது பரவுவதைக் கண்டு அவளைப் பார்த்தான். அவனும் அவள் கையை
பலமாகப் பற்றிக்கொண்டான். கைகளை மெல்ல இறுக்கினான்.

தோளை அவள் பக்கமாகச் சாய்த்து அவள் முகத்தை மிக அருகில் இருந்து இரசித்தான். அவள் அவன் கைகளை மேலும் மேலும் இறுக்கினாள். இன்னும் கொஞ்சம் வசமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, கொஞ்சம் நெருங்கி, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளின் கன்னங்களில் உதடுகளால் லேசாய் முத்தமிட்டான். அவள் கண்களைத் திரைகளிலிருந்து விலக்கவே இல்லை. அதே சமயம் கிருஷ்ணன்பிள்ளையின் கைகளை இன்னும் இறுக்கினாள்.

கைகளை மெல்ல விடுவித்துக்கொண்டான் கிருஷ்ணன்பிள்ளை. அவளின் முகத்தை அவனை நோக்கித் திருப்பினான். அவளது சுவாசம் அவன் மீது வெம்மையாகத் தாக்கியது. அவளின் கழுத்து நரம்புகள் புடைத்திருந்தன. கண்கள் பாதி சொருகிய நிலையில் இருப்பதாகப் பட்டது கிருஷ்ணன்பிள்ளைக்கு.


விரல்களால் சொர்ணாவின் உதடுகளை மெல்ல வருடினான். அவளது கழுத்து நரம்புகள் புடைத்து அடங்குவது, அந்த மங்கலான வெளிச்சத்தில் கூடத் தெளிவாய்த் தெரிந்தது. மீண்டும் ஒருமுறை உதடுகளை வருடினான். முகத்தை முன்னே இழுத்து, மிக அழுத்தமாய் உதடுகளில் முத்தமிட்டான் கிருஷ்ணன்பிள்ளை. சூர்யா யாரையோ சுட்டுக்கொண்டிருந்தபோது சொர்ணாவும் கிருஷ்ணன்பிள்ளையும் வேறு ஏதோ ஒரு உலகத்தில் இருந்தார்கள்.

படம் முடிந்து வரும்போது இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. ஒரு தடவை ஸாரி சொல்லிவிடலாமா என்று கூடத்தோன்றியது கிருஷ்ணன்பிள்ளைக்கு. ஆனாலும் அமைதியாய் இருந்துவிட்டான்.

அவளை பஸ் ஏற்றி அனுப்பிவிட்டுத் தானும் பஸ் பிடித்து ரூமிற்குள் நுழையவும் போன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. வேகமாய் எடுக்கப் போனான். கட்டாகி விட்டது. யார் அழைத்திருப்பார்கள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. சொர்ணா அழைத்திருப்பாளோ? இருக்காது. இப்போதுதானே போனாள். ஒருவேளை.. கலமசேரியிலிருந்து அழைத்திருப்பார்களோ.. இப்படித் தோன்றிய போதே கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது அவனுக்கு. இன்றைக்கும் ஏதாவாது நேர்ந்திருக்குமோ என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. நேற்றுதான் கொச்சச்சனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாய் அம்மா சொன்னாள். ஒருவேளை அவருக்கு ஏதாவது...

மீண்டும் போன் ஒலித்தது. அவனுக்கு அதை எடுக்கவே பயமாய் இருந்தது. "நம்ம குடும்பத்துக்கு இது சரியாகாது"என்று கொச்சச்சன் சொன்னது மீண்டும் நினைவுக்கு வந்தது. இந்த முறையும் எதாவது நேர்ந்திருந்தால் என்ன செய்வது என்றே கிருஷ்ணன் பிள்ளையால் யோசிக்க முடியவில்லை. மனதை அடக்கிக்கொண்டு போனை எடுத்தான்.

"ஹலோ"

"சொரணா பேசறேன்"

கொஞ்சம் நிம்மதியானது கிருஷ்ணன் பிள்ளைக்கு.

"ம் பறா.."என்றான் கிருஷ்ணன் பிள்ளை. விசும்பல் சத்தத்திற்கிடையில் சொர்ணா சொன்னாள்.

"ஏதோ ஆகிஸிடெண்ட்டாம். அப்பாவை சீரியஸாக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறாங்க"என்று சொல்லிவிட்டு அழத் தொடங்கினாள்.

000

மழை நாள்
---ஹரன் பிரசன்னா

சலனமற்றிருக்கும் வானம் தன்
சல்லடைத் துளைகளின் வழியே
சமைந்த மரங்களுக்குப்
பூப்புனித நீராட்டும்
மழைநாள்

ஆர்ப்பரிக்கும் வானத்தைத் தடுக்கும்
பலவண்ணப் பூக்கள் குடைகளாய்
சில தலைகள்

மாலை கடந்து காலையும் தொடர்ந்தால்
பள்ளிசெல்லும் தொல்லையில்லையெனச்
சில மனங்கள்

இறங்கி வரும் துளிகளில்
ஒரு துளி தொட்டாலும்
விலக்கவொவ்வா களங்கம் வருமென
நீட்டப்பட்ட நிழற்குடைகளில் நிற்கின்றன
சில கால்கள்

மழையை புகையால் துரத்தும்
முயற்சியாய் புகைகின்றன
சில கைகள்

மழைச்சாரல் மனதுள் பதித்துச் சென்ற
மயக்கத் தடங்களில் முந்தானை தொடுகின்றன
சில விரல்கள்

நனைந்து ரசிக்காமல்
வீணாகப்போய்க்கொண்டிருக்கிறது
மற்றுமொரு மழைநாள்

இந்தக் கவிதை மாலனின் மின்னிதழானத் திசைகளில் வெளியாகியிருந்தது.

Thursday, November 27, 2003

தேவன்
--ஹரன்பிரசன்னா

தேவன் ஒரு நகைச்சுவை கட்டுரையாளர் மற்றும் கதையாளர் என்ற ஒரு வரி அறிமுகம் மட்டுமே இருந்தது எனக்கு.அவர் எழுதிய கதைகளையோ கவிதைகளையோ ஒன்றைக்கூட வாசித்ததில்லை (கற்றதும் பெற்றதும்-இல் சுஜாதா தந்த அறிமுகக்கட்டுரை தவிர). தேசிகண் பக்கத்தைப் பார்வையிட்டபோது அதில் முதலில் சுஜாதாவின் படைப்புகளை மட்டுந்தான் பார்த்தேன். அதில் சிரிக்க, சிந்திக்க என்ற தலைப்பிலிருந்த சுட்டியைச் சொடுக்கியபோது அதனுள் தேவனின் எழுத்துகள் இருப்பது தெரிந்தது.

கற்றதும் பெற்றதும் பகுதியில் ஒருமுறை தேவன் பற்றிச் சொல்லப்பட்டதாக நினைவு. அதில் தேவனின் ஒரு கட்டுரையையும் வெளியிட்டிருந்தார் சுஜாதா. அந்தக் கட்டுரையைப் படித்தபோது அதில் அத்தனை தூரம் நகைச்சுவை இருந்ததாகத் தெரியவில்லை அந்த வயதில். நகைச்சுவை என்றால் திரைப்படத்தில் வரும் காட்சிகளும். வெடிச்சிரிப்பும் மட்டுமே என்றளவில்தான் எனக்கு அறிமுகமாகியிருந்த வயது அது. தேவனை ஏன் சுஜாதா இத்தனை புகழ்கிறார் என்று நினைத்துக்கொண்டு அதை மறந்துவிட்டேன்.

ஒரு வருடத்திற்கு முன்பாக, கிரேஸி மோகன் ஏதோ ஒரு பேட்டியில் தன் எழுத்துகளுக்கு இன்ஸ்பிரேஷனாக தேவனைக் குறிப்பிட்டார். பெரிய ச்சரியம் எனக்கு. சுஜாதா தந்த கட்டுரையைத் தொடர்ந்த என் எண்ணம் கொஞ்சம் சிதையுற ரம்பித்தது கிரேஸி மோகஆனால்தான். கிரேஸி மோகனின் டைமிங் ஜோக் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு
அப்போது. அவரே தேவனைப் பற்றிச் சொன்னதைக் கேட்டபோது, தேவன் மீது ஆர்வம்பிறந்தது. ஆனாலும் தேவனைத் தேடிப்பிடித்துப் படிக்கக்கூடிய வெறி இல்லாமல் போனது.

கல்கியின் நகைச்சுவை ததும்பும் கட்டுரைகளைப் படித்தபோது, எனக்கு மென்மையான நகைச்சுவைக் கட்டுரைகள் மீதும், நகைச்சுவை எழுத்தின் மீதும் ஒரு பெரிய கவனிப்பு பிறந்ததாக உணர்கிறேன். அலையோசையில் வரும் இரண்டு கதாபாத்திரங்கள் தொடர்ந்து
பத்திரிகையில் மாறி மாறி அடித்துக்கொள்வார்கள். அதை விவரித்த விதம் மென்நகைச்சுவை எழுத்துகளைப் பற்றிய ஒரு ஆர்வத்தைத் தந்தது. அப்போதும் தேவனின் எழுத்துகளைப் படிக்க நினைத்துக்கொண்டேன்.

தேசிகனின் பக்கத்தில் தேவனைப் பார்த்தபோது எனக்குத் தேவனையே நேரில் பார்த்தது மாதிரி இருந்தது. உடனடியாக இறக்கம் செய்து ப்ரிண்ட் எடுத்து, படித்து முடித்து, ரொம்ப இரசித்து, மீண்டும் படித்து அதை உங்களுக்கும் அறிமுகம் செய்யலாம் என நினைத்து, இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தேவனைப் பற்றிய பெரிய அறிமுகம் என்ஆனால் தரமுடியாது என்பதை மிகத் தெளிவாக உணர்கிறேன். தேசிகனின் பக்கத்தில் உள்ள தேவனின் கட்டுரைகள் மட்டும் தேவனைப் பற்றி முழுமையாகச் சொல்லாது என்ற என் எண்ணம்தான் அதற்குக் காரணம். ஆனால் தேவனின் நகைச்சுவை உணர்வைப் பற்றிய ஒரு அறிமுகம் நிச்சயம் கிடைக்கும். இந்த
நகைச்சுவையில் எத்தனை பேருக்குக் கருத்து பேதம் இருக்கும் எனத் தெரியவில்லை. காரணம், முதலில் மென்மையான நகைச்சுவை. படித்த மாத்திரத்தில் பொங்கிப் பொங்கிச் சிரிக்க முடியாது. ஆனால் கட்டுரை முழுதும் ஒரு விதமான புன்னகையை வரவழைக்கும் தொடர்களும் வார்த்தைகளும் விரவி இருப்பதைக் காணலாம். இரண்டாவது அந்தக்
கட்டுரையின் காலகட்டம். ஒரு படைப்பை உள்வாங்கும்போது அது எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்ற பார்வையும் அதற்கு ஏற்றாற்போன்ற ஒரு உள்வாங்குதலும் அவசியமாகிறது. (பாரதி மட்டும் விதிவிலக்கு. எந்தக் காலத்திற்கும் அவன் கவிதைகள்
பொருந்திவருகின்றன). தேவனின் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்பது மிகச்சரியாக எனக்குத் தெரியவில்லை. (யாராவது சொன்ஆனால் நன்றி). ஆனாலும் கட்டுரையை முழுமையாக உள்வாங்க முடிந்ததாகத்தான் தோன்றியது.

எந்த வித இருண்மையும் இல்லாத மிகத்தெளிவான வரிகள். பூடகமில்லாத நேரடியான நகைச்சுவை. தேர்ந்தெடுத்த வார்த்தைகள். மனத்தை நோகச்செய்யாத கிண்டல் மற்றும் நையாண்டி, அதன் வாயிலாக எல்லோருக்கும் போய்ச்சேரவேண்டிய கருத்து - இவையெல்லாம் தேவனின் எழுத்துகளின் பலமாக என் பார்வைக்குத் தெரிகிறது.

தமிழ் எழுத்துலகில் மிகக்குறைவாகவே தரமான நகைச்சுவை எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் தேவனுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
"புகழும் புகழ்ச்சியும்"என்ற கட்டுரை மிகப்பெரிய அறிவுரை தொனியுடன் துவங்குகிறது. போகப் போக தேவனின் வரிகள் ஹாஸ்யத்தைத் தர ரம்பிக்கின்றன. Slow and steady wins the race! இந்தச் சூத்திரம் தேவனுக்கு மிக இஷ்டமானதாக இருந்திருக்கவேண்டும். அந்தக்
கட்டுரையிலிருந்து சில வரிகள்.

"நான் கரூருக்குப் போனவாரம் போய்விட்டு வந்தேன். போகும்போது என்னைப் பார்த்தவர்கள், ஒரு வாரம் விச்ராந்தியாகப் போய், குடும்பத்தாருடன் இருந்துவிட்டு வரப்போகிறான் என்று எண்ணியிருப்பார்கள். வருகிறபோது நான் சந்தோஷமாகத்தான் திரும்பினேன். அப்போது என்னைக் கவனித்தவர்கள், குஷியாகக் காலந்தள்ளிவிட்டு நிஷ்கவலையாக வருகிறான் என்றுதான் எண்ணியிருக்க வேண்டும்.............
........வியாழக் கிழமை சாயந்திரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு சாமி தலைதெறிக்க ஓடிப்போய், ரயில் வண்டிக்குள் புகுந்ததை ஸ்டேஷன் மாஸ்டர் நாலைந்து போட்டார்கள், ஒரு கார்டு, சுமார் ஐம்பது ஜனங்கள் இத்தனை பேரும் பார்த்திருப்பார்கள். அப்படி ஓடினவன் நாந்தான் என்று அறிமுகப் படுத்திக்கொள்கிறேன்..."

அப்படி ஓடினவன் நாந்தான் என அறிமுகப்படுத்திக்கொள்கிறேன் என்று தேவன் எழுதியதைப் படித்தபோது எனக்கு நிஜமாகவே சிரிப்பு வந்துவிட்டது. வருடங்கள் பல கடந்தாலும், இன்னும் சிரிக்க முடிகிறதென்றால், அதை விட பெரிய வெற்றி ஒரு எழுத்திற்கு, வேறெதாக இருக்க முடியும்?

அதே கட்டுரையில், வீட்டில் சுண்டெலியின் தொல்லை தாங்கமுடியவில்லை என்று சொல்லி வீட்டுக்காரரிடம் முறையிடுவதாக ஒரு காட்சியை அமைத்திருக்கிறார்.

"காலையில் வீட்டுக்காரரிடம் "உங்கள் வீட்டில் சுண்டெலி நடமாடுகிறதோ?"

"ஹ¥ம் சொப்பனம் கண்டிருப்பீர்"என்றார் அவர்.

"இல்லை நிஜமாக வருகிறது"என்றேன்.

"ஏங்காணும் வீணாய்? இந்த வீட்டிற்கு வருந்தி வருந்தி அழைத்தால் கூடச் சுண்டெலி வராதே! ஆயிரம் ரூபாய் தருகிறேன், ஒரு சுண்டெலி காணியும்"என்றார்!

அவர் சொல்வதைப் பார்த்தால், நான் ஆயிரம் ரூபாய் கண்டிராதவன். அதைச் சொல்வதற்காக அவரிடம் சுண்டெலி இருப்பதாகச் சொல்கிறேன் என்றுதான் அவர் எண்ணுகிறார் என்று தோன்றிற்று.

"ஓய்.. எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டாம். எலி வராமல் இருந்தால் போதும்"என்றேன்.

ஊரெல்லாம் வீடு காலி இல்லை என்று பேச்சாயிருக்கும்போது, சுண்டெலி விஷயமாக, வீட்டுக்காரருடன் வாக்குவாதம் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர், "என் வீட்டிற்குச் சுண்டெலிதான் முக்கியம். உம்ம குடும்பம் முக்கிய மில்லை"என்று சொல்லி விடலாமல்லாவா? "

நகைச்சுவையின் நாசூக்கான, நளினமான வெளிப்பாடு என்று தோன்றியது இந்தக் கட்டுரையைப் படித்தபோது.

எல்லா கட்டுரைகளிலும் கிண்டலும் அங்கதமும் கலந்துகட்டி வருகின்றன. சொப்பனம் பலிக்குமா என்ற கட்டுரை ஒரு சிறுகதை மாதிரி இருக்கிறது. குறிப்பாய் முடிவு. முடிவு அப்படியே சுஜாதா ஸ்டைல்.

தேசிகன பக்கத்திலுள்ள தேவனின் மற்ற கட்டுரைகளையும் படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

தேவன் பக்கத்தில்-

பொழுதைப் போக்காதே கட்டுரையில் தீடீரென பிரபுதேவா பற்றியும் சதானந்த ஸ்வாமிகள் பற்றியும் இயக்குநர் விக்ரமன் பற்றியும் வர டிப்போய்விட்டேன். தேவன் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்று எனக்குக் குழப்பம் வந்ததே இந்த இடத்தில்தான். :(

ஏதோ பிழை நேர்ந்திருக்கிறது. நண்பர் தேசிகனுக்கு வலையேற்றியபின் படித்துத் திருத்த நேரமிருந்திருக்காது. அதைப் படித்துவிட்டு நண்பர்கள் என்னைப் போல் குழம்பிக்கொள்ள வேண்டாம் என்பதற்காக்த்தான் சொல்கிறேன்.

சுஜாதா அறிமுகப்படுத்திய, பொம்மைக்கடையில் பார்க்கும் நாயைப் பற்றிய கட்டுரை தேசிகன் பக்கத்தில் இல்லை. யாரிடமாவது இருந்தால், தயவுசெய்து உள்ளிடவும்.

இந்த மடலை மரத்தடிக்குழுமத்தில் உள்ளிட்டபோது பத்ரி எதிர்வினைத்திருந்தார். அவரின் மடல்.

"தேவன் (இயற்பெயர் ர்.மகாதேவன்) பிறந்தது: 08/09/1913 இறந்தது: 05/05/1957. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் BA படித்துவிட்டு 1934 முதல் 1957 (சாகும்) வரை விகடனில் பணி யாற்றினார், அதில் கடைசி 13 வருடங்கள் விகடனின் நிர்வாக சிரியராக.

அவரது கதைகளில் கும்பகோணமும், சென்னையும் பிரதானமாக வரும்.

கல்கியில் (12/09/1982) சுஜாதா தேவனப் பற்றி எழுதுகையில் "அமரர் தேவனின் கதைகளை ஏறக் குறைய ஒன்று விடாமல் படித்தவன் நான். என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு
முன்னோடியாகவும், மானசீக குருவாகவும் இருந்திருக்கும், திரு.கல்கி, திரு. தேவன் போன்றவர்களை எங்களால் மறப்பது சாத்தியமில்லை."என்று சொல்லியிருக்கிறார். (மேற்கோள் 'மிஸ்டர்
வேதாந்தம்' புத்தகத்திலிருந்து)

தேவன் 'துப்பறியும் சாம்பு' என்னும் பாத்திரத்தை உருவாக்கியவர். நகைச்சுவை அவரது எழுத்தில் எப்பொழுதும் வழிந்தோடும் (கட்டுரைகளில் மட்டுமல்ல, கதைகளிலும்). தேவன் கதை சொல்வதில் வல்லவர். தீவிர இலக்கியம் படைக்கவில்லை என்றாலும், மிக வேகமாகச் செல்லக்கூடிய, திருப்பங்கள் நிறைந்த (கிட்டத்தட்ட இன்றைய மெகா சீரியல் மாதிரி, ஆனால் இன்றைய கேவலமான
ஜவ்வு இழுக்கும் பேத்தல்கள் மாதிரி இல்லாமல், தரத்துடன்) வெகுஜனங்கள் விரும்பும் கதையையும், வெகுஜனங்கள் அவரது பாத்திரத்தோடு ஒன்றி விடும் கதாபாத்திரங்களையும் படைப்பதில் வல்லவர்.

மிஸ்டர் வேதாந்தம் அந்த வகையில் அருமையான நாவல். அதைத் தவிர ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ஸி.ஐ.டி.சந்துரு, ஸ்ரீமான் சுதர்சனம், கோமதியின் காதலன் போன்ற கதைகளை எழுதியுள்ளார். எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்."


நண்பர் யக்ஞநாராயணனும் தேவன் பற்றிச் சொல்லியிருந்தார்.

தேவன் (R.Mahadevan) 8-9-13ல் திருவிடைமருதூரில் பிறந்தார். அவ்வூரில் உயர் கல்வியும், பின்னர் கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் B.A. பட்டமும் பெற்றார். சிறிது காலம் பள்ளி சிரியராகப் பணியாற்றிய பின், 'னந்த விகடன்'ல் உதவி சிரியராகச் சேர்ந்தார். பிறகு 1942ம் ண்டு முதல் 1957ம் ண்டு வரை நிர்வாக சிரியர் இருந்தார். 23 ண்டு காலம் அப்பத்திரிகையில் பல்வேறு சுவையான கதைகள், கட்டுரைகள் எழுதி சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கினார். நகைச்சுவை நிறைந்த இவருடய எழுத்துக்களில் 'துப்பறியும் சாம்பு', 'விச்சுவுக்குக் கடிதங்கள்', 'ராஜாமணி', 'கோமதியின் காதலன்' - போன்ற படைப்புகள் மிகப் பிரபலமானவை. 'தேவன்' தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக இரண்டு முறை பதவி வகித்து, சிறந்து தொண்டாற்றினார். பத்திரிகை எழுத்துத் துறையில் அவர் கையாளாத உத்திகளே இல்லை என்று சொல்லும் முறையில் அவர் எழுதி வந்தார். 1957ம் ண்டு 'தேவன்' தம்முடைய 44-வது வயதில் இறைவனடி எய்தினார்."

அப்புசாமி.காம் வலைத்தளத்திலும் தேவனின் சில கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன.

நான் யார்?

-- ஹரன்பிரசன்னா

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம்
ஒரு நாள் கிரீடத்துடன்
மறுநாள் அலுமனியத் தட்டேந்தி
இன்னொரு நாள் இராமன்
வேறொரு நாளில் இராவணன்
சில சமயம் துகிலுரிகிறேன்
சில சமயம் சேலை கொடுக்கிறேன்
சிகண்டியாய் நடித்த போது சிலாகித்திருக்கிறார்கள்
வேடத்துடன் பொருந்திப் போனதாய்
மாலை, கைதட்டுடன்
தட்டி மறைவில்
அயற்சியில் அரிதாரம் கலைக்கும்போது
நான் என்கிறது
என் கம்புக்கூட்டு வீச்சம்.

Wednesday, November 26, 2003

மரணம்
-- ஹரன்பிரசன்னா

சூன்யத்தின் பார்வை சூன்யம் நிறைந்ததாக, கொடூரமானதாக இருக்கிறது. அதன் கண்கள் தாங்கமுடியாத வெம்மையை உமிழ்கின்றன. மனதை சுழற்றியடிக்கிறது ஊளையிடும் பெருங்காற்று.

காந்தி ஓ வென்று பெருங்குரலெடுத்து அழுகிறாள். பெத்த வயிறு என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் நெருப்பின் ஜ்வாலை காற்றில் நீந்துகிறது.

நெருப்பின் மீதான என் பார்வை விலகவே இல்லை. என் கண் எரிகிறது. சூடாகிறது. நெருப்புக்குச் சுடுமா? சுட்டாலும் அது நெருப்புக்கு இஷ்டமானதாய் இருக்கவேண்டும். எதையிட்டாலும் உள்வாங்கி எரியும் நெருப்புக்குப் பேதமில்லை. அதன் சிவந்த நாக்கின் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது. ஏதோ ஒரு கணத்தில் இறந்து போன பாலா மாதிரியும் கூட. எனக்கு ஜில்லிடுகிறது. என்னையறியாது கண்கள் பனிக்கின்றன.

நேர்ந்தபின் மரணம் மரணித்தவர்க்குச் சுகமானது.

என் நினைவுக்குத் தெரிந்து நேர்ந்த முதல் மரணம் பாட்டியினுடையது.

தரையில் விழாமல் பம்பரத்தைக் கையிலெடுத்து எல்லோருக்கும் என் பராக்கிரமத்தைக் காட்டிக்கொண்டிருந்தேன். தெருவில் நிறைய சுள்ளான்கள் என்னைச் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு நாளாய் வீட்டில் ஏகப்பட்ட ள்கள். பாட்டிக்கு இழுத்துக்கொண்டிருக்கிறது. இப்போ அப்போ என்று எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பாட்டி எமகாதகி. சாவதாயில்லை. எலும்பும் தோலுமாய் இருக்கும் பாட்டியைக் கண்டாலே பிடிக்காது எனக்கு. காய்ந்து போன மார்புகளை ரவிக்கையால் அடிக்கடி மூடிக்கொள்வாள். அவென் ஏம் பேராண்டி என்று என்னை இறுக்கக் கட்டிக்கொண்ட நாள்களும் உண்டு. இப்போது இழுத்துக்கொண்டு கிடக்கிறாள். எல்லோரின் கவனமும் பாட்டியின் சாவு மேலேயே இருந்ததால் என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. இரண்டு நாளாய் யாரும் என்னைப் படிக்கச் சொல்லவில்லை. நான் பம்பரமும் கையுமாக அலைவதை என் அம்மா பார்த்துக்கொண்டிருந்தாலும் சும்மாயிருந்தாள். வந்தவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்து, பாட்டியின் இல்லாத மேன்மைகளைத் தேடிப்பிடித்து சொல்வதற்குத்தான் அம்மாவிற்கு நேரமிருந்தது. பாட்டி இன்னும் இரண்டு நாள் இழுத்துக்கொண்டிருந்துவிட்டு பின் செத்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

என் நினைப்பில் இடியைப் போட்டுவிட்டு அன்று இரவே பாட்டி செத்தாள். ஒப்பாரிக்கு ள் சொல்லி அனுப்பினார்கள். நான்கைந்து பொம்பளைகள் வந்து ஒரு வட்டமாகக் கூடி அமர்ந்து மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள். ஒருத்தி பாட்டியை இந்திராணி என்றாள். இன்னொருத்தி ஒரு படி மேலே போய் உலகத்துக்கே படியளந்த த்தா என்றும் சொன்னதாக நினைவிருக்கிறது. எவளோ என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். அவளும் ஒப்பாரி இடவந்த மற்ற பொம்பளைகள் போலவே ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. னால் அவளின் மார்புகள் பாட்டியினுடையதைப் போல் உலர்ந்தில்லாமல் செழுமையானதாக இருந்தன. அவளிடமிருந்து வேர்வையும் மண்ணெண்ணையும் கலந்த ஒரு வீச்சம் எழுந்தது. போயும் போயும் மண்ணெண்ணெயைக் குடிப்பார்களா என்ன? எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.


பாட்டியின் மரணத்தில் அன்று மனதுக்குள் அமர்ந்து கொண்ட ஏதோவொரு வாடை இப்போது இங்கே என் வீட்டில் இருக்கிறது. பத்தி எரிகிறது. அந்த வாடையா? இல்லை. மண்ணெண்ணெய் நெடியும் இல்லை. பின் எந்த வாடை? எல்லா சாவு வீட்டிலும் இதே வாடை இருக்குமோ என்னவோ. பதினைந்து வயதில் முகர்ந்த வாடை இன்னும் உள்ளிருப்பதே இன்னொரு சாவில்தான் தெரிகிறது.

னால் அன்றைய எழவிற்கும் இன்றைய சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள். அன்றைய மரணம் எதிர்பார்த்தது. நான் அதிகம் நேசிக்காத உறவினுடையது.

நான் நேர்கொண்ட அடுத்த மரணம் அப்பாவினுடையது.

அப்பா எனனுள் மிக ழமாய் பதிந்தவரல்ல. எனக்குள் அவ்வப்போது தலைதூக்கும் வக்கிரம் அப்பாவிடமிருந்து வந்ததாய்த்தான் இருக்கவேண்டும்.

போர்வையை மூடிக்கொண்டு, அன்று படித்த மஞ்சள் பத்திரிகையின் வரிகளை நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்துக்கொண்டிருக்கும்போது அம்மாவின் எதிர்ப்பும் அப்பாவின் கெஞ்சலும் கேட்டு அயற்சியாய் உணர்ந்ததுண்டு. அம்மா பலமாய் எதிர்க்கிறாளா ஊடுகிறாளா என்று தெரியுமுன்னரே அப்பா இறந்து புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார்.

மீண்டும் ஒப்பாரிப் பெண்கள். அம்மாவின் அழுகை. மண்ணெண்ணெய் நெடி. சாவு வீடு எனக்கு மட்டும் இரசிக்க முடிந்ததாய்ப் போனது கண்டு எனக்கே என்னைக் குறித்த ச்சரியம்.

நான் இரசித்துக்கொண்டிருக்க தொடர்ந்து அப்பாவும் பாட்டிகளும் மட்டும் இறப்பதில்லை. மரணங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அவை சொல்லியும் சொல்லாமலும் செல்லும் விஷயங்கள் கனத்தவை. இன்று நேர்ந்து விட்ட பாலாவினது மாதிரி. பாலா. கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நேர்ந்துவிட்ட ஜனனம். கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நேர்ந்து விட்ட மரணம்.

காந்தியின் அன்றைய எதிர்ப்பார்ப்புகள் நியாயமானவை. நானும் பங்கெடுத்துக்கொண்டவை. முதலிரவில் சங்கமித்த நிமிடங்கள் முதல் பாலா பிறந்தது வரை அவள் அவளாய்த்தான் இருந்தாள். கருவுற்றதை என்னிடம் சொல்லி வெட்கித்த நிமிடங்கள் காவியம் என்பேன். பாலா பிறந்த பின் எல்லாம் மாறிப்போயின.

எதற்காய் அத்தனை பெரிய தண்டனை என்று நான் யோசிக்காத நாளேயில்லை. காந்தி அழாது உறங்கிய இரவே இல்லை.

பாலா பிறந்த போதே முதுகில் பெரிய கட்டி. பிறந்த தினமே பரேஷன் என்றார்கள். ரொம்ப ரிஸ்க் என்றார்கள். கடவுளை நம்புங்க என்றார்கள். கவலைப்படாதீங்க என்றார்கள்.

....என்றார்கள். ....என்றார்கள். ... என்றார்கள். இத்யாதி.

காந்தி அப்போதுதான் முதன்முதலாய்ப் பெருங்குரலெடுத்து அழுததும். நான் வெளிக்காட்டாது எனக்குள்ளே ஓலமிட்டேன். ஒரே ஒரு குறையுடன் பாலா உயிர்பிழைத்தான். இரண்டு கால்களிலும் உணர்ச்சியில்லை. தவழ்தல் கூட சாத்தியமில்லை. கொஞ்சம் பெரியவனானதும் இன்னொரு பரேஷன் மூலம் நடக்க வைக்க முடிந்தாலும் முடியலாம் என்றார்கள்.

முதல் குழந்தை நடக்க முடியாது ஒரே இடத்திலேயே இருந்து அழுவது கண்டு கண்டு காந்தி அரண்டு போனாள். அவளுக்குள்ளேயே அழுது ஒடுங்கினாள். நான் உட்பட்ட எல்லாமே அவளுக்கு வெறுப்பாகிப் போனது. எப்போதும் பாலாவைத் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பது மட்டும் அவளுக்குப் பிடித்தமானதாயிருந்தது. சிரிப்பு பேச்சு ஒன்றும் இல்லாத காந்தியைக் காணவே கவலையாயிருக்கும் எனக்கு.

பல மாதங்கள் கழித்த ஒரு இரவில் அவளைத் தொட்டபோது ஏதோ தெருவில் போகிறவன் தொட்டபடி கண்கள் காட்டினாள். நான் பயந்து பின்வாங்கினேன். தீர்மானமாய்ச் சொன்னாள் இனி நமக்கு வேண்டாமென்று. ஏன் என்று கேட்கும் தைரியம் எனக்கில்லை. ஏதோ பேச்சுக்குச் சொல்கிறாள் என்ற என் எண்ணம் தவறாய்ப் போனது. காந்தி நெருப்பானாள். நான் என்னை அடக்கக் கற்றுக்கொண்டேன்.

இனி நமக்கு வேண்டாம் என்ற காந்தி தன்னை மறந்த ஒரு இரவில் கட்டை உடைத்துக்கொண்டு விட்டாள். அல்லது நான் உடைத்தேன். அன்றைக்கு காந்தியின் வேகமும் க்ரோஷமும் என்னைக் கொஞ்சம் பயமுறுத்திவிட்டன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இருபத்தைந்து வயதுப் பெண்ணின் சாந்தம் இல்லை. இரண்டு வருடங்களின் தனித்த இரவுகளை ஒரே இரவில் தீர்க்க நினைக்கிறாளோ என்றும் தோன்றியது. மூச்சு வாங்கி மேலே சரிந்தபோது "இப்போ மட்டும் பாலா ஞாபகம் இல்லையா?"என்று கேட்கலாமா என்று நினைத்தேன். நான் கேட்காமல் விட்டதற்கு பாலா எனக்கும் மகன் என்பதும் இனியும் இரவுகள் வரும் என்பதும் காரணங்களாய் அமைந்துவிட்டன.


நேற்று எங்களுக்குள் நடந்த சம்பாஷணைகள் என் தலைக்குள் தெறிக்கின்றன. அவளால் என்னை மட்டுமே குற்றம் சாட்ட முடியவில்லை என்ற ஒரே காரணத்தினால்தான் நான் தப்பித்தேன்.

என் சந்தோஷத்தை அவளோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அவள் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதாயும் அதற்குத் தானும் காரணமாகிவிட்டதாயும் புலம்பித் தீர்த்தாள். பாலா உண்டானதைச் சொன்னபோது நடந்த நிகழ்வுகள் என் மனக்கண்ணில் வந்து மறைந்தன. மெல்ல நெருங்கி உச்சி முகர்ந்து கையால் வயிற்றைத் தடவி உதட்டைக் கௌவி இறுக்கிக் கட்டிப்பிடித்த நிமிடங்கள் நேற்றும் நிகழ்ந்திருக்க வேண்டியவை. னால் நேற்று ஒரு கை ஓசை. பாலாவைக் கருக்கொண்ட அன்று இருவருக்குள்ளிருந்த சந்தோஷம் நேற்று என்னிடம் மட்டும்தான் இருந்தது. நேற்று அவள் மனதுள் நான் குற்றவாளியாக்கப் பட்டிருந்தேன்.

காந்தியின் புலம்பலை மீறி என்னுள் ஒரு சந்தோஷம் பரவியது. இன்னொரு மகனோ மகளோ பிறந்து அது தவழ்வதை, நடப்பதை எல்லாம் ரசிக்க முடியும். காந்தியின் குற்ற உணர்ச்சியும் என் மீதான சாடல்களும் அதைக்காணும்போது மறையும். அப்போது காந்தியிடம் சொல்ல வேண்டும், பாலா இருக்கும்போதே இரண்டாவதாய்க் கருவுற்றது பெரிய பாவமொன்றும் இல்லை என்று.

ஜ்வாலை எண்ணெயில்லாமல் சிறுகத் தொடங்குகிறது. சொந்தக்கார கிழவியருத்தி எண்ணெயிடுகிறாள். கிட்டத் தட்ட எல்லோரும் வந்தாகிவிட்டது. நான் யாருடனும் பேசவில்லை. அமைதியாயிருக்கிறேன். எல்லோரும் காந்தியைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். கொண்டு போகலாம் என்று யாரோ சொல்கிறார்கள். நான் சரி என்கிறேன், எப்படிச் செத்தான் என்ற யோசனையில். முனகல் சத்தம் கேட்டதாய்க்கூட நினைவில்லை.

காந்தியின் வீறிடல் என்னைக் குலுக்குகிறது. என்னிடம் அவளுக்கான தேறுதல் வார்த்தைகளில்லை. என்னை நானே கூட தேற்றிக்கொள்ள முடியாது. என்னைத் தேற்றவும் யாருமில்லை.

பாலாவின் நேற்றைய சிரித்த முகம் மனதை விட்டு இன்னும் கண்ணை விட்டு மறையவில்லை. காந்தி பலமுறை சொல்லி அழுத வரிகளை மீண்டும் சொல்லி அழுகிறாள். "யாருமே என்னைப் புரிஞ்சிக்கலையா..? பாலா.. நான் உன்ன மறந்துருவேன்னு நினைச்சிட்டியா.. பெரிய தண்டனையா கொடுத்திட்டியே..”

எனக்குக் குறுகுறுக்கிறது.

நேர்ந்தபின் மரணம் மரணித்தவர்க்குச் சுகமானது. பாலா மாதிரி.

கவிதைக்காகக் காத்திருக்கிறேன்
-- ஹரன்பிரசன்னா

நீல வானத்தில்
வெள்ளைத் திட்டுக்களாய்
கால் பாவும் மேகங்கள்
பூமியைப் படித்தபடி
நகர்ந்துகொண்டிருக்க
மிதப்பில் இருக்கின்றன மரங்கள்

காற்றின் குறும்புதாளாது
கொப்பளித்துக்கொண்டிருக்கின்றன
என் கையில்
வெள்ளைக் காகிதங்கள்

நான்
கவிதைக்காகக் காத்திருக்கிறேன்

தவத்தைக் கலைக்கிறது
ஓடை நீரில்
தொப்ளக் சத்தம்.

எவனோ குதித்துபோது
தெறித்த துளிகள் பட்டு
திறந்திருக்கும்
தொட்டாச்சிணுங்கிச் செடியின்
இலைகள் மூடிக்கொள்ளும்
அழகைவிட
நல்ல கவிதை
எழுதமுடியாதாகையால்
இன்னும்
வெள்ளையாகவே இருக்கின்றன
காகிதங்கள்

Tuesday, November 25, 2003


ஹைகூ
-- ஹரன்பிரசன்னா

கோயில் மணியோசை இரம்மியமானது
கோபுரப் பொந்துகளில்
கிளிகள் உறங்காதிருக்கும்போது.


சங்கிலிபூதத்தார் சாமி வந்து
உக்கிரமானான் பூசாரி
கலவரமடைந்தன கோழிகள்


கட்சிக் கொடிக்கம்பங்கள்கூட
கவர்ந்துவிடுகின்றன
நாய்கள் நனைக்கும்போது


மலைத்திருப்பத்தில்
ஏதோ ஒரு கணத்தில்
வால் பார்க்கிறது இரயில்


மேலிருந்து கீழிறங்கி
மீனைக் கொத்திக்கொண்டு
மீள்கிறது மீன்கொத்தி


போர்வைக்குள் சத்தம்
கொடியில் படபடக்கிறது
பொத்தல்களுடன் பாவாடை


சீரான இடைவெளியில்
துணிதுவைக்கும் சத்தம்
தூங்குகிறது குழந்தை


பயனில்லாத கிணற்றைச் சுற்றி
மக்கள் கூட்டம்
மிதக்கிறது பிணம்


Monday, November 24, 2003


கேள்விகள்
--ஹரன் பிரசன்னா

ரவு முழுதும் செய்த வேலையின் அலுப்பு உடலெங்கும் பரவியிருந்தாலும் அந்தக் காலை நேரத்தின் குளிர்ந்த காற்று அக்கணத்தை இரம்மியமானதாக ஆக்கிகொண்டிருந்தது. வேகமான எதிர்காற்று மூக்கினுள்ளே சென்று ஒருவித சுகமான எரிச்சலை விட்டுச் சென்றது. காதுகளின் வழியே அது சீறிப்பாயும் வேகம் சத்தத்தில் தெரிந்தது. ஆலையின் ஒவ்வொரு புகைபோக்கியாய்க் கடந்து நகர எல்லைக்குள் நுழையும்போது சாலையின் இரு புறங்களிலும் கருப்புத்தோல் பெண்கள் கலையத்திலும் எவர்சில்வர் தூக்குச் சட்டியிலும் பதனீர் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு வித சினேகப் பார்வையும் நாம் மறையாத வரை அவர்களின் முகத்தில் தோன்றும் சிரிப்பும் ஒரு வித வியாபார அழைப்பு.

காற்றில் கலையும் தலைமுடியை கைகளால் கோதினேன். நிறைய மணற்துகள்கள் கையில் ஒட்டிக்கொண்டன. ஹெல்மேட் அணிந்துகொண்டு வந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் கடிகாரத்தைப் பார்த்தேன். அது ஆறு இருபது காட்டியது. பைக்கின் வேகத்தை கொஞ்சம் குறைத்தேன். பிரம்மச்சாரி வாழ்க்கையில் நான் போய் செய்யப்போவது எதுவுமில்லை. தூக்கம், சாப்பாடு, ஷி·ட் என்பன தரும் அலுப்பில் ஒரு வித சந்தோஷம் கண்டுகொள்ளப் பழகினால் வாழ்க்கை இனிமையாயிருப்பதாய்க் கற்பிதம் கொள்ள வசதியாய் இருக்கும். எனக்கு அது பழக்கப்பட்டுவிட்டது.

டவுண்ஷிப் தாண்டி ரவுண்டானா கடந்து பிள்ளையார் கோவில் பக்கத்து சந்தில் திரும்பி அக்ரஹாரத்தில் நுழைந்தபோது பெருமாள் கோவிலிருந்து புல்லாங்குழல் இசை காற்றில் மிதந்து வந்தது. பட்டருக்கு எப்போதும் ·பர்ஸ்ட் ஷி·ப்ட் என்று நினைத்துக்கொண்டேன்.

வண்டியை கோவிலுக்கு பக்கவாட்டிலுள்ள என் வீட்டிற்கு முன் நிறுத்திவிட்டு டீக்கடைக்காரனுக்கு ஒரு புன்னகை புரிந்துவிட்டு வாசல்படியில் இருந்த தினந்ததியைக் கையிலெடுத்த போது பக்கத்துவீட்டு மாடியிலிருந்து ரேணுகா மாமி என்னவோ கேட்டாள்.

"என்ன மாமி.. காதுல சரியா விழல."

ஜன்னல் வழியாக வரப்போகும் குரலைத் தெளிவாய்க் கேட்க ஆயத்தமானேன்.

"மாமா உன்னப் பார்க்கணும்னார். அவசரமில்லை. எப்பமுடியுமோ அப்ப வா.."

"இப்பவே வரட்டா"என்றேன்.

ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் "சரி வா"என்றாள். தினத்தந்தியைக் கையிலெடுத்துக் கொண்டு சாவியை சுழற்றியபடி மாமிவீட்டு மாடிப்படியில் ஏறினேன். காலிங்பெல்லை அழுத்துமுன் மாமியின் குரல் உள்ளிருந்து, "வெறுமனே தெறந்துதான் இருக்கு.வா"என்றது. செருப்பை விட்டுவிட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றேன். மாமி வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். இன்னும் குளிக்கவில்லை போல. அப்படியானால் மாமா சமையல் கட்டில் தான் இருக்கவேண்டும்.

"என்ன மாமி.. இன்னைக்கும் ராவுஜிதான் சமையலா?"

"ஆமா.. உள்ளதான் இருக்கார் போ”

எந்தவித சங்கோஜமும் இல்லாமல் சமையற்கட்டு வரை செல்வது எனக்கே ஆச்சரியமான ஒன்று. ராவுஜி சிவப்பான தொந்தியை ஒரு துண்டால் இறுக்கிக் கொண்டு கடுகை வெடித்துக்கொண்டிருந்தார். துண்டு எப்போதுவேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற எண்ணத்தை என்னால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் ராவுஜிக்கு அந்தக் கவலை இருந்ததாகவே தெரியவில்லை.

மாமி அங்கிருந்தே கத்தினாள்.

"அவனுய காபி ஆக்கி கொட்றி"

ராவுஜி காபி குடிக்கிறியா என்றார். சரி என்றேன். பிறகு காபி போடுவதில் மும்முரமாகிவிட்டார். அறை முழுதும் சாமான்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இறைந்து கிடந்தன. மாமி வீட்டில் இருந்திருந்தால் இப்படி இருந்திருக்காது. குறைந்த பட்சம் ராஜி இருந்திருந்தாலாவது..

இந்த எண்ணம் எழுந்ததும் வயிற்றுக்குள் என்னவென்று தெரியாத ஒரு உருண்டை புரண்டு அடங்கியது. அதற்குள் ராவுஜி காபி ரெடி என்றார். காபியைக் கையில் எடுத்து குடித்துக்கொண்டே ராவுஜியைக் கேட்டேன்.

"என்ன விஷயம்?"

நான் காபியைப் பற்றி கமெண்ட் சொல்வேன் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ? ஒரு நொடி சுதாரிப்புக்குப் பின் சொன்னார்..

"நேத்து பஜார்ல நம்ம இன்ஸ்பெக்டரைப் பாத்தேன்."

அவர் முகம் சீரியஸாகியது. குரல் தணிந்தது. மாமிக்கு கேட்ககூடாது என்று நினைத்திருக்கலாம். அதுவும் சரிதான். எனக்கும்கூட கொஞ்சம் படபடப்பு உண்டானதை அறிந்தேன். இனி ராவுஜியின் முகத்தைப் பார்க்கும் சக்தி இருக்காது என்று எனக்குத் தெர்¢யும். ராவுஜிக்கும் அப்படித்தான். இது பற்றி பேசும்போது அவர் என்னைப் பார்க்கமாட்டார். எந்த ஒரு அப்பாவிற்கும் அப்படித்தான். நான் காபியின் நுரைகள் எப்படி அடங்குகின்றன என்பதைப் பார்த்தவண்ணம் ராவுஜி சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் தாளித்த வாணலியில் புளிக்கரைசலை ஊற்றிக்கொண்டே,

"அவர வந்து பாக்கச் சொன்னாரு. நீயும் கூட வந்தீன்னா நல்லாயிருக்கும்னு நெனச்சேன். இன்னைக்கு காலேல போகலாம்னு இருக்கேன். வர்றியா?"

பதிலுக்காய் தொக்கி நிற்கும் கேள்விகள் கேட்பது ராவுஜியின் பழக்கமல்ல. நைட் ஷி·ப்ட் முடிந்து தூங்கிகொண்டிருந்தாலும் எழுப்பி பதினோரு மணிக்காட்சிக்கு வா என்பார். வர்றியா என்பது இப்போது தொற்றிக்கொண்டுள்ள புதுப்பழக்கம்.

எப்போதும் யோசனையிலிருக்கும் அவருக்கும் இந்த உலகத்திற்கும் ஒரு இடைவெளி விழுந்தது போன்ற உணர்வு எனக்கு மேலிட்டது. அதை அவரால் தவிர்க்க இயலாதென்பதும் உண்மை.

"இன்னைக்கு ஆ·ப்தானே ராவுஜி. கண்டிப்பா வர்றேன்."

"கல்யாணத்துக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு? எண்ணி வெச்சிருப்பியே"என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். நேரத்துடன் ஒட்டாத வெறுமை நிறைந்த சிரிப்பு எனக்கு எப்போதும் இஷ்டமாய் இருந்ததில்லை. அதை அவர் கண்டு கொண்டதுபோல நிறுத்திக்கொண்டார். நான் பதிலேதும் சொல்லாமல் சுருட்டிய தினத்தந்தியால் கையில் தட்டியபடியே வெளியில் வந்தேன். மாமி ராவுஜியிடம் "காபி கொட்றியா?"என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.

வளைந்த மாடிப் படிகளின் கீழிருந்த சிறிய மணற்வெளியில் குட்டையாய் தென்னை நின்றுகொண்டிருந்தது. இதைக்காணும்போதெல்லாம் ராஜியின் நினைவு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தென்னையின் கிளைகள் ஆடுவதற்கும் ராஜியின் சிரிப்புக்கும் எப்போதும் வித்தியாசம் தெரிந்த்தில்லை எனக்கு.

முதல்முறை கண்டபோதே வந்த ஈர்ப்பும் பழகப் பழக விரிந்த நட்பும் என் வழக்கமான வாழ்க்கைக்கு ஒரு ஆறுதலைத் தந்துகொண்டிருந்ததை எப்போதும் நினைப்பேன். என்றோ நிச்சயிக்கப் பட்டுவிட்ட அவளின் அவனை, கொஞ்சம் உரிமை எடுத்து நான் கிண்டல் செய்யும்போதெல்லாம் அவள் சந்தோஷமும் பொய்க்கோபமும் கலந்து அண்ணா என்று கூப்பிடும் அந்த ஒலி இன்னும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

வெளியில் வந்து கேட்டைப் பூட்டிவிட்டுத் திரும்பியபோது டீக்கடைக்காரன் சொன்னான்.

"தம்பி.. காபி கொண்டுவந்தேன். வூடு பூட்டியிருந்துச்சு"

"ராவுஜி வீட்டுக்குப் போயிட்டேன். கொஞ்ச நேரம்கழிச்சு கொண்டுவாங்க"என்று சொல்லிவிட்டு என் வீட்டு படிகளில் ஏறினேன். மேலேயிருந்து ராவுஜி குரல் கொடுத்தார்.

"பதினோரு மணிவாக்குல ஸ்கூலுக்கு வா"

பூட்டிய என் வீட்டுக் கதவைத் திறந்த படியே சரி என்று கத்தினேன்.


மேலே மின்விசிறி சுழல்வதை பார்த்துக்கொண்டே இருந்த ஞாபகம் இருக்கிறது. எப்போது உறங்கினேன் என்ற நினைவில்லை. ஒரு வித அரை குறை உறக்கம். எப்போதும் விழித்திருப்பது போன்ற எண்ணமும் நன்றாகத் தூங்கியது போன்ற எண்ணமும் ஒன்றாய் எழுந்து என்னை அலுப்பாக்கியது. கண்ணைத் திறந்து மணியைப் பார்க்கத் தோன்றாமல் அலாரம்தான் அடிக்கட்டுமே என்ற எண்ணத்திலேயே இருந்தேன். ராவுஜி காத்துக்கொண்டிருப்பார் என்ற எண்ணம் மேலோங்கவும் போர்வையையும் சோம்பேறித்தனத்தையும் உதறிவிட்டு குளிக்கச் சென்றேன். என்னவென்னவோ நினைவுகள் என்னைச் சுழற்றிக்கொண்டிருந்தன. அன்றும் இதே போன்ற ஒரு விடுமுறை நாள்தான். எப்போதும்போல விழிக்கவில்லை. ரேணுகா மாமியின் அலறலும் ராவுஜியின் கதறலும் கேட்டு அடித்துப்புரண்ட நினைவு இப்போதும் கலவரமேற்படுத்துகிறது. நான் போவதற்குள் ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டிருந்தது. என்னவென்னவோ பேசிக்கொண்டார்கள். எதையும் கிரகிக்கும் நிலையில் இல்லை. ஒன்று மட்டும் புரிந்தது. ராஜி தூக்கில் தொங்கிவிட்டாள். இப்போது உயிரில்லை. பிணமாய்த் தொங்கும் ராஜியை எல்லோரும் கஷ்டப்பட்டு கீழே இறக்கியபோது நான் வெளியில் எங்கேயோ வெறித்தவண்ணம் இருந்தேன்.

அதற்குப் பிறகு ராவுஜியை பார்க்கும் தைரியமோ அவரைத் தேற்றும் பக்குவமோ அழுது அழுது வீங்கிப்போன மாமியின் முகத்தைப் பார்க்கும் சக்தியோ எனக்கில்லை. இப்படியெல்லாம் நேரும் என்பதும் இவையெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதும் என்னால் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டவையல்ல. அங்கேயே மரம் போல நின்றிருந்தேன். என்னென்னவோ சொன்னார்கள். போலீஸ் கேஸாகுமுன் பிணத்தை எடுக்கவேண்டும் என்று சொல்லி ஐந்து மணி நேரத்தில் காரியத்தை முடித்தார்கள். நேற்று பேசியவள் இன்றில்லை என்னும் உண்மை நெஞ்சைக் குடைந்தபோது கொஞ்சம் கலவரமடைந்துதான் போனேன். ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்ற கேள்வி என் மனதில் ஓடிய வண்ணம் இருந்தது.

ராவுஜியையும் மாமியையும் எல்லாரும் தேற்றிக்கொண்டிருந்த போது ஒரு காரில் இருந்து ராஜிக்கு பேசி வைக்கப்பட்டிருந்த பையனும் வேறு சிலரும் இறங்கினார்கள். ராஜியின் கட்டாயத்தின் பேரில் அந்தப் பையனை நான் ஒரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். கூட வருவது அவன் அப்பாவும் அவரின் நண்பர்களுமாய் இருக்கவேண்டும். அவன் அப்பா அவனை ஒரு கையில் பிடித்துக்கொண்டு எல்லா கூட்டத்தையும் மீறி வீட்டினுள்ளே சென்றார். அவனைப் பார்த்ததும் மாமி மீண்டும் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். ராவுஜி துண்டைஎடுத்து வாயை மூடிக்கொண்டு சரிந்திருந்த மார்புகள் குலுங்கக் குலுங்க அழுதார். பையனின் அப்பா கேட்டார்.

"என்னாச்சு?"

கன்னடத்திலும் தமிழிலும் மாறி மாறி பேசிக்கொண்டார்கள். ராவுஜி கேட்டகேள்விக்கு மட்டும் பதில் சொன்னார். பையனின் அப்பா ராவுஜியின் மன நிலையைக் கருத்தில் கொண்டதாகவே தெரியவில்லை.

"நீ என்ன பண்ணிருக்கனும்? நாங்க வர்ற வரைக்கும் வெச்சிருக்கணுமா வேண்டாமா?
அவனப் பாரு.. அழுது அழுது.. அவனுக்கு என்ன ஆறுதல் சொல்றது நானு? அவன் கடைசியா அவ மொகத்தைப் பார்த்திருந்தான்னா கூட ஒரு ஆறுதலா இருந்திருக்கும்.."

"இல்லடா. போலீஸ் கேஸாயிரும்னுதான்.. .. "

"சும்மா சொல்லாத.. திடீர்னு வந்து என் பொண்ணுக்கு ஒன் பையனக்கொடுன்னு சொன்னப்பவே யோசிச்சேன். சரி கூட படிச்சவனாச்சேன்னு நம்பித்தான் சரின்னேன். என்னடா தூத்துக்குடியில இல்லாத ஸ்கூலான்னதுக்கு அவ அத்தை வீட்டுல தங்கிப் படிக்கட்டும்ன. இப்பதான் புரியுது அவ பத்தாவது படிக்கும்போதே எவன் பின்னாடியோ சுத்திருக்கான்னு. "

ராவுஜி இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற ரீதியில் நின்றிருந்தார். பையன் பேசினான். அதிகமாய் ராஜியை நேசித்திருப்பான் போல. பேசும்போது கண்ணிலிருந்து நீர் வழிந்த வண்ணம் இருந்தது.

"அப்பா சும்மா இர்றி.."என்று அவன் அப்பாவை அதட்டிவிட்டு ராவுஜியை நோக்கி "மாமா. அவரு சொல்றத கேக்காதீங்க. எனக்குத் தெரியும் என் ராஜி பத்தி. அவ எம்மேல உசிரயே வெச்சிருந்தா. என்கிட்ட கூட சொல்லாம இப்படிச் செஞ்சிக்கிட்டான்னா வேற ஏதோ காரணம் இருக்கணும்.. சொல்லுங்க.. என்ன காரணம்? "

"தெரியலையேப்பா.."ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் ராவுஜி.

"பொய் சொல்றீங்க.. உங்களுக்குத் தெரியாம இருக்க சான்ஸே இல்லை. சரி விடுங்க. ஏதாவது லெட்டர் எழுதி வெச்சிருந்தாளா?"

ராவுஜி எதுவும் இல்லையென்று தலையசைத்தார். பையன் தனக்கு கடிதம் எழுதி வைக்காமல் ராஜி சாகமாட்டாள் என்று சொல்லிக்கொண்டே இருந்தான். மீண்டும் பையனின் அப்பா கத்தத் தொடங்கினார். ராவுஜி திட்டம்போட்டு தன்னையும் தன் பையனையும் ஏமாற்றிவிட்டதாகக் கத்தினார். தெருக்காரர்கள் சிலர் சமாதானம் பேசி அவரை அனுப்பி வைத்தார்கள். போகும்போது தனக்கும் ராவுஜி குடும்பத்திற்கும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போனார்.

அலாரம் அடித்த போதுதான் ஷவரில் நெடு நேரமாய் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். வேகவேகமாய் தலைதுவட்டிக்கொண்டு கத்தும் அலாரத்தை நிறுத்திவிட்டு புறப்பட்டேன்.

ராவுஜி பயந்தபடி ஒன்றும் இருக்கவில்லை. இன்ஸ்பெக்டர் தன் பையனுக்கு ட்யூசன் சொல்லித்தரவேண்டுமென்று கேட்டார். எனக்கு எரிச்சலாய் இருந்தது. பஜாரில் பார்த்தபோதோ அல்லது ஒரு ·போன் போட்டோ கேட்டிருக்கலாம். ஆனால் ராவுஜி அப்படியெல்லாம் நினைத்ததாகத் தெரியவில்லை. தனது கடமை அது என்பது போல பேசிக்கொண்டிருந்தார். ஒரு வேளை ராஜி விஷயத்தில் இன்ஸ்பெக்டர் செய்த உதவிக்கு நன்றியுணர்ச்சியாய் இருந்திருக்கலாம். இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து ஏதாவது கேட்கவேண்டும் என்ற தொனியில், "எப்ப கல்யாணம்? என்னைலேர்ந்து லீவு", என்றார். உடனே மறந்துபோகும்படியான ஒரு பதிலைச் சொல்லிவிட்டு பரஸ்பரம் சிரித்துவிட்டு நானும் ராவுஜியும் கிளம்ப ஆயத்தமானபோது ராவுஜி இன்ஸ்பெக்டரிடம்,

"நீங்க வரச்சொன்னதும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்"

"என்னவோ ஏதோன்னா.. ஓ.. நீங்க இன்னும் அதையே நெனச்சுக்கிட்டு இருக்கிறீங்களா? அது முடிஞ்சி போச்சு. ஆக்சிடென்டல் டெத்துன்னு சர்டி·பிகேட் வாங்கின பின்னாடிதான எரிச்சோம். இனிமே ஒரு பிரச்சனையும் வர வாய்ப்பில்ல. நீங்க மறக்கவேண்டியதுதான் பாக்கி"

"நா எப்பவோ மறந்துட்டேனே.. எப்ப அவ எங்கள வேண்டாம்னு நெனச்சிட்டாளோ அப்பவே அவள நாங்க மறந்தாச்சு.."

ரொம்ப அலட்சியமாய் பேசுவதாய் ராவுஜி நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் குரல் அவருடன் ஒத்துழைத்ததாகத் தெரியவில்லை.

"ஜஸ்ட் ஒரு க்யூரியாஸிட்டி.. உண்மையிலேயே அவ லெட்டர் எழுதும் எழுதி வைக்கலயா?"

எனக்குள்ளிருந்த அதே கேள்வியை இன்ஸ்பெக்டர் கேட்கவும் கொஞ்சம் உன்னிப்பானேன்.

"என்ன சார் நீங்க.. லெட்டர் இருந்திருந்தா உங்க கிட்ட கொடுத்திருக்க மாட்டேனா.. நீங்க எவ்வளவு ஹெல்ப் பண்றீங்க.."

ராவுஜி இதைத் தவிர எதுவும் சொல்லமாட்டாரென எனக்குத் தெரியும். இன்ஸ்பெக்டருக்கும் அதே எண்ணமோ என்னவோ. "ஓ.. ஜஸ்ட் கேட்டேன்"என்றார். நாங்கள் விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தோம். ராவுஜியை ஏதோ ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டு இருந்தது. இருவரும் ஏதும் பேசிக்கொள்ளாமல் நடந்தோம். நானும் ராவுஜியும் எங்கு போனாலும் நடந்து போவதே பழக்கம். ராவுஜிக்கு நான் பைக் ஓட்டும்போது என் பின்னே அமர்ந்து வர பயமும் கூட. ரேஷ் ட்ரைவிங் என்பார்.

என் சிந்தனைகளைக் கலைக்கும் விதமாகவும் அவரை அவரே சாந்தப் படுத்திக்கொள்ளும் விதமாகவும் எங்களிடையே நிலவியிருந்த மௌனத்தை அவரே கலைத்தார்.

"அப்புறம் கல்யாண வேலைலாம் ஊர்ல அப்பாவும் அம்மாவும் பார்க்குறாங்களா?"

அந்தக் கேள்வி அவருக்குள்ள படபடப்பைக் காட்டுவதைத்தவிர வேறொன்றையும் சாதித்ததாகத் தெரியவில்லை.

"ம்"

"என்ன யோசனை பலமா இருக்கு?"

அவரை ஆழ ஊடுருவிப் பார்த்தேன். எனக்குள்ளிருந்த அந்தக் கேள்வியை கேட்டுவிடலாமா என்று நினைத்தேன். நீயுமா என்பது பதிலாய் இருக்கக்கூடும். இருந்தாலும் பரவாயில்லை என்று கேட்டேன்.

"ராஜி ஏன் அப்படி செஞ்சிக்கிட்டா? உங்களுக்கு நெஜமாவேத் தெரியாதா? அவ உண்மையிலேயே லெட்டெர் எதுவும் எழுதி வைக்கலயா?"

என்றாவது ஒரு நாள் இதைக்கேட்பேன் என்று ராவுஜி எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ. பெரிய அதிர்ச்சி ஒன்றும் அவர் முகத்தில் இல்லை.

"அப்படி ஒன்னு இருந்தா உன்கிட்ட கூடச் சொல்ல மாட்டேன்னு நினைக்கிறியா?"

இதற்குப் பிறகு அவரிடம் இதைப் பற்றிக் கேட்பது முறையல்ல என்று நினைத்துக்கொண்டேன். என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்ற ரீதியிலான முகத்துக்கு நேரான கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது, அமைதியாயிருப்பதைத் தவிர?

ராவுஜி ராஜியின் நினைவுகளை ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே வந்தார். சில சமயங்களில் அவரையும் மீறி கண்ணீர் வந்தது. சீக்கிரம் ஸ்கூல் வந்துவிடாதா என்று இருந்தது எனக்கு.

"எப்படி வளர்த்தேன் தெரியுமா? ஆசை ஆசையா வளர்த்த பொண்ணு இப்படிப் போனா எப்படிடா வாழ்றது? என்ன விடு. மாமியை நினைச்சுப் பாரு. இப்பவும் ராத்திரியில பொலம்புறா.. அவ அழும்போது நெஞ்ச அடைக்கும் எனக்கு. நேத்து சொல்றா.. ராஜிய நெனச்சுப் பார்த்தாஅவ சிரிச்ச முகமே ஞாபகம் வரமாட்டேங்குதுங்க.. தொறந்த கண்ணும் வீங்குன முகமும் வெளிதள்ளின நாக்கும் ஞாபகம் வந்து பயமா இருக்குதுங்கன்றா. பெத்தவளுக்கு எப்படியிருக்கும்?"

எனக்கு பயமாய் இருந்தது. அழுதுவிடுவேனோ என்று தோன்றியது. நல்லவேளை. ஸ்கூல் வந்துவிட்டது.

"சரி ராவுஜி நான் கிளம்புறேன். ரொம்ப தூங்கிட்டேன்னா ராத்திரி ஒரு ஆறரைக்கு எழுப்பிவிட்டுருங்க. வரட்டா"என்றேன்.

சம்பந்தமில்லாத உரையாடல்களின் உதவி புரிந்தது.

அவர் பேச்சை மாற்றுவதைவிட அவரை விட்டு விலகிவிடுவது இப்போதைக்கு நல்லது. எனக்கும் கொஞ்சம் தனியாக இருக்கவேண்டும்.

ராவுஜி, "சரி போ. போய் தூங்கு. ஒரே ஒரு விஷயம். ஒங்கிட்ட இவ்வளவு நாள் சொல்லாதது தப்புதான். ஆனாலும் நீ புரிஞ்சுக்குவன்னு நெனைக்கிறேன்"என்ற பலமான பீடிககக்குப் பின், "ராஜி சாகுறதுக்கு முன்னாடி ஒரு லெட்டர் எழுதி வெச்சிருந்தா"என்றார்.

எனக்கு பெரிய அதிர்ச்சி ஒன்றும் இல்லை. எப்படியோ இத்தனை நாள் என்னைக் குடைந்துகொண்டிருந்த என் கேள்விக்கு விடை கிடைத்தால் சரி என்ற எண்ணத்தால் உண்டான பரப்ரப்பை அடக்கிக்கொண்டு கேட்டேன்.

"நா மொதல்லயே நெனச்சேன். என்ன எழுதியிருந்தா?"

"அத நான் படிக்கவேயில்லை. படிக்காமயே கிழிச்சுப் போட்டுட்டேன். அவ எதாவது எழுதி அதைப் படிச்சுட்டு நம்ம பொண்ணா இப்படின்னு நினைக்கிறதை விட ஏன் செத்தான்னு எல்லாரையும் மாதிரி காரணம் தெரியாம இருந்தா போதும்னு நினைச்சிதான் அதைக் கிழிச்சிப் போட்டுட்டேன்"என்றார்.

நெஜமாவா என்று வாய் வரை வந்த கேள்வியை மனதிற்குள்ளேயே அழுத்தி வைத்தேன். உண்மையோ பொய்யோ அதை எற்றுக்கொள்வதுதான் முறை என்றும் இன்னும் அவரை கேள்வி கேட்பது சரியில்லை என்றும் பட்டது.

"நீங்க செஞ்சது சரிதான்"

"மாமிகிட்ட சொல்லிடாத. ப்ளீஸ்"

"சரி"என்றேன்.

Sunday, November 23, 2003


படிமங்கள்

--ஹரன் பிரசன்னா

நின்று விட்ட மழைக்குப் பின்
கூரை நுனியில்
கீழே விழாது
தொங்கிக்கொண்டிருக்கும்
துளி
தெருவிளக்குக் கம்பத்தின்
மஞ்சள் பல்பைச் சுற்றி
சந்தோஷித்திருக்கும்
ஈசல்கள்
தாவணியை முக்காடாக்கி
வெடவெடத்துக்கொண்டு
செல்லும் சிறுமி
என
கவிதை படிமங்கள்.

பிரிந்து ஓடிய பூனைகள்
மறுமுறை
புணரும் நேரம்
மீண்டும்
தூறாதிருக்கட்டும்.
கிடக்கட்டும்
படிமங்கள்.

இறகு


--ஹரன் பிரசன்னா


விரையும் வாகனச் சத்தத்திற்குப்
பழகிவிட்டாலும்
என் பெரு ஊளையில்
படபடத்துப் பறக்கும்
செட்டியார் வீசும்
தானியத்திற்குக்
காத்திருக்கும் புறாக்கள்

காற்றில் தூளியாடும்
இறகு கண்டு
மலரும் அம்மாவிற்கு
காதுகுடைய
புறா இறகு
போதை

செட்டியார் செத்தாரா
புறாக்கள் இறந்தனவா
புதிருக்கு மத்தியில்
எந்தக் கவலையுமின்றி
கோழியிறகுக்குப்
பழகிவிட்டாள்
அம்மா

Saturday, November 22, 2003


பல்லி வதை

--ஹரன் பிரசன்னா

மரத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும் பல்லியை
சத்தமில்லாமல் நெருங்கி
கையிலிருக்கும் கல்லால்
ஓங்கி ஒரே அடியில் அடித்து
மரத்தோடு சேர்த்து வைத்துஅழுத்த
தலையின் வழி இரத்தம் பிதுங்க
வால் துடிக்க...

நாசமாப் போறவனுங்கவென்று
குண்டுப்பொம்பளையருத்தி
திட்டுவாள்
எப்போதும்
சிரித்துக்கொண்டே ஓடுவோம்.

பையனுக்குப் பல்லிதோசம்.
காரணம் தெரியவில்லை
பல்லியா குண்டுபொம்பளையாவென.

தாயம்


--ஹரன் பிரசன்னா




"போதன்னைக்கும் இதே ஆட்டம்தானா? ஆம்படையான் ஆத்துல இருக்கானே.. அவனோட செத்த நாழி பேசுவோம்னு உண்டா நோக்கு? வர்றாளே பொம்மனாட்டிகளும் என்னைப் பார் என் சமத்தைப் பார்னு.. புருஷா ஆத்துல இருக்காளேன்னு ஒரு லஜ்ஜை வேண்டாம்.. குதிராட்டம் வளர்ந்துர்றதுகள்."

"நா ஆடுனா உங்களுக்குப் பொறுக்காதே. கரிச்சி கொட்டியாறது. இனி இந்தத் தாயத்த தொட்டா என்ன சவமேன்னு கூப்பிடுங்கோ. எப்ப பாரு தனக்குப் பண்ணனும் தனக்குப் பண்ணனும்னுதான் புத்தி. மத்தவா எப்படிப்போனா உங்களூக்கென்ன? இது ஒண்ணுதான் போது போயிண்டிருந்தது. அதுவும் பொறுக்கலை உங்க கண்ணுக்கு.."



இதோ வந்துடுவேன் இதோ வந்துடுவேன்னு சொல்லிண்டே இருக்கார். ஆளைக் காணோம். எனக்கு கையும் காலும் வெடவெடங்கிறது. அந்த நாசமாப் போன நாத்து எங்க போய் தொலஞ்சதோ? வயித்துல ஜனிச்சதோ ஒண்ணே ஒண்ணு. அதுவும் மசனை.

பொம்மனாட்டி ஒத்த ஆளா அல்லாடிண்டிருக்கேன். அவர் வர்ற வரைக்கும் சித்தப்பாவை இங்க வந்து இருக்கச் சொல்லுன்னு அனுப்பி எத்தனை நாழியாறது. இன்னும் வந்த பாடில்லை. மீசை வந்தவனுக்கு தேசம் தெரியாதும்பா.. சரியாத்தன் சொல்லிருக்கா. எங்க எதைப் பார்த்துண்டு நின்னுண்டு இருக்கோ.

பத்தாம் நாள் சப்பரத்துக்கு மீசை வெச்சதாட்டம் கொழுந்தன். அப்பாவுக்கு இழுத்துண்டு இருக்கு வாடான்னு சொல்லி எத்தனை சமயம் ஆறது. கேட்டா பிஸினஸ்ம்பான். டாலர்ம்பான். பொண்டாட்டிக்கு புடவை எடுக்கணும்னா நாலு நாள் நாயா சுத்துவான். அவ மகராணி. மூத்தான்னு ஒரு மரியாதை கிடையாது. பெரியவான்னு ஒரு சொல் கிடையாது. ஆங்காரி. ஒரு நாள் மாமவுக்கு சிருக்ஷை செஞ்சிருப்பாளா? வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோன்னு பேச்சு. நாம சொல்லி என்ன பிரயோஜனம். ஆம்படையான் செல்லம்.

அவர். மகா புருஷர். அப்பா சரியில்லை. வெளிய போகாதீங்கோன்னு தலை தலையா அடிச்சுண்டதுதான் மிச்சம். எவனோ மரண நாடி பார்ப்பானாம். அவனை கையோடு கூட்டிண்டு வரப் போறேன்னு போனார். நாலு போன் வந்ததே தவிர அவரை ஆளைக் காணோம். அவன் வர்றதுக்குள்ளே மரண நாடியே வந்துடுத்து போல.

தெய்வமே. வயசான ஜீவன். கஷ்டப்படுத்தாது கொண்டுபோ. ராஜாவாட்டம் வாழ்ந்தார். நோய் நோக்காடுன்னு விழுந்ததே இல்லை. ஆஜானுபாகு.. பஞ்ச கச்சை கட்டிண்டு அங்கவஸ்த்திரத்தை போட்டுண்டு தாத்தா கம்பை கைல வெச்சிண்டு நடப்பாரே.. ரெண்டு கண்ணு போதாது. தேஜஸ்வி.. வந்த நாள்ல இருந்து இன்னைக்கு வரை சாப்பிட்டியான்னு ஒரு நாளாவது கேட்காம தூங்கிருப்பாரா? அவர் கூடக் கேட்டதில்லை. என்னை அப்படிப் பாத்துண்டது இல்லை. அப்படி ஒரு ஆத்மா. எப்போ மாமி போனாளோ அப்பமே எல்லாம் போயிடுத்து அவருக்கு. கட்டிண்டவான்னு அப்படி ஒரு இஷ்டம். யாரு இருப்பா இந்தக் காலத்துல? மாமியும் சும்மா சொல்லப்படாது. ஆம்படையான்னா உசுரையே விடுவா. யாரு எதிர்பார்த்தா எல்லாத்தையும் தவிக்கவிட்டுட்டு திடீர்னு போவான்னு? எல்லா நாளும் போல சமைச்சா. குத்து ிளக்கு ஏத்துனா. ஊஞ்சல்ல படுத்துண்டா. என்ன மாமி.. சாப்பிடலையான்னு கேட்டதுக்கு பதிலே இல்லை. சுக ஜீவி. சாவுன்னா அப்படி வரணும். ஆண்டவன் கிருபை வேணும். யாருக்கு கொடுத்து வெச்சிருக்கு?

மாமா படுத்து பத்து நாள் ஆறது. ஆகாரம் வல்லிசா இல்லை. மூணு நாளா இழுத்துண்டு இருக்கு. ஏதேதோ சொல்றார். ரோஜா வேணும்னார். எதுக்கு மாமான்னா பதிலே இல்லை. இன்னைக்கு கார்த்தால ரோஜா வாங்கிக் கைல கொடுத்தது. இன்னும் கைலயே வெச்சிண்டு இருக்கார். என்னென்னமோ சொல்றார். கோர்ட்ன்றார். அமீனான்றார். புத்தி பிறள்றது. நிலையில்லை. இப்பவும் என்னவோ சொல்றார்.

தெருவுல ஆட்டோ சத்தம் கேட்கிறது. அவராய்த்தான் இருக்கும். நேக்கு அழுகை முட்டிண்டு வர்றது.


"இப்போல்லாம் தாயம் அடுறதே இல்லையாடி?"

"என்னைக் கிளறாதேள். அப்புறம் பத்ரகாளி ஆயிடுவேன்."

"இல்லை. இன்னைக்கு நானும் நீயும் ஆடுறோம் வா."

"கெட்டது போங்கோ.. அடுத்த ஆத்துக்காரா பார்த்தா சிரிப்பா.. நீங்களூம் உங்க ஆட்டமும்.. நன்னாயிருக்கு.."

"என் பொண்டாட்டி நா ஆடறேன். அடுத்தவா சிரிக்க என்ன இருக்கு. இன்னைக்கு நானும் நீயும் தாயம் ஆடுறோம்.. ஆமா சொல்லிட்டேன்"


என்ன கேட்டேன்னு அவருக்கு இத்தனை கோபம்னு தெரியலை. எரிஞ்சு விழுந்துட்டார். என் கஷ்டம் எனக்கு. இத்தனை மெல்லமா வர்றேளேன்னு கேட்டா அது ஒரு தப்பா. அவரையும் என்ன சொல்ல. அப்பா இப்படிக் கிடக்குறாரேன்னு அவருக்குக் கஷ்டம். மரண நாடி பார்க்கவந்தவன் என்ன சொன்னான்னு கேட்கலாம்னா பயமா இருக்கு. ஆம்படையான்கிட்ட பயந்தா காரியம் நடக்குமோ?

"செத்த நில்லுங்கோ. அவன் என்ன சொன்னான்?"

"நீ கேட்கலையாக்கும்? நிலைக்குப் பக்கத்துலதானே இருந்தாய்?"

"சரியாக் கேட்கலை. சொல்லுங்கோ."

"இது மரண நாடி இல்லையாம். உயிரெல்லாம் போகாதாம். உசுருக்கு ஆபத்து இல்லைனான்""

"பால வார்த்தான்."

நாத்து ஓடி வந்து சொன்னான்.

"அப்பா.. தாத்தா கை காலை எல்லாம் ஒரு மாதிரி முறிக்கிறார்ப்பா "

அவர் ஓடினார். நானும் ஓடினேன்.

"பெருமாளே ஒண்ணும் ஆகாது பாத்துக்கோ"



"என்ன பண்றேள்?"

"குருடா எழவு.. நோக்கு பார்த்தா தெரியலயோ?"

"தெரியறது.. தெரியறது.. இப்படி யாராவது ஆணியை வெச்சி தரையில தாயக்கட்டம் வரைவாளா? பின்ன அது
போகவே போகாதோன்னோ.."

"இருந்துட்டுப் போறது.. உன்ன என்னடி பண்றது? ஒவ்வொரு நாளும் சாக்பீஸ் தேடவேண்டாமோன்னோ."

"அது சரி. அதிவிஷ்டு அனாவிஷ்டு"


அவர் கண்ணுல ஜலம். முழிச்சிண்டு நிக்கறோம். பதட்டத்துல ஒண்ணும் ஓடலை. அழுகைதான் வர்றது. தெய்வம் மாதிரி பட்டு மாமி வந்தாளோ நேக்கு உசிர் வந்ததோ. பட்டு மாமி மாமாவை பார்த்துவிட்டு சொன்னாள்.

"மச மசன்னு நிக்காதேள்.. இன்னும் அரைமணியோ ஒரு மணியோ.. போய்டும்.. சொல்றவா எல்லாருக்கும சொல்லிடு.."

"என்ன மாமி வந்தும் வராததுமா குண்டைத் தூக்கிபோடுறேள்? மரண நாடி பார்த்துட்டு பயப்படவேணாம்னான். இப்போ இப்படி சொல்றேள்."

"அவன் சொன்னான் சொரக்காய்க்கு உப்பில்லைனு. நேக்கு தெரியாதா.. தத்து பித்தாட்டம் நிக்காம ஆகற காரியத்தைப் பாருடி.. என்னடா சங்கரா நின்னுண்டு இருக்காய்? கட்டில்ல இருக்காரோன்னோ.. பாயை விரிச்சி கீழே படுக்க வைடா.. போற உசுரு கட்டில்ல போகப்படாது."

ஆக மாமி முடிவே பண்ணிவிட்டாள். மாமி சொன்னதும் அவர் அப்பாவை அலாக்காகத் தூக்கி பாயில் படுக்க வைத்தார். அவரையும் அறியாமல் அவருக்கு கண்ணீர் வந்தது. நாத்து ரொம்ப பயந்துடுத்து. அங்கே நிக்காத போன்னு அதட்டி அனுப்பிவிட்டு நானும் அவரும் மாமியும் அவர் தலை மாட்டில் உட்கார்ந்துகொண்டோம்.

"மாமி. எப்படி இருந்தவர். இப்படி சுக்கா ஆயிட்டாரே மாமி"

"இதுதாண்டி சாஸ்வதம். எது விதிச்சிருக்கோ இல்லையோ.. இது விதிச்சிருக்கு.. எல்லாருக்கும். மனச தேத்திண்டு நாத்துக்கு சாப்பாடு போடு. அப்படியே நீயும் சங்கரனும் சாப்பிட்டுடுங்கோ.. ஜீவன் போயிடுத்துன்னா எல்லாம் முடியறவரைக்கும் சாப்பிடப்பிடாது"

"சரி மாமி"

நாத்துவைக் அழைத்து அடுக்களைக்குள் செல்லுமுன் மாமாவின் முனகல் கேட்பது போல இருந்தது. நாத்துவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு அங்கு போனேன். மாமாவின் தலையை அவர் மடியில் வைத்துக்கொண்டிருந்தார். பட்டு மாமி
சொன்னாள்.

"ஒரு டவரால பாலை ஊத்திக்கொண்டுவாடி.. எல்லாரும் ஒரு கரண்டி பாலை வார்த்திடுங்கோ.. சந்தோஷமா அடங்கட்டும்"

"மாமி.. அப்பா ஏதோ முனங்கறார்"

"நினைவு தப்பிடுத்து. இனி அப்படித்தான்"

"இனிமே நினைவே வராதா?""

"அது பகவான் செயல். போ. போய் பாலைக்கொண்டுவா.. நாத்துவையும் அழைச்சிண்டு வா.. எல்லாரும் பாலை ஊத்திடுங்கோ"

அடுக்களைக்குள் சென்று பால் எடுக்கும்போது மாமா முனகுவது கொஞ்சம் தெளிவாகக் கேட்டது. ஏதோ தாயம் என்று சொல்வது போல தெரிந்தது. மாமி அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

"தாயக்கட்டை இருந்தா கைல கொடுடி."

தாயக்கட்டையை எங்கே தேடுவது. அதற்குள் நாத்து ஓடிப்போய் எடுத்துக்கொண்டு மாமியிடம் தந்தான். நான் பாலை எடுத்துக்கொண்டு ரேழிக்குச் சென்றேன். பட்டு மாமி மாமாவின் உள்ளங்கையை விரித்து தாயக்கட்டையை வைத்து கையை மடக்கி விட்டாள். அவர் கையிலிருந்து தாயக்கட்டை எப்போது வேண்டுமானாலும் விழும்போல இருந்தது. மேல் மூச்சு வாங்குவதும் கூட மெல்ல அடங்கத் தொடங்கியது. பட்டு மாமி சொன்னாள்.

"எல்லாரும் ராமா ராமா சொல்லுங்கோடி"

அவர், நான், பட்டு மாமி, நாத்து எல்லாரும் சொல்ல ஆரம்பித்தோம்.


"சும்மா சொல்லப்புடாது. நன்னாவே ஆடறேள்"

"இதுல நன்னா ஆடறதுக்கு என்னடி இருக்கு. விழறதை நகட்றேன்."

"கதை. எதுக்கு எந்த காயை நகட்டனும், எப்போ எந்தக் காயை வெட்டணும்னு சூட்சமம் தெரிஞ்சிருக்கு. பொம்மனாட்டி கணக்கா. அதிர்ஷ்டமும் இருக்கு. தாயம்னு சொல்லிப் போடுறேள். எந்த தெய்வம் துணைக்கு வருமோ, தாயம் விழுது."

"தெய்வம் இல்லைடி மண்டு. நீதான்"

"இது என்ன புதுக்கரடி விடுறேள்"

"நோக்கு தெரியாதோ? கட்டிண்டவ மேல ஆம்படையான் உண்மையா அன்பு வெச்சிருந்தான்னா, தாயம்னு சொல்லிப்
போட்டா தாயம் விழுமாம். கோமதிப் பாட்டி சொல்லலையா நோக்கு?"

"இந்த கிண்டலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை."

"இது கிண்டல் இல்லைடி. நிஜம்"

"அப்படியானா இப்பப் போடுங்கோ"

"இப்பமா?"

"ஏன் இப்போ என் மேல பாசம் இல்லியோ?"

"ஏன் இல்லாம. போடுறேன் பாரு"

"வேண்டாம். பின்னாடி வழியாதேள்"

"அடி போடி இவளே.. இப்பப்பாரு"

"சீக்கிரம் போடுங்கோ.. எத்தன தரம் உருட்டுவேள்"

"செத்த பொறேண்டி என் சமத்துக்கொடமே"

"இதுக்கு மேல பொறுக்க முடியாது.. இப்போ தாயம் போடப்போறேளா இல்லையா?"

"சரி.. பத்து ஒன்பது எட்டு ஏழுன்னு ஒண்ணு வரை எண்ணு.. அப்பப் போடுறேன்"

"சரி எண்றேன்.. பத்து.. ஒன்பது.. எட்டு.. ஏழு.. ஆறு........"


ராமா ராமா ராமா ராமா...

மனசுக்குள் சேவிக்காத தெய்வம் இல்லை. நல்ல கதி அடையட்டும் பெருமாளேன்னு நெக்குருகித்தான் நிக்கறேன். தாரை தாரையா கண்ணீர் வர்றது. கால் அடங்கிடுத்து என்றாள் மாமி. அப்போதான் கொழுந்தனுக்கு வழி தெரிஞ்சது போல. நேக்கு கோபம் பொத்துண்டு வர்றது. அவர் கண்ணாலே அதட்டினார். அமைதியா இருந்துட்டேன். அவன் முகத்தையும் பார்க்கலை. அவனும் ஒரு கரண்டி பால் ஊத்தினான். பாலில் பாதி வாயின் ஓரம் வழியாகவே வழிஞ்சிடுத்து. அவனும் அழுதான். அப்பா அப்பா என்றான். மாமாவிடம் இருந்து பதிலே இல்லை. அவனைப் பார்க்க பாவமாயும் இருக்கு. நான் வளர்த்த பிள்ளையோன்னோ.

ராமா ராமா ராமா ராமா

கால் அடங்கிடுத்து என்றாள் பட்டு மாமி. ஆனால் வாயில் மட்டும் ஏதோ ஒரு முனகல் இருந்துண்டே இருக்கு. என்ன சொல்ல நினைக்கிறாரோ.. பத்து பேரு சுத்தி நின்னுண்டா ஜீவன் போகாதும்பா. ஆனா மாமி இன்னும் கொஞ்ச நேரத்துல முழுசா அடங்கிடும்னு சொல்றா. என்ன நம்பிக்கையோ எழவோ. தாலி கட்டிண்டு வந்த நாள்லேர்ந்து நேத்து வரை ஒவ்வொண்ணா நினைவுக்கு வந்து நெஞ்சக் குடையறது. நேக்கே இப்படின்னா அவருக்கு எப்படி இருக்கும்? இரத்த பாசம்னா.

"வயிறு அடங்கிடுத்து"

ராமா ராமா ராமா ராமா

இப்போ முனகலும் இல்லை. தலையை அப்புறம் இப்புறமாய் மாமா அசைக்கிறார். நேக்கு வயிறுள் ஒரு பந்து உருள்றது. மாமா உடம்பை நெளக்கிறார்.


"அஞ்சு.. நாலு.. மூணு.. ரெண்டு.. ஒண்ணு.. போடுங்கோ"


பல்லைக் கடிக்கிறார். வாயின் வழியாக லேசாய் ரத்தம் வழியறது. அவர் அப்பான்னு கதறினார். நான் மாமான்னு கதறினேன். மாமி விடாது ராம நாமம் சொன்னாள். மாமா கையை விரித்தார். கையிலிருந்த தாயக்கட்டை தெறித்து அந்தாண்டை விழுந்தது. பின் ஒட்டுமொத்தமாய் அடங்கினார். நானும் அவரும் அழுதோம். எங்களைப் பார்த்து
நாத்துவும் அழுதான். கொழுந்தனும்.

"எனக்கு எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா?"

"ஏண்டி?"

"சொன்ன மாதிரியே தாயம் போட்டுட்டேளே"



Friday, November 21, 2003

Jimmy
--ஹரன் பிரசன்னா


சிஐடி மூஸா என்ற ஒரு மலையாளப்படம் பெரிய திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. என் நினைவுகள் கொஞ்சம் படத்திலும் மீதி வேறெங்கேயுமோ மேய்ந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறை வீட்டை அழைக்கும்போதும் "ஜிம்மி எப்படி இருக்குது"என்ற என் கேள்விகள் சமீப காலங்களில் எனக்கே தெரியாமல் இல்லாமல் போனது குறித்த வருத்தம் என்னுள் வியாபித்திருந்தது.

ஜிம்மி என்ற பெயரிட்டதே பெரிய சுவாரஸ்யமான விஷயம். நாய் வேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் நச்சரித்து நான் ஓய்ந்து போன ஒரு நாளில் புசுபுசுவென, உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவில் சிறியதாய் ஒரு பொமிரேனியன் குட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தார் என் அண்ணனின் நண்பர். வீட்டில் பெரிய விவாதத்திற்குப் பிறகு - “இப்ப இருக்குற நிலையில இது அவசியமா? இதுக்கு பாலும் முட்டையும் போடுறதுக்கு எவன் தண்டம் அழுவான், சோப்பு வேற போட்டுக் குளிப்பாட்டணும்.. மனுஷனுகே சோப்பில்லை” - நானும் என் அண்ணனும் அந்தக் குட்டியை வளர்ப்பதென முடிவுக்கு வந்தோம். அம்மாவும் அம்மாவும் முறுக்கிக்கொண்டு திரிய, அண்ணி வேறு வழியில்லாமல் சந்தோஷப்படத் தொடங்க, ஜிம்மி எங்கள் வீட்டில் ஒரு இரவைக் கழித்தது.

மறுநாள் காலையில் வீடு முழுவதும் நாயின் முடி உதிருந்திருந்தது. மீண்டும் பிரச்சனை. நாய் முடி இப்படி உதிர்ந்தால் பிறந்த குழந்தைக்கு (அப்போதுதான் என் அண்ணி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருந்தாள்) ஆகாதென அப்பாவும் அம்மாவும் ஒரு பாட்டம் தொடங்க அவர்களை சமாளிப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது.

ஒருவழியாய் அம்மாவும் அப்பாவும் நாயின் விளையாட்டுகளிலும் அன்பிலும் நெகிழத் தொடங்க மிகச்சீக்கிரத்தில் அது வீட்டில் ஒரு நபரானது.

அப்போதுதான் கவனித்தேன். பெயர் என்று ஒன்று வைக்காமலேயே ஆளாளுக்கு ஜிம்மி என்று கூப்பிட்டுக்கொண்டிருந்ததை. பதினைந்து நாள்களிலேயே ஜிம்மி என்பது அதன் பெயரென அது கொஞ்சம் உணர்ந்துவிட்டிருந்தது. திடீரென என்னுள் நாய்க்கு ஏன் ஜிம்மி என்று பெயர்வைக்கவேண்டும் என்ற கேள்வி வந்தது. உடனடியாய் முடிவுக்கு வந்தேன். இனி அது ஜிம்மியில்லை. வேறு எதாவது பெயர் வைக்கலாமென யோசித்தபோது சட்டென ஒன்றும் அகப்படவில்லை. அண்ணியிடன் கேட்டேன். போடா ஜிம்மிதான் சூட் ஆகுது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அம்மாவிடம் கேட்டபோது "ஏதோ ஒரு எழவு.. கூப்பிடத்தானே.. இதுக்கு என்ன ஆராய்ச்சி?"என்று சொல்லிவிட்டாள். மிகுந்த யோசனைக்குப் பின் வீரா என செலக்ட் செய்தேன். என் அண்ணன் கேட்டுவிட்டுச் சிரித்தார். "பொம்பளை நாய்க்கு வீராவாம். நீயெல்லாம் என்னத்தடா படிச்ச?"ன்னார். அப்படியே வளர்ந்த வாக்குவாதத்தில் கடைசியாய் நான் நாய்க்கு பாட்சா என்று பெயர்வைத்து இரண்டு நாள் அப்படித்தான் கூப்பிட்டேன். என் அண்ணன் போட்டிக்கு அதை குணா என்று அழைக்கப்போவதாக மிரட்ட ஆரம்பித்தார். உங்க ரெண்டு பேர் சண்டையில ஏண்டா ரஜினியையும் கமலையும் இழுக்குறீங்க என்று யார் சொல்லியும் நாங்கள் கேட்கவ்¢ல்லை. ஆனால் இதேல்லாம் இரண்டே நாளில் முடிவுக்கு வந்தது. ஜிம்மி என்று கூப்பிட்டால் மட்டுமே நாய் ரெஸ்பான்ஸ் செய்ய அரம்பித்ததால் வேறு வழியில்லாமல் நான் ஜிம்ம்¢க்கு மாறிவ்¢ட்டேன்.

படம் பார்க்கும்போது நாய் நினைப்பு ஏன் வந்தது என்றால் படம் முழுவதும் ஒரு நாய் வருகிறது. வழக்கம்போல குண்டு கண்டுபிடிக்கிறது, வீர சாகசங்கள் செய்கிறது, பெண் நாயை சைட் அடிக்கிறது, தள்ளிக்கொண்டு போய் புதர்மறைவில் மறைகிறது. அப்போது கேமரா புதரை மட்டும் காண்பிக்க புதர் ஆடுகிறது!!! அடப்பாவிகளா நாய்க்குமா என்ற நினைக்கும்போதே மனம் மேயத் தொடங்க...

என் அண்ணனும் நானும் ஜிம்மியைத் தூக்கிக்கொண்டு anti rabbies ஊசி (சரியான பெயர் தெரியலைங்கோ) போடக் கொண்டு போனோம். டாக்டர் வீட்டில் அவரை விட பெரிய சைஸாய் உயரமாய் இன்னொரு நாய் இருந்தது. அதைப் பார்த்ததும் ஜிம்மி எங்களை விட்டு கீழே இறங்கவே இல்லை. ஒரு வழியாய் இதமாய்ச் சொல்லி, கொஞ்சி, கெஞ்சி அதை கீழே இறக்கிவிட பயந்துகொண்டே நின்று கொண்டிருந்தது. ஊசி போட்டு முடித்தவுடன் டாக்டரிம் சில கேள்விகள் கேட்டோம்.

"சார்.. இப்ப இதுக்கு று மாசம் வயசு வுது. எத்தனை வயசுல இதுக்கு செக்ஸ் உணர்ச்சி வரும் டாக்டர்?"

"இன்னும் ஆறுமாசத்துல அது உடலளவுல தயாராயிடும்"

"ஓ.. அப்பக் கண்டிப்பா வேற ஆண் நாயோட சேர்த்து விடணுமா? அப்படிச் செய்யலைனா வயலண்ட் ஆயிடுமா?"

"சே சே.. அப்படில்லாம் ஒண்ணும் ஆவாது. அந்தோ நிக்குது பாருங்க நம்ம நாய். பன்னிரெண்டு வருசமாச்சு.. ஒரு பொட்டை நாயைத் தொட்டது கிடையாது.. 100% பிரம்மச்சாரி.. இன்னைக்கு வரைக்கும் நோ பிராப்ளம்"

ஐயோ பாவமாய் கேட்டுக்கு அந்தாண்டை நின்று கொண்டு ஜிம்மியைப் பார்த்து எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது டாக்டர் வீட்டு நாய். ("அவுத்து வுடுங்கடா.. என்னென்ன வித்தைலாம் காட்டுறேன் பாருங்க")

டாக்டர் தொடர்ந்தார்.."அப்படி மூட் வராம இருக்கிறதுக்குக் கூட ஊசி இருக்கு. வேணும்னா அதை வாங்கி ஜிம்மிக்குப் போட்டு விட்டுருங்க. தெரு நாய்ங்க பின்னாடி வந்தாலும் இது ஓடி வந்துரும்"

"சே சே.. அதெல்லாம் வேண்டாம்."

"அப்ப ஓகே"

"சார் இன்னொரு டவுட்டு. இதே ஜாதியில இன்னொரு ஆண் நாய்கிட்ட கொண்டு போய் விடலாமா? பார்த்த ஒடனே கடிச்சிருச்சுன்னா என்ன செய்யன்னு பயமா இருக்கு."

"நோ நோ. தெட் வில் நெவர் ஹேப்பண். நீங்க முதல்நாள் கொண்டு போய் ஆண் நாய்கிட்ட நிறுத்துங்க. ரெண்டும் மோந்து பார்த்துக்கும். அப்புறம் ரெண்டு நாள் கொண்டு போய் விட்டு அதே மாதிரி பழக்குங்க. அப்புறம் பாருங்க. எல்லாம் ஜோரா அதுங்களே பார்த்துக்கும்"

"சரி ஒகே சார். வர்றோம்"

நானும் என் அண்ணனும் ஜிம்மிக்குத் தோதான ஜோடியைத் தேடியதில் தோற்றுப் போனோம். ஆனால் ஜிம்மி அதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. எப்போதும் போல இருந்தது. பந்து எறிந்தால் ஓடிப்போய் எடுத்துகொண்டு வரும். தெரியாத ஆள் வந்தால் குலைக்கும். ஏய் சும்மாயிருன்னு ஒரு அதட்டு அதட்டுனா "வந்தவங்க நம்ம ஆளு (அட.. தெரிஞ்ச ஆளுங்க!!!) என்று புரிஞ்சிக்கிட்டு சும்மா இருந்துரும். ஒரு நாள் நானோ அண்ணனோ வர்றதுக்கு லேட்டானா சாப்பிடவே சாப்பிடாது. நாங்க வந்து (நாங்க முதல்ல சாப்பிட்டுடுவோம்!!) அதைத் தடவிக்கொடுத்து கொஞ்சுன பின்னாடிதான் சாப்பிடும். அண்ணன் பையன் கைல எது கிடைச்சாலும் எடுத்து ஜிம்மியை அடிப்பான். திடீர்னு முடியைப் பிடிச்சு ஜிம்மியை இழுப்பான். அதுபாட்டுக்கு ஒண்ணுமே நடக்காதது மாதிரி இருக்கும். அவனை ஒண்ணுமே பண்ணாது. நாங்க பார்த்துப் பார்த்துப் பூரிச்சுப் போவோம்.

திடீர்னு எனக்கு துபாய் சான்ஸ் வர, நான் flight ஏறினேன். நான் ஜிம்மியைப் பிரியும்போது 11/2 வயது இருக்கும். ஒருவருடம் கழித்து மீண்டும் ஊருக்குப் போனபோது ஜிம்மியை ஆளைக் காணோம். அம்மாவிடம் கேட்டபோது, "உன்னை மறந்துருக்கும். திடீர்னு புதுசுன்னு நினைச்சுக்கிட்டு கடிச்சிருச்சுன்னா.. அதுதான் கொல்லைல போட்டு பூட்டிருக்கோம்"என்றாள். என்னால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. புதிய ஆள் வந்த சத்தத்தில் அது கொல்லையில் இருந்து குலைத்துக்கொண்டிருந்தது. நான் உள்ளிருந்து ஜிம்மி எனக் கத்தினேன். அவ்வளவுதான். மூடியிருந்த கதவை போட்டு கால்களால் பரண்டவும் முட்டவும் ஆரம்பித்துவிட்டது. "அம்மா திறந்து விடும்மா"என்றேன். அம்மா பயந்தாள். அப்பா சொன்னார்.. உன் குரலை உங்க அண்ணன் குரல்னு நினைச்சுக்கிட்டு அது கத்துது. ஆளைப் பார்த்தா என்ன செய்யுமோ.

என்னால் அதற்குப் பிறகு பொறுமையாய் இருக்க முடியவில்லை. வேகமாய்ச் சென்று கதவைத் திறந்துவிட்டேன். திறந்த வேகத்தில் ஒரு நொடி ஒரே ஒரு நொடிதான்.. என்னைப் பார்த்து சட்டெனப் புரிந்துகொண்டுவிட்டது. அது குதித்த குதியும் துள்ளலும்.. கண்ணில் நிற்கிறது இன்னும். எப்போதும் போல நாயை உப்புமூட்டைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். அது பாட்டுக்கு அமைதியாய் இருந்தது. எல்லோருக்கும் ஆச்சரியமும் சந்தோஷமும். அந்த விடுமுறை கழிந்து மீண்டும் flight ஏறினேன். அதற்குப் பின் போன இன்னொரு சந்தர்ப்பத்திலும் அது என்னை மறக்கவில்லை. மறக்க முடியாது என்பது புரிந்துபோனது.

ஒருவழியாய் சி ஐ டி மூஸா படம் முடிந்துத் தொலைத்தது. வியாழன் இரவு வீடு வந்து படுக்கும்போது மனம் முழுதும் ஏதேதோ நினைவுகள். ஒட்டுமொத்தமாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். "மறுநாள் காலை அண்ணனை அழைத்து முதல்வேலையாய் ஜிம்மி ஜாதியிலேயே மாப்பிள்ளையை நாயைப் பார்த்து, கொண்டு போய் விட்டு வரும்படிச் சொல்ல வேண்டியது”. பின் உறங்கிப்போனேன்.

வெள்ளி காலை (துபாய்நேரம்) 7.00 மணிக்கே செல்·போன் மெசேஜ் என்ற சமிஞ்ஞை காட்டியது. தூக்கக்கலக்கத்தில் பார்த்தேன். மெசேஜ் இப்படிச் சொல்லியது.

"Jimmy expired today morning. Snake might have bitten. we are all in sad. From anna"

என் உறக்கம் போனது.

இப்போதெல்லாம் எல்லா துக்கங்களும் கவிதைக்கான வார்த்தைத் தேடுதலில்தான் முடிகின்றன.

இப்படிக் கிறுக்க்¢ வைத்தேன்.

பூவாசத்துடன்
படுக்கையறை விட்டு
வெளிவரும்போது
இரண்டு கால்களில் நின்று
முகமுரசும் நாயின்
கூரான செழுமையான
மடிகள் சொல்கின்றன
தடையூசிக்கானப் பருவத்தை.


Thursday, November 20, 2003


இளையராஜா

--ஹரன் பிரசன்னா

எப்போது எப்படியென்றெல்லாம் சொல்லமுடியாத பிணைப்பு அது ராஜாவின் பாடல்களுடன் எனக்கு ஏற்பட்டது. என் வீட்டில், உயர்நிலை வகுப்பில் படிக்கும்போது புத்தகம் படிப்பது என்ற பழக்கம் மிகக்கடுமையாகத் தடைசெய்யப்பட்டிருந்தது. அதில் கவனம் வந்தால் படிப்பில் கவனம் போய்விடும் என்பது அவர்கள் வாதம். ஒரே பொழுதுபோக்கு வானொலி கேட்பது. வரப்பிரசாதமாய் சிலோன் வானொலி. என் அம்மாவும் அக்காவும் பொங்கும் பூங்குழல் ஆரம்பித்து தேனருவி, புத்தம் புதியவை எனத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பத்து மணிக்குத்தான் வானொலி தன் வாயை மூடும். காதில் விழுந்து நான் முயலாமலேயே மனதிற்குள் சென்றுவிட்ட பாடல்கள் அதிகம். இன்று நினைத்தாலும் பழைய நினைவுகளை அப்படியே கொண்டு வந்து கொட்டி, துக்கத்தில் தொண்டையை அடைத்துவிடும் பாடல்கள் எத்தனையோ உண்டு. கிட்டத்தட்ட எல்லாமே ராஜாவின் பாடல்கள்.

யார் இசையமைப்பாளர் என்று பார்க்கத்தொடங்கியதெல்லாம் பதினோறாம் வகுப்பு வந்த பின்புதான். தொடர்ச்சியாக வரும் படங்கள் எல்லாவற்றிலும் பாடல்கள் மட்டும் சோடை போகாத ஆச்சரியம் ராஜாவின் சாதனை. 1987 ல் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள். ஏனோ தானோ என்றெல்லாம் இல்லாமல் சாதனைப் படங்களும் அந்த வருடத்தில் இருக்கும். மெல்ல மெல்ல ராஜாவின் திறமை என்னுள் பெரிய ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் தரத்தொடங்கியது. டப்பாங்குத்துப் பாடல்களில் கூட இனிமை இருந்தது. சோகப்பாடல் கேட்டால் சோகம் வந்து அப்பிக்கொண்டது. திரையுலகின் மிகப்பெரிய ஆச்சரியமே சிவாஜிதான் என்ற எனது எண்ணம் கொஞ்சம் உடைந்து போனது ராஜாவால்தான்.

எந்தப் பாடல் கேட்டாலும் ஏதேனும் ஒரு நொடியில் ராஜா நினைவுக்கு வராமல் போனதே இல்லை. சினிமா எக்ஸ்பிரஸ் கையில் கிடைத்தால் புதிய படங்களின் வரவு கண்ணில் பட்டால் நாயகன் யாரென்று பார்க்காமல் இசை யாரென்று பார்க்க ஆரம்பித்தேன். ராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் சண்டை என்றறிந்த பின்னால் ராஜா இசையமைக்கும் படங்களில் யார் பாடல்கள் எழுதுகிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தேன். ராஜா பற்றிய சிறிய குறிப்புகளைக் கூடத் தேடித் தேடிப் படித்தேன். ராஜாவைப் புகழ்ந்தவர்கள் எல்லாம் திறமைசாலிகளாகப் பட்டார்கள் எனக்கு.

கொஞ்சம் எதிர்பார்ப்புள்ள படத்திற்கு ராஜா இசையமைத்து பாடல்கள் சோடை போனதாக சரித்திரமே இல்லை என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். திடீரென்று தோன்றும், ராஜாவை கொஞ்சம் அளவிற்கு அதிகமாய் தூக்கி வைக்கிறோமோ என்று. ஆனால் காதில் கேட்கும் ஏதோவொரு பாடலில் லயிக்கும்போது அது ராஜா என்று தெரியும்போது, தோன்றியதெல்லாம் மறந்துபோய் மீண்டும் ராஜா ஜெபம் விஸ்வரூபம் எடுக்கும். இன்று வரை இது மாறவில்லை.

ராஜா இசையமைத்த சில பாடல்கள் வேறு யாராலும் இசையமைக்க முடியாதோ என்று இன்றும்
தோன்றுவதுண்டு. அவற்றைப் பட்டியலிடுதல் மிகச்சிரமமான காரியம். யாருக்கு இசையமைக்கிறோம், என்ன தேவை என்பதன் மிகச்சரியான புரிதல் ராஜாவிடம் இருந்தது. (இதில் ஏ.ர். ரகுமானுக்கான கொள்கைகள் வேறு என்பது என் கணிப்பு). புதிய முயற்சிகள் எடுப்பதில் ராஜா தயங்கியதே இல்லை என்ற போதும் பழையனவற்றையும் தொடர்ந்தார்.

இசையறிவு எனக்கில்லை. நான் சொல்வதெல்லாம் ஒரு சாமான்ய - திரையிசையை அளவிற்கு மீறி இரசிக்கும் - இரசிகனின் கண்ணோட்டம்தான். ஆனாலும் நிறைய பெரிய கர்நாடக இசை வல்லுனர்கள் ராஜாவின் இசையைப் புகழ்ந்திருக்கிறார்கள். செம்மங்குடி புகழவேண்டுமானால் திறமை இருந்தால் மட்டுமே முடியும். காரணம் செம்மங்குடிக்கு திரையிசை பாடும் ஆசையில்லை.

பாடலுக்கு மட்டும் கவனம் செலுத்தினோம் என்றில்லாமல் பின்னணி இசையில் புதிய பரிமாணத்தைக் காட்டியவர் ராஜா. பின்னணி இதுவரை யாருமே தொடாத உயரத்தை மிக எளிதாய் தாண்டியவர் அவர். ஒரு திரைப்படம் உணர்வு ரீதியாய் மனதைத் தாக்கவேண்டுமானால் மனதுள் தங்கவேண்டுமானால் பின்னணி இசையினால் முடியும் என்று நிரூபித்துக்காட்டினார். தமிழ்த்திரையுலகின் மிகச்சிறந்த இயக்குநர் என்று நான் கருதும் மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்ற சிறந்த இயக்குநர்களின் வெற்றியில் ராஜாவிற்கும் பங்கிருக்கிறது. பாடல் வெற்றிக்காய் இதைச் சொல்லவில்லை. அவர்களின் படங்களில் அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை மக்களுக்குக் கொண்டு சென்றதில் ராஜாவின் இசைக்குப் பங்கிருப்பதால் சொல்கிறேன். பதினாறு வயதினிலே படம் நம் மண்ணின் நிஜ மனிதர்களை திரையில் உலவவிட்டபோது அதற்கு ஏற்றார்போல் கைகோர்த்து கூட நடந்தது படத்தின் பின்னணி இசையும் பாடல்களும். சிகப்பு ரோஜாக்கள் என்ற புதிய முயற்சி வந்தபோது இசையும் புதியதாய் இருந்தது. திரைப்படம் என்பது நீட்டி முழக்குதல் அல்ல; யதார்த்தம்தான் என்று மகேந்திரன் முள்ளும் மலரும் சொன்னபோது பல இடங்களில் அமைதி காத்து நிமிர வேண்டிய இடங்களில் நிமிர்ந்து காவிய முயற்சிக்குத் துணை நின்றது இளையராஜாவின் இசை.

இசை என்பது இரண்டு அமைதியான கணங்களுக்கு இடையே வரும் ஒலி மட்டும் அல்ல, இரண்டு ஒலிகளுக்கு இடையே வரும் அமைதியும்தான் என்ற சித்தாந்தத்தை மெய்ப்பித்துகாட்டியது அவரது இசை. என்ன பெயரென்றே தெரியாத படங்கள் பலவற்றின் பாடல்கள் மட்டும் ராஜாவின் தனித்துவம் காட்டி நிற்கும். வெறும் தொழில் என்று செய்திருந்தால் இது சாத்தியமாயிருக்காது. தொழிலும் சுவாசமும் இசை என்றிருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாயிருக்க வாய்ப்புண்டு.

ஹிட் பாடல்களைவிட ஹிட்டாகாத பாடல்கள் பல நல்ல பாடல்களாய்ப் போன துரதிர்ஷ்டம் எல்லா
இசையமைப்பாளர்களுக்கும் ஏற்படுவதுபோல ராஜாவிற்கும் ஏற்பட்டிருக்கிறது. னாலும் அந்தப் பாடல்களை இன்றும் கேட்கமுடிகிறது என்பதும் இரசிக்க முடிகிறது என்பதும் ஹிட்டை விட பாடலின் தரம் முக்கியமென்பதை உணர்த்தியிருக்கும்.

பிடித்த பாடல்கள் என்று பட்டியலிடுவது மிகக் கடினம். எனக்கு டப்பாங்குத்து முதல் சோகப்பாடல்கள் வரை, கர்நாட்டிக் முதல் ஹிந்துஸ்தானி வரை, எப்படி இருந்தாலும் அதனளவில் நன்றாய் இருந்தால் பிடிக்கும். அப்படி நான் இரசித்த எத்தனையோ பாடல்கள் பெரும்பாலானவை ராஜாவின் பாடல்கள்தாம். அதனால்தானோ என்னவோ உங்களுக்குப் பிடித்த பிரபலங்களைச் சொல்லுங்கள் என்று சொன்னால் இரண்டாவது இடம் ராஜாவிற்கு இருக்கும் அளவிற்கு அவரைப் பிடித்துப் போனது.

என்னால் இளையராஜாவின் திரையிசைப் பாடல்களைக் கேட்காமல் வாழ முடியுமா என்பது சந்தேகமே. எத்தனையோ சமயங்களில் மனம் மிகக்கனமாய் உணர்ந்தபோது சில பாடல்களைக் கேட்டு இலேசாய் உணர்ந்திருக்கிறேன். மிகச்சந்தோஷமாய் இருந்த கணங்களில் சில சோகப்பாடல்கள் கேட்டு சந்தோஷத்தை இழந்திருக்கிறேன். மனிதனின் மனநிலையில் ஒரு மாற்றத்தை (அதற்கு இசை மட்டுமே காரணமில்லை என்றறிவேன்) ஒரு திரைப்பாடல் உருவாக்குகிறதென்றால் அது அந்தப் பாடலுக்கு உயிர்கொடுத்த இசையமைப்பாளனால்தான் என்பது மறுக்க முடியாதது. இப்படிப் பல பாடல்களைக் கொடுத்தது ராஜாவின் சாதனை.

ராஜாவும் வைரமுத்துவும் பிரிந்ததால் யார் எப்படிக் கவலைப்பட்டார்கள் எனத் தெரியாது. நான் மிகவும் கவலைப்பட்டேன். (இன்றும் கவலைப்படுகிறேன்). இதனால் இருவருக்கும் தனித்தனியாக பெரிய பாதிப்பொன்றும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாம் இழந்தது அதிகம்.

வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
காற்றே நின்ற போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
நானே நாதம்

என்ற வரிகளும்

என் சேலையில் வான் மின்னல்தான் வந்து நூலாகுமே
என் சோலையில் வேர் கூடப் பூக்கின்ற ஓர் காலமே

என்ற வரிகளும்

தோரண வாயிலில் பூரணப் பொற்குடம்
தோழிகளும் என்னைச் சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்குக் காணவில்லை என்று
மேகம் அலைந்திட தேகம் தனில் அணிவேன்

என்ற வரிகளும்

இலையாடை உடுத்தாதப் பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாள்கள்
படுக்கையில் பாம்பு நெளியுது
தலையணை நூறு கிழியுது

என்ற வரிகளும்

குளிக்கும் போது கூந்தலை
தனதோடையாக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்மதேவன் சாதனை
தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்துச் செல்லும் காமனை
எதிர்த்து நின்றால் வேதனை
அம்புதொடுக்கும்போது நீ துணை
சோதனை

என்ற வரிகளும்

காத்திருந்தேன் அன்பே இனி காமனின் வீதியில் தேர்வருமோ
பூமகள் கன்னங்கள் இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ
யிரம் நாணங்கள்; இந்த ஊமையின் மேனியில் ஸ்வரம் வருமா?
நீயரு பொன்வீணை நுனிவிரல் தொடுகையில் பல ஸ்வரமா?
பூவை நுகர்ந்தது முதல் முறையா?
வேதனை வேளையில் சோதனையா?
இது சரியா? இது முறையா?

என்ற வரிகளும் இன்னும் இது போன்ற பல வரிகளும் அதற்கேற்ற இசையும் தமிழகத் திரையிசையின் பொற்காலங்கள். இவற்றின் தொடர்ச்சிகளை நாம் இழந்தது இரு தனிமனிதர்களின் தனிமனித ளுமைகளின் மோதல்களால். என்ன சொல்ல? வேதனையைத் தவிர.

"இதுவரை நான்"-ல் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி எழுதும் போது இப்படி ஆரம்பிக்கிறார்.

"ஒரு நாள் நானும் நீயும் கடற்கரையில் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடிக்கொண்டிருந்தோம். முடிவில் நீ என்னைப் பிடித்துவிட்டாய். இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எதிரெதிர்த் திசையில்.' (நினைவிலிருந்து)

இந்த வரிகளைப் படித்த போது நானடைந்த சோகம் இன்னும் மனதில் அப்படியே இருக்கிறது. நட்பை இழத்தல் ஈடுசெய்யமுடியக்கூடிய இழப்பல்ல.

ராஜாவில் ஆரம்பித்து எப்படியோ முடியும் என் எண்ணங்களை அங்கீகரிப்பீர்களாக.


(இதில் நான் சொன்ன இளையராஜா பற்றிய என் எண்ணங்களில் இம்மியளவு கூட உயர்வுநவிற்சி இல்லை)


Wednesday, November 19, 2003


நதி
--ஹரன் பிரசன்னா

நதிக்கரையில் பரவிக்கிடக்கிறது
என் ஆச்சி கட்டி விளையாடிய
மண்கோபுரத்தில் இருந்த
மணற்துகள்கள்

சிதிலமடைந்துவிட்ட
மண்டபங்களின் உட்சுவர்களிலும்
கல்தூண்களிலும் தென்படும்
மாயாதக் கிறுக்கல்களில்
ஏதேனும் ஒன்று
இளவட்டத் தாத்தாவினது

முயங்கிய பின்னான வேர்வை
இந்நதியின் வழியோடித்தான்
கடலில் கலந்திருக்கும்.

வயசுல உங்க தாத்தா
கோவணத்தக் கட்டிக்கிட்டு
மண்டபத்து மேலேயிருந்து
அந்தர் பல்டி அடிப்பாரு பாரு
என
காற்றை நெட்டி முறிக்கும்
தொஞ்சும் காதில்
பாம்படை அணிந்த என் ஆச்சி
இந்த நதிக்கரையில்தான்
அலைந்துகொண்டிருப்பாள்
கோவணம் கட்டியத் தாத்தாவுடன்.


நினைவுகளைச் சுமந்தபடி
என்
நதி.

Tuesday, November 18, 2003

அய்யனார்
--ஹரன் பிரசன்னா

அய்யனார் கோயிலின்
ஆலமரத்துக்குக் கீழே
அன்று பிறந்த குழந்தை ஒன்று
பசியில் அழுதபடி

பிடதியில் இருகைகளையும் கோர்த்து
ஒட்டப்பட்டிருக்கும் புதிய சுவரோட்டியில்
பிதுங்கி வழியும் மார்பை
கள்ளத்தனமாய் இரசிக்கும் விடலைகள்
ஒருகாலத்தில்
இப்படி அழுதவர்கள்

பூட்டப்பட்டிருக்கும் வீட்டின்
கதவுகளுக்குள்
ஏதோ ஒன்றில்
முலை சுரந்துகொண்டிருக்கும்.

முன்னங்கால்கள் காற்றில் பாவ
புடைத்திருக்கும் திமிலின் கர்வம்
கண்ணில் தெரிய
பாதி பறக்கும் குதிரையின் மேலே
விரித்த விழி
முறுக்கிய மீசை
கையில் தூக்கிய வாளுடன்
உக்கிரமாய்
அமைதியாயிருக்கிறது
அய்யனார் சிலை

Monday, November 17, 2003


இறங்குமுகம்

--ஹரன் பிரசன்னா

கையில் கடவுச்சீட்டுடன் விமான தளத்தில் கிஷ் செல்லும் பயணிகள் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்த சிலர் வரிசையில் நின்றிருந்தார்கள். நானும் சேர்ந்துகொண்டேன். மற்ற விமான சேவைகளில் அளிக்கப்படும் உபசாரமும் மரியாதையும் கிஷ்ஷ¤க்குச் செல்லும் விமான சேவையில் இருக்காது என்று எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்ததால் மரியாதைக் குறைச்சல் கோபம் தரவில்லை. இருந்தாலும் விசிட் விசா முடிந்து மற்றொரு விசிட் விசா வாங்கி வரவேண்டியிருக்கும் கூட்டத்தில் என்னையும் சேர்த்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் கொஞ்சம் மேதைமை உள்ளவன். அடித்தட்டுக் கூட்டத்திலிருந்து எந்த செய்கைகள் என்னை தனித்தாக்குமென்று அறிவேன். கையிலிருந்த கனத்த ஆங்கிலப் புத்தகத்தில் லயிப்பது போன்ற பாவனையின் மூலம் என் தனித்துவத்தை விரும்பி நிறுவ முயன்றேன்.

வரிசை நகருவதாகவேத் தெரியவில்லை. விமானத்தில் மரியாதைக் குறைச்சல் எதிர்பார்த்திருந்த எனக்கு விமான தளத்தில் மரியாதைக்குறைச்சல் எதிர்பாராததாய்ப் பட்டது. இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற உடனடி முடிவுக்கு வந்தேன். கொஞ்சம் தூரத்தில் முழுக்க வெள்ளையாய் ஒரு அரபி ஆங்கிலத்தைக் கடித்துத் துப்பி, செல்லில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தான். அவன் விமானதளத்தின் ஒரு அதிகாரியாக இருக்கவேண்டும் என்று தோன்றவே வரிசையிலிருந்து விலகி அவனிடம் சென்று அவன் பேச்சு முடியும்வரைக் காத்திருந்தேன். சாவகாசமாய் பேசி முடித்துவிட்டு "சொல்லுங்கள் அன்பரே"என்றான். மிகத் தெளிவான ஆங்கிலத்தில் மறுமொழி அளித்தேன். கேள்வியை உள்ளடக்கிய ஒரு மறுமொழியில் அவன் என் ஆங்கிலத்தின் தரமும் வழக்கமான விசிட் விசா கூட்டத்தில் நான் ஒருவன் அல்லன் என்பதும் அவனுக்குப் பிடிபட்டிருக்கவேண்டும். கொஞ்சம் சுவாரஸ்யமானான்.

"உங்கள் பயணச்சீட்டைப் பார்க்கலாமா"என்றான். "சந்தோஷத்துடன்"என்று சொல்லி பயணச்சீட்டைக் காண்பித்தேன். சரிபார்த்துவிட்டுத் திருப்பித் தந்தான். "எல்லோரும் விசா மாற்றத்திற்காக மட்டுமே செல்லும் கிஷ்ஷ¤க்கு துபாயின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற நீங்கள் செல்வது ஒரு ச்சரியமான நிகழ்வுதான்"என்றான். சிரித்துவிட்டுக் கேட்டேன்.

"நான் அதிக நேரமாய் அந்த நகராத வரிசையில் நின்று பொறுமை இழந்துவிட்டேன். எங்கள் ஊரில் புகைவண்டி நிலையத்தில் கூட இத்தனை நேரம் நின்றதாய் நினைவில்லை. ஒரு விமான தளத்தில் அதுவும் ஒரு நாற்பத்தைந்து நேர நிமிட பயணத்தில் அடையக்கூடிய இலக்கிற்கு இத்தனை நேரம் காக்க வைத்ததன் மூலம் உங்களை அறியாமலேயே நீங்கள் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள்"என்றேன். பொறுமையின்றி சிரித்தான். ஒரு புகைவண்டி நிலையத்தை, அதுவும் ஒரு இந்தியப் புகைவண்டி நிலையத்தை துபாயின் பன்னாட்டு விமான தளத்துடன் ஒப்பிட்ட எனது இரசிப்புத்தன்மையை அவன் விரும்பியிருக்க மாட்டானென்றறிவேன். ஆனால் இது போன்ற எதிராளியைக் கொஞ்சம் கூச வைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விடக்கூடாது. அதிலிருக்கும் சந்தோஷமே அலாதியானது.

அவன் கொஞ்சம் பொறுமை காக்கவும் என்று சொல்லி விலகிச் சென்றான். எல்லோருக்குள்ளும் பதில் சொல்லாமல் நழுவும் என் இந்தியநாட்டு மனப்பான்மை ஒளிந்திருக்கிறது. ஒருவழியாய் வரிசை நகர ஆரம்பித்தது.

மிகச் சிறிய இரஷிய விமானம் என்னைத் தூக்கிக்கொண்டு பறந்தது. இதுபோன்ற விமானங்களில் பயணிப்பது என் மாட்சிமையைக் குறைக்குமென்றாலும் தொழில் கருதி பொறுக்க வேண்டியிருக்கிறது. விசா மாற்றத்திற்குச் செல்லும் இந்தியர்களின் அவலநிலை குறித்த ஆய்வுக்கட்டுரை என் தலையில் விழுமென்பது நானே எதிர்பாராததுதான். ஆனாலும் மோசமில்லை. மோனியுடன் மீண்டும் ஒரு இனிமையான இரவைக் கழிக்க முடியும்.

பயணிக்கும் ஏறத்தாழ நாற்பது நபர்களில் என்னுள்ளிட்ட ஒன்றிரண்டு பேர்தான் கனவாண்கள். பெரும்பான்மை இந்தியர்களும் சில பாகிஸ்தானிகளும் கடைமட்டக் கூலிகளாயிருக்கவேண்டும். கட்டுரையில் அவர்களை எவ்விதம் வர்ணிக்கலாமென்ற உள்ளூறும் யோசனையினூடே ஒவ்வொருவராய் நோட்டமிட்டபோது "தமிழகத்தின் பொருளாதார நெருக்கடிகள் - கம்யூனிசப் பார்வை"என்ற புத்தகத் தலைப்பு என்னை நிறுத்தியது. நான் படித்திருக்கும் மிகச்சில தமிழ்ப்புத்தகங்களில் அதுவுமொன்று என்பது காரணமாயிருக்கலாம் என்று நிறுவிக்கொண்டேன். காரணமில்லாமல் எதுவுமே நிகழாதென்பது எனக்குள்ளாய் நிரூபிக்கப்பட்டுவிட்ட கொள்கை.

அந்தப் புத்தகம் முப்பதுகளைத் தொலைத்துக்கொண்டிருக்கும் ஒரு கணவானின் கையிலிருந்தது. நான் கொண்டுள்ள கணவான்களின் இலக்கணத்தில் பொறுத்திப் பார்த்த போது தேறினான் என்பதால் அவனை கணவான் என்கிறேன். மூக்கின் நுனியிலிருக்கும் கண்ணாடியின் வழியே ஒவ்வொரு வரிக்கும் மாறும் லாவகம் அவன் கண்களின் அசைவில் தெரிந்தது. வழுக்கையும் தொப்பையும் இல்லாதிருந்தால் வடிவில் எனக்குப் போட்டியாளானாய் இருந்திருப்பான். அரைமணி நேரப் பயணத்தில் அந்த இலங்கைக் காரனுடன் - அவன் இலங்கைக்காரனாய்த்தான் இருக்கவேண்டும்; என் உள்ளுணர்வுகள் தவறுவதேயில்லை என்று உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்- கொஞ்சம் கதைக்கலாமென்று விழைந்தேன். அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கத்தான் வேண்டும். கண்ணில் தெரிகிறதே.

மிகப்பெரிய முன்னுரையோ தொடர்ச்சியான முகமன்களோ எனக்கு பிடிக்காதென்பதால் நேரடியாகத் தொடங்கினேன்.

"இந்தப் புத்தகத்தில் பெரியதாய் ஒன்றுமில்லை. வழக்கம்போல இந்தியா கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிசப் பார்வை என்பதெல்லாம் வெற்றுப் புலம்பல். கம்யூனிஸம் குருடாகி நாள்கள் ஆகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒற்றை வரியில் சொல்வதானால் இடதுசாரி மனப்பான்மையின் தாக்குதல்களின் தொகுப்பாய் இப்புத்தகத்தைக் கொள்ளலாம்"என்றேன். பதிலாய் "யார் நீங்கள்?"என்றான். ஆங்கிலத்தில் என்னைப் பற்றிய மிகச்சிறிய குறிப்பைத் தந்துவிட்டு என் விவர அட்டையை நீட்டினேன். வாங்கினான். ஆனால் அதை நோட்டமிடாமல் அடுத்த கேள்வியைக் கேட்டான். "உங்களுக்கு என்ன வேண்டும்?"அந்த ஒரு கேள்வியால் என் பேச்சில் கவரப்பாடத கணவானும் இருக்கிறானோ என்ற சந்தேகம் என்னுள் முளைவிடத் தொடங்கிற்று. "உங்களுடன் சில நிமிடங்கள் கதைக்கலாமென்று.. .."மறித்து பதிலளித்தான்.

"இன்னொரு சமயம். இப்போது என்னால் முடியாமைக்கு வருந்துகிறேன். சந்திப்போம்"என்று சொல்லி நான் நகரும் முன்னமே புத்தகத்தைத் தொடர்ந்தான். நான் என் இருக்கைகுக்குச் செலுத்தப்பட்டேன். அவமானப் படுத்தப் பட்ட கணங்களை நான் மறப்பதே இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

கிஷ் பெருத்த ஈரப்பதத்துடன் இரவு பன்னிரண்டு மணிக்கு எங்களை உள்வாங்கிக் கொண்டது. என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு என் பார்வை அந்த இலங்கைக்காரனைச் சந்திக்காதிருந்தது. ஆனால் மனம் சொல் பேச்சு கேட்பதேயில்லை. அவமதிக்கப்பட்ட் நிமிடங்களை மீண்டும் மீண்டும் நினைத்தவண்ணம் சுழன்றது.

என் பெயர் எழுதப்பட்ட அட்டையைத் தூக்கியபடி ஒரு ·பிலிப்பனோக்காரி நின்றிருந்தாள். என் பெயருக்குக் கீழாய் ஜார்ஜ் என்ற பெயரும் எழுதப்பட்டிருந்தது. நான் அந்த ·பிலிப்பினோக்காரியை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். "கிஷ் தீவுக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்"என்றாள். நன்றியுரைத்துவிட்டு, செல்லலாமா என்றேன். "திரு. ஜார்ஜுக்காய் உங்களையும் காத்திருக்க வைப்பதில் வருந்துகிறேன்"என்றாள். "நான் ஏன் ஜார்ஜுக்காய் காத்திருக்கவேண்டும்"என்றேன். "மன்னிக்கவும்"என்று சொல்லிச் சிரித்தாள். இதுபோன்ற சமாளிப்புகளை நான் அறவே ஏற்பதில்லை என்றாலும் எதிராளி என் முன்னே நெளிகிறான் என்ற சந்தோஷம் என்னுள் பரவியதல் கொஞ்சம் அமைதிகாத்தேன். என் எரிச்சல் கோபமாகுமுன் அந்த இலங்கைக்காரன் வேகமாய் எங்களை நெருங்கி தன்னை ஜார்ஜ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. அவள் என்னிடம் சொன்ன அதே வரவேற்புகளை எழுத்துப் பிசகாமல் அவனிடமும் சொன்னாள். எங்களை ஒரு சொகுசு காரில் ஏற்ற்¢க்கொண்டு தங்குமிடத்திற்கு கூட்டிச் சென்றாள். அடுத்தடுத்து அமர்ந்திருந்தும் நானும் இலங்கைக்காரனும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ள வில்லை.

நாங்கள் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் எதிரெதிர் அறைகளில் தங்க வைக்கப்பட்டோம்.
பயணக் களைப்பை குளியலில் கொஞ்சம் குறைத்துவிட்டு வரவேற்பை அடைந்து மோனியை நலம் விசாரித்தேன். இரவில் அவளின் தேவையைச் சொன்னேன். இன்றேவா என்றாள். நான் இன்றேவா என்றால் என்று எதிர்க்கேள்வி கேட்டேன். பைத்தியக்கார இந்தியர்கள் என்றாள். நன்றி என்றேன். இன்னும் அரைமணி நேரத்தில் வருவதாய்ச் சொன்னாள். அவளை கடந்த முறை முதலாய்க் கண்ட மாத்திரத்திலேயே ஆப்கானிஸ்தானி என்று உணர்ந்தேன். என் யூகத்திறனை அறிந்து வியந்தாள். வெகுவாய்ப் புகழ்ந்தாள். காணும் அனைவரும் அவளை இரானி என்றே நினைப்பதாயும் நான் ஒருவன் மட்டுமே ஆப்கானிஸ்தானி என்று அறிந்ததாயும் சொன்னாள். இதுபோன்ற புகழ்ச்சியின் இறுதி என்னவென்று அறியாதவனாய் என்னை அவள் நினைத்திருக்கக்கூடும். இருநூறு எமாரத்திய திர்ஹாம்கள் அதிகமாகும்.

ப்கானிஸ்தானிய பாலியல் தொழிலாளிகள் கூட நேரம் தவறலை விரும்புவதில்லை போல. மிகச்சரியாய் அரைமணி நேரத்தில் அறைக்குள் வந்தாள். மணி இரண்டைத் தொட்டிருந்தது. சொந்தக்கதைகளை சொல்லிய வண்ணம் இருந்தாள். அவளின் தம்பி இரசாக் பதிநான்கு வயதில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் குழுவிற்கு தன்னை அர்பணித்துக்கொண்டானாம். அவனுக்கு போன மாதம் நடந்து முடிந்த திருமணத்திற்கு இவள் ப்கானிஸ்தான் சென்று வந்தாளாம். பாலியல் தொழிலில் பேச்சுத்தடைச்சட்டம் வந்தால் நல்லது. எனக்குத் தூக்கம் வருகிறது என்றேன். பெருமூச்செறிந்தாள். அறையின் விளக்குகளை அணைக்கலாமா என்றாள். விளக்குகள் இருக்கட்டும் என்றேன். பைத்தியக்கார இந்தியர்கள் என்றாள். நான் அழகை அனுபவிக்க மட்டுமல்லாமல் இரசிக்கவும் தெரிந்தவர்கள் என்றேன். இது இரசனை இல்லை நோயின் அறிகுறி என்றாள். பணம் வாங்கும்போது பாவங்கள் கரைவதுபோல உடல் தளர்ந்து விலகும்போது நோயும் கரையும் பெண்ணே என்றேன். அதற்கு மேல் எனக்குப் பொறுமையில்லை. எதிர் அறையில் விளக்கு இன்னும் ஏன் எரிகிறது என்ற யோசனையை தள்ளி வைத்துவிட்டு மோனியை முகரத் தொடங்கினேன். அவள் எரியும் விளக்கைப் பார்த்த வண்ணம் ஒத்துழைத்தாள்.

இரவு எத்தனை மணிக்கு உறங்கினேன் என்பதோ மோனி எப்போது என் அறையைவிட்டு வெளியே சென்றாள் என்பதோ எனக்கு நினைவில்லை. எதிரறையில் இருந்து காட்டுத்தனமாக வந்த ஒரு இசை என்னை எழுப்பியதை உணர்ந்தேன். அது எந்த மொழிப்பாடல் என்று நான் தெரிந்திருக்கவில்லை என்பது என் மனதுள் ஒரு ஆற்றாமையை உண்டாக்கியது. அந்த இலங்கைக்காரன் -பெயர் கூட ஜார்ஜ் என்று நினைவு- கொஞ்சம் திறமையுள்ளவன் என்று ஒரு எண்ணம் கிளர்ந்தபோது உடனே அதை வேசமாய் பிய்த்து எறிந்தேன். அவமானப்படுத்தப்படுவது மறப்பதற்கல்ல.

இன்று மாலை ஐந்து மணிக்கு துபாய் திரும்பவேண்டும். நாளை காலை கட்டுரையின் முதல் பிரதியைத் தரவேண்டும் என்ற எண்ணம் வந்தது. எழுதுவது அத்தனை கடினமல்ல. சிற்சில கடினமான ஆங்கிய பிரயோகங்களுடன் சில மேற்கோள்களையும் கூட்டிச் சேர்த்தால் உலகம் கைதட்டும். மோனியைத் தொலைபேசியில் அழைத்தேன். வரவேற்பில் ஒருத்தி மோனி இன்று வரவில்லை என்றாள். குரலில் இந்தியத்தனம் இருந்தது. எனக்கு இந்தியப் பெண்கள் மீது மோகம் இல்லை. மோனியின் செல்·போன் எண்ணைக் கேட்டேன். கொடுத்தாள். உடனே தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பில் இன்றுமா என்றாள். அவளின் ஹாஸ்யம் இரசிக்கத்தக்கதாய் இல்லை. சில நிர்வாண நிமிடங்கள் தரும் சலுகையினால் மோனி தப்பித்தாள். கட்டுரை எழுதத் தேவையான சில புத்தகங்கள் வேண்டுமென்றேன். வரவேற்பைத் தொடர்புகொள்ளச் சொன்னாள். நீ வரமுடியாதா என்றேன். இரண்டு நிமிடங்களில் வருகிறேன் என்று தொடர்பைத் துண்டித்தாள்.

இரண்டு நிமிடங்களுக்கு முன்னதாயே வந்துவிட்டாள்.

"விடுதியில் தான் இருந்தாயா? வரவேற்பில் நீ வரவில்லை என்றார்கள்"என்றேன்.

"நான்தான் அப்படிச் சொல்லச் சொல்லியிருந்தேன். எதிரறையில்தான் இருந்தேன்."என்றாள்.

"அந்த இரசனைகெட்ட இலங்கைக்காரனுடனா?"

"உங்களுக்குத் தெரியுமா ஜார்ஜை? மறக்கமுடியாத அதிசயமான மனிதர். வரிக்கு வரி தாய்நாடு தாய்மொழி என்கிறார் தெரியுமா?.. "என்றாள்.

"பசப்பில் மயங்காதே பெண்ணே. இவர்களுக்கெல்லாம் நாடு களம். மொழி ஒரு ஆயுதம். கிணற்றுத்தவளைகள். மொழியை அவர்கள் வாழவைப்பதாய்ச் சொல்வார்கள். அதுவும் இலங்கைத் தமிழனல்லவா. கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப்படுவான். உலக அறிவு இருக்காது"

"இல்லை திரு. பென்னி. நீங்கள் தவறாய்ச் சொல்லுகிறீர்கள். ஆப்கானிஸ்தான் பற்றி என்ன அழகாய்ச் சொன்னார் தெரியுமா? உருதில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு கவிதையாம். அழுதே விட்டேன் தெரியுமா.. ஓ என் தாய்நாடே என்று தொடங்கும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டீர்களானால் உணர்வீர்கள்"என்றாள்.

"பசப்பு மொழிகளின் கூரிய ஆயுதம் கவிதை என்றறிவாயா நீ?"

"எனக்கு வாதிக்கத் தெரியாது திரு. பென்னி.

"எந்த நாட்டில் பூக்கள் மலர்வதில்லையோ
எந்த நாட்டில் குண்டுச் சத்தம் மூச்சுச்சத்தத்தைவிட அதிகம் கேட்கிறதோ
எந்த நாட்டில் குழந்தைகள் முலைப்பால் குடிப்பதில்லையோ
அந்த நாட்டிலும் பெண்கள் ருதுவாகிறார்கள் "

என்ற வரிகளைக் கேட்டவுடன் ஆப்கானிஸ்தானின் புழுதி நிறைந்த தெருக்களும் போரில் பெற்றோரை இழந்த குழந்தையின் அழுகையும் என் ந்¢னைவில் வந்து போனதை நீங்கள் அறிய மாட்டீர்கள். "

"நீ அதிகம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சிந்திக்கிறாய் மோனி. கவிதை என்பது உயற்சியாகச் சொல்லுதல் மட்டுமே."

"எனக்குத் தெரியவில்லை. எனக்குப் பிடித்த வரிகளைச் சொன்னேன். சரி விடுங்கள். உங்களுக்கு நான் இப்போது எந்த வகையில் உதவ முடியும்? சொல்லுங்கள்"என்றாள்.

என் தேவைகளைச் சொன்னேன். அரைமணிநேரத்தில் எல்லாம் கொண்டு வந்து தந்தாள். விடைபெற்றுச் சென்றாள். ஜன்னல் திரைகளை விலக்கி அவள் எங்கே செல்கிறாள் என்று நோட்டமிட்டேன். அவள் அந்த எதிரறைக்குள் சென்றாள். எனக்கு ஏனோ கோபமாய் வந்தது.

***

இந்த முறை இரஷிய விமானத்தில் என் வலது பக்கத்தில் அந்த இலங்கைக்காரன் இருந்தான். அவனைப் பார்க்கும்போதே இனம்புரியாத ஒரு எரிச்சல் உள்ளுள் பரவுவதை அறிந்தேன். அவன் என்னை எப்படி உணருகிறான் என்று தெரியவில்லை.

இன்னும் பதினைந்து நிமிடங்களில் துபாயில் விமானம் தரையிறங்கும். அதற்குமுன்னாய் அவன் என்னை மறக்காதவாறு ஒரு கேள்வியாவது கேட்கவேண்டும் என்று தோன்றியது. எனக்குத் தோன்றினால் சரியாய்த்தான் இருக்கும். ஆனால் அவன் ஏதோ ஒரு ஆங்கிலப்புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான். என்பக்கம் திரும்பவேயில்லை. வேறு வழியின்றி நானே தொடங்கினேன்.

"மன்னிக்கவேண்டும் திரு. ஜார்ஜ்"என்றேன். சொல்லுங்கள் என்ற பாவனையில் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி மூக்குக்கண்டாடிக்கும் நெற்றிக்குமான இடைவழியேப் பார்த்தான்.

"நேற்று மோனி நீங்கள் ஒரு கவிதை சொன்னதாய்ச் சொன்னாள்"

"மோனி.. ஓ அந்த ஆப்கானிஸ்தான் விபச்சாரியா?"

எனக்கு சட்டென்று ஒரு கோபம் பரவி அடங்கியது.

"திரு ஜார்ஜ். எப்படி உங்களால் இப்படிச் சொல்ல முடிகிறது?"

"நிஜத்தை நிஜமாய் சொல்வதைத்தானே நீங்கள் விரும்புவீர்கள். எந்த வித சுற்றிவளைத்தலோ ஆபரணமோ இல்லாமல் அம்மணமாய் இருப்பது போன்ற ஒன்று உங்களுக்கு விருப்பம் என்றறிந்தேன்."

"நானாய் பேச எத்தனித்தேன் என்ற ஒரு காரணத்திற்காய் நீங்கள் என்ன வேண்டுமானால் பேசலாம் என்பதில்லை"

"அப்படியானால் மிக்க நல்லது. இத்தோடு நமது பேச்சை நிறுத்திக்கொள்ளலாம்"

"சரி நிறுத்திக்கொள்ளலாம். னால் ஒன்றைச் சொல்லத்தான் வேண்டும். உங்கள் இரசனைக்கும் வெளி அங்க அசைவுகளுக்கும் அதிக தூரம்"

"இருக்கலாம். ஆனால் எல்லா இரவிலும் நான் விளக்கை அணைக்கிறேன். குருடாகிப் போனப் பார்வையென்றாலும்."

கொஞ்சம் புரியாத அவன் பதிலை உள்வாங்கிப் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது நான் மிகுந்த அவமானமாய், நாற்சந்தியில் நிர்வாணமாய் நிற்பதாய் உணர்ந்தேன்.

விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்தது.


Sunday, November 16, 2003


கிஷ் தீவு-ஒரு அறிமுகம்

--ஹரன் பிரசன்னா

அமீரகத்தில் இருப்பவர்களுக்கு, அதுவும் நிரந்தரக் குடியுரிமையில்லாமல் இருப்பவர்களுக்கு கிஷ் தீவு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும் அமீரகத்தில் ஏதேனும் ஒரு வேலை கிடைக்குமா என்ற ஏக்கத்தில்
இந்தியாவிலேயே இருந்துவிடாமல், விசிட் விசாவில் அமீரகம் வந்து வேலை தேடலாம் என்று நினைக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் ஏராளம் பேர். முன்னொரு காலத்தில் அமீரகம் வந்தவர்கள், எந்தத் தகுதியாய்
இருந்தாலும், வேலை கிடைக்காமல் திரும்பிப் போனதே இல்லை எனலாம். ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை. அமீரகம் அதன் கவர்ச்சியை இழந்துவிட்டது. வேலையில் இருப்பவர்கள் கூட ஆள் குறைப்பு என்னும் போர்வையில் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வேலை கிடைக்காதவர்களைவிட வேலை கிடைத்து, பின்அதை இழந்து தாயகம் செல்லும் மக்களின் மனநிலை மிக மோசமானது. இது குறித்து இன்னொரு முறை பேசுவோம்.

இது போன்ற அமீரக நெருக்கடிகளை உணராதவர்கள் இன்னமும் விசிட்டில் வந்து ஏதாவது வேலை கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் தினமும் classifieds பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வேலை அமீரகத்திலும் குதிரைக்கொம்பாகி வருஷங்கள் ஆகின்றன.

சிலர் வேலை கிடைத்தாலும் முதலில் விசிட்டில்தான் வருகிறார்கள். இங்கு வந்து பின் வேலைசெய்யும் உரிமையுடைய விசா (employement visa) வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில். இப்படி வருபவர்களுக்கு பெரும்பாலும் employement visa கிடைத்துவிடுகிறது. அமீரகத்தில் விசிட் விசா என்பது இரண்டு மாதங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. 500 திர்ஹாம்கள் கட்டி அதை மூன்றாவது மாதத்திற்கு நீட்டிக்கொள்ளலாம்.
மூன்று மாதத்திற்குப் பின் அமீரகத்தை விட்டு வெளியேறியே ஆகவேண்டும். அதன்பின் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் நூறு திர்ஹாம்கள் அபராதம். விசிட்டில் வந்து மூன்று மாதத்தில் வேலை கிடைக்காதவர்கள் சொந்த
நாட்டிற்குச் சென்று திரும்பி வர அதிகம் செலவாகும். உதாரணமாய், அமீரகத்திலிருந்து சென்னை சென்று திரும்பிவர டிக்கட் மட்டும் கிட்டத்தட்ட 22000 இந்திய ரூபாய். (இந்த மதிப்பு இந்திய ரூபாயின் டாலருக்கு நிகரான ம
திப்பையும் இந்தியா சென்று வரும் சீசன் காலங்களையும் பொறுத்து கூடும்; குறையும்). அப்படி விசிட் முடிந்து செல்லும் பெரும்பாலானவர்கள் மீண்டும் விசிட்டில் வந்து வேலை தேடத்தான் ஆசைப் படுவார்கள். ஒவ்வொரு
விசிட்டுக்கும் 22000 இந்திய ரூபாய் செலவழிப்பதற்கான வசதியிருந்தால் அவர்களுக்கு துபாயில் வேலை தேடும் நிமித்தம் இருந்திருக்காது. இது போன்றவர்களின் வயிற்றில் பால் வார்ப்பது கிஷ் தீவு.

முதலில் விசிட்டில் வந்து, பின் employment visa பெறும் நபர்களுக்கும் பேருதவியாய் இருப்பது கிஷ் தீவுதான்.

கிஷ்தீவு இரானின் வசமுள்ள ஒரு தீவு. அமீரகத்திலிருந்து 40 நிமிட விமானப் பயணத்தில் கிஷ்ஷை அடையலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கிஷ்ஷைக் கொஞ்சம் இயற்கை அழகுள்ள பாலைவனம் எனலாம்.
பெரிய பெரிய கட்டடங்கள், மனதை மயக்கும் ரெஸ்டாரண்டுகள், கோல்·ப் மைதானங்கள் என ஒன்றும் இருக்காது. வெறும் வெட்ட வெளி. கிஷ¤க்கு வந்து தங்கிச் செல்லும் பயணிகளுக்கு அபயம் அளிக்க இரண்டு மூன்று
நல்ல தங்கும் விடுதிகள். பலான மேட்டருக்கு வசதிகள். அவ்வளவே.

துபாயிலிருந்து கிஷ்ஷ¤க்குச் சென்று வர இந்திய ரூபாயில் ஏறக்குறைய 4500 ரூபாய் அகிறது. ஒரு நாள் தங்கும் செலவை, நாம் செல்லும் ஏர்வேஸ்காரர்களே ஏற்கிறார்கள்.நல்ல விடுதியில் தங்கவைத்து, மறுவிசிட் விசாவின் நகலோ அல்லது employement visit ன் நகலோ கிடைத்துவிட்டால், மிக மரியாதையாய் மீண்டும் கிஷ்ஷின் விமானநிலையத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள்.

சிலருக்கு ஒரு நாளில் மறு விசிட்டோ அல்லது employement visa வோ கிடைக்காது. அவர்களெல்லாம் 14 நாள்கள் வரை தங்க அனுமதிக்கப்படுவார்கள். கிஷ்ஷின் விதிகளின்படி 14 நாளகளுக்கு மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள். அந்த பதிநான்கு நாள்களுக்கு தனியாய்ப் பணம் செலுத்திவிடவேண்டும்.

பதிநான்கு நாள்களிலும் விசிட்விசாவோ employment visaவோ கிடைக்கப்பெறாதவர்கள் பத்திரமாய் கிஷ்விமானதளத்திற்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் அமீரகம் அனுப்பப்பட்டு அங்கிருந்து வலுக்கட்டாயமாய்
சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இதற்கான எல்லா ஏற்பாடுகளைச் செய்த பின்னரே அமீரக எமிக்ரேஷன், கிஷ் செல்வதற்கான பயண டிக்கட்டைவழங்கும்.

கிஷ் செல்வதற்கான இன்னொரு காரணம், கிஷ் செல்ல விசா வாங்கவேண்டியதில்லை என்பது. பயண டிக்கெட் மட்டும் எடுத்தாலே 14 நாள்கள் தங்குவதற்கான அனுமதியும் சேர்த்துக் கிடைத்துவிடும்.

நான் அமீரகத்திற்கு விசிட்டில் வந்தேன். முதல் மூன்று மாதத்தில் எனக்கு employment visa கிடைக்கவில்லை. வழக்கம்போல கிஷ் போனேன். அப்போது எங்கள் பி ர் ஓ வின் தயவால், செல்லுமுன்னரே அடுத்த விசிட்டிற்கான
விசா எனக்குக் கிடைத்துவிட்டது. இது சட்டப்படி தவறு. னாலும் பிர் ஓ அதை சாதித்துவிட்டார். அதனால் நான் கிஷ்ஷில் கால் வைத்த அடுத்த ஒரு மணிநேரத்தில் அடுத்த விமானம் பிடித்து புதிய விசிட் விசாவில்
துபாய் வந்துவிட்டேன். அதனால் முதல் விசிட்டில் என்னால் கிஷ் தீவின் உள் செல்ல முடியவில்லை. வெறும் விமான நிலையத்தோடு சரி. transit launchல் employment visa கிடைக்குமா கிடைக்காதா என்று யோசித்துக் கொண்டு
இருந்ததோடு எனக்கும் கிஷ்ஷ¤க்குமான முதல் சந்திப்பு முடிந்து போனது.

அடுத்த மூன்று மாதத்திலும் எனக்கு employment visa கிடைக்கவில்லை. மீண்டும் கிஷ்ஷ¤க்கு அனுப்பப்பட்டேன். இந்த பி. ர். ஓவின் ஜம்பம் பலிக்கவில்லை. அதனால் அமீரக எமிக்ரேஷனில் நான் இந்தியா
செல்வதற்குரிய பணத்தைக் காப்புத்தொகையாகச் செலுத்திய பிறகு எனக்கு கிஷ்ஷ¤க்கான டிக்கட் தந்தார்கள். கிஷ்ஷில் இறங்கும்போது இரவு 2.30. வழக்கம்போல இந்த முறையும் employment visa கிடைக்காது
என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. இரண்டு நாளாய் விசிட் விசாவும் கிடைக்காமல் போனது எதிர்பாராதது. ரெண்டு நாளாய் சாப்பிட வெஜிடேரியன் ஐட்டங்கள் எதுவும் கிடைக்காமல் நான் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது.
வெஜிடேரியன் என்றாலே என்னவென்று தெரியாதெனப் பார்த்த ஹோட்டல்காரர்கள்அதிகம். வெறும் பிரட்டும் சாஸ¤ம் பழங்களும் தாம் என்னைக் காப்பாற்றியது.

கிட்டத்தட்ட எல்லா இரானிகளுக்கும் ஹிந்தியும் பார்ஸியும் நன்றாய்த் தெரிந்திருந்தது. எனக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே. அதுவேறு இன்னொரு கஷ்டம். எல்லா திராவிடத் தலைவர்களையும் மனதிற்குள் திட்டித்
தீர்த்தேன். ஒருவழியாய் புதிய விசிட் விசா கிடைக்க, அதிகம் தங்கிய இரண்டு நாள்களுக்கானப் பணத்தைக் கட்டிவிட்டு, ஆப்கானிஸ்தான் ரிஷப்சனிலிஸ்ட்க்கு (ஆண்!) நன்றி சொல்லிவிட்டு, துபாய்க்குப் பறந்தேன்.

அந்த முறை கிஷ்ஷில் சந்தித்த நபர்கள் சுவாரஸ்யமானவர்கள். விசிட்டில் வந்து கணவனுடன் சந்தோஷமாய் இருந்ததில் கர்ப்பமாகி மீண்டும் புதிய விசிட் வாங்க வந்த இந்திய பெண்மணி. ஏழுமாதம் என்றாள். அடிக்கடி தலை சுத்துது
என்றாள்.

மருமகள் கர்ப்பமாய் இருந்ததால் அவளுக்கு உதவியாய் இருக்க இந்தியாவில் இருந்து விசிட்டில் துபாய் வந்த மாமியார். கர்நாடகாக் காரர். கண்பார்வை வேறு கொஞ்சம் மங்கல். நான் தான் கை பிடித்து நிறைய இடங்களுக்குக்
கூட்டிச் சென்றேன். தேங்க்ஸ் தேங்க்ஸ் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

இது போல நிறைய சுவாரஸ்யமான மனிதர்கள். நான் சொன்னதெல்லாம் சொற்பமான அளவில் வந்தவர்கள்தாம். அதிகம் வந்தவர்கள் மறுவிசிட் கிடைக்குமா கிடைக்காதா, employment visa கிடைக்குமா கிடைக்கதா
என்று (என்னைப்போல்) ஏக்கத்திலிருந்தவர்கள்.

இவர்களைப் பார்த்தவுடன் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும். ஊருக்குப் புதுசா என்று எளிதில் கேட்டுவிடக்கூடிய தோற்றத்தைக் காண்பித்துக்கொண்டு இருப்பார்கள். தமிழ் பேசுறவர் யாராவது இருக்குறாங்களா என்ற நோட்டம். (அதாவது தாய்மொழி). இப்படிப் பல விஷயங்கள்.

நான் சென்ற கிஷ் 18 மாதங்களுக்கு முந்தியது. இப்போது நிறைய மாறிவிட்டதாம். நேற்று கிஷ் சென்று வந்தவர் சொன்ன விஷயங்கள் சந்தோஷமாயும் கொஞ்சம் மலைப்பாயும் இருந்தன.

"அட நீங்க வேற.. நீங்க போன கிஷ் எல்லாம் மாறிப்போச்சு.. இப்ப அது ஒரு குட்டி இந்தியத் தீவு. மலையாளிங்க சாயாக் கடையும் ஹோட்டலும் வெச்சிருக்காங்க. வெஜிடபிள் பாரிக்கும் (அதாவது வெஜிடேரியன், பச்சரிசிச் சோறு), மோட்டாவும் ஈஸியாக் கிடைக்குது. ஹோட்டல்ல ஏகப்பட்ட வசதிங்க.. பொண்ணு கூடக் கிடைக்குது"

"அது நான் போகும்போதே கிடைச்சுதுங்க.. ஒடம்புக்கு ஆகாதுன்னு நாந்தான் வேணானுட்டேன்"

"குறுக்கப் பேசாம கேளுங்க.. ஹோட்டலுக்குப் போன ஒடனே டிவிய ஆன் பண்ணா எல்லாம் மேற்படி சமாச்சாரம். ஆனா ரொம்ப ஒண்ணும் அதிகாமா காமிக்கலை"

"நெசமாவா?"

"ஆமாங்கறேன். மெல்ல விசாரிச்சா 5 திர்ஹாம் கொடுத்தா சுமாரா காண்பிப்பாங்களாம். 8 திர்ஹாம் கொடுத்தா கொஞ்சம் நல்லா இருக்குமாம். பத்து திர்ஹாம்னா சூப்பராம்."

"சே.. நான் போகும்போது இப்படியெல்லாம் ஒண்ணும் இல்லாமப் போச்சே.."

'"ங்களுக்கு மச்சம் இல்லைங்க.. நான் எட்டு திர்ஹாம் கொடுத்துப் பார்த்தேன். அதுக்கே இப்படின்னா பத்து திர்ஹாம் கொடுத்திருந்தா.. எப்பா.."

"மிஸ் பண்ணிட்டீங்களே.."

"அதனால என்ன. இப்பவும் விசிட்ல தான் வந்திருக்கேன். அடுத்த விசிட்டுக்கு அங்கதான போவணும்.. அப்பப் பார்த்துக்குட்டாப் போச்சு"

இப்போதெல்லாம் விசிட்டில் செல்பவர்கள் சீக்கிரம் மறு விசிட்டோ employment visa வோ கிடைத்துவிடக்கூடாது என்றுதான் வருத்தப்படுகிறார்களாம்.

இந்தியர்கள் எந்த இடத்தையும் இந்தியாவாக்காமல் விட்டுவிடுவதில்லை.

எட்டிக்காயாய் இருந்த கிஷ் ரிலாக்ஸிங்க் இடமாக மாறிவிட்டது.


அன்புடன்
பிரசன்னா

பி.கு. எனக்கு எம்ப்ளாய்மெண்ட் விசா கிடைத்தபோது மீண்டும் கிஷ் செல்வேன் என நினைத்திருந்தேன். அந்த ஆப்கானிஸ்தான் நண்பரை மீண்டும் சந்திக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் என் கம்பெனி என் பணியின் அவசரம் மற்றும் அவசியம் கருதி என்னை மஸ்கட் சென்று வரச் சொல்லிவிட்டது. மஸ்கட் செல்வது
என்பது ஒரு சுவையான விஷயம். இது மாதிரி விசா மாற்றுவர்களுக்காக மட்டுமே ஒரு ஏர்வேஸ் செயல்படுகிறது. மஸ்கட் சென்று வர இந்திய ரூபாயில் 7000 வரை கும். நீங்கள் செய்யவேண்டியது விசிட் விசாவை
ஒப்படைத்துவிட்டு பாஸ்போர்ட்டில் எக்ஸிட் அடித்து வாங்கிக்கொண்டு மஸ்கட் செல்லும் விமானத்தில் ஏறவேண்டியது. அது உங்களைத் தூக்கிக்கொண்டு மஸ்கட் பறக்கும். மஸ்கட்டின் விமான ஓடுதளத்தில்
தரையிறங்குவது மாதிரி இறங்கி, தரையைத் தொடாமல் மீண்டும் வானத்தில் ஏறும். மீண்டும் உங்களைத் துபாய் கொண்டு வந்து விட்டுவிடும். அதாவது ஒண்ணரை மணிநேரம் நீங்கள் விமானத்தில் மட்டும் இருந்தால் போதும்.
மஸ்கட்டில் தரையிறங்காமல் விசா மாற்றம் முடிந்துவிடும்!!! எல்லாம் காசு பிடுங்கும் வேலை. இதற்கு பாஸ்போர்ட்டில் எக்ஸிட் அடித்துவிட்டு, ஒரு ஓரமாய் ஒரு மணிநேரம் ஓரமாய் உட்காரச்சொல்லி மீண்டும் இன் அடித்துக்
கொடுத்தால் போதாதா? விமானத்தில் பறக்கும் அபாயமாவது மிச்சமாகும்! ஆனால் நாம் ரோமில் இருக்கும்போது ரோமியர்களாத்தான் இருக்கவேண்டும்.